பின் அசோக் புறம் திரும்பியவன் “நான் இப்ப என் வீட்டுக்கு தனியா போகனுமா? இல்லை உன் தங்கையும் வராளா? சீக்கிரம் கேட்டுச் சொன்னா நல்லா இருக்கும்”, என்றான்.
அவன் கோபத்தில் திகைத்து பயந்து போன அமுதவள்ளி வேகமாக மகள் மற்றும் கணவன் புறம் ஓடினாள்.
சிந்துவை தன் பக்கம் அவள் இழுக்க “ஏய் எதுக்கு டி குட்டிமாவை இழுக்குற? அவ கை வலிக்க போகுது”, என்றார் ஏகாம்பரம்.
“கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருங்க. உங்க பாசத்தை எல்லாம் கொஞ்ச நேரம் மூட்டை கட்டுங்க. சிந்து இப்ப மாப்பிள்ளை கூட கிளம்பனும். சிந்து வா”, என்று அமுதவள்ளி சொன்னதும் சிந்து தந்தையை பயப் பார்வை பார்த்தாள்.
“அவ ஏன் அவன் கூட போகணும்? அவ என் கூட தான் இருப்பா. நான் அவன் கூட எல்லாம் என் மகளை அனுப்ப மாட்டேன். அவன் யாரோ எவனோ?”, என்றார் ஏகாம்பரம்.
“இப்ப உங்களை வாயை மூடச் சொன்னேன். உங்க கூடவே வச்சு…. எனக்கு வர ஆத்திரத்துக்கு… வாய்ல நல்லா வருது. எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம். அவ அவளோட புருஷன் கூட வாழப் போகணும். சிந்து வா”, என்று சொன்ன அமுதவள்ளி சிந்து கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஆதவன் அருகில் சென்றாள். அப்பாவை பார்த்த படியே சென்றாள் சிந்து. அவருக்கு மகள் பின்னே போக ஆசை தான். ஆனால் ஆதவன் அருகில் செல்ல பிடிக்க வில்லை என்பதால் அமைதியாக நின்றார்.
“தம்பி சொல்றதை கேட்டு நடக்கணும் கண்ணு”, என்று சிந்துவிடம் சொன்னாள் அமுதவள்ளி.
“தம்பியா அது யாரு?”, என்று மனதுக்குள் எண்ணிய சிந்து “ஓ மாப்பிள்ளையை சொல்றாங்களோ?”, என்று எண்ணிக் கொண்டு அமைதியாக நின்றாள்.
“சரி டா கிளம்புறோம். வரோம் அத்தை”, என்று சொல்லி விட்டு வெளியே நடந்தான் ஆதவன். “ஒரு வார்த்தை என் கிட்ட போயிட்டு வறேன்னு சொல்றானா பாரு? திமிர் பிடிச்சவன்”, என்று எண்ணிக் கொண்டார் ஏகாம்பரம்.
ஆதவனும் சிந்துவும் இருவரும் வெளியே வரும் போது ரங்கன் காரை தயாராக வைத்திருந்தான். அசோக்கும் அமுதவள்ளியும் கூட அங்கே வந்தார்கள். ஏகாம்பரம் மட்டும் மகளை அனுப்பி வைக்க வரவே இல்லை.
முதலில் ஆதவன் காரில் ஏறி அமர சிந்துவோ அசையாமல் நின்றாள். அதைக் கண்டு எரிச்சல் அடைந்தவன் அசோக்கை முறைக்க அசோக் தான் தங்கையை அவன் அருகில் அமர வைத்தான்.
சிந்து கண்கள் அவன் புறம் திரும்பவே இல்லை. அண்ணன் மற்றும் அன்னையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் என் பக்கம் திரும்புறாளா பாரு”, என்று எண்ணியவன் “கிளம்பு ரங்கா”, என்று உரக்கச் சொல்லி விட்டு அசோக் புறம் திரும்பி போன் செய்கிறேன் என்னும் விதமாய் சைகை செய்தான்.
பின் அமைதியாக அமர்ந்து கொண்டான். அவனுக்கு வீட்டை நினைத்து பயம் வந்திருந்தது. அனைத்தும் அவனை மீறி நடந்தது தான். ஆனால் நடந்த அனைத்துக்கும் அவன் தான் பொறுப்பு. அனைவருக்கும் அவன் தான் பதில் சொல்லவேண்டும். அவனுக்கு உள்ளுக்குள் திகிலாகவும் நடுக்கமாகவும் இருந்தது.
அவனுக்கு என்ன ஆனாலும் சிந்துவை யாரும் தவறாகச் சொல்லி விடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியும் வந்தது.
அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தான். பயத்துடன் ஜன்னல் அருகே ஓரமாக அமர்ந்திருந்தாள் சிந்து. அவளைக் கண்டு ஒரு பெருமூச்சு தான் வந்தது.
“அப்படி காட்டு கத்து கத்துற அப்பனுக்கு மகளா இவள்? இப்படி பயந்து சாகுறா?”, என்று எண்ணியவன் அவளையே பார்த்தான். இப்போது அவன் கோபமெல்லாம் மறைந்து ரசனை வந்திருந்தது.
“எதுக்கு அப்படி தள்ளிப் போய் உக்காந்துருக்கா? என் பக்கம் கொஞ்சம் தள்ளி உக்காந்தா என்னவாம்?”, என்று அவனது மனது சிணுங்கியது. அப்போது தான் அவளது பயத்தைப் பற்றி நினைவு வர “இவளை எப்படி சரி செய்ய போகிறோம், தன் வீட்டை எப்படி சரி செய்ய போகிறோம்?”, என்று அவனுக்கு கவலை வந்தது.
சிறிது நேரத்தில் எல்லாவற்றையும் எண்ணி ஆதவனுக்கு தலை வேதனையாக இருந்தது. எதிர் பாராமல் நடந்தாலும் அவன் விரும்பி நடத்திக் கொண்ட திருமணம் இது. அவள் தான் இனி அவனுடைய வாழ்க்கை என்று புரிந்தது. இதை அவள் புரிந்து கொள்வாளா என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. அவனுடைய புரிதல் அவர்களை வாழ்க்கையில் ஒன்றிணைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மண்டபத்திலோ “டேய் அசோக் மாப்பிள்ளை கோபமா இருக்கார். அவருக்கு ரொம்ப கோபம் வருமா டா?”, என்று கேட்டாள் அமுதவள்ளி.
“அந்த கோபம் நம்ம அப்பா மேல தான் மா. அவனை கொஞ்சமாவது மதிக்கணும்ல? இந்த அப்பா ஏன் மா இப்படி இருக்கார்?”, என்று கேட்டான் அசோக்.
“இவர் என்னைக்கு ஒழுங்கா இருந்துருக்கார்? இன்னைக்கு இருக்க? எனக்கு இந்த மனுசனை நினைச்சா எரிச்சலா வருது? அந்த ரங்கன் தம்பிட்ட மாப்பிள்ளை குடும்பத்தைப் பத்தி விசாரிச்சேன் டா. அவன் அப்படி புகழ்ந்து தள்ளுறான். எனக்கும் நிம்மதியா இருந்தது. எப்படி பட்ட வாழ்வு சிந்துக்கு கிடைச்சிருக்கு. ஆனா உங்க அப்பாவுக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா பாரு? இப்ப வழி அனுப்ப கூட இவர் வெளியே வரலை?”
இப்படி தாயும் மகனும் பேசிய படி உள்ளே சென்ற போது கன்னத்தில் கை வைத்து சோக சித்திரம் போல அமர்ந்திருந்தார் ஏகாம்பரம்.
அவருடைய செயல்கள் அனைத்தும் எரிச்சல் தந்தாலும் எப்போதுமே அவர் மேல் காதலை வைத்திருக்கும் அமுதவள்ளிக்கு அந்த நேரம் கணவனின் சோகம் வலியைத் தந்தது.
அவள் கணவனைப் பாவமாக பார்க்க “உங்க ரொமான்ஸ் லுக்கை கொஞ்சம் நிறுத்துங்க மா. எப்படி தான் இந்த மனுசனை உருகி உருகி காதலிச்சீங்களோ? இப்ப அவர் எவ்வளவு பெரிய குழப்பத்தை சிந்து வாழ்க்கைல உண்டாக்கிருக்கார் தெரியுமா? என்ன இருந்தாலும் நாம பொண்ணைப் பெத்தவங்க. ஆனா இவர் அவனைப் பாத்து கொஞ்ச பேச்சா பேசுறார்? சபைல வச்சு அவனுக்கு ஆசீர்வாதமும் பண்ணலை. இப்ப வழி அனுப்பவும் வெளிய வரலை. இதை எல்லாம் எப்படி சரி செய்ய போறேனோ? தெரியலை“, என்றான் அசோக்.
“நீ என்ன சரி செய்றது? இதை இழுத்து விட்ட அவர் தான் சரி செய்யணும். வா என்ன சொல்றார்ன்னு பாப்போம்?”, என்று இருவரும் அருகில் சென்றதும் “அவன் கூட என் குட்டிம்மாவை அனுப்பிட்டீங்கல்ல? இப்ப உங்களுக்கு நிம்மதியா இருக்கா?”, என்று எரிந்து விழுந்தார் ஏகாம்பரம்.
“எங்களுக்கு நிம்மதியா இருக்கோ இல்லையோ? ஆனா உங்களுக்கு மனசுக்குள்ள குளுகுளுன்னு இருக்குமே?”, என்று கேட்ட படி அவரை முறைத்தாள் அமுதவள்ளி.
அவள் அப்படிச் சொன்னதும் அவளை குழப்பமாக பார்த்த ஏகாம்பரம் “என்ன டி லந்தா? எனக்கு என்ன சந்தோஷம்? நானே என் குட்டிமா போன துக்கத்துல இருக்கேன். எனக்கு சந்தோசமானு கேக்குற?”, என்று கேட்டார்.
“பொய், உங்களுக்கு சந்தோஷம் தான். இத்தனை நாள் உங்க அக்கா கூட சேந்து எங்களை அவமானப் படுத்தணும்னு காத்துட்டு இருந்தது நடந்துருச்சுல்ல?”, என்று கேட்டதும் உண்மையிலே அரண்டு போனவர் “என்ன டி சொல்ற?”, என்று கேட்டார்.
“என்ன என்ன சொல்றேன்? இப்படி அக்காவும் தம்பியும் சேந்து எங்க கழுத்தை அறுத்துட்டீங்களே? என் மகளை இப்படி மாலையும் கழுத்துமா நிக்க வச்சிட்டீங்களே?”
“அக்கா என்ன செய்யும்? கோகுல் தான் பயந்து ஓடிட்டான். என் கிட்ட சொல்லிருந்தா அவன் பயத்தைப் புரிய வச்சிருப்பேன்”, என்று அவர் தயங்கிய படியே சொல்ல “இன்னும் அவங்களுக்கு தானே சப்போர்ட் பண்ணுறீங்க?”, என்று எரிச்சலுடன் கேட்டாள் அமுதவள்ளி.
“என் பொண்ணு மேல எனக்கு அக்கறை இல்லாத மாதிரி பேசுற வள்ளி”
“அக்கறை இருந்தா இப்படி நடந்துட்டு இருந்துருப்பீங்களா மாப்பிள்ளை கிட்ட?”
“ஆமா பெரிய மாப்பிள்ளை, புடலங்கா மாப்பிள்ளை. போடி அவன் யாரோ எவனோ?”
“அப்ப உங்க அக்கா மகன் தான் பெரிய மாப்பிள்ளையோ? கொஞ்சமாவது சிந்து பத்தி கவலைப் படுறீங்களா நீங்க?”
“என் மக எனக்கு உசுரு டி. அவ மேல எனக்கு இல்லாத அக்கறை உங்க எல்லாருக்கும் வந்துருச்சோ?”
“இங்க பாருங்க. யாருக்கு அக்கறைன்னு இப்ப பேச்சு இல்லை. நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு. நடந்ததை யாராலயும் மாத்த முடியாது. இந்த ஜென்மத்துல அவர் தான் நம்ம பொண்ணுக்கு புருஷன். அவர் தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை. உங்க மகளுக்காக நீங்க அவரை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்”
“அதுக்கு அவனுக்கு பாத பூஜை பண்ணச் சொல்றியா?”, என்று எரிச்சலுடன் கேட்டார்.
“அப்ப ஓடிப் போன உங்க அக்கா மகனுக்கு பாத பூஜை பண்ணுறீங்களா?”
“வள்ளி”
“எனக்கு என் பொண்ணு வாழ்க்கை முக்கியம். நான் வீட்டுக்கு போய் சீரை எல்லாம் எடுத்து வைக்கிறேன். மாப்பிள்ளை கால் பண்ணிச் சொன்னதும் கொண்டு போய் சீரை இறக்கணும். வெறும் கையோட என் பிள்ளையை அனுப்பிட்டோமேன்னு எனக்கு வருத்தமா இருக்கு. அங்க பிள்ளையை யாரும் எதுவும் சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்கு. நாமளும் இல்லாம பிள்ளை அரண்டு போய் இருக்கும். அவளை தைரியமா வளங்க வளங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா என் பேச்சை? இப்ப குழந்தை மலங்க மலங்க முழிச்சிட்டு போறா. எல்லாம் உங்களால தான். மாப்பிள்ளை கிட்ட இருந்து போன் வந்ததும் நாம கிளம்பி போறோம். நீங்களும் வரணும். அவ்வளவு தான்”
“நான் அவன் வீட்டுக்கு எல்லாம் வர மாட்டேன்”, என்றார் ஏகாம்பரம்.
“நீங்க வந்து தான் ஆகணும்”, என்று பிடிவாதம் பிடித்தாள் அமுதவள்ளி.
“வர முடியாது. அவனையே எனக்கு பிடிக்கலை. இதுல அவன் வீட்டுக்கு எல்லாம் வர மாட்டேன்”
“சரி டா அசோக், இவர் இப்படியே இருக்கட்டும். நாம கிளம்புவோம். மாப்பிள்ளை கிட்ட மாசம் மாசம் ஒரு அமெளண்ட் கொடுத்துரு. நாம சிந்து கூட போய் உக்காந்துருவோம். நாம யாரும் இல்லாம இந்த மனுஷன் இங்க தனியா கிடக்கட்டும்”, என்று அமுதவள்ளி சொன்ன பிறகு தான் கொஞ்சம் அடங்கினார் ஏகாம்பரம்.