வீரமணியும், பாண்டியும் செந்தாமரையை காரில் அழைத்துக் கொண்டு வீட்டில் விடச் சென்றார்கள். நடக்குமளவு தொலைவு தான் என்பதால் உடனேயே வந்துவிட, பாண்டி குடியிருப்பு பகுதிகள் தொடங்கிய இடத்திலேயே காரை ஓரமாக நிறுத்திவிட, ஏதோ யோசனையில் வந்த செந்தாமரை அதைக் கவனிக்கவில்லை.
“அம்மா, வீடு வரை காருல போனா, எல்லாரும் உங்களை கவனிச்சுடுவாங்க. அதுனால ஐயா உங்களை இங்கேயே இறக்கி விட சொன்னாங்க, நீங்க முன்னாடி போங்க. நான் உங்க பின்னாடி வீடு வரை வரேன்” என்று வீரமணி கூறினான்.
செந்தாமரைக்கு வெற்றி ஏன் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இத்தனை அக்கறை காட்டுகிறான் என்று சலிப்பாக இருந்தது. அவன் மேல் பிடித்தம் அதிகரிப்பது அவளுக்குக் குற்றவுணர்வைத் தந்தது. பெற்றோர் உடன் இல்லாததால் எழுந்த குற்றவுணர்வு.
வீரமணியிடம் தலையசைத்து விட்டு, அவள் இறங்கி முன்னே நடக்க, பாண்டி அங்கேயே வண்டியுடன் காத்திருக்க, போதிய இடைவெளியில் வீரமணியும் பின்தொடர்ந்து அவள் வீட்டிற்குச் சென்றதை உறுதிப் படுத்தி விட்டுத் திரும்பி வந்தான்.
வீரமணி காரில் ஏறும்பொழுதே, இளையராஜாவின் இசையில் மெல்லிய பாடல் ஒன்று காதில் நிறைந்தது. அவன் மனம் அந்த பாடலில் இதத்தைச் சுமந்தது.
“மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ” என்று எஸ்.பி.பி. தன் மென்குரலால் பாடிக்கொண்டிருக்க, அதை ரசித்தபடியே வீரமணி காரில் ஏறியிருந்தான்.
பாண்டியோ பாடலுக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருக்க, இவன் தன்னை தான் வம்பிழுப்பான் என்று புரிந்ததால் வீரமணி அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஆனால், பாண்டி விடுவதாய் இல்லை. காரை ஓட்டியபடியே, “அண்ணே இவங்களோட செம காமெடி இல்லைண்ணே…” எனக் கேட்க,
“யாரோட…?” என்றான் மிதப்பாகவே!
அந்த பாவனை பாண்டிக்கு இன்னும் சிரிப்பைத் தர, “இந்த பாட்டு படறவங்களோட தான் அண்ணே!” என்றான்.
“அதுல உனக்கென்ன காமெடி…” எனப் புரியாமல் வீரமணி கேட்க,
“இல்லைண்ணே காதல் இல்லாம வாழவே முடியாதாமா…” என மீண்டும் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.
[the_ad id=”6605″]
வெகு அருகில் என்பதால் வேகமாகவே திரும்பி விட்டனர். பாண்டி காரை நிறுத்த, “அதுல உனக்கு என்ன சிரிப்பு?” என வீரமணி கேட்க,
“போங்கண்ணே இன்னும் புரியலையா, நீங்க எம்புட்டு வருஷமா காதல், கல்யாணம் காட்சி எதுவுமில்லாம இருக்கீங்க” என மீண்டும் வெடிச் சிரிப்பு சிரித்தபடியே பாண்டி இறங்க,
“முருகா….” எனக் கோபத்தை அடக்க முடியாமல் வீரமணி கத்தினான்.
“அவரெல்லாம் உங்களை மாதிரி இல்லைண்ணே. ரெண்டு சம்சாரம் வெச்சிருக்காரு” என மீண்டும் பாண்டி சிரிக்க, அவனை இழுத்துப் பிடித்த வீரமணி மொத்தி எடுத்தான்.
செந்தாமரைக்கு, வெற்றிச்செல்வனுடனான திருமணத்திற்குச் சம்மதம் சொன்ன நாளிலிருந்தே மனதை அழுத்தத் தொடங்கிய பாரம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை. பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல், அவர்கள் அருகில் கூட இல்லாமல் நடக்கவிருக்கும் திருமணத்தில் எந்தவித உடன்பாடோ, பற்றோ வர மறுத்தது.
இன்னமும் திருமணம் தொடர்பாக ஒரு நிகழ்வும் தொடங்கவில்லை தான். சம்பிரதாயத்திற்காக வெற்றியின் பாட்டி வந்து பார்த்துச் சென்றிருக்கிறார். ஆனால், நிகழ்வுகள் தொடருமானால், அவளுடைய மனம் வெகுவாக தவித்தது. இதைக்குறித்துக் கூட வெற்றிச்செல்வனிடம் பகிர மனம் வரவில்லை.
பெற்றோரின் நினைவில் பாரமான மனதோடு படுக்கையில் சாய்ந்திருந்தவளின் மனம், தனது கடந்த கால பக்கங்களைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கியது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, செந்தாமரை தனது பி.எட் படிப்பினை படித்துக் கொண்டிருந்த சமயம், அவளது கல்லூரி ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்குவதற்காக… ஆதரவற்ற பெண்களின் நல்வாழ்வுக்காகப் பல உதவிகள் செய்தும், போராடியும் வரும் நிர்மலா தேவி என்பவர் வருவதாக இருந்தது. அவர் சேலம் மாவட்ட கலெக்டர் புருஷோத்தமனின் மனைவி ஆவார்.
என்ன காரணத்தாலோ அவரால் ஆண்டு விழாவிற்கு வர முடியாமல் போயிருக்க, அவருக்குப் பதிலாகத் தலைமையேற்க வந்தவர் தான் பரமேஸ்வரன் ஐயா.
அன்றைய நாளின் ஒவ்வொரு நிகழ்வுகளும் அவளுடைய மனதில் இன்றும் அழியாத சித்திரமாய் இருக்கிறது. பரமேஸ்வரன் ஐயா தான் எத்தனை எளிமை! அவரது முகத்தில் ஒளிர்ந்த சாந்தமும், கம்பீரத்துடன் தவழும் புன்னகையும்… பார்ப்போர் அனைவரையும் வசீகரிக்கும்.
அதிலும் அவரது பேச்சுக்கள், கருத்துக்கள் எல்லாம் அத்தனை அருமையாக இருந்தது. இதுவரை யாருடைய பேச்சையும் செந்தாமரை இந்தளவு ரசித்ததில்லை எனலாம். பரமேஸ்வரன் ஐயாவின் பேச்சில் அவளால் இம்மியும் கவனம் சிதற முடியவில்லை. ஏன் அனைத்தையும் மனனம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூட சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றியது.
எத்தனை தெளிவான கருத்துக்கள்! எத்தனை எளிமையான உதாரணங்கள்! அரங்கத்தினர் அனைவரையும் தன் பேச்சால் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
‘என்னடி இவ்வளவு அருமையா பேசராரு!’ எனத் தோழிகளிடம் சிலாகித்து ஓய்ந்தாள்.
அதிலும் ஆண்களின் சுய ஒழுக்கம் பற்றி அவர் பேசியதில், செந்தாமரை மொத்தமாக கவிழ்ந்தே விட்டாள். பொதுவாகப் பெண்பிள்ளைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், ஆண்பிள்ளைகளுக்கு இருப்பதில்லையே!
[the_ad id=”6605″]
ஆம்பள புள்ள போயி இதெல்லாம் செய்யணுமா? ஆம்பள நீ அழலாமா? உனக்கென்ன ராசா நீ ஆம்பள புள்ள, ஆம்பள பத்து பேரு கிட்ட போனாலும் அவன் ஆம்பள தான்… என்பது போன்ற வழக்கு மொழிகள் தான் அதிகம் உலாவும் சமூகம் இது. ஆண்கள் செய்யும் தவறுகளுக்குச் சப்பை கட்டுக் கட்டும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்காமல், மென்மேலும் தவறு செய்யத் தூபம் போடும் கூட்டம்.
ஆனால், அதை உடைத்து, மற்றவர்களுக்கும் புரியும் வகையில் அத்தனை அழகாக எடுத்துக்கூறிய பரமேஸ்வரன் ஐயா மீது எல்லையற்ற பற்று வந்தது.
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;”
என்ற பாரதியின் கும்மிப்பாடலை எத்தனை முறை சிலாகித்திருப்பாள்? அவளுடைய கருத்தும் எப்பொழுதும் அது தான்! கற்பு என்பதும், ஒழுக்கம் என்பதும், பண்பாடு என்பதும் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வேண்டும்; ஒரு ஆண் இவற்றை கடைப்பிடிக்கத் தவறினால் தவறுவது அந்த ஆண் மட்டுமல்ல, ஏதோ ஒரு பெண்ணும் சேர்த்துத் தான். பிறகு பெண்களுக்கு மட்டும் இவர்கள் தனித்துச் சொல்லி லாபமென்ன? என்று நினைப்பாள்.
அவளை ஒத்த கருத்தில், மற்றவர்களுக்கும் புரியும் வகையில் பேசிய பரமேஸ்வரன் ஐயா என்றால், இன்று வரையும் அவளுக்கு அத்தனை மரியாதை.
மேடைப்பேச்சு முடிந்ததும், பரிசுகள் வழங்கப்பட்டது. “ரேகா எங்கடி?” தோழிகள் கூட்டத்தை ஆராய்ந்தவாறு செந்தாமரை கேட்டாள்.
“டேன்ஸ் பண்ணுனதுல டையர்டா இருக்குன்னு ரெஸ்ட் எடுக்க போனாடி”
“என்னடி பரிசு தர நேரத்துல…”
“இல்லைடி சரியான நேரத்துக்கு வந்துடுவேன்னு சொன்னா, சரி நீ முன்ன போ. உனக்குப் பேச்சு போட்டிக்குப் பரிசு இருக்கல்ல”
“சீக்கிரம் வரச் சொல்லி போன் பண்ணுங்கடி” என்றபடியே முன்னே நகர்ந்த செந்தாமரை, அவளும் ரேகாவை தொடர்புகொள்ள முயன்றாள்.
அழைப்பை எடுத்தவள், “சாரி சாரிடி வந்துட்டேன்” என்றபடி கைப்பேசியை துண்டித்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் இவளுடன் வந்து இணைந்து கொண்டாள்.
“அதுக்குள்ள எங்க போவ” என்று கடிந்தவள், அவளது முகத்தின் சோர்வைப் பார்த்து, “என விஷயம்?” என்று யோசனையாகக் கேட்க,
“ரொம்ப இம்சை பண்ணறான்டி. எங்கே பார்த்தாலும் வந்து நின்னு கம்பெல் பண்ணறான். இப்ப எல்லாம் அவன் அப்ரோச் அவ்வளவு பயமா இருக்கு”
“வீட்டுலயும் சொல்ல முடியாதுங்கற, சரி விடு நம்ம டிபார்ட்மெண்ட் ஹெட்ச்.ஓ.டி கிட்ட சொல்லுவோம். அவரு அவங்க டிபார்ட்மெண்ட்’ல பேசிடுவாங்க” என்று ஒரு வழியை கூறி ரேகாவை சமாதானம் செய்தாள்.
[the_ad id=”6605″]
அதற்கடுத்து இவர்கள் பரிசுகள் வாங்க, விழா முடிய என்று நேரம் சென்றது. விழா முடிந்ததும் மேடையிலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரன் ஐயாவைச் செந்தாமரை சந்திக்க ஓடியிருந்தாள்.
‘இவ எதுக்கு இப்படி ஓடறா?’ என்று குழப்பத்துடன் ரேகா சற்று இடைவெளி விட்டு அவர்களைப் பின்தொடர்ந்தாள்.
செந்தாமரை, பரமேஷ்வரனிடம் அவரது பேச்சைச் சிலாகித்து, அதில் பிடித்த விஷயங்களை குறிப்பிட்டுக் காட்டி என ஓயாமல் பேசினாள். மெல்லிய புன்னகையுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டே அவளுடன் நடந்தார். செந்தாமரையைப் பார்த்ததும் தான், ‘நம் வீட்டில் ஒரு பெண் குழந்தை இல்லையே!’ என்னும் ஏக்கமே பரமேஸ்வரனுக்கு எழுந்தது. துருதுருவென இருக்கும் அவளை அவருக்கு அவ்வளவு தூரம் பிடித்துவிட்டது. அதிலும் தயக்கமில்லாமல் பேசிய பாங்கு வெகுவாக கவர்ந்தது.
“நான் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கிட்டுமா சார்” பாவமாக முகத்தைத் தொங்கப் போட்டுக் கேட்டு வேறு வைக்க,
“கண்டிப்பா மா” என்றவர், அவள் கைப்பேசியில் அவள் எடுத்த கையோடு தன் கைப்பேசியிலும் எடுத்துக் கொண்டார்.
“நீங்க என்ன பண்ணறீங்க? எங்க இருக்கீங்க?” ஆர்வமாய் கேட்டவளிடம் அனைத்து விவரங்களையும் தந்தார்.
“அவ்வளவு தூரம் போகணுமா? முன்னாடியே கிளம்பி இருக்கலாமே சார்”
“அதெப்படி மா, தலைமை ஏற்க வந்தா… தலைமை ஏத்து, விழா முடிஞ்சு போகிறது தானே முறை” என்று அளவாகச் சிரித்தார்.
“நீங்க ரொம்ப நல்லவரு சார். சரி பார்த்து போங்க, எங்க காலேஜ் பிரின்சி, கரஸ் எல்லாம் வேற உங்களை வழியனுப்ப முடியாம என்னை முறைச்சு முறைச்சு பார்க்கிறாங்க. பை சார்” என்று பேசிப்பேசி வாய் ஓய்ந்து விடை பெற்றாள்.
என்னவோ பள்ளிக்கு அனுப்பும் குழந்தையைப் பிரியவே மனமின்றி வழியனுப்பும் அன்னை போல, பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு வழியனுப்பி வைத்தவளை அவருக்கு மிகவும் பிடித்தது. அவளுடைய தலையை ஆதுர்யமாக தடவி “நல்லா இரும்மா” என்று கூறி பரமேஸ்வரனும் அவளிடம் விடை பெற்றார்.
“என்னடி யாருன்னே தெரியாதவங்க கிட்ட இவ்வளவு நேரம் பேசற, அதுவும் பிரின்சி, கரஸ்பாண்டன்ட் எல்லாம் வராங்க, அதைக் கூட கவனிக்க மாட்டீங்கற” என்று ரேகா கடிய,
“இல்லைடி அவரு பேசுனது ரொம்ப நல்லா இருந்துச்சு. நீயெல்லாம் மிஸ் பண்ணிட்ட. அதான் அவரு பேசுனது நல்லா இருந்துதுன்னு சொல்ல போனேன்”
“ஹ்ம்ம்… அதுக்கு எதுக்கு செல்பி எடுத்த”
“என்னடி அவரு கூட நின்னு போட்டோ எடுக்கிறது எவ்வளவு பெருமை” என்றாள் வாயெல்லாம் பல்லாக.
“என்னதான்டி ஆச்சு உனக்கு?” என ரேகா புலம்ப,
“நிஜமாலுமே ரொம்ப பிடிச்சிருந்ததுடி அதான்”
“நீ இப்படி யார்கிட்டேயும் தேடி போயி பேச மாட்ட, அதுவும் இப்படி வாய் ஓயாம பேசவே மாட்ட, இதுல போட்டோ வேற.. எல்லாமே வித்தியாசமா செய்யற” என ரேகா யோசனையாகச் சொல்லவும் செந்தாமரையும் விழித்தாள்.
அவள் விழிப்பதில் நகைத்து விட்டு, “எதுக்கும் அவங்க சம்சாரத்தை ஜாக்கிரதையா இருக்க சொல்லணும். நீ போட்டிக்கு போயிட்டீன்னா” என சீரியஸ் மோடை மாற்றி கேலியாகக் கூறினாள்.
“பிசாசு… பிசாசு… பிடிக்கும்ன்னா கல்யாணம் மட்டும் தான் பண்ணுவங்களா” எனத் தோழியை மொத்தினாள்.
இருவரும் பேசிக்கொண்டே கல்லூரி வளாகம் தாண்டி பேருந்து நிலையம் நோக்கி நடக்க, ஆண்டு விழா என்பதால் சற்றே நேரம் ஆகியிருந்தது. இருளில் ஒருவருக்கொருவர் துணையாய் நடந்து கொண்டிருக்க, வேகமாக அவர்கள் அருகே வந்த நான்கு சக்கர வாகனம் இருவரையும் உள்ளிழுத்துப் போட்டது.