மகனுடன் போராடிவிட்டு கீழே சென்ற தேவகி சிறிது நேரம் தேவியிடம் பேசிவிட்டு நேரே அன்னையின் அறைக்கு தான் சென்றார். அங்கே எப்போதும் போல வீரைய்யன் அமர்ந்து மனைவியின் பாதங்களை மென்மையாக பிடித்துவிட்டுக்கொண்டிருக்க, அந்த காட்சியில் அப்படியே பிரம்மித்து நின்றுவிட்டார் அவர்.
வீரைய்யன் என்றாலே ஊருக்குள் பயம் என்றால், வீட்டிற்குள் கேட்கவும் தேவையில்லை. அப்பா என என்னதான் பாசம் அதிகம் இருந்தாலும் அதைவிட துளி அதிகமாய் பயம் தான் இருந்தது. வீட்டிற்குள் அடுக்களை மட்டும் தான் பெண்களுக்கான நிம்மதியான இடம். மற்ற அத்தனை இடங்களிலும் யார் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என பார்த்து பார்த்து தான் பெண்கள் நடக்க வேண்டும். இயல்பாக அமர்ந்து கதை பேசுவதோ, ஓடி விளையாடுவதோ, ஒன்றாக அமர்ந்து ஒலியும் ஒளியும் பார்த்ததோ என்ற, இயல்பான மற்ற வீடுகளை போன்ற எதுவுமே இந்த வீட்டில் இருந்தது இல்லை.
சொகுசான ஜெயில் போல தான் அப்போதெல்லாம் அவர் உணர்ந்திருக்கிறார். அந்த உணர்வு தான் அவரை தப்பித்து போக சொல்லி விடுதலைக்காக உந்தியதோ என்னவோ?
மனைவியை காரணமின்றி ஒரு பார்வை கூட பார்த்திராத மனிதர் இன்று அவர் காலடியில் அமர்ந்து சேவகம் செய்வதை பார்க்கையில் தன் கண்களையே நம்பமுடியவில்லை அவருக்கு.
தன்னை சமாளித்துக்கொண்டு உள்ளே வந்த தேவகி, தந்தையின் அருகே அமர்ந்து, “விடுங்கப்பா, நான் செய்யுறேன்” என்றார்.
“பரவால்லம்மா… தினம் செய்யுறது தான்! நானே செஞ்சா எனக்கொரு திருப்தி”
அன்னையின் முகத்தை ஒருமுறை பார்த்த தேவகி, “எப்போ’ப்பா முழிப்பாங்க?” என்றார்.
“முழிக்குற நேரம் தான்!”
“நிறைய தூங்குவாங்க போலயேப்பா”
“ஆமாம்மா… நல்ல தூக்கம் தான் அவளுக்கு மருந்துன்னு சொல்லிருக்காங்க” என்று சொல்ல, “எப்..எப்படி இருக்கீங்கப்பா?” என்றார் தேவகி. கேட்கும்போதே தொண்டை அடைத்தது.
மனைவியின் கால்களில் இருந்த கைகள் ஒரு நொடி நின்று நடுங்க, “எனக்கென்னமா? வீம்பு, வைராக்கியம்ன்னு பேசிக்கிட்டு நல்லா இருக்கேன்” என்றவர் குரலில் அதீத கசப்பு.
“ஏன்ப்பா இப்படி பேசுறீங்க?”
“வேற எப்படிம்மா பேச சொல்ற? நீ எங்களை விட்டு போயிட்டன்னு கோவப்பட்டோம் சரி… அடுத்து நீ எப்படி இருக்க, என்னமா இருக்கன்னு நாங்க தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சுருக்கணும் ல? அதானே ஒரு நல்ல தகப்பனுக்கு அழகு? கடவுள் புண்ணியத்துல நீ நல்லா இருக்க… ஒரு வேளை கட்டினவன் சரியில்லின்னா என்ன செஞ்சுருப்ப நீ? நினைச்சாலே பகீர்ன்னு ஆவுது! எனக்கே இப்படி இருக்கே… உன்மேல உயிரே வச்சுருந்தவ, அவளுக்கு எப்படி இருந்துருக்கும்? இந்த நினைப்பு தான் அவளை வாட்டிட்டு இருந்துருக்கு”
தந்தை பேச பேச கண்கள் கலங்கிப்போனது அவருக்கு.
அவருமே பலமுறை நினைத்திருக்கிறார். ஒருவேளை ரிச்சர்ட் மோசமான ஆளாக இருந்திருந்தால் தன் கதை என்னவாகிருக்கும் என்று!?
“விடுங்கப்பா… எல்லாம் தான் சரியாகிடுச்சே!”
“ம்ம்ம்! மாப்பிள்ளை முகத்தை பார்க்க கூட கூச்சமா இருக்கு… வீடேறி வந்தவரை உள்ளேக்கூட விடாம துரத்தினேன்! இப்ப எனக்கொரு தேவைன்னதும் வர சொல்லிருக்கேன்! ரொம்ப சுயநலம் புடிச்ச ஆளு நானு!”
மேலும், “நான் பேசி சமாதானப்படுத்தணும்ன்னு நினைக்கல! அந்த பேச்சு எங்க கொண்டு விடும்ன்னு எனக்கு தெரியும்… தெரிஞ்சு தான் அமைதியா நின்னேன்! எப்படியோ என் குடும்பம் ஒன்னு சேரனும்… என் மவளை அவ அம்மாக்கிட்ட காட்டிடணும்! எனக்கு பிறகும் என் பொண்ணுக்கு அம்மா வீடுன்னு ஒன்னு இருக்கணும்… இதெல்லாம் நடக்கனுன்னு தான் நான் அந்த நேரம் வாயை மூடிக்கிட்டு நின்னேன்!” என்று சொல்ல,
“புரியுது ப்பா! அந்த பிரச்சனையால தான் நான் இப்போ இங்க இருக்கேன்!” என்றார் தேவகி.
கமலம் அசைய, வேகமாய் அன்னையின் தலைமாட்டில் சென்று முகம் பார்க்கும்படி அமர்ந்தார் தேவகி.
“ம்மா?” அவர் அழைக்க, விழிகளை நன்கு திறந்த கமலம், மகளை பார்த்ததுமே, “நல்லா இருக்க தானே?” என்று தான் கேட்டார்.
ரிச்சர்ட் ஏற்கனவே அவரிடம் எப்படி பேச வேண்டும் என்று சொல்லியிருக்க, அதற்கு தகுந்தார் போல நிதானத்துடன் அழுகையின்றி பேசினார் தேவகி.
கமலத்திடம் இருந்து ஒரு ஆசுவாச மூச்சு வெளிப்பட, கண்களை அயர்வாக மூடி திறந்தார். மகளின் கையை கெட்டியாய் பிடித்துக்கொண்டே அப்படியே படுத்திருந்தார் கமலம்.
“பப்பூ எங்க?” அவர் அடுத்து கேட்க, “தேவி வீட்டுல இருக்கான் ம்மா” என்றார் தேவகி.
கமலத்துக்கு அன்று நடந்த எதுவுமே சொல்லப்படவில்லை. பப்பூ எங்கே என்று அவனை காணாமல் கேட்டதற்கு மட்டும், ‘உன் மவளை அழைச்சுட்டு வர போயிருக்கான்’ என்று வீரைய்யன் சொல்லிவிட, கமலம் ஒருவித எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தார்.
சைகையில் ‘எழுந்து உட்காரனும்’ என்று கமலம் சொல்ல, தேவகியும் வீரைய்யணும் அவருக்கு உதவ, அடுத்து மதிய உணவை தேவகியே தன் கையால் அவருக்கு புகட்டினார். மகளின் கையால் உணவருந்த ஆரம்பித்த கமலத்திற்கு மகளிடம் பேசவும் கேட்கவும் சொல்லவும் ஆயிரம் கதைகள் இருந்தது.
பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தன் இயல்புக்கு அவர் திரும்பிக்கொண்டிருந்தார் என்பதை வீரைய்யன் உணர ஆரம்பித்தார். அவர் நெஞ்சில் இருந்த பாரம் அப்படியே இறங்கிப்போனது.
‘இனி மனைவியை பற்றிய கவலையே இல்லை’ என்ற எண்ணம் உதயமாக, வெகு வருடங்களுக்கு பிறகு நிம்மதியாய் புன்னகைத்தார் அவர்.
***
ஜேகோப் வந்ததில் இருந்து கொஞ்சமும் சாப்பிடவில்லை. எது கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துக்கொண்டே இருந்தான்.
ரோஷிணியிடம் பேசிவிட்டு தோட்டத்தில் வந்து அமர்ந்தவனுக்கு, எப்படி ரோஷினியை கடத்திக்கொண்டு கள்ளத்தோணியில் ஊர்ப்போவது என்ற யோசனை.
காலையில் வந்து குவிந்திருந்த ஊரார் கூட்டம் இன்னமும் குறைந்தப்பாடில்லை.
‘ஏன்டா, உங்களுக்கு எல்லாம் வீடு வாசலே கிடையாதாடா!’ என நினைக்கும்போது தான் அருகே யாரோ பேசிக்கொள்வது தெரிந்தது, ‘கல்யாணம் முடிஞ்சு தான் ஊருப்பக்கம் திரும்ப போகணும்’ என்று.
வந்ததில் பாதி உறவுக்காரர்கள்…! அவர்களுக்கான உணவு வீட்டின் பின்பக்க எல்லையில் பந்தல் போட்டு ஏற்ப்பாடாகிக்கொண்டிருந்தது.
ஜேகோபுக்கு பரமுவின் மாஸ்டர் ப்ளான் புரிந்துப்போனது, எப்படியும் தான் பெற்றவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்… வந்ததும் பிடித்து உற்றார் உறவினர் பார்க்க கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டு செய்துக்கொண்டிருக்கிறார் என்று.
‘எனக்கு மம்மி ரோல் பண்ண வர சொன்னா, இந்த டேவ் வேற, இங்க வந்ததுமே அண்ணனுக்கு ஜால்ரா போடுது!’
அன்னையை நினைத்ததும் தந்தையின் நினைவு வந்தது.
இருந்த இடத்தில் இருந்தே சுற்றிலும் பார்த்தான். ஒரு ஓரமாய் பிளாஸ்டிக் சேர் போட்டு கையில் ‘டேப்’புடன் அமர்ந்திருந்தார் அவர். எழுந்து அவர் அருகே சென்று அமர்ந்துக்கொண்டான் ஜேகோப்.
“டேட்?”
அவர் தலையை நிமிர்த்தாமலே, “இயா பப்பூ” என்றார்.
“தலை வலிக்குது!” அவன் சொல்ல, “இட் மே ஹெபென்ஸ், பிகாஸ் ஆஃப் இன்னடிக்குவேட் வாட்டர் கன்டென்ட் இன் பாடி, ஆர் லாக் ஆஃப் ஸ்லீப், ஆர் எல்ஸ், சம் சார்ட் ஆஃப் ஸ்ட்ரெஸ் அண்ட் டென்ஷன். ஐ ஹேவ் எ மெடிசின் இன் மை பேக், ஜஸ்ட் கோ அண்ட் ஹேவ் இட். யூ வில் பீ ஒகே”
(தலைவலி வரதுக்கு போதிய அளவு தண்ணி குடிக்காதது, சரியா தூங்காதது, இல்லன்னா டென்ஷன் கூட காரணமா இருக்கும். என் பை’ல அதுக்கான மருந்து இருக்கும், போய் எடுத்துக்கோ.. சரியாகிடும்!)
என்று ரிச்சர்ட் சொல்ல, “டேட்ட்ட்ட்” என பல்லைக்கடித்தான் ஜேகோப்.
டேப்’பில் மூழ்கியிருந்த முகத்தை தூக்கியவர், “என்ன பப்பூ?” என்று கேட்க,
“ஐ ம் ஹியர் டு டாக் வித் மை டேட், நாட் வித் தி நொட்டோரியஸ் ஆஸ்ட்ரேலியன் டாக்டர்”
(நான் என் அப்பாக்கூட பேசனும்ன்னு வந்துருக்கேன்… ஆஸ்திரேலியா’வோட பிரபலமான மருத்துவர் கிட்ட இல்ல)
என்றதும், “டாக்டர் இஸ் பிசி.. பட், யுவர் டேட் இஸ் ஆல்வேஸ் ப்ரீ” (மருத்துவர் ரொம்ப பிசி, ஆனா, உன் அப்பா எப்பவும் ப்ரீ) என்ற ரிச்சர்ட் அவன் புறம் திரும்பி அமர்ந்தார்.
“ப்ச்! இதான் அப்போவே சொல்லிட்டியே… வேற சொல்லு” ரிச்சர்ட் சொல்ல, “டேட்?” என திகைத்தவன், “நான் சொல்லிட்டே தான் இருக்கேன், ஆனா யாருமே ரெஸ்பான்ட் பண்ண மாட்டேங்குறீங்களே?” என்றான்.
“அந்த விஷயத்துல இங்க நான் பண்ண எதுவுமே இல்லையே பப்பூ?”
“ஏன் இல்ல? நீங்க என் டேட் தானே? உங்களுக்கு இந்த மேரேஜ்’ல இஷ்டம் இல்லன்னு சொல்லி நிறுத்துங்க” ஜேகோப் சொல்ல,
“கல்யாணம் பண்ணப்போற நீ இஷ்டம் இல்லன்னு சொல்லியே யாரும் மதிக்கல… இதுல எனக்கு இஷ்டம் இல்லன்னு சொன்னா ரெஸ்பெக்ட் பண்ணுவாங்களா அதை?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டார். அதுவும் சரிதானே!?
“ப்ச்! டூ சம்திங் டேட்!” அவன் குழந்தையென சிணுங்க, “அட்லீஸ்ட் உன் மாம்மி என் சைட் இருந்தாக்கூட எதாவது பேசலாம்… அவ வந்ததுல இருந்து என்னையே மறந்துட்டா!” என்றவர், “சீக்கிரம் இங்கிருந்து அழைச்சுட்டு போய்டணும். இல்லன்னா எனக்கு என் குடும்பம் முக்கியம்ன்னு இங்கேயே செட்டில் ஆகிடுவா!” என்றார் ரிச்சர்ட். அவர் பயம் அவருக்கு…!
அப்போது தேவி கையில் தட்டுடன் அங்கே வந்தார்.
“பப்பூ… உனக்கு பிடிச்ச மாதிரி கேரெட், கிரேப்ஸ் போட்டு தயிர் சாதம் செஞ்சேன்! கொஞ்சமா சாப்பிடு” என்று அவனிடம் தேவி தட்டை நீட்ட, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான் அவன்.
தேவி உதவிக்காக ரிச்சர்டை பார்க்க, “ஜாக்கி… இப்படி பண்ணக்கூடாது! வாங்கிக்கோ!” என்றார் ரிச்சர்ட்.
“எனக்கு வேண்டாம் டேட்!” என்றவன் திரும்பவே இல்லை. இதை பார்த்துக்கொண்டே அங்கே வந்தார் சத்தியநாதன்.
“வந்ததுல இருந்து ஒண்ணுமே சாப்பிடல நீ! எனக்கு கஷ்டமா இருக்கு பப்பூ” என்று கலக்கத்துடன் சொல்ல, சத்தியனோ, “டேய், வாங்கி சாப்பிடு” என்றார் அதட்டலாய்.
“முடியாது!” என்றான் அவன் நிர்தாட்சண்யமாய்.
அருகே வந்தவர்களை கவனித்துக்கொண்டிருந்த திரவியனுக்கு தந்தையின் பேச்சை ஜேகோப் அவமதித்தது சுர்ரென கோவத்தை ஏற்றியது.
“அட, உனக்கென அவ்ளோ வீம்பு? வாங்கி சாப்பிடு டா.. அப்பறம் உன் வயிறு தான் காயும்!” சத்தியம் மீண்டும் சொல்ல, “சும்மா இப்டி கேர் பண்ற மாதிரி யாரும் நடிக்க வேண்டாம்” என்றுவிட்டான் வெடுக்கென.
அதில் தேவி கண்கலங்க, தந்தையை அவமதித்ததோடு இல்லாது, தாயையும் அழவைத்ததில் ஏற்கனவே ஜேகோப் பற்றி கேள்விப்பட்டபோது உண்டான கோபம் அதிகரித்துக்கொண்டு போனது திரவியனுக்கு.
“ஜாக்கி?” ரிச்சர்ட் அதட்ட, ஜேகோப் வாய் மூடியது.
“அன்னைக்கு நான் உன்னை திட்டிட்டேன்னு தானே கோவம் உனக்கு? அது அந்த நேர டென்ஷன்’ல பேசிட்டேன்… உன்னை திட்ட எனக்கு உரிமை இல்லையா?” தேவி கேட்க,
“திட்டுனது ப்ரோப்ளம் இல்லை… என் சைட் பாயிண்ட்ஸ ஒருத்தருமே கேட்காதது தான் ப்ரோப்ளம்… என்னை யாருமே பேச விடலையே…!? என்ன நடந்துச்சுன்னு என்கிட்டே யார் கேட்டீங்க? ஜட்ஜ்மென்ட் எழுதிட்டு இன்வெஸ்டிகேட் பண்ணீங்க!
எல்லாரையும் விடுங்க… நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்! என் சைட் எதாவது நியாயம் இருக்கும்ன்னு யோசிப்பீங்கன்னு நினைச்சேன்! பட் யூ டோட்டலி டிஸ்ஸப்பாய்ன்டட் மீ!” என்றான்.
அவன் சொல்வது ஏற்ப்புடையது என்பதால் யாராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
தேவி, “உனக்கொரு விஷயம் சொல்றேன்.. புரிஞ்சுக்க முயற்சி பண்ணு” என்றவர், “ஒரு கோழியால அதிகபட்சம் நாலடி வரை தான் பறக்க முடியும்… அதே, தன் குஞ்சுக்களை காக்கா’வோ பருந்தோ தூக்கிட்டு போனா, ஒரு தென்னமர ஒசரத்துக்கு அது பாயுமாம்! ஒரு தாய் எப்பவும் தன்னோட குழந்தைகளை பாதுகாக்கனும்ன்னு நினைப்பா! அவங்களுக்கு ஒரு ஆபத்துன்னா யார்? என்ன? எதுவும் யோசிக்க தோணாது!” என்றார்.
“எங்க நீ சங்கவியை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போய்டுவியோங்குற பயத்துல மட்டும் தான் அப்படி பேசிட்டேன்… மத்தபடி என் மனசுல இருந்து எதுவுமே பேசல… உன் மேல இருக்க பாசம், அக்கறை எல்லாமே உண்மை தான்!” என்றவர் அங்கிருந்து சென்றுவிட, அப்படியே நின்றான் ஜேகோப்.
அவர் இடத்தில் இருந்து அந்த சூழ்நிலையை உள்வாங்கிக்கொண்டிருந்தான்.
அப்போது சத்தியன் அந்த தட்டை எடுத்து அவனிடம் நீட்ட, அப்போதும் அவன் வேண்டாம் என்றே தான் சொன்னான்.
“சாப்பிடு டா!” அவர் சொல்ல, “சீரியஸ்லி பசியே இல்ல” என்றான் அவன்.
திரவியன் பின்னிருந்து வேகமாய் வந்து, “அப்பா சொல்றார்’ல? வாங்கு!” என்றான் அதீத அதட்டலுடன்.
ஏற்கனவே அவன் ரோஷினியை அடித்துவிட்டது தெரிந்து அவன்மீது எரிச்சலுடன் இருந்த ஜேகோப்’புக்கு இப்போது அவனே வந்து வாண்டடாக பேச, “முடியாது டா… என்னடா பண்ணுவ?” என்றான் வேண்டுமென்றே.
“டா’வா?” என முறைத்த திரவியன், “நீ செஞ்ச வேலைக்கே உன்னை அக்கக்கா பிரிச்சுருக்கணும்… வீட்டுக்கு மாப்பிள்ளையாக போறியேன்னு சும்மா விட்டேன்” என்று கர்ஜிக்க,
“இல்லைன்னா என்ன செஞ்சுருப்ப?” என்றான் ஜேகோப் தெனாவட்டாக.
இவர்கள் சத்தத்தில் அங்கே வந்த பரமு, “என்ன ஆச்சு? என்ன இங்க சத்தம்?” என்று வினவ, அங்கிருந்த பெருசு ஒன்று, “மாப்பிள்ளை சாப்பாட்டு தட்டை வாங்கிக்க மாட்டேங்குறாரு” என்றது வெத்தலையை மென்றபடி.
பரமுவோ, “ஏன்? ஏன் வாங்க மாட்டானாம்? என்னவாம் அவனுக்கு?” என்று எகிற, “அது என் இஷ்டம்… நான் வாங்குவேன் இல்ல வாங்காம போவேன்… உங்களுக்கென்ன?” என்று அவருக்கு மேல் எகிறினான் ஜேகோப்.
பரமுவின் வாய் அப்படியே அடங்கிப்போனது. என்ன சொன்னாலும் சிரிக்க மட்டுமே தெரிந்த, முகத்தில் ஒரு லிட்டர் பால் வடிய சாந்தசுவரூபி ரிச்சர்டை தான் அவர் அறிவார்! இது புதியதாய் இருந்தது அவருக்கு.
அதோடு நிற்காமல், “தாலி கட்டலன்னா தானே போலிஸ் போவீங்க… இல்ல, தட்டை வாங்கலன்னா கூட போலீஸ் போவீங்களா? போறதுன்னா போங்க… போய் கம்ப்ளைன்ட் குடுங்க, என் வீட்டு மாப்பிள்ளை தட்டை வாங்க மாட்டேங்குறான்னு!” இப்படி கத்த, பரமு சத்தமின்றி முறைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
சத்தியனோ விரைத்துக்கொண்டு நின்ற அவன் தோளில் கைப்போட்டு அணைத்து, “மாப்பிள்ளை சார், ரொம்ப துள்ளுறீங்களே!” என்று கிண்டல் செய்ய, “இப்ப நீங்க துள்ளுவீங்க பாருங்க” என்ற ஜேகோப், அவர் இடுப்பில் கிள்ள, கையில் இருந்த தட்டு பறந்து விழுந்தது அவர் துள்ளியதில்.
இதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த திரவியனுக்கு, ‘இது தன் தந்தையா?’ என்ற பேரதிர்ச்சி!