கள்வன் – 22
இதயனுடனும் சிவகாமியுடனும் வாடகைக் காரில் இனியா தொற்றிக்கொள்ள, இன்பன் இவர்களின் காரை பின் தொடர்ந்து வந்தான். தாயையும் மகனையும் பின் இருக்கையில் தாராளமாக அமர வைத்துவிட்டு இனியா முன்னே ஓட்டுநரின் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
வழி நெடுக அகமும், விழியும் இனியா புறமும், கார் சன்னலைத் தாண்டி வெளிப்புறத்திலும் மாறி மாறி அலைப்பாய பயணத்தை எதிர்நோக்கியும், அதனின் பலனை எதிர்பார்த்தும் ஆவலோடு பயணித்தான் இதயன். பல வருடங்களுக்கு பின்னான வெளிப்பயணம். புது உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்தது.
விபத்து நடந்தபின் ஒரே ஒரு வருடம் மட்டுமே தங்கிவிட்டு மனவலிமையும், தன்னம்பிக்கையும், மீண்டுவிடலாம் என்ற தைரியமும் இருந்த தடம் தெரியாமல் அவனை விட்டு வெகுதூரம் சென்றிருக்க, தென்றலாய் இருப்பாள் என்ற அவளின் புறத்திற்கு மாறாய், அதிரடியாய் தொலைந்த அவனின் திடத்தை மீட்டிருந்தாள் அந்த அகஅழகுப் பதுமை.
பார்ப்பதற்கு அவள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் அவன் நினைக்கும் அளவுக்கு மிகைப்படாமல் இருப்பினும், அவன் அகத்திற்கு மட்டுமே அவனை முன்னிறுத்தி செய்யும் அவளின் சிறு சிறு செயல்களும், அவளின் அழுத்தமான வார்த்தைகளும், அவன் அவளை விலக்கினும் அவளின் விடாமுயற்சியும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரியும். சிறிதோ, பெரிதோ வீரியமான வார்த்தைகளுக்கான சக்தி அவனுள் மாயத்தை ஏற்படுத்தியிருந்தது.
சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்து பெரிய மருத்துவ படிப்பு படிக்கும் போதும் சரி, முடித்த பின்னான அவனின் ஆறு மாத உழைப்பின் போதும் அவனை புகழ்ந்து தூக்கிப் பேசியவர்கள், விபத்தில் சிக்கி நலிந்தவுடன் உச்சு கொட்டிவிட்டு நகர்ந்துவிட்டனர். ஆறுதல் வார்த்தைகள் தேவைப்பட்ட போது வருங்காலத்தில்… என்று யதார்த்தத்தை எடுத்துரைப்பதாய் நினைத்துக் கொண்டு நடவாத எதிர்மறைகளை அள்ளி வீசி மனதை ரணப்படுத்தி, கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த நம்பிக்கையையும் அழித்து விட்டிருந்தனர். சில நேரம் எதிர்காலத்தை பற்றி எண்ணாமல் வாழ்க்கையின் போக்கில், அதனின் மாறுதலுக்கு ஏற்ப மாறிக்கொள்வதே சிறந்தது.
அவர்கள் தான் அப்படியென்றால் படித்து, பட்டம் பெற்று, உள்ளத்தின் வலிமையை, அதனின் சலனப் போக்கை கணிக்கும் அளவிற்கு ஆற்றல் படைத்த இதயன் ஏனோ மற்றவர்களின் பேச்சுகளுக்கு மதிப்பளித்து தன்னைத் தானே எவ்வளவு தாழ்த்தி, வருத்திக்கொள்ள முடியுமோ அவ்வளவும் செய்துவிட்டான். உடல் சோர்வோடு மனமும் சோர்ந்து கொள்ள, அகத்தின் அலைப்புரிதலை வெளிப்படுத்த வழியறியாது மனதிற்குள்ளேயே புழுங்கி புழுங்கி ஒடுங்கி, மற்றவர்களையும் நெருங்கவிடாமல் ஒடுக்கி, தனக்குள்ளே வேலி போட்டுக்கொண்டு ஒருவித அழுத்தத்தில் தான் இருந்தது இத்தனை ஆண்டுகள்…
அதுமட்டுமின்றி எவரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அதை மதியில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்ற யோசனையின்றி மற்றவர்களின் கையில் தம் உள்ளத்தை பகடுகாயாக்கி நத்தைப் போல் ஓட்டில் சுருங்கி இருந்தவனுக்கு கிடைத்த பூக்குவியல் தான் இனியா. அவளின் புறஅழகை இரசித்திருக்கிறானா? இதுவரை அவளின் அகமே அவனை கட்டிப் போட்டிருக்கையில் அவளின் புறத் தோற்றம் எல்லாம் அவன் கருத்தில் பதியவே இல்லை… பதித்துக்கொண்டு உறவு வளர்க்கும் மனநிலையிலும் இல்லை. இருப்பினும் அவனின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டாள். அசைக்கமுடியா இடம்… முதன்முதலில் அவளை உதாசீனப்படுத்தியதற்கு மாறாக அழுத்தமான இருப்பை அவனின் உள்ளத்தில் பட்டா போட்டு பதிவு செய்தாகிவிட்டது.
அவள் இதெல்லாம் ஏன் செய்கிறாள்? எதற்காக செய்கிறாள்? செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன? என்பது போன்ற கேள்விகள் வண்டாய் அவனை குடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அவனுக்காக அவள் செய்வது பிடித்தும் இருந்தது. எவ்வித சொந்தமுமின்றி பழக்கமுமின்றி வெளியிலிருந்து வந்த ஒருவள் தனக்காக இவ்வளவு செய்கிறாள் என்பதில் கர்வம் கூட லேசாக அவ்வப்போது எட்டிப்பார்த்தது. அந்தக் கர்வம் சில நேரம் மெச்சுதலாகவும் உருப்பெற்று விழிகளை அவள் புறம் விரட்டியது.
இது எதுவும் தெரியாமல் கார் நின்றபின் வேகமாக கீழிறங்கிய இனியா பின் புறம் நோக்க, சிவகாமி விழிகளில் வியப்பு கலந்த அதிர்ச்சியையும், இதயன் விழிகளில் அதிருப்தியையும் தாங்கியபடி அக்கட்டடத்தில் பார்வையை நிலைத்திருந்தனர். அவர்களின் பின் தன் இருசக்கர வாகனத்தில் வந்தவனும் அலுப்புடன் தலையை குலுக்கிக் கொண்டான்.
டாக்டரை பார்க்கலாம் என்றதும் எங்கு என்று இனியாவை கேட்டு விசாரித்து தெரிந்து கொண்டிருக்க வேண்டுமோ? ஆசையை வளர்த்துக்கொண்டு மீண்டும் நிராசையை அல்லவா ஏற்க ஆவலோடு வந்திருக்கிறோம்… என்ற எண்ணம் சகோதரர்கள் மனதில் ஒன்று போல் தோன்றி பொங்கிய பாலில் தெளித்த நீராய் ஆர்வமும், நம்பிக்கையும் அடங்கியது.
[the_ad id=”6605″]
“என்னாச்சு?” அவர்களின் பாவனையை கண்டு சந்தேகத்துடன் இனியா நெற்றி சுருக்க, கீழே இறங்கிய சிவகாமி,
“இங்க தான்டா இதயன் கொஞ்ச நாள் வேலை செய்தான். இவனுக்கு இப்போது மருத்துவம் பார்க்கும் அஜய் தம்பியும் இங்கதான் இருக்கு…”
பதில் கிடைத்த நொடி இனியாவின் பார்வை இதயனிடம் தான் சென்றது. அவன் முகத்தில் வெளிப்பட்ட சுணக்கம் அவளையும் பிடித்துக் கொள்ள, அவளுக்குமே நிறைந்திருந்த நம்பிக்கை பாதியாய் மட்டுப்பட்டுவிட்டது.
“அவரை பார்க்கத் தான் கூட்டி வந்தேன்… நான் தான் சொல்லி இருக்கனும்… பரவாயில்லை எனக்காக இன்னோரு முறை கன்சல்ட் செய்திடலாமே?” வார்த்தைகள் சிவகாமியை நோக்கியும், பார்வை இதயனிடமும் நிலைகுத்தி இறைஞ்ச, அதுவரை முகத்தை தூக்கிவைத்துக் கொண்டிருந்த இதயன் அவளை பார்த்து கண்சிமிட்டினான். அவளின் வேண்டலை ஏற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அது…
‛போயும் போயும் திரும்ப இவனிடம் தான் இவள் கூட்டிவர வேண்டுமா… இந்த ஊரில் வேறு மருத்துவரே இல்லை பார்…’ என்று லேசாக சினம் எழும்பினும்…
அடுத்து யாரை பார்க்கப் போகிறோம், அதைத் தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது, என்ன மாதிரியான பதில் வரும் என்று எல்லாம் தெரிந்து கசப்பு பிறந்தாலும், நம்பிக்கையுடன் அவனின் நலம் மட்டுமே முக்கியம் என்ற முனைப்புடன் செயல்படும் இனியாவை வாட்ட மனம் வரவில்லை இதயனுக்கு. பயணித்த போது இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்து சலனம் குடிகொண்ட அவளின் வதனத்தை ஏனோ சகிக்கமுடியவில்லை அவனால்…
“பரவாயில்லை இவ்வளவு தூரம் வந்துட்டோம் பார்த்திடுவோம்…” என்று சிவகாமி பதில் கூறும்போதே இன்பன் தன் வண்டியை நிறுத்திவிட்டு இதயனை ஓட்டுநர் உதவியுடன் சக்கரநாற்காலியில் இறக்கினான்.
இதயனின் விழிகள் மேலே கட்டடத்தை நோக்கி பாய, நினைவுகள் பின்னோக்கி சென்றது. மேற்படிப்பு முடித்த கையோடு அனுபவம் வரும்வரையும், படிப்பிற்காக வாங்கிய கடனை அடைக்கும் வரையும் ஏதேனும் புகழ்பெற்ற மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு பின் அரசு மருத்துவமனையிலோ அல்லது தனி க்ளீனிக்கோ இரண்டில் எது தோதாக வருகிறதோ அதில் நிலைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையில் தான் அப்போது புதிதாக பெரிய அளவில் துவங்கப்பட்ட இந்த ஏ.ஆரில் சேர்ந்தான். அவன் விரும்பியது போலவே நல்ல அனுபவங்கள் பலவும், எதிர்பாராத முரணான சில அனுபவங்களும் கிடைத்து அதை மேலும் ஆராய்வதற்குள் அவனை முடக்கிவிட்டிருந்தது அந்த சாலை விபத்து. அதன்பின்னான மருத்துவமனை வாசம் ஒன்றிரண்டு மாதங்கள் இங்கேயே கழிந்த பிற்பாடு இப்போது தான் இங்கு வருகிறான்.
“இனியா விருப்பப்படுறா ஒருதரம் திரும்பவும் காண்பித்துவிடுவோம் இன்பா…” இளைய மகனிடம் கண்ணசைப்புடன் கூற, இன்பன் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு வந்தான். அவனின் இருபுறமும் இருவரும் வர, இனியாவின் பார்வை அவ்வப்போது இதயனை வருடிச் சென்றது.
சிலர் இதயனை கண்டுகொண்டு முறுவலுடன் அவனை நெருங்கி அவனின் நலம் விசாரிக்க, பலருக்கு அவனை தெரியவில்லை… நிறைய மாறி இருந்தது இந்த ஆறு ஆண்டுகளில்… எதற்கும் எவ்வித எதிர்வினையும் புரியாமல் லேசான கண்சிமிட்டலுடன் அனைவரையும் கடந்தான் இதயன்.
அஜயின் அறை முன் வந்தவுடன் இனியா அவளின் வருகையை தெரிவிக்க, ஓரிரு நிமிடத்தில் அவளை உள்ளே வரச்சொல்லி ஆள் அனுப்பினான் அஜய். சிவகாமியின் கையில் இருந்த இதயனின் மருத்துவ ஏடை வாங்கிகொண்டவள் ஒரு தலையசைப்புடன் முதலில் உள்நுழைய இன்பன் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு பின்தொடர்ந்தான்.
உள்ளே நுழைந்தவளை உற்சாகத்துடன் ஆவலாய் வரவேற்க எழ, அவளைத் தொடர்ந்து உள்ளே வந்தவர்களை கண்டவுடன் அஜயின் புன்னகை சட்டென வடிந்து தன்னாலே ஒருசேர அதிர்ச்சியும், பதட்டமும் ஒட்டிக்கொண்டது.
இந்த அண்ட உலகம் இவ்வளவு சிறியதா?
மீண்டும் இதயனா?
அதுவும் இனியாவுடன்…
தன்னை சமன்படுத்திக்கொள்ள சில அல்ல பல நொடிகள் பிடித்தது அஜய்க்கு.
வார்த்தைகளை கோர்த்து வித்தை காட்டுபவனுக்கு அந்தக் கணம் ஏனோ அடிப்படை எழுத்துக்கள் கூட நினைவில் இல்லை. நாக்கு மேல்தட்டோடு ஒட்டிக்கொண்டு பிரிய மறுத்து அவனை ஊமையாக்கி நிறுத்தியிருந்தது.
“அஜய்… நான் சொன்னேனே என் பிரெண்ட்… இவர் தான், இதயன்.” என்ற இனியாவின் வார்த்தைகள் கூட அவன் செவியை எட்டியதா என்பதில் ஐயமே…
[the_ad id=”6605″]
“என்ன அண்ணா ரொம்ப அதிர்ச்சி ஆகிடீங்க… இனியா பேமிலி பிரெண்ட். தெரிந்த டாக்டர் இருக்காரு… அவரை பார்க்கலாம்னு சொல்லவும் நாங்களும் வந்துட்டோம்… இங்க வந்தா நீங்க இருக்கீங்க…” என்ற இன்பனின் இயல்பான பேச்சே அவனை நிகழ்வுலகத்திற்கு அழைத்து வந்தது.
கடினப்பட்டு தன்னை சீர்படுத்திக்கொள்ள முயன்றவனின் விழிகள் தயக்கத்துடன் இதயன் புறம் பாய, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போன்றதொரு கூர்பார்வை எதிராய் கிடைக்கவும் டப்பென்று விழிகளை சிவகாமி புறம் திருப்பிக்கொண்டான்.
“உட்காருங்கமா… எல்லாரும் உட்காருங்க.” என்று பொதுவாய் சொன்னவன் மறந்தும் இதயன் புறம் பார்வையை செலுத்தவில்லை.
“இனியாவை உங்களுக்கும் தெரியும்னு எனக்கு தெரியாது…” அஜய் பொதுவாய் பேச்சை துவங்க, இந்த சந்திப்பு எப்போது நிகழும் என்று இரவிலிருந்து காத்திருந்ததற்கு மாறாக இது எப்போதுடா முடியும் என்று பீதியுடன் ஒருவித இறுக்கம் சூழ அமர்ந்திருந்தான்.
“இவரோட மெடிக்கல் ஹிஸ்டரி பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்… எனக்காக இன்னொரு முறை பார்த்து சொல்லுங்களேன்… சீக்கிரம் குணப்படுத்த முடியுமா?” இனியா சுற்றி வளைக்காமல் காரியத்தில் இறங்க, சிவகாமியின் பார்வை கூட எதிர்பார்ப்புடன் அஜயை நோக்கியது. இன்பனுக்கு பெரிதாக நம்பிக்கை ஏதும் எழவில்லை… அஜயிடம் தான் அழைத்து வந்திருக்கிறாள் என்றதுமே ஆர்வம் அடங்கியிருந்தது. இத்தனை வருடங்களாக அவன் தானே மருத்துவம் பார்க்கிறான்… புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறான் என்றே இருந்தது இன்பனின் எண்ணம். அதை பொய்க்காமல் இனியாவை நோக்கிய அஜய்,
“மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கு இனியா. உடனே எல்லாம் சரிசெய்ய முடியாது. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கணும். நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பதால் மூளையிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு செல்லும் கட்டளைகள் சரியான சமிக்ஞை கிடைக்காமல் எல்லாவற்றிற்கும் சென்றடையாமல் தளர்ந்து போயிருக்கு. எல்லா உறுப்புகளும் சமநிலைக்கு வரணும்… இரத்த அழுத்தம், சுவாசம் இரண்டும் இன்னும் நிலையில்லாம தான் இருக்கு… இதெல்லாம் முதலில் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் மேஜர் சர்ஜரி செய்து இதை குணப்படுத்திவிடலாம். அதெல்லாம் நடக்க கொஞ்சம் காலம் ஆகும்…”
“ஏற்கனவே ஆறு வருடம் ஆகிடுச்சே அஜய்… இன்னும் காலதாமதம் ஆகும்னா எப்படி? ஆறு வருடங்களுக்கு முன்னிருந்த வசதிகள் போல் அல்லாது இப்போது இருக்கிற மருத்துவ முன்னேற்றங்களுக்கு நிறைய செய்யலாமே… சீக்கிரம் சரிசெய்திடலாமே?” சரியான கோணத்தில் சிந்தித்து தீர்க்கமாய் இனியா கேள்வி எழுப்ப திணறித்தான் போனான் அஜய்.
அதை கவனித்த இதயன் இதழ்களில் புன்னகை ஒன்று தானாக வந்து ஒட்டிக்கொண்டது முதன்முதலாய் அங்கு வந்திறங்கிய பிறகு… அதில் தொனித்தது அலட்சியமா? பெருமிதமா? கர்வமா? அதை பிரித்தறியாமல் புரிந்து கொள்ள அவனால் மட்டுமே முடியும்.
“நீ கேட்பதெல்லாம் சரிதான் இனியா. மருந்துகளை இதயன் உடல்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு தான் இருக்கிறேன். இது சாதாரண காய்ச்சல் இல்லையே உடனே சரியாகிட… நுணுக்கமான பிரச்சனை… சிறு பிசகு ஏற்பட்டாலும் பாதிப்பு அதிகம். பாதிப்பு உடலிற்கு மட்டுமல்ல மனநிலனுக்கும் தான்…” அவனின் பதில் இனியாவிற்குள் குழப்பங்களாய் சுழன்று அடித்தது.
“ஓ… அப்போது இன்னும் அனுபவம் வாய்ந்த மருத்துவரை பார்க்கலாமா? நீங்கள் கூட வேறு பெரிய டாக்டரை ரெபர் செய்றேன்னு சொன்னீங்களே…” இனியா விடாமல் கேட்க,
அஜய் ‘ஐயோ’ என்று வெளிப்படையாக தலையில் அடித்துக்கொள்ளாத குறை தான்… இதயனை தவிர்த்து வேறு யாரையும் இவள் அழைத்து வந்திருக்க கூடாதா?… என்றே நொடிக்கொருமுறை மனதில் நொந்து கொண்டான்.
“கண்டிப்பா இன்னொரு டாக்டரை பரிந்துரைக்கிறேன் இனியா… இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளையே தொடரட்டும். அதற்குள் இதயனுடைய ரிப்போர்ட்டை எனக்கு தெரிந்த வட்டத்தில் கொடுத்து மேலே என்னமாதிரி மூவ் செய்யலாம்னு நானே கன்சல்ட் செய்து சொல்றேன்.” என்று சொல்லி சமாளிக்க, அவள் அகம் வேறு கணக்குகளை போட்டுக் கொண்டிருப்பினும், பெயருக்கு சமாதானமாய் தலையசைத்தாள் இனியா.
“எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு தேங்க்ஸ் அஜய். நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.” என்றுவிட்டு அவள் எழுந்துவிட, அவனும் அவளை வழியனுப்ப தயாராய் எழுந்துவிட்டான்.
அவளுடன் நேரம் செலவழிக்க காத்துக்கொண்டிருந்தது என்ன… இப்போதோ அவள் எப்போது வெளியேறுவாள் என்ற பதட்டம் என்ன… எல்லாம் இந்த இதயனால் வந்தது… அவனை யார் இனியா கண்ணில் தென்படச் சொன்னது… என்று கோபம் முழுக்க இதயன் புறம் திரும்ப, விழிகளும் இதயன் புறம் வெறுப்பை கக்க, அதற்கு குறையா சீற்றத்துடன் அவனை எரித்துக் கொண்டிருந்தான் இதயன்.
இதை எதர்ச்சையாக கவனித்த இனியா குழப்பத்துடன் இதயனை படிக்க முயன்றாள். சார்ந்திருக்கும் தன் நிலையை வெறுத்து அதை மற்றவர்களிடம் ஒதுக்கமாய் இதயன் இதுவரை வெளிப்படுத்தியிருக்க, யாரையும் வெறுப்பாய் பார்த்ததாய் நினைவில்லை அவளுக்கு… அவளையும் முதலில் பார்வையாலேயே தள்ளித் தானே நிறுத்தியிருந்தான். ஆனால் அதில் வெறுப்பு இல்லையே…
“கிளம்பலாம்.” என்று இருவருக்கும் இடையில் இருந்த அனல் யுத்தத்திற்கு அணை போட்டவள் இன்பனை விழிகளால் உந்த, இத்தனை நேரம் மெளனியாய் இருந்தவன் இதயனின் சக்கர நாற்காலியை வெளியே நோக்கி தள்ள ஆரம்பித்தான்.
இதயன் நகரவுமே இருவரும் தங்களின் பார்வையை முற்றிலுமாய் மாற்றிக்கொண்டது இனியாவின் பார்வையிலிருந்து தப்பவில்லை. குழப்பத்தை தேக்கி இதயனை கேள்வியுடன் நோக்க, என்றும் இல்லாதவாறு அதரங்களை விரித்து, வெளிர் பற்கள் மெலிதாய் எட்டிப்பார்க்க, கண்களில் ஒளியுடன் வசீகர புன்னகை சிந்தினான் அவளை களவாடவென அரிதாரம் பூசிக்கொண்டக் கள்வன். ஏற்கனவே அவனுள் சொக்கிபோயிருந்தவள் நிலையை இப்போது சொல்லவும் வேண்டுமா…
[the_ad id=”6605″]
கன்சல்டிங் பீஸை கட்டிவிட்டு நேரே வீட்டுக்கு வந்திறங்கிய பின்னும் நிர்மலமாய் இருந்தது அவ்வீடு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை, இதயனைத் தவிர…
அவனுக்குத் தெரியும் தன் வீட்டினர் போல் அஜயின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு இனியா அமைதி காக்க மாட்டாள் என்று… அவளின் வதனத்தில் தெரிந்த தீவிர சிந்தைக் கோடுகளே அதை பறைசாற்றின.
“நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு கிளம்புங்க…” அமைதியை உடைத்த சிவகாமி தரையில் அமர்ந்து சுவரை வெறித்துக் கொண்டே கூற, இனியா அவர் அருகில் அமர்ந்து,
“நீங்க எதுவும் எதிர்மறையா யோசிக்காதீங்க ஆன்ட்டி…”
“இனி யோசிக்க என்ன இருக்கு? அதுதான் எல்லாம் தெளிவாக புரியுதே… அவன் வாழ்க்கை இப்படி சக்கரநாற்காலியிலேயே போகணும்னு இருக்கு. நாம் என்ன செய்ய முடியும்?” சுரத்தையின்றி ஒலித்த பதிலில் வலிக்கான சுவடு துளியும் இல்லை. மாறாக எல்லாம் முடிந்துவிட்டது… நம் கை மீறி சென்றுவிட்டது என்ற தொனியே… நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து வலியை மட்டுமே பதிலாய் கிடைக்கப்பெற்று பழுத்துப் போன உள்ளம் அழுது கூப்பாடு போடுமா என்ன?
“அவர் எழுந்து நடப்பாருனு தான் வீல்சேர் கூட வாடகைக்கு எடுத்தேன் ஆன்ட்டி. இல்லனா புதுசாவே வாங்க முடியாதா என்ன? எனக்கு தோணுது அவர் சரியாகிடுவாருனு…” தனக்குத் தானே சொல்லிக்கொண்டாளா இல்லை சிவகாமிக்கு ஆறுதல் சொன்னாளா என்ற சந்தேகம் ஒன்று தொங்கி நிற்க, சிவகாமியினுள் நம்பிக்கை விதையை விதைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது.
“நடக்குறது நடக்கட்டும். நீ இவ்வளவு செய்ததே அதிகம். ஏதோ செய்யணும்னு ஆசைப்பட்டு உன்னை வருத்திகிட்டு முயற்சி எடுத்து பார்த்த… எதுவும் நடக்கல… இதற்கு மேல அவன் தலையெழுத்து எப்படி இருக்கோ அப்படியே நடக்கட்டும். இனி இன்பன் கல்யாணத்தை முடிச்சிட்டா நான் இதயனை பார்த்துகிட்டு என் காலத்தை ஓட்டிடுவேன்…”
அவர் அழுதால் கூட நல்லது என்று தோன்றுமளவுக்கு விரக்தியுடன் பேசியவரை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்றறியாது இனியாவும் வாயை மூடிக்கொண்டாள்.
“நீ கிளம்பு இனியா. நான் பார்த்துக்கறேன்.” இன்பனும் அவளை தொந்தரவு செய்ய விரும்பாது தன்மையாய் பேச, அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி இனியா எழ, இதயன் அவளை நோக்கி குறுநகை சிந்திக் கொண்டிருந்தான்.
‘என்னடா இந்த சிடுமூஞ்சு சம்பந்தமில்லாமல் இப்போ சிரிக்குது?’ இந்த துயரத்திலும் அவன் முறுவல் உதிர்ப்பதை வியப்புடன் ஏறிட்டு மனதில் செல்லமாய் கேலி பேசியவள் சிறிய தலையசைப்புடன் அங்கிருந்து விடைபெற்றாள்.
அஜயின் பதிலில் சுணங்கி இருந்த இனியாவின் மனது இதயனின் சன்னச் சிரிப்பில் மீண்டு துள்ளலுடன் உயிர்த்தெழுந்தது…
*^*^*