“அத்தை, நீங்க சொல்ற விஷயம் எங்க யாருக்குமே தெரியாது. முன்னாடியே சொல்லிருந்தா நான் பிரியாக்காக அப்பா கிட்ட சொல்லி தம்பி கிட்ட பேசச் சொல்லிருப்பேன். அவனுமே எதிர் பாராம தான் இந்த கல்யாணம் பண்ணினான். முன்னாடியே நீங்க சொல்லியிருந்தா கண்டிப்பா பிரியாவை ஆதவன் கட்டிருப்பான்”, என்றாள் செல்வி.
“பிரியா தான் முக்கியம் அப்படின்னு நடிக்காத செல்வி, நீ அந்த பொண்ணு கிட்ட கொஞ்சிக் குலாவினதை நான் தான் பாத்தேனே?”, என்று சொன்னாள் வேணி.
“அம்மா என்ன பேச்சுன்னு பேசுற? சிந்து, செல்வியோட நாத்தனார். அவ கிட்ட செல்வி பேசினதுல என்ன தப்பு இருக்கு?”, என்று சக்தி கேட்டதும் “ஓ பொண்டாட்டிக்கு பரிஞ்சு பேசிட்டு என் கிட்ட சண்டைக்கு வரியா சக்தி? அண்ணன் பொண்ணுன்னு இவளை உனக்கு கட்டி வச்சேன். கடைசில என் பொண்ணைப் பத்திக் கவலைப் பட யாரும் இல்லையே”, என்றாள் வேணி.
“ஏன் மா இப்படி எல்லாம் பேசுற? பிரியா என் தங்கச்சி. அவளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு”, என்று சக்தி சொல்ல அப்போது “எனக்கு ஆதவன் அத்தானைத் தான் பிடிக்கும். அவர் தான் எனக்கு வேணும்”, என்றாள் பிரியா. அதைக் கேட்க சகிக்காமல் “வாயை மூடு”, என்று அரட்டினான் சக்தி.
“அவளை ஏண்டா அடக்குற? எல்லாருக்கும் நாங்க கிள்ளுக் கீரையா போய்ட்டோம்ல? கடைசில என் அண்ணன் கூட என்னை மதிக்கலையே?”, என்று சொன்ன வேணியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“இனி யார் வருத்தப் பட்டா எனக்கு என்ன? எல்லாரும் சுயநலவாதிங்க. எங்க அண்ணனும் தான். அப்படியே மாறிட்டார். அப்படியே மாத்திட்டாங்க. அதுல எல்லாம் எங்க அண்ணி விவரம் தான்”, என்று வேணி சொன்னதும் செல்விக்கும் கோபம் வந்தது.
“அப்பா என்ன பண்ணினார்? இல்லை எங்க அம்மா தான் என்ன பண்ணினாங்க? பேசணும்னு பேசாதீங்க அத்தை. இப்ப வரைக்கும் என் அப்பாவும் அம்மாவும் உங்களுக்கு சீர் செஞ்சீட்டு தான் இருக்காங்க. அதெல்லாம் உங்களுக்கு பாசமா தெரியலையா?”, என்று சற்று கோபத்துடன் தான் கேட்டாள்.
“குடும்ப போட்டோவுக்கு எங்களை கூப்பிட்டாரா? இல்லை நீங்க தான் எங்களைக் கூப்பிட்டீங்களா?”, என்று செல்வியிடம் கேட்டு விட்டு சக்தி புறம் திரும்பி “நீ யாரு டா? என் மகன் தானே? செல்வியை உனக்கு கட்டிக் கொடுத்ததுனால நீ அவங்களுக்கு வேணும். ஆனா நாங்க வேண்டாம், அப்படித் தானே?”, என்று மகனிடம் கேட்டாள் வேணி.
“அம்மா நீ பேசுறதுல கொஞ்சமாவது நியாயம் இருக்கா? அது அவங்க குடும்பம். இப்ப நம்ம குடும்ப போட்டோ எடுத்தா நாம ஆதவனைக் கூட கூப்பிட மாட்டோம். பரமு சித்தப்பா குடும்பமும் அந்த போட்டோல இல்லை தானே?”
“ஆனா அந்த வைதேகி இருந்தால்ல? அப்படின்னா அவங்க பிரியாவைக் கூப்பிட்டுருக்கணும்ல?”, என்று வேணி கேட்க சக்திக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. அன்னையின் பேச்சு அவனுக்கு அபத்தமாக தான் இருந்தது.
பதில் சொல்ல முடியாமல் மகன் திணறுவதைக் கண்ட விஸ்வம் “சக்தி, முதல்லே உன்னை உள்ள போகச் சொன்னேன்ல? உன் அம்மா வேணுக்குன்னு சண்டை இழுக்க நினைக்கிறா. அவ கிட்ட பேசி வேஸ்ட். நீயும் செல்வியும் உள்ள போங்க. அப்புறம், இந்த விஷயம் நம்மளைத் தவிர வேற யாருக்கும் தெரிய கூடாது. பிரியா விஷயம் தெரிஞ்சா அது பிரியா வாழ்க்கைக்கும் ஆபத்து. ஆதவனுக்கும் தேவையில்லாத சங்கடம். எனக்கு தெரிஞ்சு அவன் பிரியா கிட்ட தப்பா பழகலை. தப்பு எல்லாம் இவ பேர்ல தான். நான் சொல்றது புரியுதா? இந்த விஷயம் அங்க யாருக்கும் தெரியக் கூடாது”, என்றார்.
“சரிப்பா”, என்று சக்தி சொல்ல “செல்வி“, என்று அழைத்த படி அவளைப் பார்த்தார் விஸ்வம். அவர் சொல்ல வருவது புரிந்து “நான் இந்த வீட்டு மருமக மாமா. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். என்னால இந்த விஷயம் எப்பவும் வெளிய வராது”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள். சக்தியும் அவள் பின்னே சென்று விட்டான்.
அவர்கள் சென்ற பின் வேணி கணவரைப் பார்க்க அவரோ வெறுப்புடன் அவளைப் பார்த்து விட்டு அறைக்குள் சென்று விட்டார். அவர் பார்வையில் திக்கென்று இருந்தது வேணிக்கு. எப்போதும் தன்னைக் கண்டு புன்னகைக்கும் அவர் முகத்தில் இருந்த வெறுப்பு வேணியைப் பாதிக்க “பிரியா போய் தூங்கு டா”, என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு அறைக்குள் வந்து ”என்னங்க”, என்று அழைத்தாள்.
“நான் விரும்பின வேணி நீ இல்லை. இப்ப உன் மனசுல போட்டியும் பொறாமையும் அழுக்கும் வஞ்சமும் இருக்கு. உன் கிட்ட பேசவே எனக்கு பிடிக்கலை. இந்த நிமிஷம் நான் வெறுக்குற ஒரு ஆள்னா அது நீ தான். நீ இப்படி மாறினதிலே என்னோட பாதி உயிர் போன மாதிரி இருக்கு. இதுல பிரியா ஆதவனை விரும்புற விஷயம் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சதுன்னா அதுக்கப்புறம் நீ யாரோ, நான் யாரோ தான். உன் மகளுக்கு புத்தி சொல்லி அவளை திருத்துற வழியைப் பாரு. நீயே அவளை ஏத்தி விட்டு அவ வாழ்க்கையை வீணாக்கிறாதே”, என்று சொன்னவர் தரையில் பாய் விரித்து படுத்து விட்டார். மகளுக்கும் கணவனுக்கும் இடையில் மாட்டி இருந்த வேணி திகைத்த படி கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
அறைக்குள் வந்த சக்தி மற்றும் செல்விக்கு இது வரை மனதில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்தது போல இருந்தது. இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று அவர்கள் கனவில் கூட நினைக்கவே இல்லை. அவர்கள் அங்கே இருந்து வரும் போது வேறு கனவுகளுடன் வந்தார்கள். ஆனால் இப்போது அந்த எண்ணம் எல்லாம் அவர்களை விட்டு தூரப் போயிருந்தது.
“எனக்கு நிஜமாவே பிரியா ஆசை தெரியாது அத்தான். தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா அப்பா கிட்ட பேசிருப்பேன். அப்பா சொல்லி இருந்தா ஆதவன் கண்டிப்பா பிரியாவைக் கல்யாணம் பண்ணிருப்பான். இவங்க மறைச்சு வச்சா நானும் என் குடும்பமும் என்ன பண்ண முடியும்? என் மேல ஏதாவது தப்பு இருக்குனு நீங்களும் நினைக்கிறீங்களா?”, என்று கேட்டாள் செல்வி.
“அட விடு செல்வி. இதுல உன் தப்பு எங்க இருக்கு? அவ கொழுப்பெடுத்து ஆடுறா. அம்மாவும் ஒத்து ஊதுறாங்க. கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிரும். நீ வந்து படு”
“என்னை தப்பா நினைச்சு வெறுத்துற மாட்டீங்க தானே?”, என்று அவள் கலக்கத்துடன் கேட்க “நான் உன்னை உண்மையிலே விரும்புறேன் டி. நான் எப்படி உன்னை தப்பா நினைப்பேன்? உன்னை வெறுக்கத் தான் என்னால முடியுமா? வேற மைண்ட் செட்ல வந்தேன். எல்லாம் போச்சு. வா தூங்கலாம்”, என்று சொல்லி அவளை அனைத்துக் கொண்டவன் அவள் தலையைக் கோதிய படியே இருந்தான்.
செல்வியோ பிரியாவின் காதல் ஆதவன் வாழ்க்கையை பாதித்து விடக் கூடாதே என்ற கவலையில் தூக்கத்தை தொலைத்தாள். அவள் தூங்க முடியாமல் திணறுவதைக் கண்ட சக்தி “என்ன மா? அதையே நினைச்சிட்டு இருக்கியா?”, என்று கேட்டான்.
“ஒரு மாதிரி பயமா இருக்குங்க. சிந்து ரொம்ப பாவம். ரொம்ப பயந்த சுபாவம். சூதுவாது எல்லாம் அவளுக்கு தெரியாது”, என்று சொல்லி அவனைப் பார்த்தாள். அவன் புருவச் சுளிப்புடன் எதையோ யோசித்த படி இருக்கவும் “சிந்துவுக்கு சூதுவாது தெரியாது, பிரியாவுக்கு சூதுவாது தெரியும்னு நான் சொல்ல வரலைங்க. பிரியாவும் எனக்கு முக்கியம். அதே மாதிரி தான் சிந்துவும். ஒரு கல்யாணம் நின்னு, இன்னொரு கல்யாணம் நடந்துருக்கு சிந்துவுக்கு. எல்லா விசயத்துலயும் குழந்தை மாதிரி இருக்கா. போட்டி பொறாமைன்னு அவளுக்கு எந்த குணமும் கிடையாது. பிரியாவும் நல்ல பொண்ணு தான். ஆனாலும்…. நான் சொல்ல வரது புரியுதா?”, என்று கேட்டாள்.
“எனக்கு புரியுது டா. சிந்து ஆதவன் கூட நல்லா வாழ்வா. அதை நாம பாக்க தானே போறோம். நீ பயப்படுற மாதிரி பிரியாவால அவங்க வாழ்க்கைல எந்த விரிசலும் வராது. அம்மா என்னை மாதிரி தான் பிரியாவை வளத்தாங்க. அவங்க வளப்பு தப்பா போகாது. அம்மா இன்னைக்கு பேசினது கூட மாமா அம்மாவை குடும்ப ஃபோட்டோக்கு கூப்பிடலைன்னு தான். இன்னையோட எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி எந்த பிரச்சனையும் வராது”, என்று உறுதி கொடுத்த பிறகு தான் அவள் நிம்மதியாக தூங்கினாள். ஆனால் அவன் உறுதி அன்னை தங்கை விஷயத்தில் செல்லுபடியாகுமா என்று தெரியாதே?
அடுத்த நாள் அதிகாலையில் தான் சிந்து குடும்பம் சென்னைக்கு சென்றது. அஞ்சலியை அந்நேரம் அவள் வீட்டில் விடுவது சாத்தியமில்லை என்பதால் அவளையும் தங்களுடனே அழைத்து வந்து விட்டாள் அமுதவள்ளி.
ஏகாம்பரமும் அசோக்கும் தூங்கச் செல்ல அஞ்சலியும் அமுதவள்ளியும் ஒரு அறையில் படுத்திருந்தார்கள். காலை ஏழு மணிக்கு அஞ்சலியின் தந்தை மணிகண்டன் அவளை அழைக்க வந்து விட்டார். அவர் ஒரு ஆட்டோ ஓட்டுனர்.
“அஞ்சலி, எந்திரி மா. உன்னைக் கூப்பிட உன் அப்பா வந்துட்டார்”, என்று சொல்லி எழுப்பினாள் அமுதவள்ளி.
எழுந்த அஞ்சலியும் முகம் கை கால்களை கழுவி விட்டு தந்தையுடன் கிளம்பத் தயாரானாள்.
“இந்தா அஞ்சலி, இந்த காபியை குடிச்சிட்டு கிளம்பு. சாப்பிட்டு போகச் சொன்னா உன் அப்பா சவாரி போகனுமாம்”, என்று காபியைக் கொடுத்தாள் அமுதவள்ளி.
“பரவால்ல மா, இன்னொரு நாள் வரேன். இப்ப காபியே போதும். உங்க காப்பிக்கு நான் அடிமைன்னு தெரியாதா? எங்க அம்மாவுக்கு இந்த மாதிரி போடவே தெரியாது”, என்று சொன்ன அஞ்சலி ரசித்து ருசித்து அந்த காபியைக் குடித்தாள்.
அவள் தலையை வருடி விட்ட அமுதவள்ளி “அடிக்கடி வீட்டுக்கு வரணும் என்ன? சிந்து இல்லாதது வேற வெறுக்குன்னு இருக்கும். அவ இல்லைன்னு நீயும் வராம இருந்துறாத”, என்றாள்.
“அது எப்படி வராம இருப்பேன்? வாரத்துல ஒரு நாள் வந்துட்டு போறேன். போகும் போது அசோக் அண்ணா தான் என்னை வீட்ல டிராப் பண்ணணும்”
“நீ வீட்ல கிளம்பி இரு டா. அப்பாவாது அண்ணனாவது உன்னைக் கூப்பிட வருவாங்க. நீ வரதே எங்களுக்கு போதும்”
“கண்டிப்பா வரேன் மா”
“அப்புறம் அஞ்சலி”
“என்ன மா?”
“ஒரு விஷயம் பேசணும். ஆனா எப்படி?”
“என் கிட்ட என்ன மா தயக்கம்?”
“நீயும் எனக்கு பொண்ணு தான். அதான் தயங்குறேன்”
“நான் சிந்து கிட்ட ஏதாவது சொல்லணுமா?”, என்று கேட்டாள்.
“ஆமா டா, வந்து… நேத்து கார்ல வரும் போது சிந்து மாமியாருக்கு கால் பண்ணி சாந்திமுகூர்த்தம் பத்தி கேட்டேன்”, என்று சொன்னதும் அதைப் பற்றிப் பேச அஞ்சலிக்கே தர்மசங்கடமாக தான் இருந்தது.