ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்குமளவு அத்தனை நிசப்தம் அந்த பிரம்மாண்டமான ஹாலில்..
அமல்ராஜ் மேத்தியூ,இருதயராஜ் மேத்தியூ ஒரு பக்க சோபாவிலும் ஜோசஃப் தனி சோபாவிலும் அமர்ந்திருக்க சற்று பின்னால் அமல்ராஜின் மனைவி மற்றும் ஜோசஃபின் தாய் தேவிப்ரியா நின்றிருக்க அவர் அருகில் இருதயராஜின் மனைவி மரியாவும், அவர்கள் மகள் ஜெஸிகா நின்றிருக்க இவர்களுக்கு அடுத்து நின்றது அனீ. புதிதாய் திருமணம் முடிந்து வந்திருக்கும் ஜோசஃபின் மனைவி..!!
அனைவர் முகத்திலும் பல்வேறு உணர்வுகள் டன் டன்னாய் நிரம்பிவழிய மிகவும் அழுத்தமான சூழல் அது..
அதனை முதலில் கலைத்தது அமல்ராஜ் மேத்தியூ தான்.
“எல்லாம் இப்படி ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டே இருந்தால்.. எல்லாம் சரியாகி போயிடுமா.. அவனை இப்படியே விடவேணாம்னு நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேன்.. நம்ம வீட்டு பையன்.. நம்ம விட்டு பையன்னு பேசுனீங்கல்ல.. இப்ப அவன் என்ன பண்ணிருக்கான் பார்த்தாச்சா.. மனசு குளிர்ந்து போயிடுச்சா..”
என்று பெருங்குரலில் இரத்தம் அழுத்தம் எகிற அவர் பேச, “அண்ணா..” என்று அவரை சமாதானப் படுத்த விழைந்த தம்பி இருதயராஜ் அவர் பார்த்த பார்வையில் அமைதியானார்.
இத்தனை வருட தொழிலில் இப்படி ஒரு அவமானத்தையும் கௌரவ இறக்கத்தையும் சந்தித்தே இராத அமல்ராஜிற்கு அவ்வளவு கோபம் வந்தது. எல்லார் மீது கோபம்..!! ஜோஷ்வாவை அறிந்தவராய் எந்த விபரீதமும் நடக்கும்முன் அவனை தட்டிவைக்க நினைத்தவரையும் அதையும் இதையும் சொல்லி தன் கையை கட்டிப்போட்ட குடும்பத்தின் மீது தான் மொத்தகோபமும் திரும்பியது.
“அப்பா.. இவ்வளவு தூரம் இறங்கி செய்வான்னு நினைக்கவே இல்லை..”
“உன்னால தாண்டா.. எல்லாம் உன்னால தான்.. எப்ப உன்னை நம்பி பொறுப்பை கொடுத்தேனோ அப்ப இருந்தே தான் இந்த கர்மம் எல்லாம்..!! என் பையன்னா என்னைவிட பதினாறு அடி தாவ வேண்டாம்..!!!! எனக்குன்னு வந்து பொறந்திருக்கீங்க பாரு.. உன் கூட பொறந்தவன் மேல பாசம் வைச்சுயே அதுக்கு அவன் தகுதியான்னு யோச்சியாடா.. என் பையன் அவன்..!எனக்கு தெரியாது அந்த தறுதலைய பத்தி..!! இப்ப பாரு இதனால எவ்வளவு அசிங்கம் நமக்கும்.. இழந்தது மக்களோட நம்பிக்கையை அதை திருப்பி பெறுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. நம்மால எவ்வளவோ சம்பாரிச்ச இன்வெஸ்டர்ஸ் எல்லாம் இப்ப முன்ன நின்னு கேள்வி மேல கேள்வி கேட்கறான்.. இன்னும் நிறைய ஷேர்ஸ் இல்லாமலே போயிடுச்சு.. அப்படியே வர்ர ஆத்திரத்துக்கு..”
இவ்வளவு கோபமாய் எல்லாம் அவர் பேசி யாரும் பார்த்ததே இல்லை. ஜோசஃபின் முகத்தில் அவமானமும் கோபமும் தாண்டவம் ஆட தலையை நிமிர்ந்தாமல் அமர்ந்திருந்தான். அமல்ராஜின் மனைவி தேவிப்ரியா,
“என்னங்க.. கொஞ்சம் பொறுமையா பேசுங்க.. இவ்வளவு டென்ஷன் ஆனா உங்க உடம்புக்கு எதாவது ஆகிட போது..”
என்று பயத்தோடு சொல்ல அவரின் அந்த பார்வை சற்று நிதானப்படுத்தியது.
அமல்ராஜ் மற்றும் தேவிப்ரியா தம்பதியரின் மகன்கள் தான் ஜோசஃப் மற்றும் ஜோஷ்வா.
இருதயராஜ் மற்றும் மரியா தம்பதியருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் கேத்ரீன் சென்ற வருடம் திருமணம் முடித்து லண்டனில் செட்டிலாகி இருக்க இளையவள் ஜெஸிகா தற்போது கல்லூரி படிப்பில்..!!
எட்டீ லிமிட் ஒரு எஃப்.எம்.சி.ஜி நிறுவனம். அதாவது மக்கள் அன்றாட பயன்படுத்தும் பாகெட் செய்யப்பட்ட உணவு பண்டங்கள்,மசாலாகளில் தொடங்கி சோப்பு,ஷம்பூ வரை அனைத்து பொருட்களையும் தயாரிக்கும் நிறுவனம். நாட்டின் பங்குசந்தையில் பெரும்பங்கு வகிக்கும் ஒரு பிரிவு.. எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த அத்தியாவசிய தேவைகள் மக்களிடம் இருந்துக்கொண்டே இருக்கும் என்பதால் இவர்களுக்கும் டிமெண்ட் இருந்துக் கொண்டே இருக்கும்..
அப்படியான எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களுள் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் எட்டீ லிமடட்.இவர்களின் வருட வருவாய் ஐம்பது லட்சக்கோடியில் இருக்க போட்டிகள் இன்றி முதல் இடத்தை பல ஆண்டுகளாய் தக்க வைத்திருக்கும் பெருமையை கொண்டது.
பல பெரிய நிறுவனங்களும் விரும்பியே இவர்களோடு இணைய ஆலமரமாய் இந்தியாவின் இண்டு இடுக்குவிடாமல் எங்கும் தன் வேர்களை பரப்பி கர்வமாய் நிற்க்கும் எட்டீ நிறுவனத்தின் விதை அவர்கள் தந்தை எட்வீன் மேத்தியூ போட்டது தான்.
அடுத்த தலைமுறையும் உட்கார்ந்து சாப்பிடும் அளவு சொத்துகள் இருந்தாலும் அதனை கொண்டு பயனுள்ளதாய் மாற்ற அவர்
முதலில் பால் உற்பத்தி செய்யும் தொழிலாய் தொடங்கியது தான் லாக்டோ மில்க்ஸ். அதனை பல்கி பெரிதாக்கி இன்னும் இந்தியாவின் முதன்மை வாய்ந்த நிறுவனமாய் கொண்டு வந்தது அமல்ராஜ் மற்றும் இருதயராஜ் தான்.
வைரத்தை வைரத்தால் தான் வெட்டமுடியும் என்பதனைபோல் அத்தனை பெருமை வாய்ந்த குடும்பத்திற்கு இறக்கத்தையும் தோல்வியையும் கொடுத்தது அவர்கள் குடும்பத்தின் வாரிசு தான். மற்றவர்களை எளிதாய் முறியடித்துவிடும் அவர்களுக்கு தங்கள் இரத்தம் என்பதே பலவீனமாய் அமைய அதனை தந்திரமாய் பயன்படுத்திக் கொண்டான் ஜோஷ்வா.
“அப்பா.. போதும்.. நான் ஒதுங்கி போறதால என்னால முடியாதுன்னு நினைக்காதீங்க.. இப்ப சொல்றேன்.. அவன் கொடுத்ததை அவனுக்கு திருப்பிக் கொடுக்காமல் நான் ஓயமாட்டேன்.. அவன் முடிவு என்னால தான்..”
வெறியோடு கூறியவன் சட்டென்று எழுந்து தன்னறைக்கு சென்றுவிட, “ஜோ..ஜோ..” என்ற தேவிப்ரியாவின் அழைப்பு காற்றோடு போனது. இரண்டுமே அவர் பிள்ளைகள் ஆகிற்றே.. யாருக்கு ஆபத்து என்றாலும் பெத்தமனம் தாங்குமா..? தவித்துபோனார் அவர்.
அந்நேரம் அவர் தோளில் கைவைத்த அனீ,
“நான் சமாதானப்படுத்துறேன்.. நீங்க பதட்டபடாதீங்க..”
என்று ஆதரவாய் கூறி கணவன் பின்னோடு செல்ல இருவரையும் பார்த்து நின்ற மரியா,
“இங்க நின்னு என்ன வேடிக்கை பார்க்கிற.. போ.. போய் படி..”
என்று ஜெஸிகாவை விரட்டியவர் தேவிப்ரியாவிடம்,
“உங்க பிள்ளைன்னு நீங்க பாரபச்சம் பார்த்ததால தான்க்கா இன்னைக்கு இவ்வளவு பெரிய இழப்பு.. உங்களால தான்றத மறந்துடாதீங்க.. மறுபடியும் அந்த ஜோஷ்வாவை ஆதரிச்சு பேச மாட்டீங்கன்னு நம்புறேன்…”
என்று அவர் கூறி தேவிப்ரியாவை காயப்பட்ட பார்வையை பொருட்படுத்தாது சென்றுவிட்டார்.
அமல்ராஜூம் இருதயராஜூம் சேர்ந்து உழைத்தாலும் பெரியவருக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் தன் கணவருக்கு இல்லை என்பது மரியாவின் பெரிய கவலை. அதில் இருதயராஜ் துளியும் வருத்தம் இல்லாமல் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமையாய் இருக்க இந்நிலையில் தங்களுக்கு இரண்டுமே மகளாய் போய்விட்டதால் மேத்தியூ குடும்பத்தின் ஏகபோக வாரிசாய் ஜோசஃப்பும் ஜோஷ்வாவுமே இருப்பார்களோ என்று அவர் பொருமலில் இருந்தார். எனவே கேத்ரீன் கணவரை பிஸ்னெஸில் இணைக்க போராடி தோற்று அடுத்த இலக்காய் சின்ன மகளின் மீது நம்பிக்கை வைத்திருக்கார். அவள் படித்ததும் அவளை தொழிலில் புகுத்திவிடணும் இல்லையேல் அதற்கு தோதான வரனாய் பார்த்து அவளை திருமணம் முடிக்க வேண்டும் என்று திட்டத்தோடு இருந்தார்.
ஆனால் இதில் ஜோஷ்வா சொத்துகளோடு பிரிந்து சென்று இவர்கள் சம்ராஜ்ஜியத்தை அழிக்க செய்யும் குளறுபடியை கண்டும் அவனை ஒன்னும் செய்யாமல் இருக்கும் இவர்கள் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார்.
அதுவே சில சமயங்களில் அவர் வார்த்தையில் வெளிப்படும்.
வீட்டு டெலிஃபோன் மணி அலறவும் அமல்ராஜ் முகம் விகாரம் ஆக ‘எங்கே யாராவது எதாவது பேசி இன்னும் டென்ஷன் ஆகிவிடுவாரோ’ என்று பயந்து தேவிப்ரியாவே முன்னால் சென்று எடுத்து,
“ஹலோ..” என்று ஏற்றதும்,
“மம்மீ…”
என்ற உற்சாகமான ஜோஷ்வா குரலில் பகீரென ஆனது.
“எப்படி இருக்க மம்மீ..”
“உன் புண்ணியத்துல வேற எப்படி இருப்போம்.. உன்னையும் இதே வயித்துல தானேடா பெத்தேன்.. ஏண்டா.. ஏண்டா உனக்கு மட்டும் புத்தி இப்படி போச்சு…”
கணவனுக்கு கேட்டுவிட கூடாது என்பதால் சின்ன குரலில் அவர் சீற்றமாய் பேச,
“வாட் டு டூ மம்மி.. அந்த வீட்டில் ஒருத்தனாவது உருபடியா இருக்கட்டும்னு கர்த்தர் என்னை புத்திசாலியா படைச்சு அனுப்பிட்டார்..”
என்றான் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்..
“நீ புத்திசாலியா.. சுயநலவாதி.. நீ பேசுறதை கேட்டாலே பத்திக்கிட்டு வருது…”
“ஏன் உங்க வீட்டுகாரர் பத்த வைச்சுட்டாரா..?? அங்க கறுகுற ஸ்மெல் இங்க வரையும் வீசுது..”
“பேசாதடா… என்ன எழவுக்கு இப்ப போன் போட்ட.. என் உசுற வாங்கவா..”
“ச்சு.. நல்ல விஷயம் சொல்ல கூப்பிட்டால்.. இப்படி எழவு கிழவுனு பேசுறீயே.. என்னானு நீங்க கேட்க மாட்டீங்க.. அதனால நானே சொல்றேன்.. ஆரூ’ஸ் மில்க்ஸ் தெரியும்ல மம்மி.. உனக்கு எப்படி தெரியாம இருக்கும்.. உங்க எனிமீ கம்பெனியாச்சே..!! எஸ்.. அந்த ஆரூ’ஸ் மில்க்ஸ் என் ஃபீனிக்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்தாச்சு.. இனி ஆரூ’ஸ் மில்க்ஸும் நம்ம ப்ராடெக்ட்.. புதிய விளம்பரம்கூட லான்ச் பண்ணியாச்சு..”
என்று பெருமையாய் சொல்ல வாயடைத்து போய்விட்டார். என்ன ஒரு வியாபார யுக்தி..!! நூற்றில் ஒரு பங்கு இதற்கு இவன் காரணமில்லாமல் இருக்கலாம் என்று நம்பியவரின் ஒரு சதவீதத்தையும் அழித்து விட்டான். ஆக எல்லாம் இவன் திட்டமிட்டபடி தான் நடக்கிறது அல்லவா..!!
“என்ன மம்மீ.. சத்தமே இல்லை.. சந்தோஷத்தில் பேச்சு வரலையா.. சரி சரி.. ப்ளஸ் மீ..”
“பேச வைக்காத.. நான் எதாவது சாபம் கொடுத்திடுவேன்…”
“உங்க சாபம் தானே இத்தனை நாள் எனக்கு வெற்றிய கொடுத்திட்டு இருக்கு.. இதையும் நான் அப்படியே எடுத்துபேன்.. தேங்க்யூ மம்மி..”
என்று அவன் ஆர்பாட்டமாய் கூறி வைத்துவிட தேவிப்ரியா தன்னை சமன்படுத்திக் கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது.
..
RX Gamedev நிறுவன வளாகம் மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது.
முதல் தளத்தின் ஒரு பகுதியில் சிறு சிறு கூயூப் தடுப்புகளோடு தனித்தனி இருக்கைகளின் வரிசை ‘பா’ வடிவில் அமைக்கப்பட்டிருக்க அங்கே கணினியை இயக்கிவிட்டு அதில் கவனம் வைக்காமல் தங்களுக்குள் மாநாடு போட்டிருந்தது ஜென்சியின் குழு.
“நேத்து நியூஸ் பார்த்தீங்களா.. எங்க பார்த்தாலும் ‘லாக்டோ..’ செய்தி தான்.. சின்னதா எதாவது கிடைச்சாலே ஊதி ஊதி பெருசாகுற மீடியாக்கு நல்ல தொக்கா மாட்டவும் கிழிச்சு தோரணம் கட்டிட்டானுங்க..”
என்று அக்ஷய் சொல்ல,
“அதில உனக்கு என்னடா இம்புட்டு குஷி..”
என்று ரேச்சல் கேட்கவும் தோளை குலுக்கி,
“எத்தனை வருஷமா இந்த ஃப்ராடு வேல பண்ணினானுங்களோ.. இப்ப கவர்மெண்ட் பிடிச்சு இருச்சுல.. இனியும் ‘ ‘சுத்தமான பால்..’ ‘சுகாதாரமான டிரிங்ஸ்..’ ‘பழங்களை அப்படியே பாட்டில்ல அடைச்சு ஜூஸ்ஸாகிட்டோம்..’ ‘ஃப்ரெஸ் பால்.. மாட்டில் இருந்து நேரா பாக்கெட்ல தான் புடிச்சோம்னு’ கப்ஸா விட முடியுமா…” என்றான் கிண்டலாய்..
“எங்க வீட்டில் எல்லாம் லாக்டோ தான் இத்தனை வருஷமா யூஸ் பண்றோம் தெரியுமா.. விஷயம் தெரிஞ்சதும்.. செம்ம ஷாக்.. ஆனால் எங்களுக்கு எல்லாம் எந்த பாதிப்பும் வந்தா மாதிரி தெரியலையே..”
என்று ஷீபா சொல்ல,
“யாருக்கு தெரியும்.. உள்ள கிட்னி,லிவர் எல்லாம் டேமேஷ் ஆகி.. இப்பவோ அப்பவோனு இருக்கலாம்… எதுக்கும் போய் ஃபுல் செக்கப் பண்ணிக்கோ..”
என்று அக்ஷய் சொல்ல, “போடா லூசு..”
என்று முதுகில் ஒன்று வைத்தாள்.
“ஹே.. அப்டின்னு சொல்லிட முடியாதுடா.. இது எதோ சதினும் சொல்றாங்க..”
“உணவு தரமானது இல்லைன்னு ஆதாரப் பூர்வமா நிரூப்பிச்சு இருக்காங்க.. இதில் என்ன சதி பண்ண முடியும்…”
“பட்.. கரெக்ட்டா.. இதே சமயம் ஆருஸ் மில்க்ஸ் ஃபீனிக்ஸோட மெர்ஜ் ஆகிட்டாங்க பார்த்தியா.. ஏதோ லிங் இருக்கா மாதிரி தோணல..”
“ஃப்னீக்ஸ் எம்.டி இந்த மேத்தியூ ஃபேமிலி வாரிசு தானாமே.. அது உண்மையா..”
“உண்மை தான்… சொத்து பிரச்சனை வரும் வரையும் அப்படி ஒருத்தன் அந்த குடும்பத்தில் இருந்ததே மீடியா பார்வையில் வரல.. ஏன் இப்ப வரையிலும் கூட அவன் எதிலுமே தன்னை வெளிப்படுத்திக்கிட்டதே இல்லையாம்.. அவனோட அடையாளம்.. அவனோட ப்ராண்ட் நேம் தானாம்.. அதான் அவனை யாருக்கும் தெரியாது..”
“அப்படியா… அரசியல் வாதிங்களவிட இந்த பிஸ்னெஸ்மேன்ஸ் பண்ற அரசியல் தான் ரொம்ப மோசமானது.. எட்டீ & ஃபீனிக்ஸையே எடுத்துக்க.. சொந்த மகனே அப்பனுக்கு குழி பறிக்கிறான்..”
“பணம், பதவி,புகழ்னு வந்திட்டா அப்பன்-மகன், அண்ணன்-தம்பி எல்லாம் காணாம போயிடும்.. தம்மா துண்டு சொத்து வைச்சு இருக்கவனுங்களுக்கே அத்தனை தகராறு வரும்.. இவிங்க எல்லாம் பண முதலைங்க.. சொல்லவும் வேணுமா…?? இதெல்லாம் பத்தி நமக்கு என்ன கவலை…”
என்று அக்ஷய் சொல்லவும் அதுவரை அவர்கள் பேச்சில் தலையிடாமல் வேடிக்கை பார்த்திருந்த நிஷாந்த் ஷர்மா,
“அதானே.. நமக்கு என்ன கவலை.. ஜென்சி கவலை பட்டாலும் ஒரு நியாயம் இருக்கு..”
என்று புதிய திரியை கொளுத்தி போட்டான்.
“அவங்களை ஏண்டா இழுக்கிற..”
“ஏன் உனக்கு தெரியாது.. ஜோசப்போட எக்ஸ் நம்ம ஜென்சி தான்னு..”
“நீ கூட இருந்து பார்த்தியா.. மூடு.. அவங்க ஜெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் அவ்வளவு தான்..”
என்று ரேச்சல் அவனை முறைக்க தோளை குலுக்கி,
“நான் ஏன் பார்க்குறேன்.. அதான் கொஞ்ச நாள் முன்னாடி ஷோஸ்யல் மீடியாவில் எல்லாம் ஃபோட்டோ பரவுச்சே ‘பிரபல தொழிலதிபரின் இரகசிய காதலினு..” என்றான் நிஷாந்த்.
“உன்னை மாதிரி கிசுகிசு படிக்க அலையிற கூட்டத்திற்காக.. இவனுங்க கிளப்பி விடுற புரளி இதெல்லாம்.. எப்ப அடுத்தவன் குடும்பத்தை எட்டி பார்க்கிற பழக்கத்தை நம்ம ஜனங்க விடுதோ.. அப்ப தான் இந்த நாடு உருபடும்..”
“நான் சொன்னதில் என்ன தப்பு..?! ஜென்சி யாருட்டையும் ஃப்ரெண்ஷிப் கூட வைச்சுக்காது… அப்படி இருக்க பொண்ணு அந்த ஜோசப்போட ஊர் சுத்துதுனா.. சம்திங் சீரியஸா இருந்திருக்குன்னு தானே அர்த்தம்.. ஆனால் அவன் புத்திசாலி.. இவளை எல்லாம் கூட வைச்சுட்டு சுத்தலாம்.. ஆனா குடும்பம் நடத்த முடியாது.. அது புரிஞ்சு தான் அவன் இவளை கலட்டிவிட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான்..”
என்று வஞ்சகமாய் நிஷாந்த் பேச,
“யூ ஆர் க்ராஸிங் யூவர் லிமிட் நிஷாந்த்..”
ரேச்சல் கோபமாய் கத்தினாள்.
“ஹே கூல் டவுன் ரே.. ஜென்சியோட திறமையும் அவங்க பவரையும் பார்த்து அவனுக்கு பொறாமை.. அவங்களை மாதிரி தான் இருக்க முடியலல… அதை ஆத்திக்க இப்படி பேசிட்டு அலையறான்..”
“எனக்கென்ன பொறாமை.. அவளை மாதிரி எல்லாம் எந்த மனுஷனும் வாழ நினைக்க மாட்டான்.. ரோபோவை ஃப்ரோக்ரெம் செஞ்சு வைச்சா மாதிரி ஸிஸ்டெமட்டிக்கா வருவா.. போவா.. அவ்வளவு தான்.. இவ்வளவு பணம் சம்பாரிச்சு என்ன யூஸ்..? வாழ்க்கையை என்ஜாய் பண்ண தெரியாத ஜடம் அது..”
என்ற நிஷாந்த் அப்பொழுது தான் மற்றவர்கள் பார்வை தன்னிடம் இல்லாமல் தனக்கு பின்னால் இருப்பதனை உணர்ந்து சட்டென்று திரும்பி பார்க்க அழுத்தமான பார்வையோடு கையை கட்டி நின்றாள் ஜென்சி.