அதனால் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க “அவங்க ஜோசியர் ஒரு மாசம் எந்த சடங்கும் வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாராம். அப்புறம் தான் எனக்கே கொஞ்சம் நிம்மதியா ஆச்சு. சிந்து பத்தி தான் உனக்கு தெரியுமே. முதல் நாளே சாந்தி முகூர்த்தம் வச்சா என்ன கூத்து பண்ணுவான்னு பக்கு பக்குன்னு இருந்துச்சு. ஆனா….”, என்று இழுத்தாள் அமுதவள்ளி.
“ஆனா என்ன மா?”
“அந்த ஒரு மாசத்துலயும் அவ சரியாவாளான்னு எனக்கு தெரியலை. உனக்கு நான் சொல்ல வரது புரியுதா டா? மாப்பிள்ளை நெருங்கினார்னா இவ எதுவும் சொதப்பி வச்சிறக் கூடாது”
“எனக்கு புரியுது மா. நான் மெதுவா அவ கிட்ட பேசிப் பாக்குறேன். ஆனா எனக்கே….”, என்று ஆரம்பித்த அஞ்சலி “நான் பேசுறேன் மா. போயிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு தந்தையுடன் கிளம்பி விட்டாள்.
“எனக்கே சரியா தெரியாத விஷயத்தை நான் எப்படி டி உனக்குச் சொல்லிக் கொடுப்பேன்?”, என்று உள்ளுக்குள் அரண்டு போனாள். கூடவே இதைப் பற்றி எல்லாம் தோழியிடம் தன்னால் பேச முடியுமா என்ற பயமும் வந்தது. அதே நேரம் அமுதவள்ளியின் பயமும் நியாயமானது என்று புரிந்தது. சிந்துவிடம் எப்படி பேசலாம் என்று மனதுக்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் காலையில் முதலில் கண் விழித்தது ஆதவன் தான். தன்னருகே படுத்திருந்த மனைவியைப் பார்த்தான். அவள் படுத்திருந்த கோலம் அவனை மயக்குவதாக இருக்க அவசரமாக குளிக்கச் சென்றான். அவன் குளித்து முடித்து வரும் போது அவள் அப்படியே படுத்திருக்க அவளை எழுப்பலாமா என்று எண்ணினான்.
இப்போது தான் அவளை எழுப்பினால் நிச்சயம் பயந்து விடுவாள் என்பதால் அவன் மூடி இருந்த போர்வையையும் அவளுக்கு போத்தி விட்டான். பின் வெளியே சென்று விட்டான்.
“சிந்து இன்னும் எழுந்துக்கலையா டா?”, என்று கேட்டாள் சுபா.
“தூங்குறா கா. நீ கொஞ்சம் எழுப்பி விடுறியா?”, என்று அவன் கேட்க அவனை ஒரு மார்கமாக பார்த்தவள் “நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி அவர்களின் அறைக்குள் சென்றாள். “சிந்து எந்திரி மா, நேரம் ஆச்சு பார். இன்னைக்கு ஏதாவது சொந்தக்காரங்க வருவாங்க. புதுப் பொண்ணு உன்னைத் தான் பாக்க வருவாங்க. மதியத்துக்கு மேல நல்லா தூங்கு”, என்று சொல்லி எழுப்பி விட்டாள்.
சுபாவின் சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்த சிந்து சுபாவை அதிர்வாக நோக்க “இதுக்கு தான் ஆதவன் உன்னை எழுப்பலையா? எதுக்கு இப்படி பயப்படுற? நேரம் ஆய்ட்டு. அதான் எழுப்பினேன். இன்னைக்கு நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்க. நீ எந்திச்சு குளிச்சுட்டு வரியா?”, என்று கேட்டாள்.
“சரி அண்ணி”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றாள் சிந்து. அவள் வரும் போது சுபா அவள் அணிய வேண்டிய சேலையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“குளிச்சிட்டேன் அண்ணி”, என்ற சிந்துவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சுபா அடுத்த நொடி சிரித்து விட்டாள். குளித்து முடித்து ஒரு பெரிய துண்டை மட்டும் கட்டிய படி நின்றிருந்தாள் சிந்து.
“ஆமா இது என்ன கோலம்?”, என்று கேட்ட படி சுபா சிரிக்க “அது வந்து அண்ணி… பாத்ரூம்ல டிரஸ் மாத்த தெரியாது”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.
“சரி சரி பரவால்ல, இது உன்னோட ரூம் தானே? இன்னைக்கு இந்த சேலையைப் கட்டிக்கோ. கோவிலுக்கு போற மாதிரி இருக்கும். நீ கிளம்பு. நான் இப்ப வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள். அவள் சென்றதும் உடை மாற்ற ஆரம்பித்தாள் சிந்து.
சுபாவைக் கண்ட ஆதவன் “என்னக்கா எந்திச்சிட்டாளா?”, என்று கேட்டான்.
“பேசாம ஐயர் சொன்ன நாள் வரைக்கும் வேற ரூம்ல தங்கிக்கோயேன்”, என்று அக்கா சொல்ல “ஏன் என்ன ஆச்சு? நீ எழுப்பும் போது ரொம்ப பயந்துட்டாளா?”, என்று குழப்பமாக கேட்டான் ஆதவன்.
“இல்லை இல்லை, ஒரே ரூம்ல இருந்தா உன் பாடு திண்டாட்டம் தான்”, என்று சுபா சொல்ல அவள் சொல்ல வருவது புரியாமல் “தூங்கும் போது டிரஸ் விலகுறதைச் சொல்றியா? அதெல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்று உளறி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் ஆதவன்.
“அது வேறயா? கஷ்டம் தான் போ. சரி நான் அவந்தியைப் பாக்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள். கடைசி வரை சுபா எதற்காக அப்படிச் சொன்னாள் என்று அவனுக்கு புரியாமலே போனது.
சிந்து உடை மாற்றி விட்டு தயக்கத்துடன் கீழே வர அவளை தன்னருகே அமர வைத்துக் கொண்டார் ரங்கநாயகி. பாட்டி அருகில் சிந்து அமைதியாக, அழகு பதுமை போல அமர்ந்திருக்க அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்த ஆதவன் அவளை நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தான்.
அதை கவனித்து விட்டு “டேய் ரங்கா”, என்று அழைத்தார் ரங்கநாயகி.
“என்ன ஆச்சி?”
“உன் அண்ணன் பார்வையே சரி இல்லை டா. அவனை இங்க இருந்து கடத்திட்டு போய்ரு”
“அவ்வளவு தானே? செஞ்சிருவோம்?”, என்று சொன்ன ரங்கன் ஆதவனை வெளியே அழைத்துக் கொண்டு இருந்தான்.
அப்போது அங்கு வந்த மங்கை “சாப்பிட்டு போங்க டா. அம்மா நீயும் வா. சிந்து வா டா சாப்பிடலாம். என்னங்க வாங்க. சுபா மாப்பிள்ளையை சாப்பிடக் கூட்டிட்டு வா. குழந்தைங்க எங்க?”, என்று அனைவரையும் சாப்பிட அழைத்தாள்.
சற்று நேரத்தில் அனைவரும் அந்த சாப்பாட்டு மேசையில் அமர சிந்து பாட்டி அருகே அமர்ந்தாள். அவள் அருகே அமர்ந்த ஆதவன் டேபிள் அடியில் அவளது கையைப் பற்றினான். அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க யாருக்கும் தெரியாமல் கண் சிமிட்டினான். அவள் அவனையே திகைத்துப் போய் பார்க்க “ஏதாவது வம்பு பண்ணுறானா? இந்த பக்கம் வரியா மா?”, என்று கேட்டாள் ரங்கநாயகி.
“கிழவி நீ தான் எனக்கு வில்லியே. அவ என் பக்கத்துல இருந்தா தான் என்னவாம்?”, என்று அவன் பாட்டியிடம் சண்டைக்குப் போக அதைக் கண்டு சிரித்த சிந்து “நான் இங்கயே இருக்கேன் ஆச்சி”, என்றாள்.
அப்போது ரத்தினம் சாப்பிட அமர்ந்ததும் ஆதவன் அமைதியாக அமர்ந்து விட்டான். அவள் அவனை வியப்பாக பார்க்க “உன் மாமா இருக்குற வரைக்கும் உன் புருஷன் வாயவே திறக்க மாட்டான். அப்படி திறந்தான் ஏதாவது வம்புல தான் வந்து நிக்கும். ரெண்டு பேரும் ஏட்டிக்கு போட்டி தான் பேசுவாங்க”, என்றார் ரங்கநாயகி.
மங்கையும் சுபாவும் அனைவருக்கும் பரிமாறி விட்டு அவர்களும் சாப்பிட அமர்ந்தார்கள். ரத்தினம் அவசரமாக நான்கு இட்லிகளை உண்டு விட்டு எழுந்து கொள்ள அதற்கு பின்னர் சாப்பிடும் இடமே களை கட்டியது.
ஆதவன் ரங்கனை கிண்டல் அடிக்க அதற்கு ஆனந்த் விளக்கம் கொடுக்க என்று கலாட்டாவாக சென்றது. அங்கே நடப்பதை எல்லாம் சிந்து வியந்து போய் பார்த்தாள்.
அவளுடைய வீட்டில் அனைவரும் தனித் தனியாக தான் உண்பார்கள். ஏகாம்பரம் முதலில் உண்டு விட்டுக் கிளம்பி விடுவார். அசோக்கும் அப்படி தான். பசிக்கும் போது சிந்து அமர்ந்து உண்பாள். ஆனால் அமுதவள்ளி எப்போது உண்பாள் என்று யாருக்குமே தெரியாது. இன்று இங்கு அனைவரும் அமர்ந்திருக்கவும் அவளுக்கு வியப்பாக இருந்தது.
“என்ன மா பாக்குற? இங்க இப்படி தான். நடுவுல சாப்பாடை வச்சிட்டா யார் வேணும்னாலும் யாருக்கு என்ன வேணும்னு எடுத்துக்குவோம்? உங்க வீட்ல எப்படி மா?”, என்று கேட்டாள் மங்கை.
“எங்க வீட்ல தனித் தனியா சாப்பிடுவோம். அம்மா தான் எல்லாருக்கும் பரிமாறுவாங்க”, என்று தயக்கத்துடன் சிந்து சொல்ல “இங்க எல்லாம் பப் சிஸ்டம் தான்”, என்று சொன்னார் ரங்கநாயகி.
சிந்து என்னவென்று புரியாமல் விழிக்க “ஆச்சி பஃபே சிஸ்டத்தை தான் அப்படிச் சொல்றாங்க”, என்று அவள் காதில் சொன்னான் ஆதவன். அங்கிருந்த சூழ்நிலையே சிந்துவுக்கு சிரிப்பாக இருந்தது.
சாப்பிட்டு முடித்து அனைவரும் ஹாலில் வந்து அமர்ந்தார்கள். அப்போது “எங்க வீடு உனக்கு பிடிச்சிருக்கா மா?”, என்று கேட்டார் ரத்தினம்.
“பிடிச்சிருக்கு”, என்று அவரிடமும் பயத்துடன் பதில் சொன்னாள். “சரி சரி வேலையை ஆரம்பிப்போம். இப்ப ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும். என்னங்க நீங்க ஆடு வெட்டப் பாருங்க”, என்றாள் மங்கை.
“சரி”, என்று சொன்ன ரத்தினம் எழுந்து கொண்டதும் மற்ற ஆண்களும் வெளியே சென்று விட்டார்கள்.
பெண்கள் அனைவரும் உள்ளே அமர்ந்திருக்க அப்போது அங்கு வந்த மங்கை சாக்குப் பைகளை விரித்தாள். பின் அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு என்று கொட்டி வைத்தாள்.
அனைத்தையும் சிந்து குழப்பமாக பார்க்க “இன்னைக்கு நம்ம வீட்டு விருந்து டா. நம்ம சொந்தக்காரங்க மட்டும் வருவாங்க”, என்றார் ரங்கநாயகி.
“அப்ப நேத்து போட்டது?”
“அது கல்யாண விருந்து. இது நம்ம சொந்த பந்தம் மட்டும். நாமளே தான் எல்லா சாப்பாடும் செய்வோம். நீயும் வந்து இப்படி உக்காறு. வெங்காயம் பூண்டு உரிக்க உனக்கு தெரியுமா? தெரியலைன்னாலும் வந்து பழகிக்கோ வா”, என்று சொல்லி அவள் கையில் பூண்டுத் தட்டை எடுத்துக் கொடுத்தார்.
விழி பிதுங்கிய படி அதை உரிக்க ஆரம்பித்தாள் சிந்து. அதே நேரம் “அத்தான், அம்மா வீட்டுக்கு போகணும். இன்னைக்கு அங்க விருந்து. நாம எல்லாருமே போகணும். எனக்கு போக ஆசையா இருக்கு. ஆனா போகவா வேண்டாமான்னு தெரியலை”, என்று தயக்கத்துடன் சொன்னாள் செல்வி.
“நாம போக தான் செய்யணும் செல்வி. போகலைனா ஏதாவது பேச்சு வரும். நீ கிளம்பு. நான் அம்மாவைக் கிளம்பச் சொல்றேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தான் சக்தி.
“மாமா வீட்டுக்கு போகணும் மா. அப்பா அப்பவே போயிட்டாங்க. நீங்களும் பிரியாவும் கிளம்புங்க”, என்று சக்தி சொன்னதும் “நான் வரலை. எனக்கு அங்க வரப் பிடிக்கலை”, என்றாள் வேணி.
“ஆரம்பிச்சிட்டாங்களா?”, என்பது போல பார்த்தாள் செல்வி.