பரமேஸ்வரன் வீட்டில் அத்தனை தலைகளும் ஜோசியரின் வருகைக்காக காத்திருந்தது. திரவியன் திண்டுக்கல்லில் இருக்கும் அந்த புகழ்பெற்ற ஜோசியரை வீட்டிற்கே அழைத்து வர சென்றிருந்தான்.
அத்தனை கூட்டத்துக்கும் மத்தியில் ஒரு கையில் நாற்காலியும் ஒரு கையில் மடிகணினியும் என்று வந்த ஜேகோப், நடுநாயகமாய் சேரை போட்டுவிட்டு அமர, எல்லாரும் ‘என்ன இது?’ என்று தான் பார்த்தனர்.
“சத்தியன் அங்கிள்… இங்க வாங்க!” என்று அழைக்க, எதற்க்கென்ற யோசனையோடு எழுந்து சென்றார் அவர்.
“ஃபுல் நேம் சொல்லுங்க… டேட் ஆஃப் பர்த் சொல்லுங்க!” என்று கேட்டவன், “டென்த் மார்க்ஷீட் கொண்டு வாங்க” என்றுவிட்டு, “இருக்கா?” என்றான் கிண்டலாய்.
அவர் நேராக நிமிர்ந்துப்பார்தவன், “பொண்ணை மேரேஜ் செஞ்சு குடுத்துட்டு அப்படியே விட்டுடலாம்ன்னு இருக்கீங்களா?” என்றான் அவன்.
“நான் அன்னைக்கே சொன்னது தான்! நான் ஒன்னும் ஆசைப்பட்டு என் பொண்ணை கட்டிக்குடுக்கல… வேற வழி இல்லாம, ஊரு பேச்சுக்கு பயந்து தான் இந்த ஏற்ப்பாடு செய்யுறேன். கல்யாணம் முடிஞ்சதும், அவ யாரோ? நான் யாரோ!?” என்று பேச, ருக்மணியின் முகம் கலவரத்துடன் கலக்கத்தை சுமந்தது.
அவர் முகத்தை கவனித்த ஜேகோப், “அப்படியே ஒன் செக்’ திரும்பி உங்க வைஃப் பேஸ்’ஸ பாருங்க… எவ்ளோ பயந்துக்கிட்டு இருக்காங்கன்னு பாருங்க!” என்றதும், வேண்டாவெறுப்பாக திரும்பி அவர் ருக்மணியை பார்க்க, அவர் கண்களில் இருந்து விழுந்து சிதறிய இரு துளிகள் பரமுவை ஆத்திரம் கொள்ள வைத்தது.
“பொண்ணை வளத்து வச்ச லட்சணத்துக்கு கண்ணீர் வருதோ கண்ணீரு? எப்படியோ போ’ன்னு என் அப்பன் மாறி தலை முழுகாம, அவள கவுரமவா அனுப்பி வைக்க துடிக்குறேன் பாரு… என்னை வில்லனாக்கி ஊரார் முன்ன ஒப்பாரி வப்ப தான் நீ!” அவர் கத்த, சட்டென்று கண்களை துடைத்துக்கொண்டு தலையை குனிந்துகொண்டார் ருக்மணி.
வீரைய்யனுக்கு ருக்மணியின் கண்ணீரையும், பரமுவின் கோபத்தையும் பார்க்கையில் தன்னையும், தன் மனைவியையும் முப்பது ஆண்டுகளுக்கு முன் கண்டதை போல இருந்தது.
தேவகி வீட்டை விட்டு சென்றபோது, கமலமும் இப்படி தான் கலங்கிப்போய் கிடந்தார். வீரைய்யன் பரமுவை போல, சொல்லப்போனால் பரமுவை விட அதிகமாய் குதிக்க, அவர் கோபத்துக்கு பயந்தே தன கலக்கத்தை வெளியே காட்டாது மறைக்க ஆரம்பித்தார் நிலைமை, இதோ இப்போது படுக்கையில் கிடக்கும் அளவுக்கு இழுத்து வந்து விட்டது.
தான் செய்த தவறையே மகனும் செய்யக்கண்ட வீரைய்யனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. சொன்னாலும் கேட்பான் இல்லையே…!
ஜேகோப், “சோ, மேரேஜ் முடிச்சு பொண்ணு பார்க்க வரவே மாட்டீங்க?”
பரமு, “பொண்ணே இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன் நான்…” அவர் கடுமையாக சொல்ல,
கோபபெருமூச்சு விட்ட ஜேகோப், “நீங்க எப்படி அங்கிள்? உங்க பொண்ண வெளிநாட்டுல கட்டிக்குடுத்தா வந்து பார்ப்பீங்களா?” என்றதும், சத்தியநாதன் திரும்பி அண்ணனை ஒருமுறை பார்த்துவிட்டு, “பெத்து வளர்த்து எக்கேடோ போன்னு விரட்டுற அளவு கல்லு மனசு எனக்கில்ல” என்றார் சின்ன குரலில். அது பரமுவை எட்டத்தான் செய்தது.
மெலிதாக பல்வரிசை தெரியாமல் சிரித்தவன், “அப்போ டீடெய்ல்ஸ் சொல்லுங்க… ஃபியுச்சர்’ல தேவைப்படலாம்” என்று கேட்டு, அத்தனையும் பூர்த்தி செய்தான். அதேபோல தேவி, வீரைய்யன், கமலம் என்று முடித்துவிட்டு, மீண்டும் ருக்மணியிடம் வந்தான்.
அவருக்கு முந்தி, “நான் தான் எங்களுக்கு தேவையில்லன்னு சொல்றேன்’ல?” என்று கத்த, லேப்டாப்பை தூக்கி முன்னே இருந்த டீப்பாயில் வைத்தவன்,
“தேவையே இல்லையா?”
“தேவையில்லை!”
“ஒருவேளை, நான் உங்க பொண்ணை எதாவது செஞ்சுட்டா? அப்போக்கூட வந்துப்பார்க்க தேவைப்படாதா?” அவன் கேட்க, அமைதியாய் இருந்த தேவகி, “பப்பூ…!” என்றார் அதட்டலாய்.
அதை எரிச்சலுற்றவன், “ஜஸ்ட் ஜிப் யுவர் லிப்ஸ் மாம்மி! நீங்க கோவப்பட்டா வாயை மூட நான் ‘ரிச்சர்ட்’ இல்ல, ‘ஜேகோப்’!” என்று கூற, அருகே இருந்த ரிச்சர்ட் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினார்.
அன்னையை அதட்டிவிட்டு திரும்பியவன் பரமு அப்படியே நிற்ப்பதை கண்டு, “சொல்லுங்க… என்னை பத்தி என்ன தெரியும்ன்னு உங்க பொண்ணை எனக்கு குடுக்குறீங்க? எந்த நம்பிக்கையில இனி அவளை வந்து பாக்க மாட்டேன்னு சொல்றீங்க?” என்று வினவ, கூட்டத்தில் இருந்த ஒன்று,
“தேவகி பையன் தானே? அதுக்கு மேல என்ன வேணும்?” என்று கேட்டது.
“என் பேரு ஜேகோபியன்… தேவகியோட பையன்! இது போதுமா உங்களுக்கெல்லாம் ஒரு பொண்ணை தூக்கி குடுக்க?” என்றான்.
எல்லாரும் சலசலக்க, ஜேகோப், பரமுவிடம், “நான் யாரு? என்ன படிச்சுருக்கேன்? என்ன வேலை பாக்குறேன்? எனக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா? எதாவது டிசீஸ் இருக்கா? ஆல்ரெடி மேரேஜ் ஆகி எங்க ஊருல ஒரு பேமிலி வச்சுருக்கேனா?” என்று அடுக்கியவன்,
“சரி எல்லாம் விடுங்க… நாங்க ஆஸ்ட்ரேலியா’ன்னு மட்டும் தானே தெரியும்… அங்க எந்த ஊரு… என்ன அட்ரெஸ்’னாது தெரியுமா? இப்படி எதுவுமே தெரியாம, ஒரு போட்டோ’ல ஒண்ணா இருக்கோம்… ஊர் பேசுதுன்னு உங்க பொண்ணை மேரேஜ் செஞ்சு குடுக்க நினைக்குறீங்க? ஒருவேளை எனக்கு ‘எய்ட்ஸ்’ இருந்தா என்ன செய்வீங்க?” என்று கேட்டுவிட,
அதெல்லாம் பரமுவை பொறுத்தவரை மகா கெட்ட வார்த்தை! அவன் சொல்வது போல இருந்து தொலைத்தால்? யோசிக்கும்போதே நெஞ்சு நடுங்கியது அவருக்கு. ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கை. தேவகி மகன், எந்த வித தவறும் இல்லாமல் தான் இருப்பன் என்று!
பரமு வீம்புடன் திருப்பிக்கொண்டு நிற்பதை கண்ட ஜேகோப், “நான் ஒரு இடியட்! தங்கச்சி எங்க போனா? எப்படி இருக்கா? எதுவுமே இத்தனை வருஷத்துல பாக்காத ஆளா, இப்போ பொண்ணை பத்தி கேர்’பண்ணப்போறாரு?” என்று கேட்டவன்,
“என் டேட் ஒரு டாக்டர்’ன்னு கூட தெரியாத, தெரிஞ்சுக்க அக்கறையே இல்லாத பேமிலி…! இவங்களுக்கு நான் என்ன வேலை பார்த்தா என்ன? என்ன டெட்லி டிசீஸ் வச்சுருந்தா என்ன?” என்று சத்தமாக சொல்லிவிட்டு, “கார்பேஜ் குடவுன்” என பல்லைக்கடித்தான்.
ஆனாலும் விடாமல், ருக்மணி, பரமுக்கு பாஸ்போர்ட் பதிந்துவிட்டு தான் ஓய்ந்தான். சங்கவி, திரவியனுக்கு ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்ததால் அவன் செய்யவில்லை.
“எல்லாம் முடிஞ்சுது… டாக்குமென்ட் வெரிபிகேஷன் இருக்கும் நாளைக்கு… போகணும்!” பொதுவாய் அவன் சொல்ல,
“நாளைக்கே’வா?” என்றார் தேவகி.
“ஃகுவிக் ப்ராசெஸ்’ல அப்ளை செஞ்சுருக்கேன்… ஒன் வீக்’க்குள்ள பாஸ்போர்ட் வந்துடும்! தென், டூரிஸ்ட் விசா போடணும்! அதுக்கு ஒரு டூ வீக்ஸ் மினிமம்! சோ, மேரேஜ் முடிஞ்சு கிளம்புற மாறி இருக்கும்!” அவன் சொல்லிக்கொண்டே போக,
‘ஏ… எல்லாருமே வெளிநாடு போக போறாங்களாம்!’ என பொறாமையுடன் கிசுகிசுக்க ஆரம்பித்தது கும்பல்.
“சங்கவிக்கு பிஆர் எடுக்கனுமே!?” ரிச்சர்ட் சொல்ல, “மேரேஜ் முடியட்டும்’ப்பா! பார்ட்னர் விசா போடலாம்! அது லேட் ஆகும்ன்னா டூரிஸ்ட் விசா’ல வரட்டும்… தென் பாப்போம்!” என்றான்.
மற்றவர்களுக்கு இவர்கள் சம்பாஷணையின் சாராம்சமே விளங்கவில்லை. வெளிநாடு செல்கிறார்கள் என்பது வரை மட்டும் தான் புரிந்தது.
இதெல்லாம் மாடியில் இருந்து சங்கவியும், ரோஷிணியும் சிரித்த முகமாய் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஜேகோப்’புக்கு ஜாதகம் இல்லாததால், அவன் பிறந்த நேரம் வைத்து கணினியில் கணித்து குறிப்பு எழுதப்பட்டிருந்தது.
வெகு நேரமாக இரு ஜாதகங்களையும் பார்த்துக்கொண்டிருந்தார் ஜோசியர். ஜேகோப் இதெல்லாம் முன்னர் பின்னர் பார்த்ததே இல்லை என்பதால் சுவாரசியமாக அவன் வேடிக்கைப்பார்க்க, நிமிர்ந்து அவனை ஒருமுறை பார்த்தார் ஜோசியர்.
“இதான் பையனா?” அவர் கேட்க, “ஆம்!” என்றார் பரமு.
மீண்டும் ஜாதகத்துக்குள் குனிந்துக்கொண்டார்.
தேவகிக்கு முதல்முறையாய் மகனுக்கு ஜாதகம் பார்ப்பதால், ஏதாவது கெட்டது சொல்லிவிடுவாரோ என்ற அச்சம்!
“பார்த்துட்டே இருந்தா எப்படி? ஏதாவது சொல்லுங்க ஜோசியரே!” என்றார் வீரைய்யன்.
“சொல்றதுக்கென்ன? அமோகமான ஜாதகம்… எந்தவொரு குறையும் இல்ல” என்று அவர் சொன்னதும் தான் தேவகிக்கு மூச்சு சீரானது.
“பையன் நிலத்துல காலை பதிக்குறதே அபூர்வம்!” அவர் சொல்ல, ஆஸ்திரேலிய குடும்பம் சிரிக்க, மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர்.
“தீர்காய்ஸோட பேருக்கும் புகழுக்கும் செல்வத்துக்கும் குறைச்சல் இல்லாம இருப்பான்!” என்று முடித்தவர், “ஆனா, இந்த பொண்ணு ஜாதகத்தோட இந்த பையன் ஜாதகம் பொருந்தலையே!?” என்றான் தயக்கமாய்.
“ஏன் ஜோசியரே… என் பொண்ணு ஜாதகத்துக்கு என்ன குறை?” பரமு எகிறி வர, “ஜாதகத்துல குறைன்னு நான் எப்போ சொன்னேன்? பொருந்தலை’ன்னு தான் சொல்றேன்! இந்த பையனுக்கு உரிய ஜாதகம் இது இல்லை” என்றார் ஜாதகத்தை மூடி வைத்து.
பரமுவிற்கு சொந்தபந்தம் முன் தலைகுனிவாய் போனது. அவர் அப்படியே முகம் கருத்து நிற்க, “பரவால்ல ஜோசியரே… சீக்கிரத்துல ஒரு நல்ல முகூர்த்த நாளா சொல்லுங்க” என்றார் தேவகி.
‘ஜாதகம் தான் பொருந்தலையே?’ ஆங்காங்கே சிலர் சொல்ல, “நான் என்ன ஜாதகம் பார்த்தா கல்யாணம் கட்டுனேன்? எல்லாம் வாழ்றதுல தான் இருக்கு!” என்று சொன்ன தேவகி, “நீங்க நாள் பாருங்க” என்றார் அவரிடம்.
இருப்பதிலேயே அருகில் வரும் முகூர்த்தத்தை எல்லோரும் விரும்ப, அவரும், ‘அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை’ என்று நாள் குறித்துக்கொடுத்தார்.
இன்னும் எண்ணி எட்டு நாட்களே இருந்தது.
“எப்படி எல்லா வேலையும் செய்ய முடியும்?” சத்தியன் கேட்க, “கல்யாணம் சிம்பிளா செஞ்சுக்கலாம் அண்ணா… அங்க ஆஸ்ட்ரேலியா’ல ரிசெப்ஷன் வச்சுப்போம்” என்று முடித்து விட்டார் தேவகி.
அதன் பின்னே கூட்டம் களைந்து கல்யாண வேலைகளை பட்டியலிட்டு ஆளுக்கு ஒன்றாய் வேலைகள் பகிரப்பட, தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு விசிலடித்தபடி அங்கிருந்து நகர்ந்த ஜேகோபின் தோளை கையை வைத்தார் ரிச்சர்ட்.
“எஸ் டேட்!” அவன் நிற்க, “ஹேவ் யூ பிளான்ட் எனிதிங்?” (ஏதாவது திட்டம் போட்டுட்டியா?) என்றார் ரிச்சர்ட் அவனை சந்தேகமாய் பார்த்து.
விழிகளை விரித்தவன், “நோ… நாட் அட் ஆல்” என்று சொல்ல, “இல்லையே… சம்திங் பிஸ்ஸி! நேத்து வரை அவ்ளோ ஆடுன… மேரேஜ் வேண்டாம்’ன்னு! இப்போ ஆப்டர் மேரேஜ் இவங்க வந்து போக போறதெல்லாம் யோசிச்சு செய்யுற? சரியில்லையே” என்று சரியாய் கேட்டுவிட, பொய் சொல்ல மனமின்றி, சிரித்தவன்,
“வெயிட் அண்ட் வாட்ச்!” என்று கள்ளமாய் சிரித்துவிட்டு போக, ரிச்சர்ட்’க்கு புரிந்துப்போனது கல்யாணத்தில் ஒரு கலவரம் நடக்கும் என்று!!!
மறுநாள் முதல் வேலைகள் தலைக்கு மேல் இருந்தது. அவசர அவசரமாய் பத்திரை அடித்து, திண்டுக்கல்லை தாண்டி, இங்கே இல்லாத சொந்தபந்தங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க பரமு ருக்மணி, சத்தியன் தேவி அலைய, சுற்று வேலைகளையும், ஆட்களை பிடித்து வேலை ஏவுவதையும், வீட்டில் இருக்கும் உறவினர்களையும் கவனிப்பது முழுக்க முழுக்க திரவியன் பொறுப்பாகிப்போனது.
காலில் சக்கரம் கட்டாத குறையாக அவன் சுற்றி சுழன்று வேலைகளை கவனிக்க, ஜேகோப்’ தனது தலையாய வேலையாக அவனை போட்டு பாடாய்படுத்திகொண்டிருந்தான்.
“ஹே பையா! ஐ நீட் ஜூஸ்!”
“ஹே பையா.. ஏய் பையா… உன்னத்தான்… இந்த ஃபேன் கொஞ்சம் ஸ்பீட் வை!”
“ஹே தீர் பையா… எனக்கு கால் வலிக்குது… அந்த டீப்பாய் எடுத்து இப்படி போடு!”
இப்படி பல பல ஏவல்கள். அவன் சொன்னதெல்லாம் செய்தாலும் முறைத்துக்கொண்டே தான் செய்தான் திரவியன். சத்தியனும், பரமுவும் பலமுறை சொல்லிவிட்டு போயிருந்தனர் இருப்பவர்களை நன்றாக கவனிக்க சொல்லி.
அதிலும் மாப்பிள்ளையாக வேறு போய்விட்டவனை திட்டவா முடியும்?
ஆனாலும், ஜேகோப் ஒவ்வொரு முறை ‘பையா’ என்று சொல்லும்போதும், எரிச்சல் எரிச்சலாய் வந்தது அவனுக்கு.
காலை பந்தியை முடித்துவிட்டு, மதிய பந்திக்கு சமைத்துக்கொண்டிருந்த ஆட்களிடம் இவனும் கூடமாட உதவியபடி, மற்ற வேலைகளை கவனிக்க, அங்கே வந்த ஜேகோப், “ஹே பையா!” என்றான்.
கையில் இருந்த சாம்பார் கரண்டியாலேயே அவன் முகத்தில் ஒரு அடி போட்டுவிடலாமா என்று சுர்ரென ஆத்திரம் கிளம்பியது திரவியனுக்கு.
“இந்த ஸ்டோன் பாரு… நான் வர வழில இருக்கு!” ஜேகோப், சமையலுக்காக அங்கே கிடந்த அம்மிக்கல்லை காட்ட, “அது ஓரமா தான் இருக்கு” என்றான் திரவியன் கோபத்தை அடக்கி.
“ஓ… அப்போ நான் சொன்னா செய்ய மாட்ட… மாப்பிள்ளைக்கு ரெஸ்பெக்ட் இல்ல?” என்று வேண்டுமென்றே சீண்ட, அவனை ஆனமட்டும் முறைத்த திரவியன் அம்மிக்கல்லை தூக்கி வேறொரு இடத்தில் வைக்க, அவன் தோளில் கிடந்த துண்டு கீழே விழுந்தது.
திரவியன் அதை கண்டுக்கொள்ளாது வேறு வேலைக்கு போய்விட, “ஹே பையா” என்றான் ஜேகோப்.
திரவியன் கை நரம்புகள் எல்லாம் புடைத்தது கோபத்தை அடக்குவதில்.
சற்று தள்ளி உணவை முடித்துவிட்டு கை கழுவிக்கொண்டு நின்ற சங்கவியும் ரோஷிணியும் இதை பார்த்துக்கொண்டிருந்தனர்.
சங்கவிக்கும் அதே தான் தோன்றியது. திராவியன் ஒரு முசுடு! அவனுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் கூட சிரிப்பு வராது. ஏற்கனவே ஜேகோப் மீது கோபத்துடன் இருப்பவனை காலையில் இருந்து மானாவாரியாக வம்பிழுத்துக்கொண்டிருந்தான் ஜேகோப்.
திரவியன் திரும்பாமல் அப்படியே நிற்க, “ஹே பையா!” என்றான் ஜேகோப்.
அவனிடம் இருந்து இப்படியொரு வேகத்தை எதிர்ப்பார்த்திராத ஜேகோப் அதிர்ந்து, “ஹே, வாட் மேன்?” என்றான் புரியாமல்.
“என்னை ரொம்ப சீண்டுட்டு இருக்க? சாவடிச்சுடுவேன்!” என்று பல்லைக்கடித்தான் திரவியன்.
“ஹே… எடுப்பட்டா பையா” என ஜேகோப் மீண்டும் ஆரம்பிக்க, திரவியன் மேலும் ஆத்திரத்துடன் சட்டையை பிடித்து உலுக்க, அங்கே இருந்த ஆட்கள் எல்லாம் என்னவோ ஏதோ என்று அவர்களை வந்து பிடிக்க, திரவியன் தானே சூழ்நிலை புரிந்து ஜேகோபை விட்டான்.
திரவியனை சிலர் திட்டி அங்கிருந்து அனுப்பினர். ஜேகோப் தான் பேயறைந்ததை போல அங்கே நின்றான். அவனிடம் சிலர் வந்து பேசிய சமாதானங்கள் எல்லாம் அவன் காதிலேயே விழவில்லை.
‘இப்ப நான் என்ன அப்படி சொல்லிட்டேன்?’ என அவன் திகைத்து நிற்க, எல்லாரும் நகர்ந்ததும், சங்கடத்துடன் தடுமாறிக்கொண்டே அவனிடம் வந்தாள் ரோஷிணி.
அவளை கண்டதும், “அவனோட இந்த டவல் கீழே விழுந்துடுச்சு! அதை தான் சொன்னேன்! அதுக்கேன் இவ்ளோ டென்ஷன் ஆகுறான்? அவனுக்கு எதாவது ப்ரோப்ளம் இருக்கா?” என்று பாவமாக ஜேகோப் கேட்க,
“தெரியாதே!!!” என்றவள், “ஆனா, ஒருத்தனை கேவலமா திட்ட யூஸ் பண்ணுவாங்க” என்று சொல்ல, அவளையே முறைத்துப்பார்த்துக்கொண்டு நின்ற ஜேகோப், சட்டென கீழே கிடந்த புடலங்காய் ஒன்றை எடுத்துக்கொண்டு அவளை அடிக்கத்துரத்த, ‘ஐயையோ…’ என பதறிக்கொண்டு அவனிடம் இருந்து ஓடினாள் ரோஷிணி.