அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவள் அறைக்குள் வர “இவள் தனக்காக இவ்வளவு பார்ப்பாளா?”, என்று ஆச்சர்ய பட்டுப் போனான் ஆதவன்.
அவளுடைய அறையை கண்களால் அளந்தான் ஆதவன். ஒரு இடத்தில் அவன் கண்கள் நிலைக்க அவளும் அங்கே பார்த்தாள். அங்கே அவளது அழுக்குத் துணிகளும் உள்ளாடையும் கிடக்க “ஐயோ”, என்று மனதில் எண்ணிக் கொண்டு அவசரமாக அங்கே ஓடியவள் அனைத்தையும் சுருட்டி அழுக்கு கூடையில் போட்டாள். அதைக் கண்டு சிறு சிரிப்புடன் குளிக்கச் சென்றான் ஆதவன்.
அவன் குளித்து முடித்து வந்ததும் அவனைப் பார்த்து பார்த்து கவனித்தாள் சிந்து. சாப்பிட அமர்ந்ததும் “அம்மா அவருக்கு புதினா சட்னி வைக்காதே, அது அவருக்கு பிடிக்காது. தக்காளி சட்னின்னா விரும்பி சாப்பிடுவாங்க”, என்று சொல்ல அவளைத் தான் அனைவரும் வியப்பாக பார்த்தார்கள்.
“பாத்தீங்களா மா இவளை. இங்க இருந்த வரைக்கும் இவளுக்கு என்ன பிடிக்கும்னே இவளுக்கு தெரியாது. ஆனா இப்ப புருசண்ணு வந்ததும் எப்படி மாறிட்டா பாருங்க”, என்று அசோக் கிண்டல் அடிக்க சிந்துவோ வெட்கத்துடன் அசடு வழிந்தாள். ஆதவனுக்கோ தன்னை புரிந்து வைத்திருந்த மனைவியை நினைத்து பெருமையாக இருந்தது. ஏகாம்பரமும் மகள் முகத்தில் இருந்த சந்தோசத்தைக் கண்டு நிறைவாக உணர்ந்தார்.
அன்று முழுவதும் அவன் ஓய்வெடுக்க சிந்து அவன் அருகிலே தான் இருந்தாள். “நான் ஏன் இங்க வந்தேன்னா…?”, என்று சிந்து ஆரம்பிக்க “நாம எதைப் பத்தியும் பேசிக்க வேண்டாம்”, என்று கண்டிப்புடன் சொல்லி விட்டான் ஆதவன்.
அவளிடம் அவன் கோபமாக எல்லாம் இல்லை. அதே நேரம் அவளை நெருங்கவும் இல்லை. அவளை இழுத்து அணைத்து முத்தம் கொடுத்து.. மேலும் மேலும் செல்ல அவனுக்கு ஆசை தான். ஆனால் தங்கள் வாழ்க்கை தங்களின் வீட்டில் துவங்க வேண்டும் என்று ஆசை பட்டு அமைதி காத்தான்.
அடுத்த நாள் அவர்களை படத்துக்கு அனுப்பி வைத்தான் அசோக். பீச், பார்க் என்று இருவரும் இரண்டு நாட்கள் சென்னையை வலம் வந்தார்கள். ஐந்து நாட்கள் மாமியார் வீட்டில் விருந்தை முடித்து விட்டு தான் மனைவியுடன் கிளம்பினான் ஆதவன்.
சந்தோஷமாக மகளையும் மருமகனையும் வழி அனுப்பி வைத்தார் ஏகாம்பரம். ஆதவனை பாசத்துடன் அவர் அணைத்துக் கொள்ள அனைவருக்கும் நடப்பது வியப்பாக தான் இருந்தது. அவர்கள் கிளம்பும் போது நன்கு இருட்டியிருந்தது. காரை மிதமான வேகத்தில் ஒட்டிக் கொண்டிருந்தான் ஆதவன். அவன் அருகே அமர்ந்திருந்த சிந்து வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். தென்றல் காற்று முகத்தில் வந்து மோத அவள் உடல் சிலிர்த்தது.
இதமான மெலடி பாட்டுகளை அவன் போட்டு விட அந்த பயணம் உயிர்ப்புடன் இருந்தது இருவருக்கும்.
வெகு நேரம் சத்தம் இல்லாமல் வர அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்தான். இருவர் கண்களும் மோதிக் கொண்டது.
அவள் அவனையே பார்க்க அவளுடைய ஏக்கப் பார்வையை பார்த்து விட்டு சாலையில் கவனம் வைத்தான். அவளும் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
அவர்கள் ஊருக்கு வரும் போது நன்கு விடிந்திருந்தது. அவளை பாசமாக அணைத்துக் கொண்ட மங்கை இருவருக்கும் ஆரத்தி எடுத்தே உள்ளே விட்டாள்.
“இது உன் வீடு டா. நான் உனக்கு அப்பா மாதிரி. என்ன நடந்தாலும் வெளிப்படையா உரிமையா சண்டை போடணும். இனிமே இப்படி போகக் கூடாது சரியா?”, என்று சொன்னார் ரத்தினம்.
“சரி மாமா”, என்றாள்.
“வந்துட்டியா தங்கச்சி?”, என்று ரங்கனும் சந்தோஷம் கொண்டான். அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட சிந்து அவர்களின் அறைக்குச் செல்ல ஆதவன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தான்.
தன்னுடைய அழுக்குத் துணி கட்டிலில் கிடக்க அது எப்படி வந்திருக்கும் என்று எண்ணியவளுக்கு அவன் அன்பை எண்ணி உடல் சிலிர்த்தது. கூடவே குழப்பமும் வந்தது.
இவ்வளவு அன்பு வைத்திருந்தும் ஏன் தன்னை விட்டு விலகி இருக்கிறான் என்ற கேள்வியும் அவளுக்கு எழுந்தது.
அந்த துணியை எடுத்து அழுக்கு கூடையில் போட்டு விட்டு குளிக்கச் சென்றாள். அப்போது அறைக்குள் வந்தவன் சிறு சிரிப்புடன் கட்டிலில் அமர்ந்தான்.
குளித்து முடித்து எப்போதும் போல துண்டைக் கட்டிக் கொண்டு அறைக்குள் வந்த சிந்து அவனைக் கண்டு வெட்கத்துடன் நின்றாள்.
அவளைக் கண்டு “ரொம்ப நாள் கழிச்சு கிடைச்சிருக்கு, இந்த தெய்வீக தரிசனம்”, என்று அவன் புன்னகையுடன் சொல்ல “யார் உங்களை இத்தனை நாள் காத்திருக்கச் சொன்னதாம்?”, என்று முணுமுணுத்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன் “ஏய் இப்படி எல்லாம் பேசுவியா டி நீ?”, என்று கேட்டான்.
“ஐயோ, நான் ஒண்ணும் சொல்லலை. நீங்க முதல்ல வெளிய போங்க. நான் டிரஸ் மாத்தணும்”
“ஏன் நான் இருக்கும் போது மாத்த மாட்டீங்களோ மேடம்? இல்லை மாத்தினது தான் இல்லையா?”
“மாத்தலாம் தான். ஆனா என்னை அப்படி எல்லாம் பாத்துட்டு எங்க வீட்டுக்காரர் கையை காலை உடைச்சிக்கிட்டார்னா என்ன பண்ண? அதுக்கு தான் பயப்படுறேன். அவருக்கு என்னை நெருங்கவே அவ்வளவு பயம் தெரியுமா?”, என்று சொல்லி அவனை சீண்டினாள்.
“நக்கலா டி? முதல் நாளே முதலிரவு கொண்டாடினா நீ பயப்படுவன்னு நினைச்சு என்னையே காயப் படுத்திக்கிட்டா நீயே இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ. அன்னைக்கே உன்னை விட்டது தப்பு டி. கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே முதலிரவு கொண்டாடிருக்கணும்?”
“உண்மையிலே அன்னைக்கு முதலிரவு கொண்டாடினா பயத்துல ஊரே கேக்குற மாதிரி அலறிருப்பேன்”
“ஆத்தாடி, அப்ப நான் தப்பிச்சிட்டேன். இல்லைன்னா என் மானமே போயிருக்கும். ஆமா அப்புறம் எப்படி இவ்வளவு விவரமா ஆன?”
“அது.. அது வந்து….”, என்று அவள் இழுக்க “இன்னைக்கு நீ சொல்லியே ஆகணும்”, என்றான்.
அவள் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணற “ஆதவா சிந்து ரெண்டு பேரும் குளிச்சிட்டு சாப்பிட வாங்க”, என்று அழைத்தாள் மங்கை.
“அம்மா கூப்பிட்டதுனால தப்பிச்சிட்ட. சரி நீ டிரஸ் மாத்து. நான் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி எழுந்தவன் அவள் அருகே வந்து “நம்ம ரெண்டு பேருக்கும் இடைல இருக்குற இந்த கேப் இன்னைக்கு நைட் வரைக்கும் தான் மேடம். அதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும் இடையே இடமே கிடையாது”, என்று சொல்லிச் செல்ல அவன் அருகாமையில், அவன் சரச பேச்சில் கிறக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவள் பார்வையில் அப்பட்டமான அழைப்பு இருக்க அவன் தான் திணறிப் போய் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அவளும் சிறு சிரிப்புடன் உடை மாற்ற ஆரம்பித்தாள்.
காலை உணவு முடிந்ததும் இருவரும் ஓய்வெடுக்க அறைக்கு வந்தார்கள். தூங்கத் தானே போகிறோம் என்று எண்ணி சிந்து கட்டிலில் படுக்க அவள் அருகே படுத்தவன் அவள் வயிற்றில் கையைப் போட்டான். அவள் கேள்வியாக அவனைப் பார்க்க “முத்தத்துக்காக எல்லாம் நைட் வரைக்கும் வெயிட் பண்ண முடியாது டி”, என்றவன் அதிரடியாக அவளுடைய உதடுகளை சிறை செய்தான்.
அவன் முத்தத்தை அவள் கண்களை மூடி ரசிக்க அவனது கரங்கள் சுதந்திரமாக அவள் உடலில் பயணித்தது. அவள் அவனுடைய கரங்களுக்கு அணை போட முயல அதை எளிதாக முறியடித்தவன் வெகு நேரம் கழித்தே அவளை விட்டான்.
“நைட் முழுக்க தூங்காததுனால நல்லா தூக்கம் வருது. அதனால தான் இப்ப உன்னை விடுறேன்”, என்று சொன்ன ஆதவன் அவளை அணைத்த படியே தூங்கிப் போனான். அவளும் அவன் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கி விட்டாள்.
அன்று மாலை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் ஆதவன். அவன் நெஞ்சில் இருந்து விலகிய சிந்து, தூங்கும் அவனை ரசித்து விட்டு குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து அவள் கீழே வரும் போது அங்கே பரபரப்பாக இருந்தார் ரத்தினம்.
அவள் அவரையே குழப்பமாக பார்த்தாலும் “என்ன ஆச்சு மாமா?”, என்று அவரிடம் கேட்க எல்லாம் இன்னும் அவளுக்கு தைரியம் வரவில்லை. அதனால் அமைதியாக அவரைப் பார்த்தாள்.
“சிந்து, ஆதவன் எழுந்துட்டானா மா?”, என்று கேட்டார் ரத்தினம்.
“இல்லை மாமா, எழுப்பவா?”
“அவனை எழுப்புறியா மா? கொஞ்சம் அவசரம்”
“சரி மாமா”, என்று சொல்லி அறைக்கு வந்து சிந்து அவனை எப்படி எழுப்ப என்று தயக்கமாக நின்றிருந்தாள்.