சிந்து வேறு பல்லி போல அவன் முதுகில் ஒட்டிக் கொண்டிருக்க “இவளுக்கும் நம்ம குடும்பத்துக்கும் எட்டாம் பொருத்தம் ஏழாம் பொருத்தம்னு தெரியுமா? இவ பல்லிக்கே பயப்படுவா போல? எங்க வீட்ல சின்னதுகளே மிரட்டிட்டு அலையுதுங்க. இவ எப்படி இங்க நிலைச்சு இருப்பான்னு தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு “ப்ச் பயப் படாம இரு சிந்து. இது என் பாட்டி தான்”, என்று சொல்லி அவளை இழுத்து தன்னருகே நிற்க வைத்தான். அவள் நடுங்கிய படியே நிற்கவும் அவர்கள் அருகில் வந்து நின்றார் ரங்கநாயகி. அவர்கள் அருகில் ரங்கனும் வந்து நின்றான்.
“ஆச்சி”, என்று ஆதவன் அழைக்க அவனைக் கண்டு கொள்ளாமல் சிந்துவைத் தான் ஏற இறங்கப் பார்த்தார். அவர் பார்வையில் சிந்து இன்னும் நடுங்கினாள். “அவ ஏற்கனவே பயந்துட்டு இருக்கா இந்த ஆச்சி வேற”, என்று எண்ணிக் கொண்டான்.
“என் தங்கச்சியை ரொம்ப மிரட்டாத கிழவி”, என்றான் ரங்கன். “என் பேர் வச்சவனே அடங்கு. என் பேரன் பொண்டாட்டியை நான் பாக்க வேண்டாமா?”, என்று கேட்டார் ரங்கநாயகி.
“பாரு கிழவி பாரு, ஆனா பாக்குறதுக்கு ஒரு நேரம் காலம் வேண்டாமா?”, என்று ரங்கன் கேட்க அவனை முறைத்துப் பார்த்து விட்டு “இந்தா பொண்ணு, உன் பேர் என்ன?”, என்று கேட்டார். ரங்கநாயகி கண்களை உருட்டி கேள்வி கேட்க சிந்துவுக்கோ தொண்டையில் இருந்து காத்து தான் வந்தது. சத்தம் வரவில்லை.
“ஆச்சி அவ பேர் சிந்து”, என்றான் ஆதவன்.
“உன் கிட்டயா கேட்டேன்?”, என்று ரங்கநாயகி சொல்லும் போதே உள்ளே இருந்து வந்தாள் மங்கை. மங்கையைக் கண்டதும் ஆதவன் குற்ற உணர்வுடன் அன்னையைப் பார்க்க மகனை திரும்பிக் கூட பார்க்காமல் மருமகளைப் பார்த்தாள்.
அம்மாவின் பாரா முகம் மனதுக்கு கஷ்டமாக இருந்தது ஆதவனுக்கு. மங்கை சிந்துவைத் தான் பார்வையால் அளவிட்டாள். பின் “எல்லாரும் பழைய வீட்டுக்கு வாங்க”, என்று சொல்லி விட்டு முன்னே நடக்க ரங்கநாயகியும் அவளுடன் சென்றார். ரங்கனும் அவர்களுடன் செல்ல மணமக்கள் மட்டும் பின்னே சென்றார்கள்.
“மருமக அழகா இருகால்ல மா“, என்று மங்கை சிலாகித்துச் சொல்ல “ஆமா ரொம்ப அழகா இருக்கா. நம்ம பக்கம் யாரும் இம்புட்டு அழகா இல்லை. சொக்கத் தங்கம் மாதிரி இருக்கா. சேட்டு வீட்டு பொண்ணு மாதிரி. அதான் பய கட்டிக்கிட்டான். எனக்கு உன் புருஷன் என்ன சொல்வாரோன்னு தான் பயமா இருக்கு”, என்றார்.
“சமாதானப் படுத்திட்டு தான் வந்துருக்கேன் மா. ரெண்டு நாள் முகத்தை தூக்கிட்டு இருப்பார். அப்புறம் சரியாகிருவார். அதுவும் மருமகளைப் பாத்ததும் சமாதானம் ஆகிருவார்ன்னு நினைக்கிறேன்”, என்றாள் மங்கை.
கதவை திறந்து கொண்டு முதலில் சென்ற மங்கை விளக்கு அனைத்தையும் எரிய விட்டாள். அனைவரும் ஆளுக்கொரு பக்கம் நிற்க அந்த இடமே அமைதியாக இருந்தது.
“உன்னை ஏன் கட்டிக்கிட்டேன்னு கேக்கலை? கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு போன் பண்ணிச் சொல்லிருக்கலாம்ல? வரும் போது நான் போன் பண்ணினேன்ல? அப்பவாது சொல்லிருக்கலாம்ல?”, என்று மங்கை கேட்கும் போது “க்கும்”, என்று சத்தம் கேட்கவும் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.
ரத்தினம் தான் உள்ளே வந்தார். அவரைக் கண்டதும் “அப்பா…”, என்று ஆதவன் தயக்கமாக அழைக்க அவனை எல்லாம் கண்டு கொள்ளாமல் சிந்துவிடம் “உன் பேர் என்ன மா?”, என்று கேட்டார்.
அவளோ அவருடைய ஆஜானுபாகுவான உருவத்திலும் மீசையிலும் மிரண்டு போய் இருக்க அவர் கேள்வி அவளை மேலும் பயப்பட வைத்தது.
“சி சி….”, என்று அவள் இழுக்க “சிந்து ப்பா”, என்றான் ஆதவன்.
“நான் அந்த பொண்ணு கிட்ட தான் பேசுறேன்”, என்ற ரத்தினம் “உங்க அப்பா என்ன மா பண்ணுறார்?”, என்று கேட்டார்.
“ஜூவல்ஸ்…”, என்று சிந்து முனங்க “நகைக்கடை வச்சிருக்கார் பா”, என்றான் ஆதவன்.
“பிறந்ததில் இருந்து பேசி பேசி சாகடிக்கிற உன் மகனுக்கு இப்படி ஒரு அமைதியான பொண்ணு பொண்டாட்டியா வந்துருக்கா. எல்லாம் காலக் கொடுமை. இன்னைக்கு நைட் எல்லாரும் இங்கயே தூங்குங்க. காலைல ஊருக்குச் சொல்லிக்கலாம். நாளைக்கு சாயங்காலம் வரவேற்பு மாதிரி வச்சிக்கலாம், டேய் ரங்கா”
“ஐயா”
“எல்லா ஏற்பாடையும் நீ தான் செய்யணும். அவன் கூட போனல்ல, நடந்ததை இப்ப வரை ஒரு வார்த்தை கூட சொல்லாம நீயும் சேந்து மூடி மறைச்சதுக்கு இது உனக்கு தண்டனை”
“சரிங்க ஐயா, நான் சந்தோசமாவே எல்லா வேலையும் செய்றேன்”
“நல்லது. முதல் வேலையா காலைல விடிஞ்சதும் என் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் வீட்டுக்கு வரச் சொல்ற”
“என்னது நான் போய்ச் சொல்லணுமா?”, என்று அவன் அதிர்ந்து விழிக்கையிலே “மண்டப அலங்காரத்துக்கு எல்லாம் இப்பவே சொல்ல ஆரம்பி. சாப்பாடு கிடா விருந்து தான். இப்பவே ஒவ்வொருத்தருக்கா வேலை சொல்லு”, என்றவர் “பாத்துக்கோ மங்கை, புது இடம். பிள்ளை மிரண்டு போய் நிக்குது. அப்புறம் உன் அறிவாளி மகனை அந்த வீட்ல வந்து படுக்கச் சொல்லு. நான் இப்பவே மூத்த மாப்பிள்ளைக்கு தகவல் சொல்றேன். அப்ப தான் சுபா நாளைக்கு வர சரியா இருக்கும்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் “தேங்க்ஸ் மா, தேங்க்ஸ் பாட்டி”, என்று ஆதவன் இருவரையும் கொஞ்ச சிந்து அதை வியப்பாக பார்த்த படி நின்றிருந்தாள்.
“இன்னைக்கு என் தூக்கம் போச்சு”, என்ற படி ரங்கன் வெளியே சென்று விட்டான்.
“சரி மா, என் பொண்டாட்டியை நல்லா பாத்துக்கோங்க. நான் இவ வீட்டுக்கு தகவல் சொல்லிறேன்”, என்று சொல்லி விட்டு ஆதவனும் கிளம்ப “டேய், ஒழுங்கு மரியாதையா பெரிய வீட்ல இருந்து பாய், தலகாணி, போர்வை எல்லாம் எடுத்து கொடுத்துட்டு போ”, என்று மகனுக்கும் வேலை சொன்னாள் மங்கை.
அவள் கேட்ட அனைத்தையும் எடுத்துக் கொடுத்த ஆதவன் சிந்துவிடம் பேசலாம் என்று அருகில் செல்ல “அதெல்லாம் நாளைக்கு பேசலாம் டா, கிளம்பு கிளம்பு. என் பேத்தி களைப்பா இருக்கா. தூங்கட்டும்”, என்று அவனை விரட்டி விட்டார் ரங்கநாயகி.
“பயப்படாத டா. இனி இது தான் உன் வீடு. போக போக எல்லாமே உனக்கு பழகிரும். இப்ப படுத்து நல்லா தூங்கு”, என்று மங்கை சொன்னதும் அது தான் சாக்கென்று சிந்து படுத்து விட்டாள்.
அப்போது அங்கே வந்தான் ஆதவன். “ஏய் திருட்டுப் பூனை என்ன டா பன்ற இங்க?”, என்று கேட்டாள் மங்கை.
“காலைல இருந்து இதே டிரஸ்சோட இருக்கா மா. கசகசன்னு இருக்கும். நகைக் கடைக்காரர் பொண்ணு, அதனால பெருசா செஞ்சி போட்டுருக்கார். அது வேற வெயிட்டா இருக்கும் போல? அக்கா நைட்டி ஏதாவது எடுத்து போடக் கொடு மா”
“உன்னை நினைச்சு பெருமையா இருக்கு டா ஆதவா. ஒரு பொண்ணா நான் கூட அதை யோசிக்கலை பாரு. ஆனா நீ பொண்டாட்டிக்காக யோசிச்சிருக்க. இந்த அக்கறை உங்க வாழ்க்கையை நல்லதா மாத்தும் டா. அவளை உனக்கு பிடிச்சிருக்கா டா?”
“வால் போஸ்டர்ல இவ போட்டோ பாத்தே மயங்கிட்டேன் மா”
“தம்பி”
“ஆமா மா, இன்னும் கொஞ்ச நேரத்துல அடுத்தவனுக்கு பொண்டாட்டியா ஆகப் போறான்னு உள்ளுக்குள்ள பயங்கரத் தவிப்பு. ரங்கன் கூட இது தப்புண்ணேன்னு திட்டினான். ஆனா மனசு கேக்கலை. பாத்தா அவளைக் கட்டிக்கோன்னு இவ அண்ணன் சொல்றான். எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. அவளை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு நினைச்சேன். அவளைப் பிடிச்சு தான் மா கல்யாணம் பண்ணினேன். ஆனா என் கல்யாணத்தைப் பாக்க நீங்க யாரும் இல்லைன்னு தான் வருத்தமா இருந்துச்சு”
“விடு தம்பி. உனக்கு பிடிச்சிருக்கு தானே? அது போதும்”
“அப்பா எப்படி மா அமைதியா இருந்தார்?”
“அதெல்லாம் பேசுற விதத்துல பேசி அவரை ஆப் பண்ணியாச்சு. அதுவும் மருமக உனக்கு பொருத்தமா இருக்கவும் அவருக்கும் புடிச்சிருச்சு. சந்தோஷமா தான் எல்லா ஏற்பாடும் செய்றார். நீ நிம்மதியா போய் தூங்கு”
“சுபா அக்கா கிளம்பிட்டாளா?”
“அப்பா இப்ப தான் சொல்லிருப்பார். இனி தான் கிளம்புவா. செல்விக்கு நாளைக்கு சொல்லிக்கலாம். நீ போய்த் தூங்கு”
“சரி மா, அவளுக்கு அக்கா நைட்டி….”
“எடுத்துக் கொடுக்குறேன் டா. முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்துருக்கா. பழையது கொடுக்க வேண்டாம். நான் புதுசு எடுத்து வச்சிருக்கேன். அதைக் கொடுக்குறேன்”
“சரி மா, நகையையும் கழட்டி வச்சிருங்க. கார்ல வரும் போதே ஒரு மாதிரி இருந்தா. வெயிட்டா இருக்கும்ல?”
“நீ போடா, நான் பாத்துக்குறேன்”, என்று சொன்ன பிறகு தான் கிளம்பினான்.
படுத்திருந்த சிந்துவுக்கு தூக்கம் வரவில்லை. காரில் வரும் போது நன்கு தூங்கியதால் அமைதியாக படுத்திருந்தாள். அப்போது “அம்மாடி”, என்று மங்கை அழைக்க படக்கென்று எழுந்து அமர்ந்தாள்.
“நான் தான் டா. பயப்படாதே. இந்தா இதுல நைட்டி இருக்கு. சேலையைக் கழட்டிட்டு இதைப் போட்டுக்கோ. நகையையும் கழட்டி வச்சிரு”, என்று சொல்ல சந்தோஷமாக எழுந்து கொண்டாள்.
தாலியைத் தவிர எல்லா நகைகளையும் கழட்டி மங்கையிடம் நீட்ட அதை வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டாள் மங்கை. கூடவே அவளின் அந்த செய்கை மங்கையைக் கவர்ந்தது என்றும் சொல்லலாம்.
நகையைக் கழட்டியது நிம்மதியாக இருந்தாலும் நைட்டியை மாற்ற அதிகம் தயங்கினாள். ஏனென்றால் சிந்து இதுவரை நைட்டியே அணிந்ததில்லை. ஆனால் தன்னுடைய உடலை மறைத்திருந்த அந்த கனத்த பட்டுப் புடவையைப் பார்க்கும் போது அந்த மெல்லிய நைட்டிக்கு மாறச் சொல்லி அவள் மனம் ஏங்கியது.
கடைசியில் மனமே வெற்றி கொள்ள அதை வாங்கிக் கொண்டு மங்கை காட்டிய பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள். சேலையைக் கழட்டி விட்டு நைட்டி அணியும் போது சொர்கத்தைக் கண்டது போல இருந்தது சிந்துவுக்கு. எதிலிருந்தோ விடுதலை கிடைத்தது போல உணர்ந்தாள். உடை மாற்றி விட்டு அமைதியாக வந்து படுத்துக் கொண்டாள்.