கண்களில் அத்தனை ஆசையோடு, “எனக்காகவா?” என்று கேட்ட பூங்குவியலின் நினைவு, வெற்றிச்செல்வனை நொடிக்கொரு முறை இம்சை செய்து கொண்டே இருந்தது.
‘மாஹி என்னை இத்தனை தூரம் உன்னால மாத்த முடியுமா?’ என்று எண்ணியவன், உஃப் என இழுத்துப்பிடித்த மூச்சை வெளியிட்டவாறே… இருக்கையில் தளர்வாகச் சாய்ந்து கண் மூடி அமர்ந்து கொண்டான்.
காதல் வயப்படுவான் என்றெல்லாம் அவன் நினைத்ததே இல்லை. ஏன் உடனிருப்பவர்கள் கூட அவனை அப்படி நினைக்க மாட்டார்கள். அப்படி ஒரு சாமியார்.
அவன் தந்தை பரமேஸ்வரன் பஞ்சாப் ராணுவ முகாமில் (Bathinda Cantomnent) வேலை பார்த்ததால், பிறந்தது, வளர்ந்ததெல்லாம் அங்கேயே தான். இவர்கள் வசிக்கும் குவாட்டர்ஸில் பல மாநிலத்தவர்களும் இருப்பதால், ஹிந்தி தான் அதிகம் பேசுவார்கள்.
இவன் வயதினர் இவர்கள் வசிக்கும் குவாட்டர்ஸில் குறைவு. அதனால் இவனை விட ஐந்து இளையவனான சகோதரன் முத்துக்குமாரும், அவன் வயது பிள்ளைகளுமே இவனுடைய தோழமைகள். சற்றே பெரியவன் என்பதாலோ என்னவோ பொறுப்புணர்வு தானாகவே ஒட்டிக்கொண்டது. இயல்பிலேயே கோபக்காரன் வேறு. அதனால் காதல் என்பதெல்லாம் இவனுக்குப் பல மைல் தூரம்.
அதை வைத்து தான் இவனை அனைவரும் கேலியே செய்வார்கள். மற்ற அனைவரும் ஏழாவது, எட்டாவது என்று படிக்கும்போதே கல்லூரி செல்லும் பருவம் அவனுக்கு.
‘வெற்றி காலேஜ் போறான்!’ என்ற பிரமிப்போடு மற்றவர்கள் இருக்க, கெத்தாகக் கல்லூரிக்குக் கிளம்பி சென்றவன், ரேக்கிங் செய்ததில் நொந்து நூலாகி வந்திருந்தான்.
“என்ன வெற்றி ரேக்கிங் எல்லாம் உனக்கொரு விஷயமா?” என்று ஹிந்தியில் கேட்டது சின்ன வாண்டு சிமிர்தி. அவள் முத்துவுடன் தான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
“ம்ப்ச்… அசால்ட் காட்டினேன் தான்…” என்று சொன்னபோது வெற்றிச்செல்வனின் முகம் போன போக்கைப் பார்த்து அவர்கள் அனைவருக்கும் சிரிப்பாக இருந்தது.
“ஏன் வெற்றி என்ன செய்ய சொன்னாங்க?” இது முத்துக்குமார்.
“ஒரு பாட்டு தான்…” என இழுத்தான் நாயகன்.
“வாவ் நீ தான் நல்லா பாடுவியே…” என்று ஆர்ப்பரித்தது இன்னொரு வாண்டு. தேர்வுத்தாள் எளிதாக வந்தது போலச் சந்தோசம் அவளுக்கு.
“ம்ப்ச்… பாடிட்டேன் பாடிட்டேன்…” என்ற வெற்றியின் சலிப்பைப் பார்த்து, “அப்பறம் என்ன?” என்று ஆர்வம் மேலோங்கிய குரலில் கோரஸாக அடுத்த கேள்வி வந்திருந்தது.
[the_ad id=”6605″]
“ஒன்னும் இல்லை விடுங்க. ஹோம் ஒர்க் எழுதுங்க நேரம் ஆச்சு…” எனக் கூட்டத்தைக் களைத்துவிட்டான்.
இப்பொழுது எதுவோ ஸ்ட்ரைக் ஆக, “என்ன பாட்டு வெற்றி?” எனச் சரியாக பாயிண்டை பிடித்தாள் சிமிர்தி.
அதில் ஜெர்க் ஆனவனோ சமாளிப்பாக, “ஏதோ பாட்டு… விடேன்” என மழுப்ப, அவனது மழுப்பலில் அனைவரும் சுதாரித்துக் கொண்டார்கள். தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்னும் பிடிவாதத்தில், சொல்லித்தான் ஆகவேண்டும் என்று அனைவருமாகச் சேர்ந்து அடம் பிடித்தனர்.
வெற்றி கல்லூரியில் முதல் நாள் ரேக்கிங் செய்யும்போது பாடியது தான் ‘மாஹி…’ பாடல். காதல் பொங்கப் பொங்க பாட வேண்டிய பாடலை ஏனோ தானோவென்று பாடி வைக்க, சீனியர்கள் காதலோடு பாடியே ஆக வேண்டும் என்று வம்பு செய்ய… அந்த காதலை அவன் குரலில் வரவைப்பதற்குள்… அப்பப்பா… அவன் நொந்துதான் போயிருந்தான். பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகே அவனால் அந்த பாடலை கொஞ்சமே கொஞ்சம் காதல் கலந்து பாட முடிந்திருந்தது.
இளையவர்களின் நச்சரிப்பில் கல்லூரியில் நடந்ததை மேலோட்டமாக வெற்றி சொல்லி முடிக்க, அனைவருமே விழுந்து விழுந்து சிரித்திருந்தனர். ‘நீயெல்லாம் லவ் பண்ணற அளவு வொர்த்தே இல்லை வெற்றி…’, ‘நீ இப்படியே இரு, நாங்க பெரிசாகி உனக்கு லவ் பண்ணறது எப்படின்னு டெமோ காட்டறோம்’, ‘நீ காலத்துக்கும் சிங்கள் தான்…’ என ஆளாளுக்கு அவனை வெறுப்பேற்றினர்.
எல்லாவற்றிற்கும் மகுடம் வைப்பது போல, “உனக்கெல்லாம் மாஹின்னு கூப்பிட ஒரு ஆளு… ரொம்ப ரொம்ப கஷ்டம் வெற்றி” என்று சிமிர்தி விழுந்து விழுந்து சிரித்தாள்.
அன்று அனைவருமே அவளை ஆதரிக்க, “அதெல்லாம் ஒரு பொண்ணை மாஹின்னு உருகி உருகி கூப்பிட்டு லவ் பண்ணறேன் பாருங்க” என்று சிறுவர்களுடன் எட்டிக்குப் போட்டியாக பேசி, வாய்ச்சவடாலாய் சவால் விட்டவனுக்கு, அந்தோ பரிதாபம் படிப்பில் சென்ற ஆர்வம் பெண்கள் மீது செல்லவே இல்லை. அவனுக்கென்று காதலி கிடைக்கவில்லை என்பதை விட, காதலிப்போம் என்று இம்மி கூட அவன் முயற்சிக்கவில்லை. இதற்கும் ஒரு பெண் இவன்மீது பைத்தியமாக பின்னாலேயே சுற்றியும் பார்த்தாள். பலன் பூஜ்ஜியம் தான்… அவளுக்குப் பாறையில் முட்டிக்கொண்ட நிலை தான் என்பதால் இவனை முறைத்துக்கொண்டே விலகி விட்டாள்.
சிமிர்தி செய்த கிண்டலும், அவளிடம் போட்ட சவாலும் இன்றும் வெற்றிக்கு நினைவில் இருக்கிறது. அந்த கூட்டத்திலே அதிக விளையாட்டுத்தனம் சிமிர்திக்கு தான். அதேசமயம் அவளுக்கு வரும் கோபத்தையும் அத்தனை எளிதில் சமாதானம் செய்ய முடியாது. அப்பொழுதெல்லாம் வெற்றியின் ஆயுதம் இந்த ‘மாஹி…’ பாடல் தான். இதை பாடினாலே கோபம் மறந்து சிரித்து விடுவாள்.
‘உனக்காவது மாஹியாவது’ எனக் கேலி செய்து விழுந்து விழுந்து சிரிப்பாள்.
ஏன் கடைசியாகப் பேசியபோது கூட இதைப் பாடித்தானே சமாதானம் செய்திருந்தான்.
இளையவர்கள் வட்டம் சொன்னதுபோல வெற்றிக்குக் காதலே செட்டாகவில்லை. திருமண வயது எட்டும் வரையிலும்… (இவன் முயற்சித்தால் தானே!)
எங்கே இப்படியே விரைப்பாகவே, ஒற்றையாகவே இருந்து விடுவானோ என்று அவன் அன்னை மஞ்சுளாவிற்குத் தான் பயங்கர கவலை. கணவரிடம் நச்சரித்துக் கொண்டே இருப்பாள். வெகு சீக்கிரமே பெண் பார்க்கும் படலத்தை வேறு தொடங்கியிருக்க, அனைத்திற்கும் வெற்றியிடமிருந்து மறுப்பு மட்டுமே பதில். உண்ணாவிரத போராட்டம் கூட நடத்தித் தோற்றிருந்தார் மஞ்சுளா. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை மகன்.
திருமண விஷயத்தில் தலையிடாத தந்தை கூட, திடீரென்று செந்தாமரையைப் பிடித்துப் போக அவளை மணந்து கொள்ளுமாறு கேட்டிருந்தார். அப்பொழுதுமே மறுப்பு மட்டுமே அவனது பதில். அதன்பிறகு அவளை நேரில் பார்க்கும் வரை, அவளை மறந்தே போயிருந்தான் என்று கூட சொல்லலாம்.
‘எப்படி இருந்த தன்னை இப்படி மாற்றி விட்டாள்?’ என்று செந்தாமரையை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டான்.
காலையில் அந்தியூர் சென்றுவிட்டதால், சற்று வேலைகள் கிடப்பிலிருந்தது. அனைத்தையும் முடித்து வைத்தான்.
இந்த மாரியப்பன் வேறு, வெற்றியை இங்கிருந்து விரட்ட முடியாத ஆத்திரத்தில் மறைமுகமாக சில தொல்லைகள் தரத் தொடங்கியிருக்கிறான். அதை எப்படிச் சரி கட்டுவது என்று யோசித்தவன், வீரமணிக்கு சில வேலைகள் தந்தான்.
‘அவன் செஞ்சா நாமளும் செஞ்சாகணுமா?’ என்றிருந்தது வீரமணிக்கு. ஆனால் கேள்வி கேட்கும் துணிவில்லையே! யோசனையாகவே நின்றான்.
அன்று வெற்றிச்செல்வனை அடிக்க வந்த தடியன்களை நன்கு கவனித்து அனுப்பியபோதே இப்படியெல்லாம் ஏதாவது நடக்கும் என்று யோசித்திருந்தது தான். அதற்கு பதிலடியாக மாரியப்பன் வெற்றியின் தொழிலில் குளறு செய்யப் பார்க்க, இப்பொழுது வெற்றி அதை நேர் செய்வதோடு நிறுத்தாமல், அவனுக்கிருக்கும் தொழிலும் குளறு நடக்க ஏற்பாடுகளை ஏவியிருக்கிறான்.
மாரியப்பனின் தவறுகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தந்த பரமேஸ்வரன் ஐயாவை, விபத்தில் இறந்ததாக கூறினாலும், இன்னமும் அனைவருக்கும் மாரியப்பன் மீது சந்தேகம் இருக்கிறது தான். அவனிடம் போய் இப்படி வெற்றி ஐயா வம்பிற்கு நிற்க வேண்டுமா என்பது வீரமணியின் ஐயம்.
அதிலும் சென்ற முறை மாரியப்பன் அடியாட்களை அனுப்பியபோது, வெற்றிச்செல்வன் பதிலுக்கு எதுவும் செய்யாமல் அமைதியாகச் சென்ற போதே, வீரமணி எதையோ பெரிதாக எதிர்பார்த்துத் தான் இருந்தான். அதற்குத் தக்க இந்தமுறை வெற்றிச்செல்வன் மாரியப்பனுக்குப் பலத்த அடி கிடைக்குமாறு ஏற்பாடு செய்திருப்பது சற்றே கலக்கத்தையே தந்தது.
[the_ad id=”6605″]
யோசனையோடே நின்றிருந்தவனைப் பார்த்து, “என்ன வீரமணி என்ன யோசனை?”
“இல்லை ஐயா, அவன் நம்ம மில்லுல பிரச்சனையை தூண்டி விட்டான். ஆரம்பத்திலேயே பார்த்துட்டீங்க. நாமளும் பிரச்னையை சரி செஞ்சுடலாம். ஆனா நம்ம இப்ப அவன் வெச்சிருக்க ட்ராவல்ஸ்’ல பிரச்சனை பண்ணறது…?”
“நாமளா எந்த பிரச்சனையையும் கிளப்பி விடறது இல்லையே வீரா! அங்க நடக்கிறதை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்போறோம். அவ்வளவு தான்” என்றான் வெகு இயல்பாக. டிராவல்ஸ் என்ற பெயரில், மாரியப்பனின் தொழிலில் லாரிகள் மூலம் விபச்சாரம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டுபிடித்திருந்த வெற்றி மீடியா வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறான்.
“இதோட பின் விளைவுகள்…”
“நாம தான் செய்யறோம்ன்னு தெரியாம தான நடக்க போகுது… நீங்க ஏன் எல்லா விஷயத்திற்கும் பயப்படறீங்க?”
“கல்யாண சமயத்துல வீணா எதுக்குங்க ஐயா? அதோட, இப்போதான் நம்ம மில்லுல பிரச்சனை செய்திருக்கான். உடனே செஞ்சா நாம தான் செஞ்சோம்ன்னு கண்டு பிடிச்சிட மாட்டானா?”
“வீரா… இங்க நடக்கிற பிரச்சனையை கண்டுபிடிச்சது நாம… அது அவனுக்கு போனா தானே நாமே பதிலடி தரோம்ன்னு நினைப்பான். அவன் பார்வைக்குப் பிரச்சனை வழக்கம் போல நடக்க தான் போகுது. நாம கண்டுபிடிச்சதை வெளியில விட போறதில்லை”
“என்ன சொல்லறீங்க ஐயா?”
“முதல் தர ரக அரிசி தர வேண்டிய இடங்களுக்கு, இரண்டாம் தர ரக அரிசி மூட்டை பாதி போற மாதிரி… இங்க இருக்க வேலையாளுங்களை அவன் கைக்குள்ள போட்டு வேலை வாங்கறது தானே இப்ப பிரச்சனை?”
“ஆமாங்கய்யா…”
“அந்த ஆளுங்க மாத்தி வைக்கிற இரண்டாம் தர ரக அரிசி மூட்டைகள், முதல் தர ரக அரிசி மூட்டைகளாவே இருந்தா…?”
“என்னய்யா சொல்லறீங்க, அவங்க மேல நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்க போறதில்லையா?”
மில்லிமீட்டர் அளவில் சிரித்தவன், இல்லை என்பதாகத் தலையசைத்தான்.
“புரியலை ஐயா…”
“தப்பு நடந்துட்டதா அவங்க நம்பணும்… ஆனா, தப்பு நடக்கக் கூடாது…”
“இது எதுக்குங்க ஐயா?” வீரமணிக்கு பயங்கர குழப்பம்.
“எல்லாத்துக்கும் விளக்கம் கேட்பியா வீரா… அந்த மாரியப்பன் மாட்டி, அவன் வேற யாரையாவது சந்தேக படற மாதிரி நம்ப வெச்சு… அதுக்கு பிறகு இங்க மில்லுல நடக்கிற பிரச்சனையை நம்ம கண்டுபிடிச்ச மாதிரி வெச்சுப்போம். சரி தானே? உன்னோட பயம் அவசியமே இல்லை. இதுக்கு மேல என்கிட்ட கேள்வி கேட்காம கிளம்பு… சொன்ன வேலைகளைத் தொடங்கு…” என்று வீரமணியை அனுப்பி விட்டான்.
[the_ad id=”6605″]
தன்மீதிருக்கும் அக்கறையில் தான் இந்த கேள்விகள் என்று புரியாமல் இல்லை. செந்தாமரையின் நினைவில் நல்ல மனநிலையில் இருப்பதால் பதிலும் தந்திருந்தான். ஆனால், எத்தனை கேள்விகள்? எத்தனை விசாரணைகள்? வீரமணியை நினைத்துச் சிரிப்பாகக் கூட இருந்தது.
தாசில்தாரின் உதவியையும், இன்னபிற அதிகாரிகளின் உதவியையும் வாங்கிதான் இந்த வேலையை தொடங்கியிருந்தான். சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறான். ஏனென்றால் இந்த சின்ன மீனைப் பிடிப்பதே பெரிய மீனை பிடிப்பதற்காகத்தான்.
சில பல குழப்பங்கள் இன்னும் வெற்றிச்செல்வனுக்கு தெளிவாக வேண்டியும் இருக்கிறது. அதற்கான விடையையும் தேடிக்கொண்டே தான் இருக்கிறான். அதற்காக மாரியப்பனையும், அவனுக்குப் பின்னால் பக்கபலமாக இருப்பவனையும் சும்மா விட்டு விட முடியுமா? அவர்கள் இருவர் மீதும் தான் நிறையச் சந்தேகங்கள்… என்ன சரியாக எந்த புள்ளிகளும் இன்னும் இணையவில்லை. அது மட்டும் இணைந்து உறுதியாகியிருந்தால் இந்நேரம் அவர்களுக்கு தக்க தண்டனையைத் தந்திருப்பான்.