சிந்து அதிர்ந்து போய் அப்படியே அசையாமல் இருக்க, அவளை எப்படி கை கழுவ அழைக்க என்று அவனுக்கு தெரிய வில்லை. தன்னுடைய இந்த சின்ன செய்கை நிச்சயம் அவளைக் குழப்பி இருக்கும் என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவளை எதிர்க் கொள்ள அவனுக்கு சங்கடமாக இருந்தது. “அவசர்ப் பட்டு விட்டோமோ?”, என்று எண்ணி வெளியவே நின்றான்.
“அண்ணே சாப்பிட்டீங்களா? சாப்பாடு பத்துச்சா? வேற ஏதாவது வாங்கிட்டு வரவா?”, என்று கேட்ட படி அங்கே வந்தான் ரங்கன்.
“போதும் டா. வயிறு நிறைஞ்சிருச்சு. நீ சாப்பிட்டியா?”
“நான் சாப்பிட்டேன். தங்கச்சி சாப்பிட்டுச்சா?”
“அரை தோசை, ஒரு இட்லி சாப்பிட்டா. என்னன்னு கேளு”, என்றதும் காருக்குள் நுழைந்தவன் “இப்படி செஞ்சா என்ன தங்கச்சி அர்த்தம்?”, என்று கேட்டான் ரங்கன்.
அவன் குரலில் நடப்புக்கு வந்தவள் அவன் கேள்வி புரியாமல் பேந்த பேந்த விழித்தாள். “அரை தோசை ஒரு இட்லி எப்படி பத்தும்?”, என்று உரிமையாக கேட்டான் ரங்கன்.
அப்போது தான் அவன் கேள்வி புரிய “நான் எப்பவும் அவ்வளவு தான் சாப்பிடுவேன் அண்ணா”, என்றாள்.
“சரி இறங்கி கை கழுவு மா”, என்றதும் இறங்கி கையைக் கழுவியவள் மறந்தும் ஆதவன் புறம் திரும்பவே இல்லை. அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே காருக்குள் ஏறி அமர்ந்தான்.
அவள் கை கழுவி விட்டு உள்ளே அமர்ந்ததும் “தங்கச்சி, உனக்கு இது பிடிக்குமான்னு தெரியலை”, என்று தயங்கிய படியே ஒரு ஐஸ்கிரீம் கோனை அவள் புறம் நீட்டினான். அவளுக்கு அந்த பிளேவர் பிடிக்குமா, ஐஸ்கிரீம் சாப்பிடுவாளா என்று ரங்கனுக்கு கவலையாக இருந்தது. இருவரையும் விரிந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவன்.
“ஐ ஐஸ்கிரீம், எனக்கு ரொம்ப பிடிக்கும். கொடுங்கண்ணா”, என்ற படி அவசரமாக வாங்கிய சிந்து அதை ஆவலாக பிரிக்க ரங்கன் சிறு சிரிப்புடன் காரை எடுத்தான். ஆதவன் அவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவசரமாக ஐஸ்கிரீமை பிரித்து உண்ண ஆரம்பித்த சிந்து அப்போது தான் ஆதவன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்து “உங்களுக்கு வேணுமா? ஆனா எச்சி ஆகிருச்சே”, என்று தயக்கத்துடன் கேட்டாள்.
உதட்டில் எல்லாம் ஐஸ்கிரீம் ஆகி இருக்க தயக்கத்துடன் கேட்டவளை அள்ளிக் கொள்ள ஆசையாக இருந்தது ஆதவனுக்கு. ஒரு பெண்ணை ரசிப்பது, முத்தமிடுவது, கட்டி அணைப்பது இந்த மாதிரி உணர்வுகள் எல்லாம் அவனுக்கு இது வரை வந்ததே இல்லை. ஆனால் அவன் மனைவி அந்த உணர்வுகளை எல்லாம் அவனுக்கு அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தாள்.
அவள் பக்கம் சரிந்து அமர்ந்த ஆதவன் “இப்ப நான் இதைச் சாப்பிட்டா நீ எப்படி திருப்பிச் சாப்பிடுவ”, என்று கேட்டான். அவன் கேள்வி புரியாமல் அவள் விழிக்க “உன்னோட எச்சியை நான் சாப்பிடுவேன். ஆனா நீ என் எச்சியை சாப்பிட மாட்டியே. இப்ப நான் ஒரு வாய் சாப்பிட்டேனு வை, அது எச்சியாகிரும். அப்புறம் எப்படி நீ அதை சாப்பிடுவ?”, என்று கேட்டான்.
சற்று நேரத்துக்கு முன்பு அவள் எச்சில் இட்லியை அவன் சர்வ சாதாரணமாக எடுத்து உண்டது நினைவில் வந்தது. அதைப் போல் தன்னால் அவன் உண்டு விட்டுக் கொடுத்த ஐஸ்கிரீமை உண்ண முடியும் என்று அவளுக்கு தோன்ற வில்லை. அதனால் அவனைப் பார்த்தவள் “இப்ப என்ன செய்ய?”, என்று அவனிடமே கேட்டாள்.
“நீயே எல்லாத்தையும் சாப்பிடு”
“அப்ப உங்களுக்கு?”
“கண்டிப்பா எனக்கு கொடுக்கணும்னு தோணுச்சுன்னா கடைசியா கொடு”, என்றான்.
“சரி”, என்று சொல்லி விட்டு அவள் உண்ண ஆரம்பிக்க “அண்ணே, லைட் ஆப் பண்ணிறேன். தூக்கம் வந்தா ரெண்டு பேரும் தூங்குங்க”, என்றான் ரங்கன்.
அவள் ஐஸ் கிரீம் சாப்பிடும் அழகை அவன் விளக்கை அணைத்ததால் பாக்க முடியாமல் அந்த எரிச்சலில் “சரி டா, நீ மட்டும் தூங்கிறாத”, என்றான்.
ஆதவன் குரலில் இருந்த எரிச்சலை புரிந்து கொண்ட ரங்கன் “அண்ணன் மறுபடியும் ஐயாவை நினைச்சு பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க போல?”, என்று எண்ணிக் கொண்டு கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
ஆதவனுக்கு கடைசியாக ஐஸ்கிரீம் கொடுக்க வேண்டும் என்பதால் அளவை பார்த்து பார்த்து சாப்பிட்டாள் சிந்து. பாதிக்கு மேல் குறைந்ததும் “இந்தாங்க”, என்று சொல்லி அவனிடம் நீட்டினாள். பாட்டு சத்தத்தில் அவர்கள் பேசுவது ரங்கனுக்கு கேட்காது என்று புரிந்து கொண்டு “இன்னும் கொஞ்சம் சாப்பிடு”, என்றான்.
“இன்னும் சாப்பிட்டா கீழே சாக்லேட் தான் இருக்கும்”, என்றாள் சிந்து.
“பரவால்ல சாப்பிடு”, என்று சொல்ல கடைசியாக இருந்த சாக்லேட்டை மட்டும் நீட்டினாள். அதை தன்னுடைய கையில் வாங்க அவன் கரத்தை நீட்டினான். அதை வாங்கினால் அவன் கையெல்லாம் பிசுபிசுவென்று ஆகும் என்பதால் அவனுடைய உதட்டருகே கையைக் கொண்டு சென்றாள்.
அவளை வியப்பாக பார்த்து விட்டு அவள் கையை பற்றி அந்த சாக்லேட்டை அவளுக்கே ஊட்டி விட்டான். அந்த சாக்லேட்டை உண்ட படி “உங்களுக்கு வேண்டாமா?”, என்ற கேள்வியை கண்ணில் தாங்கி அவனைப் பார்க்க அவனுடைய கண்களின் பளபளப்பு அவளுக்கு புரிய வில்லை.
“இவன் ஏன் இப்படி முழிக்கிறான்?”, என்று அவள் எண்ணும் போதே “எனக்கு இந்த ஐஸ்கிரீம் தான் வேணும்”, என்று சொன்னவன் அவள் என்னவென்று கேட்கும் முன்பாக அவள் உதடுகளை சிறை செய்திருந்தான்.
அவள் அதிர்ந்து அவனைத் தள்ளி விடப் பார்க்க அவள் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். ஐஸ்கிரீமின் சுவை, சாக்லேட்டின் சுவை என அனைத்தும் அவன் உதடுகளுக்கும் பரிமாற அவள் உதடுகளை தின்று கொண்டிருந்தான். அந்த நேரம் விளக்கை அனைத்த ரங்கனுக்கு மனதார நன்றி சொன்னான்.
சிறிது நேரம் கழித்து கூட அவனால் அவளை விட்டு விலக முடிய வில்லை. போதும் என்று எண்ணி அவன் அவளை விடும் போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
“போச்சு டா”, என்று தலையில் கை வைத்துக் கொண்டவன் “அழுது கிழுது ரங்கன் கிட்ட என் மானத்தை வாங்கிறாத டி”, என்று கிசுகிசுப்பாக சொன்னான்.
“அப்ப நீங்க ஏன் தப்பு தப்பா பண்ணுறீங்க? அப்பவும் இப்படி தான்”, என்று அவள் அழுத படி சொல்ல “சரி தப்பு தான். தெரியாம செஞ்சிட்டேன் போதுமா? இனி நான் எதுவும் செய்யலை. நீயும் என் முன்னாடி இனி இப்படி ரசிச்சு ருசிச்சு ஐஸ்கிரீம் சாப்பிடாத. என்னால முடியலை”, என்றான்.
அழுத படியே அவனை முறைத்துப் பார்த்தவள் “எனக்கு அப்பா கிட்ட போகணும்”, என்றாள்.
“அப்பா நாளைக்கு உன்னைப் பாக்க வருவாங்க சரியா?”, என்று அவன் குழந்தைக்குச் சொல்வது போல சொன்னதும் அவள் சரி என்று சொன்னாள்.
“படுத்துக்குறியா சிந்து?”, என்று அவன் தன் மடியைக் காண்பிக்க தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள். அவள் தயக்கம் உணர்ந்து “அப்படியே சீட்ல சாஞ்சி தூங்கு. நாளைக்கு உன் அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரும் வருவாங்க”, என்றான்.
“ம்ம்”, என்ற படி சீட்டில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தவள் சிறிது நேரத்தில் அவன் மீது சாய்ந்தாள். அவன் அவள் தலையை பிடித்து தன் மடியில் படுக்க வைக்க சுகமாக தூங்கத் துவங்கினாள். அவன் கைகள் அவள் தலையை வருடிக் கொடுத்தது.
முந்தைய நாள் வரைக்கும் யாரென்றே தெரியாத பெண் இப்போது தனக்கு அனைத்துமாகியதை நினைத்து வியப்பாக இருந்தது. கூடவே தான் இப்போது அவளிடம் நடந்து கொண்ட முறை தவறு என்றும் அவனுக்கு புரிந்தது. அவள் அருகில் இன்னும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான்.
கூடவே இன்று நடந்ததை நாளை அவளது தந்தையிடம் உளறி வைப்பாளோ என்று பயமாகவும் இருந்தது. பார்த்த ஒரே நாளில் தான் எப்படி அவளிடம் இவ்வளவு உரிமையாக நடந்து கொள்கிறோம் என்று அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. அவளது தந்தை பாசமும் அவனுக்கு வியப்பாக இருந்தது.
தந்தை என்றதும் அவனது தந்தை நினைவுக்கு வந்தார். ரத்தினம் பற்றி நினைவுக்கு வந்ததும் மீண்டும் அவன் டென்ஷன் ஆரம்பமானது. வீட்டுக்கு சென்றால் என்ன ஆகுமோ என்று எண்ணிக் கொண்டே கண்ணை மூடியவன் அப்படியே தூங்கி விட்டான்.
ஊர் எல்லை வந்ததும் “அண்ணே”, என்று எழுப்பினான் ரங்கன். அதில் கண் விழித்த ஆதவன் “ஊர் வந்துருச்சா டா?”, என்று கேட்டான்.
“சரி டா நீ லைட்டைப் போடு’, என்று சொன்னதும் ரங்கன் லைட்டைப் போட்டான்.
தன்னுடைய மடியில் சிறு குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்த சிந்துவை எழுப்பவே அவனுக்கு மனதில்லை. ஆனால் எழுப்பித் தான் ஆக வேண்டும் என்ற உண்மை புரிய “சிந்து சிந்து”, என்று அவளை எழுப்பினான்.
அவளோ தலையணையில் படுத்திருப்பது போல முகத்தை இன்னும் அழுத்தி பதிக்க “ஆத்தி, இவ என்னை சோதிக்காம விட மாட்டா”, என்று முனங்கிக் கொண்டு அவளைத் தூக்கி அமர வைத்து அவள் தலையை சீட்டில் சாய்த்து வைத்தான்.
அவள் அப்போதும் உறங்கிக் கொண்டிருக்க அவள் கன்னத்தில் தட்டி அவளை எழுப்பினான். “அப்பா கொஞ்ச நேரம் பா பிளீஸ்”, என்ற படி அவள் அவனுடைய நெஞ்சில் சாய அந்த டென்சனிலும் அவளை இறுக்கிக் கொள்ளத் தான் அவனுக்குத் தோன்றியது.
“உன் தங்கச்சி படுத்துறா டா”, என்று ஆதவன் சொல்ல “இந்தாங்கண்ணே, அது முகத்தில் கொஞ்சம் தண்ணி தெளிங்க”, என்றான்.
அதை வாங்கி அவள் முகத்தில் தெளிக்க கண் விழித்த சிந்து இருக்கும் இடம் புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
அவள் பயம் புரிந்து “சிந்து, இங்க பாரு. நீ பத்திரமா தான் இருக்க. நாம வீட்டுக்கு வந்துட்டோம். இப்ப இறங்கணும். அதான் எழுப்புனேன்”, என்று ஆதவன் அவசரமாக சொல்ல அவனைக் கண்டு மிரண்டு விழித்தாள்.
பின் காலையில் இருந்து நடந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வர சாதாரணமாக அவனைப் பார்த்தாள். “அப்பாடி நார்மல் ஆகிட்டா. இவளை வச்சு நான் என்ன எல்லாம் ஆகப் போறேனோ?”, என்று எண்ணியவனுக்கு வீட்டைப் பற்றிய பயம் ஆரம்பித்து.