தன்னுடனேயே வளர்ந்த ஒருத்தி இந்த உலகிலேயே இல்லை என்பதை ஏற்று, செந்தாமரைக்கு நாட்கள் எப்படி வேகமாக விரைய முடியும்? முன்பு ஒரு சூழலில் சிக்கி மீண்டதிலிருந்தே அவளால் அத்தனை எளிதாக மீள முடியாமல் தவித்திருக்க, இப்பொழுது இத்தனை பெரிய துயரம்? மீள முடியும் என்றே தோன்றவில்லை. அந்தளவில் உடைந்து போயிருந்தாள்.
அதிலும், உயிர்ப்பிச்சை கேட்பது போல, ‘வேறு மருத்துவமனை செல்லலாம்’, என்று தன்னுடைய இறுதி நாளில் அழுது கரைந்த தமக்கையின் முகம் நினைவில் வரும்போதெல்லாம் தனது கையறு நிலையை எண்ணி எண்ணி அழுதாள்.
‘அக்கா தன்னிடம் தனிமையில், அவளது சந்தேகங்களை முன்பே சொல்லி இருக்கக் கூடாதா? நான் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பேனே’ என எண்ணிக் கலங்காத பொழுதில்லை.
ஆறுமுகமும், அம்பிகாவும் கூட மிகவும் வாடிப் போயினர். பெற்று வளர்த்த மகளைத் தூக்கி எமனுக்குத் தாரை வார்ப்பது என்றால், அது எத்தனை துயரம்? இத்தனை வருடமும் பெற்று, ஆளாக்கி விட்டது, மகளை இந்த கோலத்தில் பார்ப்பதற்குத்தானா? என்று வேதனை கொண்டவர்கள் மனதளவில் மிகவும் தளர்ந்து போயினர்.
அதிலும், அதிலிருந்து மீளவே முடியாத வேதனையில் இருப்பவர்களிடம், “உங்க பெண்ணால் தான் எங்கள் பையன் வாழ்க்கையே போச்சு” என அன்பழகியின் புகுந்த வீட்டினர் மாறி மாறி வந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்க, பெற்றவர்கள் இருவருக்கும் அத்தனை வேதனையாக இருந்தது. மகள் இறந்த துக்கத்தைக் கூட அனுசரிக்க விடாமல், குற்றவுணர்வில் அவர்களைத் தள்ளினார்கள் அந்த இரக்கமற்றவர்கள்.
இது போன்ற மனிதர்கள் ஒரு ரகம். தங்களின் குற்றங்கள் வெளிப்படாமல் இருப்பதற்காக சாமர்த்தியமாக மற்றவர்களின் மீது குறையைச் சுமத்தி குற்றவுணர்ச்சியில் தள்ளி விடுவார்கள்.
குற்றவுணர்வில் தத்தளிப்பவர்களும், பெரும்பாலும் பழியில் தான் உழன்று கொண்டிருப்பார்களே தவிர, எதிர்புற அநியாயங்களை அலசி ஆராய மாட்டார்கள்.
ஆறுமுகம் தம்பதியினரும் அதற்கு விதிவிலக்கில்லாமல், ‘நம் மகள் அத்தனை பலவீனமானவளா? இப்படி பிள்ளையைப் பெற்றுத் தரக் கூட முடியாமல் போய் விட்டாளே!’ என்று தான் நொந்தனரே தவிர, குற்றம் சுமத்துபவர்களின் குறையைப் புரிந்து கொள்ளவில்லை.
அன்பழகியின் புகுந்த வீட்டினரின் பேச்சு செந்தாமரைக்கு ஆத்திரத்தைக் கிளப்ப, ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் பெற்றோர்களிடம்… அன்றைய தினம், அக்காவுடன் தான் பேசியதை எல்லாம் சமயம் கிடைத்தபொழுது கூறினாள். ஆனால், அப்பொழுதும் அவளது பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுத்தனர்.
[the_ad id=”6605″]
“கண்டதையும் உளரக்கூடாது தாமரை. அவங்க வசதி வாய்ப்பு தெரியும் தானே? என்ன பேச்சு இது?” என்று ஆறுமுகம் மகளின் பேச்சைக் கண்டித்தார்.
“என்ன தாமரை நீ… நல்லவேளை அவங்க முன்னாடி எதுவும் உளறி வைக்கலை. நீ சொல்லற மாதிரி இருந்திருந்தா அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அன்பு இறந்ததுக்கு, அத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியிருப்பங்களா? அன்னைக்கு எத்தனை கலாட்டா? அதுவும் அந்த டாக்டர் பொம்பளையை சொந்தம்ன்னு கூட பார்க்காம எவ்வளவு திட்டிட்டாங்க” என்று அன்னை அம்பிகாவும் வெள்ளந்தியாய் ஆதங்கப்பட்டார்.
“அக்கா தான் விவரம் இல்லாம சொன்னா, நல்லா படிச்ச புள்ள நீயும் அவ சொன்னதை அப்படியே நம்பிடுவியா?” என்று ஆறுமுகம் மூத்த மகளை வேறு குறையாக சொல்ல,
பெற்றவர்கள் இருவரும் நம்ப மறுத்த வேதனையில், “ஏன்ப்பா அக்கா அவளுக்கு மனசுல பட்டது தானே சொன்னா?” என்று செந்தாமரை அழுதபடியே கேட்டாள்.
மகள் அழுததும் அவர்களுக்கும் வருத்தமாக இருந்தது. மகள் புரியாமல் பேசுகிறாள், கண்டதையும் குழப்பிக் கொள்கிறாள் என்று தான் நினைத்தனர். ஏனென்றால் அந்த காலத்திலேயே இரண்டு பெண் குழந்தைகள் என்பதை ஓரளவு பலரும் ஏற்றுக்கொண்டு விட்டனர். ஏன் இவர்களின் வீட்டில் கூட, இரண்டும் பெண்கள் தானே? அப்படியிருக்க இந்த காலத்தில் போய், பெண் குழந்தைகளை அழிப்பார்களா என்ன? என்பது அவர்களது எண்ணம். அதனால் இளையவளுக்குப் புரிய வைக்கும் எண்ணத்துடன், “அவளுக்கு அவ்வளவு விவரம் இல்லை டா. நாம எம்புட்டு ஜாக்கிரதை சொல்லியிருப்போம். சாப்பாடு விஷயத்துல உங்க அக்கா மோசம் தானே? ஏன் அது உனக்குத் தெரியாதா? எல்லாம் அதுனால வந்த வினை” என்று புலம்பலாக கூறினார் அம்பிகா.
“இல்லைம்மா அக்கா இப்பவெல்லாம் நல்லா தான் சாப்பிடறதா சொன்னா” என மீண்டும் அக்கா கூறியதைச் சொன்னாள்.
“சாப்பிட்டிருந்தா, ஒரு கருவைக் கலைக்கக் கூடவா சத்து இல்லாம செத்து போயிருப்பா?” என்று அதற்கும் எதிர்க் கேள்வி கேட்டார் ஆறுமுகம்.
“இது முதல் தடவை இல்லையேப்பா, மூணு முறை கருவை கலைச்சு மட்டும் தானே விட்டிருக்காங்க… அவ உடம்புல எவ்வளவு சத்தை அதிகரிச்சாலும், அவளுக்கு இது கஷ்டம் தானே?”
“ஒவ்வொரு முறையும் குழந்தை வளர்ச்சி சரி இல்லை தானே தாமரை. அவங்களும் வேற என்ன செஞ்சிருக்க முடியும்?” எனத் தந்தை கேட்க,
“ஆமா தாமரை, நம்ம உடம்ப தேத்தி விடலாமான்னு அவளை இங்க கூப்பிட்டா கூட, அவ வந்ததில்லை தானே மா” என்று அன்னை அம்பிகாவும் கூறினார்.
“நீங்க புரிஞ்சு தான் பேசறீங்களான்னு எனக்குப் புரியலை. இங்க வரது அவளோட தனிப்பட்ட முடிவு இல்லையே! இங்க வரதுக்கு அவங்க வீட்டுல மறுப்பு சொல்லியிருந்தா…”
உண்மையில் நடந்திருந்ததும் அதுவே! பிறந்த வீட்டில் அதிகம் சீராட அன்பழகியின் புகுந்த வீட்டினர் விடவே மாட்டார்கள். பிறகு அங்கேயே தான் ஓட்டுதல் அதிகம் இருக்கும் என்பது அவர்களது எண்ணம்.
இந்த கள்ளம் எல்லாம் புரியாத அம்பிகா, “அதெல்லாம் அவங்க மாமியாரே போன்னு தான் சொல்லுவாங்க. இவ வரணுமே! வந்திருந்தா உடம்பை தேத்தி அனுப்பி விட்டிருப்பேனே… இப்படி ஆக விட்டிருக்க மாட்டேனே” என மீண்டும் புலம்பினார். கூடவே, “பாவி மக, இப்படி உடம்பை கூட சரியா கவனிக்காம அல்பாயுசுல போயிட்டாளே!” என்று சொல்லி அழுதார்.
‘வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் இவர்களின் அறியாமை மாறவே போவதில்லை’ என்று எண்ணியவளுக்கு அதற்கு மேல் அவர்களுடன் வாதாட விருப்பமோ, தெம்போ இல்லை. இதற்கும் ஆறுமுகம் புலம்புவதைப் போலச் சுந்தரேசன் வீட்டினர் வசதியானவர்கள் தான் என்றாலும், இவர்களது வசதியும் குறைவில்லை. ஆனால், அதெல்லாம் தந்தைக்கு மூளையில் எட்டினால் தானே, மேற்கொண்டு பேசுவதற்கு.
[the_ad id=”6605″]
இவர்களது வசதியைப் பற்றி யோசித்தவளுக்கு இப்பொழுது இன்னொன்றும் தோன்றியது. ஆண் பிள்ளைகளுக்கு அதீத முக்கியத்துவம் தருபவர்கள், இரண்டு பெண்கள் இருக்கும் வீட்டில் பெண்ணெடுத்ததே சொத்திற்காக தானோ? என்ற சந்தேகம் உதித்தது.
அதோடு இந்த துக்க சூழலிலும் அவர்கள் திரும்பத் திரும்ப வந்து, அன்பழகியை குறை கூறுவதைப் பார்த்தால்… நஷ்ட ஈடு அது, இதென்று இழுத்து வைப்பார்களோ என்ற சந்தேகமும் வந்தது.
இந்த சூழ்ச்சியிலிருந்து அறியாமையுடன் இருக்கும் பெற்றோர்களை நாம் மட்டும் எப்படிக் காப்பாற்றுவது என்னும் புதுக்கவலை அவளை அரிக்கத் தொடங்கியது. இனி சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
‘எதையுமே புரிந்து கொள்ள மறுக்கும் பெற்றோரை வைத்துக் கொண்டு எப்படி கவனமாக இருப்பது?’ என்று மனமும் தளரத்தான் செய்தது. ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று அவளை அவளே தேற்றிக் கொண்டாள்.
*** மதன் தனது தவறை உணர்ந்தபோதும், இங்கு தங்களை இந்த நிலைக்குத் தள்ளியிருப்பவர்களின் மீது அவன் கொண்ட கோபம் துளியும் குறையவில்லை. ‘நாங்கள் என்னவோ செய்து கொள்கிறோம்! தவறென்றால் தட்டிக் கேட்க அரசாங்கம் இருக்கிறது. இவர்கள் யார் எங்களைத் தண்டிக்க? இவர்களுக்கு யார் அந்த உரிமையைத் தந்தது?’ என்னும் ஆத்திரம் தான் அவனது மனதிற்குள் நெருப்பாய் தகித்ததேயன்றி, அவனால் வேறு விதமாக யோசிக்க முடியவில்லை.
‘இவர்கள் செய்வது அராஜகம்’ என்று மனதிற்குள் கனன்றவனுக்கு, தாங்கள் செய்ததும் அதுவே தான் என்று இன்னமும் புரியவில்லை.
அதிலும், இவனுக்கு முன்பு தப்பிச்செல்ல முயன்ற ரமேஷ்… அவனின் நிலை… அத்தனை நாய்களை விட்டு அவனைக் கடிக்க வைத்து, அவனது உயிரையே பறிக்கப் பார்த்தது… எல்லாம் நினைக்க நினைக்க இவர்கள் மீது வெறுப்பே மேலோங்கியது.
ஆனால், மதன் நினைப்பது போல, அவர்கள் அத்தனை கொடூரமானவர்கள் இல்லை. நாய்கள் காவலுக்கு இருக்கும் தான். முதலில் வெளியே வருபவர்களைப் பார்த்து அது குலைக்கும். அப்பொழுதே வெளியே வந்தவர்கள் சுதாரித்து உள்ளே சென்றிட வேண்டும் என்பதுதான் அவர்களது முதல்கட்ட ஏற்பாடு.
ஒருவேளை அப்படியும் உள்ளே செல்லவில்லையா? சர்வலைன்ஸ் கேமிரா மூலம் வெளியே வந்தவனை கவனித்து, கண்காணிப்பாளர்கள் கீழே வந்து வெளியேறியவனை மிரட்டி, இனி வெளியே வர எண்ணமே வராதபடி ஒரு காட்டுக் காட்டி உள்ளே விடவேண்டும் என்பது அடுத்தகட்ட ஏற்பாடு. இதுபோன்ற தெளிவான ஏற்பாடுகள் கொண்டு தான் அந்த இடம் இயங்குகிறது.
அதற்கு தோதாகத் தினமும் இருவர் சர்வலைன்ஸ் கேமிரா மூலம் மற்ற இடங்களோடு சேர்த்து, முன் வராண்டாவையும் கண்காணித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இதுவரை இங்கிருக்கும் கெடுபிடிகள் அறிந்த யாருமே அங்கிருந்து தப்பிக்க முயன்றதில்லை. ரமேஷ் தான் முயற்சி செய்த முதல் ஆள். அவன் ஒரு திருடன் என்பதால் அந்த முயற்சி வராண்டா வரை அவனைக் கொண்டு வந்து சேர்ந்திருந்தது.
ஆனால், அந்த நேரம் பார்த்து, காம்பௌண்ட் சுவரின் வெளியே ஏதோ வித்தியாசமாக இருப்பது போல சர்வலைன்ஸ் கேமிராவில் தோன்றியதால், அதைக் கண்காணித்து விட்டு இதில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார்கள் கண்காணிப்பாளர்கள். பூட்டியிருக்கும் கதவைத் தாண்டி, நம் மேல் இருக்கும் பயத்தையும் தாண்டி யார் வரப்போகிறார்கள் என்று எண்ணியிருந்ததால் வந்த அலட்சியம் அவர்களுக்கு.
ஆனால் ரமேஷ் வெளியேற முயற்சித்திருந்தான். முதலில் நாய்கள் குலைக்க, அவனோ அதை அலட்சியம் செய்து முன்னேறி… போதாக்குறைக்கு அந்த நாய்களை வேறு கத்தியைக் காட்டி மிரட்டி எனச் சீண்டி விட்டிருந்தான்.
அதனால் தான் அந்த ரமேஷாகப்பட்டவனுக்கு அந்தளவு மோசமான நிலை ஏற்பட்டிருந்தது. என்னதான் கொடுஞ்செயல்கள் செய்திருந்தாலும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒரு ஆஜானுபாகுவானவன் பதறியிருக்க, ‘அவனால் எத்தனை பிஞ்சு குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்கள்’ என்னும் எண்ணம் தோன்றியதால், மற்றொருவன் ‘சாகட்டுமே! அதனால் என்ன?’ என்று அலட்சியம் காட்டியிருந்தான்.
இது எதுவும் அறியாத, அறியும் வாய்ப்பில்லாத மதனுக்கு தங்கள் நிலையை எண்ணி அவர்கள் மீது கோபம் வந்தது. ‘இவர்கள் யார் இப்படிச் செய்ய?’ என்று ஆத்திரம் கிளர்ந்தது. ஆனால், இந்தநிலையும் அதிகம் நீடிக்கவில்லை. அதாவது இந்த உதாசீன நிலை.
‘இதில் என்ன தவறு?’ என்று இத்தனை காலமாகக் கருதிய விஷயத்தையே, சமீபத்தில் தான் ‘தான் செய்தது தவறு’ என்னும் மனநிலைக்கு வந்திருந்தான்.
‘இந்த தவறினால் தான் சிறைப்பட்டிருக்கிறேனோ?’ என்னும் சந்தேகத்தில் தான் உடனிருந்தவர்களிடம் விஷயத்தைக் கறக்கத் தொடங்கினான். ஆரம்பத்தில் கௌதமிடம் கேட்டபொழுதும், அதே எண்ணம் தான்… ‘சரி தவறு தான், அதற்கு இப்படி செய்வார்களா?’ என்று ஆத்திரமாகத் தோன்றியது.
ஆனால், மறந்தும் தான் கண்டறிந்த விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஏன் கௌதமிடம் கூட வாயைத் திறக்கவில்லை. மேற்கொண்டு உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணமும், வீணாக அனைவருக்கும் விஷயம் பரவ வேண்டாம் என்னும் எண்ணமுமே அதற்கு முக்கிய காரணம்.
[the_ad id=”6605″]
மற்றவர்களிடம் எப்படி விஷயத்தை வாங்கி, நமது சந்தேகத்தை உறுதிப் படுத்த என மதன் யோசிக்கவேண்டிய அவசியமே இல்லாமல்… கௌதமிடம் முன்கதை குறித்துக் கிளறி விட்டதாலோ என்னவோ… அதன்பிறகு அங்கிருப்பவர்களின் பேச்சு தானாக முன்கதை பக்கம் திரும்பியிருந்தது. முன்கதை என்பதை விட அவற்றையெல்லாம் கருப்பு பக்க கதைகள் என்று சொல்ல வேண்டுமோ?
ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால், தங்களது ரகசியங்களை மறைப்பதில் யாருக்கும் தயக்கமே இல்லை. அதோடு அவர்களே அதைத் தவறென்று நினைத்தால் தானே சொல்லத் தயங்குவதற்கு? தங்கு தடையின்றி ஒவ்வொருவரின் பாவக்கணக்கும், அனைவரும் கூட்டமாகப் பேசிக்கொண்டிருக்கும் போதே வந்து விழுந்தது.
இத்தனை நாட்களும், ‘இது தவறு தான்’ என்று ஓரளவு மதன் ஒப்புக் கொண்டாலும், ‘இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? இதற்கு இத்தனை கடுமையான தண்டனை எல்லாம் அவசியமா?’ என்று அலட்சியமாக எண்ணிக் கொண்டிருந்தவனின் எண்ணப்போக்கு மற்றவர்களின் பாவச் செயல்களில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது.
‘இந்தளவு கொடுமைகளைக் கூடச் செய்ய முடியுமா?’ என்று பிறரின் கதைகளைக் கேட்டு அதிர்ந்தான்.
அதிர்ந்தவனை பார்த்து, அவனது மனமே கேலி செய்து சிரிப்பது போல இருந்தது. ‘ஒரு பெண்ணை சுயநலத்திற்காகப் பயன்படுத்தி தற்கொலை வரை கொண்டு சென்றதை… நீ பாவமாய் நினைக்கவில்லை. அதுவே, ஒருவேளை உன் வீட்டுப் பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால் கூட நீ பாவமாய் எண்ணி இருக்க மாட்டாயோ, என்னவோ?
‘இதில் என்ன தவறு’ என்பது போன்ற மனநிலையில், உன் தவறை உணராமல்… நீ தொடர்ந்து வலம் வந்திருந்தால்… ஒருவேளை இவர்கள் செய்தது போன்ற பாவச்செயல்களையும்… வெகு இயல்பாக, எந்தவித குற்றவுணர்வுமின்றி வெகு விரைவில் செய்திருப்பாய்’ என்று அவனின் மனசாட்சி அவனுக்கு நிதர்சனத்தை உணர்த்தி நகைத்தது.
அதை மனம் உரைக்கும்போதே, ‘ஐயோ! நான் அவ்வளவு மோசமானவனாக மாறி இருப்பேனா? காம வெறியன், பெண் பித்தன், காமுகன் என்ற அத்தனை அடைமொழிகளையும் உடையவனாகி, பல பெண்களை நாசம் செய்து சுகம் கண்டு கொண்டிருப்பேனோ? என் சில நிமிட சுகத்திற்கு ஒரு பெண்ணின் உயிரையே பணயம் வைக்குமளவுkku செல்வேனா?’ என்று மதன் தன் மனதிற்குள் அலறினான்.
‘ஒரு தவறை செய்யத்துணியும் போதே, உன்னால் உன்னைத் தடுக்க முடியவில்லை… ‘இதெல்லாம் தவறா?’ என்று அலட்சியமாக வேறு எண்ண முடிகிறதென்றால், வருங்காலத்தில் அந்த தவறுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தானே போகும்?’ நிதர்சனத்தை மனம் எடுத்துரைக்க அவனுக்குத் தான் செய்த தவறு மிக மிகப் பெரியதோ என்னும் எண்ணம் வந்து வதைத்தது.
அதிலும் சுந்தரேசன் என்பவன் அத்தனை சாதாரணமாகக் கூறுகிறான். “பெண் பிள்ளையை மட்டுமே சுமக்கும் ஜடத்தைக் கட்டி வந்து எனது வாழ்வையே வீணடித்து விட்டேன். ஏதோ சொத்தும், அழகும் இருக்கிறதென்று பார்த்தால்… ச*** கருவுறும் போதெல்லாம் பெண் பிள்ளையையே சுமந்து வந்து தொலைக்கிறது. நாங்களும் ஒவ்வொரு முறையும் கலைத்துக் கலைத்து விட… மீண்டும் மீண்டும் அதன் வயிற்றில் பெண் பிள்ளை மட்டும் தான் தங்குகிறது. ச்சே… ச்சே… என்ன ஜென்மமோ? எனக்கென்று வந்து வாய்த்ததே! எப்படியோ மூன்றாவது முறை கருவைக் கலைக்கும் போது அதுவும் சேர்ந்து போய்ச் சேர்ந்து விட்டது. அந்த மட்டும் பரவாயில்லை. நிம்மதி…” என இம்மியளவு கூட மனசாட்சி இல்லாமல் அவன் பேசியதைக் கேட்க, மதனிற்கு அருவருப்பாக இருந்தது.
அன்பழகியின் மரணத்தைக் கூட நிம்மதியெனக் கருதும், பாவத்தின் திருவுரு சுந்தரேசன் மீது அங்கிருக்கும் பலருக்கும் அருவருப்பு வந்ததில் ஆச்சரியமில்லை. மனசாட்சி என்பதை ஏதோ ஒரு மூலையில் இன்னமும் வைத்திருப்பவர்கள் போலும்…