மண்வாசம் 5 :
இரவின் மிச்சம் இருளில் தொடர, மெல்ல வானம் வண்ணம் கொண்டது.
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்த அருந்தமிழ் வாசலைக் கூட்டிப் பெருக்கி, நீர்தெளித்து, வெள்ளைக் கோலப்பொடி கொண்டு புள்ளிகளை இணைத்து தேர்க்கோலமிட்டு நிமிர, ஆறுச்சாமி அவள் கோலத்தை பார்த்தபடி நின்றிருந்தார்.
“என்னங்ப்பா அதுக்குள்ள எந்திரிச்சுட்டீங்க?” என அவர் அருகில் வர, வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவியவர்,
“இன்னைக்கு நாத்து நடவு இருக்குது தேவி. ஆளுக வர்றாங்க அதான் ஒரு எட்டு நம்ம வயல் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்” என,
“ஒருநிமிஷம் இருங்ப்பா. டீ எடுத்துட்டு வர்றேன் குடிச்சுட்டு போங்க” என உள்ளே செல்ல, அவரும் வந்து உள்ளே பிரம்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
சில நிமிடங்களில் அருந்தமிழ் தேநீரோடு வரவும் அதை வாங்கிப் பருகியவர்,
“இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கு போற தானே தேவி?” என்று கேட்க,
“இல்லைங் ப்பா. அரசி நேத்து தான் வந்திருக்கா இன்னும் ரெண்டு நாள் கழிச்சு..” என்று வார்த்தையை முழுதாய் முடித்திருக்கவில்லை,
“அவ இனி இங்கதானே இருக்கப் போறா. ஆருக்காகவும் பள்ளிக்கூடத்துல புள்ளைக பாடம் படிக்க காத்திருக்கக் கூடாது தேவி. படிப்பு தான் முக்கியம் நீ இன்னிக்கே கெளம்பு” என்றுவிட, சரியென தலையசைத்தாள்.
அருந்தமிழ் தன் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை உயிரியலில் முடித்துவிட்டு, பின் ஓராண்டு பி.எட் முடித்து டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி அதில் தேர்ச்சிபெற்று, அவர்களது ஊர் அரசுப் பள்ளியிலேயே பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றிருந்தாள்.
ஆறுச்சாமி வயலிற்குக் கிளம்பியதும் அருந்தமிழும் பள்ளிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.
சேத்துமடை ஊராட்சி…!
[the_ad id=”6605″]
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் நெடிய செழித்து வளர்ந்த மரங்கள். நூறு ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு, பாக்குத் தோப்பு, தேக்குத் தோப்பு, மட்டை ஃபாக்டரி என சொத்து மதிப்பின் எண்ணிக்கை சென்றுகொண்டிருக்க, தென்னத்தோப்பின் மையத்தில் அரண்மனை போன்றதொரு பிரமாண்டமான வீடும் அதில் அடக்கம்.
அனைத்தும் சேத்துமடை ஊராட்சித் தலைவர் கந்தசாமிக்கு சொந்தமானவை. கஞ்சி மடமடப்பு குறையாத வெண்ணிற வேட்டி சட்டையில் கம்பீரமான தோற்றத்தில் மேல் மாடியில் இருந்தபடி அனைத்தையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் கந்தசாமி.
“வணக்கமுங் ஐயா” என்று கேட்ட குரலில், அவரைக் காண ஊர்மக்கள் வெளியே காத்திருப்பது கண்டு அவர்களை சந்திக்க உட்புற படிக்கட்டுகளில் கீழே இறங்கி வந்துகொண்டிருந்தார்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
அவ்வீட்டின் பூஜையறையில் கோளறு திருப்பதிகம் சாரதாவின் தெய்வீகக் குரலில் ஒலிக்க, கந்தசாமியின் பார்வை மெல்ல தன் மனையாளைத் தழுவியது.
முகத்திற்கு மஞ்சள் தேய்த்து, நெற்றி நிறைய குங்குமமிட்டு, கூந்தலை வட்டமாய் கொண்டையிட்டு, அதைச் சுற்றி மல்லிச்சரத்தை சூடியிருந்தார் சாரதா. தெய்வீக முகம் அவருடையது. கந்தசாமி வெளியில் கிளம்பும் போது சாரதா அவர் முன் தோன்றியே ஆகவேண்டும். மனையாளின் கையால் ஒரு சொம்பு தண்ணீர் வங்கிப் பருகிவிட்டுச் செல்வதையே வழக்கமாய் வைத்திருந்தார்.
அடுத்து கந்தசாமியின் பார்வை தன் தனயனைத் தேடியது. அதிகாலையில் இருந்து தங்களது தோப்பை ஒட்டியுள்ள மட்டை மில்லிற்கு வந்த தேங்காய் லோடுகளை எல்லாம் சரிபார்த்து அனுப்பிவிட்டு, அப்போது தான் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான் அவரது தவப் புதல்வனான மாறன்.. நன்மாறன்!
பள்ளிக்குச் செல்லாது தங்களது முகத்தை பாவமாய் வைத்தபடி அவன் வழியை மறித்து நின்றிருந்தனர் அகிலன், கலையரசன் மற்றும் கவின்.
அவர்களைப் பார்த்த மாறன் பின் எதுவும் பேசாது கடந்து செல்ல,
“மாறன் அண்ணா! நில்லு ண்ணா” என அழைத்தே விட்டிருந்தனர் மூவரும்.
“ஸ்கூல்க்கு போகாம இங்க என்னங்கடா பண்ணுறீங்க?”
“பஸ்ஸ விட்டோம் ண்ணா. எங்களை கொண்டுபோய் ஸ்கூல்ல விட்டுடு ண்ணா உனக்கு புண்ணியமா போகட்டும்” என்று அவன் கையை பிடித்துக்கொள்ள, மூவரையும் ஒரு முறை முறைத்துவிட்டு வீட்டினுள் செல்லச் சென்றான் மாறன்.
“ண்ணா எங்கணா போற?” என மூவரும் குரல் கொடுத்தனர்.
“இருங்கடா ட்ரெஸ் மாத்திட்டு வரேன்”
“நீ என்ன பொண்ணு பார்க்கவா போற. பள்ளிகூடத்துல எங்களை கொண்டுபோய் விடப் போற, அதுக்கு இதுவே போதும் வா ண்ணா” என்று கலையரசன் கத்த,
“இதோடவே எப்படி டா” என மாறன் தன்னை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துக்கொண்டான்.
“அதெல்லாம் தல அஜித் குமாரு மாறி இருக்குற வா ண்ணே போவோம்” என அகிலன் சொல்ல,
“இப்போ நீ வரப் போறயா இல்ல நாங்க கிணத்துல நீச்சல் அடிக்கப் போகட்டுமா? பெரியய்யா கேட்டா நீ தான் பள்ளிக்கூடத்துக்கு போகவேண்டாம்னு சொன்னைனு சொல்லுவோம் எப்படி வசதி” என்றான் கவின்.
அவன் தலையில் தட்டிய மாறன்,
“மொளச்சு மூணு இலை விடுல, நீ எல்லாம் எனக்கு வில்லனாக பாக்குற” என்றுவிட்டு திரும்ப, மீண்டும் அவன் செல்வது கண்டு,
[the_ad id=”6605″]
“மாறன் அண்ணா” என மூவரும் கோரஸில் கத்த,
“அட ஜீப் சாவி எடுத்துட்டு வரேன் இருங்கடா” என்று இரண்டிரண்டு படிகளாய் தாவி உள்ளே வந்துகொண்டான்.
“வணக்கமுங் தம்பி” என்ற குரலில் இடப்புறம் பார்த்தான். ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கந்தசாமியை சந்திக்கக் காத்திருந்தனர்.
“வணக்கங்க. அப்பாவை பார்க்க வந்தீங்களா உள்ள வந்து உக்காருங்க” என மாறன் அழைக்க,
“இல்லைங் தம்பி நாங்க இங்கயே காத்திருக்கோம் நீங்க உள்ளார போங்க” என்றுவிட, தலையசைத்து வீட்டினுள் வந்தவன் தன் அன்னை சாரதாவைத் தேடியபடி பூஜையறைக்குள் அடியெடுத்து வைக்கச் செல்ல,
“டேய் அங்கயே நில்லு” என்ற குரலில் அப்படியே நின்றான்.
“குளிக்காம சாமி ரூம் பக்கம் வந்தே பிச்சுப் புடுவேன்” என்ற சாரதாவிடம் புன்னகைத்து,
“ம்மா ஜீப் சாவி எங்கிருக்குதுங்?” என்று கேட்டான்.
“வெச்ச இடத்துல போய் தேடு” என்றார் காட்டமாய்.
‘அது தெரிஞ்சா உங்களை ஏன் கேக்கப் போறேன்’ என நினைத்து அனைத்து இடத்திலும் தேடினான். எங்கும் கிடைக்கவில்லை. அவனை சிறிது நேரம் அலையவிட்டு பின் டீபாய் மேல் இருப்பதை எடுத்துக் கொடுத்தார் சாரதா.
“இத முன்னாடியே தரக் கூடாதாங் ம்மா” என்று கேட்ட உடனே,
“உன்ர கண்ணு என்ன பொடனியிலையா இருக்குது. முன்னால இருக்குற சாவி கூட கண்ணுக்கு தெரியலையா? எத்தனை நாளைக்கு தான் நானே எல்லாத்தையும் பாக்குறது. ஒரு மருமக வந்தா அவ உன்னைய கவனிச்சுக்கப் போறா அப்பறம் நானும் சிவனேன்னு என்ர வேலையை மட்டும் பாத்துட்டு இருப்பனல்லோ” என, அன்னை எதற்கு அடிக்கல் நாட்டுகிறார் என்பதை அறிந்து அவன் நழுவப் பார்க்க,
“மாறா! நில்லுடா” எனக் குரல் கொடுத்தவர் விரைந்து அவனருகில் வந்து,
“நானும் நம்மூருலையே கண்ணுக்கு லச்சணமா எத்தனை பொண்ணை காட்டுறேன். எவளக் கேட்டாலும் புடிக்கலைன்னு சொல்லுற. நம்மூருல இனி பொண்ணே இல்லடா” என்று புலம்ப,
“நம்மூருல இல்லைனா பக்கத்தூரு பக்கமா பாருங்க” என்றான் வெகு இயல்பாய் தோள்களை குலுக்கி.
அதில் சாரதாவிற்கு பொறிதட்ட,
“டேய்! நம்மூருல அத்தனை கோவில் இருக்க நீ பக்கத்தூருப் பக்கமா என்னைய கூட்டிட்டுப் போகும்போதே சந்தேகம் வந்துச்சு. இருந்தாலும் என்ர மகனுக்கு பக்திப் பரவசம்னு நெனச்சேன். ஆனா உங்கப்பா மாறி நீயும் லேசுபட்ட ஆளில்லன்னு காட்டிட்ட” என்றார் தலையை மேலும் கீழும் ஆட்டியபடியே.
கந்தசாமி சாரதாவை முதன்முதலில் கோவிலில் வைத்துதான் சந்தித்தார். சாரதாவின் வருகை அறிந்து வாரம் தவறாது கோவில் வாசலில் நின்றிருப்பார். மணம் செய்தால் அவரைத் தான் செய்வேன் என்று அவர் தந்தையிடம் கொடிப் பிடித்து மணம் முடித்தார்.
“க்கும்..” என தொண்டையைச் செறுமிய கந்தசாமி தனது வருகையை உணர்த்திவிட்டு நிற்க, தாயும் மகனும் ஆளுக்கொரு மூலையில் சென்று மறைந்தனர்.
“சாரதா! தண்ணி கொண்டா” என்ற கந்தசாமியின் குரலில், போன வேகத்தில் சொம்பு நிறைய நீர் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் சாரதா.
“தொர காலைலையே ஜீப் எடுத்துட்டு எங்க போறாராமா?”
“அதுங்க.. பசங்களை பள்ளிக்கூடத்துல விட்டுட்டு வர்றேன்னு போறானுங்க” என்றார் வாய் தந்தியடிக்க, எங்கு தங்களது உரையாடலை கேட்டிருப்பாரோ என்று உள்ளுக்குள் லேசான பயம் அவருக்கு. அனைத்தையும் கண்டும் காணாததுபோல் தண்ணீரை வாங்கிப் பருகிவிட்டு வெளியே சென்றார் கந்தசாமி.
“ஐயா இந்த தடவையும் கோவில் திருவிழாவை பொதுவுல இருந்து நீங்க தான் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்” என்று ஊரார் கேட்டுக்கொள்ள,
“சிங்காநல்லூர் ஊர்த் தலைவர் கிட்ட பேசிட்டீங்களா?” என்றார்.
பொதுக் கோவில் என்பதால் திருவிழாவை ஊர்த்தலைவர்கள் பொதுவில் நின்று நடத்தித் தருவதே வழக்கம். சண்டை சச்சரவுகள் இல்லாது ஊர் கூடி தேரிழுப்பது போல் ஒற்றுமையுடன் தான் இதுநாள் வரையில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
“இனிமேல் தானுங் ஐயா ஆறுச்சாமி ஐயா வீட்டுக்கு போய் அழைக்கோணும். போறப்போ நீங்களும் கூட வந்தா நெம்ப சந்தோசப் படுவோம்” என்று சொல்ல, அங்கு செல்லும் போது தானும் உடன் வருவதாய் தெரிவித்து, கணக்குப்பிள்ளையிடம் நன்கொடை வழங்கிவிட்டு, பஞ்சாயத்து போர்டிற்கு சென்றார்.
சிறார்களை ஏற்றிச் சென்ற மாறனின் ஜீப் சிறிது தூரத்திலேயே பஞ்சர் ஆகிவிட, மாறன் வேர்க்க விருவிருக்க ஸ்டெப்னி வைத்து அவனே சரிசெய்து கொண்டிருந்தான்.
“என்ர படிப்பு இப்படி பாழப்போச்சே” என்று தலையில் அடித்துக்கொண்டான் அவனருகில் குத்தவைத்து அமர்ந்திருந்த கலையரசன்.
“அப்படியே படிச்சு கிழிச்சிட்டு தான் மறுவேல பார்க்கப் போறாரு சாரு. பாசாகுற வழியை பாருடா முதல்ல. வாங்குறது முட்டை அதுக்கு பேச்சை பாரு” என மாறன் முறைக்க,
“நீ பேசாம பஞ்சர் ஒட்டு முதல்ல” என சளைக்காது அவனை அடக்கினான் அகிலன்.
அவனையே மிரட்டும் ஆட்கள் அவ்வூரில் அவர்கள் மூவரே. அனைத்தும் மாறன் கொடுக்கும் இடம் தான். அவர்களோடு இயல்பாய் பேசி அவர்களையும் தன்னோடு இயல்பாய் பேசும்படி பழக்கியிருந்தான். பெரியய்யா மகன் என்றெல்லாம் இல்லாது சொந்த சகோதரன் போல் தான் அவனோடு சுற்றிக் கொண்டிருப்பார்கள் அவர்கள் மூவரும்.
அவன் வண்டியை சரி செய்துவிட்டு,
“ஏறித் தொலைங்கடா” என மூவரையும் ஏற்றிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாக,
“கட்டவண்டியை அடிச்சோட்டு ண்ணா” என கவின் சொல்ல அவன் தலையில் தட்டியவன்,
“எவனாச்சும் வாயத் தொறந்தீங்க தொலச்சிருவேன் தொலச்சு” என்றுவிட்டு வண்டியை எடுத்தான்.
“கொஞ்ச லேட்டானாலும் டீச்சர் பயங்கரமா தண்டனை கொடுப்பாங்க ண்ணா. இன்னைக்கு இவ்வளவு லேட் ஆகிடுச்சு” என்று பறந்தான் அகிலன்.
“ஆமாண்ணா எங்க டீச்சர் பத்தி உங்களுக்கு தெரியாது” என்றான் கலையரசன்.
“என்னங்கடா உங்க வாத்தியாரம்மா பயங்கரமான ஆளா இருக்கும்போல. இந்த நடுங்கு நடுங்குறீங்க” என்றபடியே அடுத்த ஐந்தாம் நிமிடம் அவர்களை பள்ளியில் இறக்கி விட, அங்கு மாறனுக்கு தெரிந்த ஒருவர் வர, அவரோடு பேசிக் கொண்டிருந்தான்.
சிறார்கள் மூவரும் இறங்கி உள்ளே ஓட்டம் எடுத்தனர். அவர்களைக் கண்டதும் பாடத்தை பாதியில் விட்டுவிட்டு வெளியே வந்தாள் அவர்களது ஆசிரியையான அருந்தமிழ் தேவி.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவளைப் பார்க்க, அவர்கள் மூவரையும் முறைத்துப் பார்த்தவளோ,
“ஏன் டா லேட்? இதான் ஸ்க்கூல்க்கு வர்ற டைமா? இன்னிக்கு என்ன காரணம் சொல்லப் போறீங்க” என்று கேட்டாள்.
“கட்டவண்டி பஞ்சர் ஆகிடுச்சு டீச்சர்” என்றான் கலையரசன்.
“கட்டவண்டி எப்படி டா பஞ்சர் ஆகும்?”
“நெஜமா டீச்சர். அது வெளிய தான் நிக்குது நீங்களே பாருங்க” என்று அகிலன் வெளியே கை காண்பித்தான்.
அவள் வெளியே வந்து எட்டிப் பார்க்க, அவன் கைகாண்பித்த திசையில் ஓபன் மாடல் ஜீப் அருகில் நன்மாறன் நின்றிருந்தான். உடனே தன் மாணாக்கரை முறைக்க,
“சத்தியமா டீச்சர் நீங்க வேணும்னா அவரு கிட்ட கேட்டுப் பாருங்க” என்று மாறனை கைகாண்பித்தான் கவின்.
“அவரு யாருடா”
“டேய் ஒரு வண்டிக்கு முதலாளினா இங்கிலீஷ்ல என்ன சொல்லுவாங்க? டிரைவரா க்ளீனரா” என்று கிசுகிசுத்தான் அகிலன், தன்னருகில் இருந்த கவினிடம்.
“எங்கப்பா லாரி வெச்சிருக்காரு. அவரை டிரைவர்னு தான் சொல்லுவாங்க” என கவின் சொல்ல அதற்கு,
“எனக்கு தெரிஞ்சு டிரைவர் தான் டா” என கலையரசன் ஒப்புதல் அளிக்க.. அவர்களுக்குள்ளே பேசி முடிவெடுத்துவிட்டு இறுதியாய் அருந்தமிழிடம்,
“அது கட்டவண்டிக்கு டிரைவர் டீச்சர்” என்றான் அகிலன்.
“ப்ச்.. கட்டவண்டி எங்கடா” என்று அவள் பொறுமை இழக்க,
“அது ட்ரைவருக்கு பின்னாடி இருக்குது டீச்சர்” என்று சொல்லி அவளையே குழப்பி இருந்தனர்.
‘ஜீப்பை தான் இவனுக இத்தனை நேரமா கட்டவண்டினு சொல்லிட்டு இருந்தானுகளா’ என எண்ணிப் பெருமூச்சிட்டவள்,
“என்னடா விளையாடுறீங்களா? எப்போப் பாரு லேட்டா வர்றது பொய் சொல்லுறது. பொய் பேசக்கூடாதுன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்” என்று குரலை உயர்த்த, அதற்குள் அட்டெண்டன்ஸ் எடுத்து வந்தவர் தமிழிடம் நீட்ட இவர்களை இங்கேயே நிற்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்றுகொண்டாள்.
தெரிந்தவரோடு பேசிமுடித்து அவர்கள் அருகில் வந்திருந்த மாறன்,
“ஏன்டா உள்ள போகாம வெளிய நிக்குறீங்க?” என்று கேட்க,
“ஷ்.. டீச்சர் இப்போ தண்டனை கொடுக்க வெளிய வருவாங்க. ஏன் லேட்டுன்னு நீ அவங்ககிட்ட சொல்லுண்ணா. நாங்க சொன்ன நம்ப மாட்டீறாங்க” என்று கெஞ்சினான் அகிலன்.
“உங்க டீச்சர் எப்படி டா?” என்று கேட்டான். எந்த விதம் அமைதியா அதிரடியா என்று தெரிந்துகொள்ள. கவினோ டீச்சரின் தோற்றத்தை தான் எப்படி என்று மாறன் கேட்கிறான் என நினைத்து,
“உங்களுக்கு பிடிச்ச சினிமா நடிகை யாருண்ணே?” என்று கேட்டான்.
“எதுக்கு டா”
“சும்மா சொல்லுண்ணே”
“சிம்ரன்”
“சிம்ரன் மாதிரியே இருப்பாங்க எங்க டீச்சர்” என்றான்.
‘இவனுக படிச்ச மாதிரி தான்’ என்று நினைத்தபடி,
“அவங்க என்ன டீச்சர்..?” என்றான் மாறன்.
“தமிழ் டீச்சர்” என்றனர் கோரசாய்.
‘தமிழ் பாடம் எடுக்குற டீச்சர் போல’ என்று எண்ணிவிட்டு நிமிர, அருந்தமிழ் உள்ளிருந்து வெளியே வந்தாள்.
அப்படியே ஃப்ரீஸ் ஆகிவிட்டான் மாறன். சிங்காநல்லூர் வரை ரேக்ளா பார்க்க மட்டுமே செல்லவில்லையே அவன்! அவளைக் காண கோவில் கோவிலாய் சென்று எதுவும் பயனளிக்காது இறுதியில் பள்ளிக்கூடம் தான் பயனளித்து விட்டது.
“இங்க இருக்குற எல்லா மரத்துக்கும் தண்ணி ஊத்திட்டு அப்பறம் உள்ள வாங்க” என்றாள் அருந்தமிழ் தன் மாணாக்கரிடம். முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு அவர்கள் செல்ல,
‘இதுதான் இவனுக பயந்த பயங்கரமான பனிஷ்மென்ட்டா’ என்றெண்ணிய மாறன் புன்னகைத்தவாறு நின்றிருக்க,
“இப்படித் தான் பசங்க படிப்பு விசயத்துல அஜாக்கரதையா இருக்குறதாங்க?” என்றதில் நிமிர்ந்து அவள் முகம் கண்டான்.
அவர்கள் சிம்ரன் என்று கூறியதே அவன் நினைவில். பால் நிறத்தவள் பால் மனத்தவள் இவளோடு சிம்ரன் எல்லாம் போட்டி போடமுடியாது என்று பார்த்திருந்தான்.
“நான் உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்றாள்.
[the_ad id=”6605″]
“சாரி சிம்ரன்” என்றான் மனம் குளறி அதோடு வாய் குளறி.
“யாரு சிம்ரன்??”
“அது எங்கண்ணனுக்கு புடிச்ச சினிமா நடிகை டீச்சர்” என தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த கலையரசன் குரல் கொடுக்க, மாறன் திரும்பி அவனை முறைக்க,
“பெரியவங்க நீங்க பொறுப்பா நடந்துகிட்டா தானே சின்னப் பசங்க உங்களை பார்த்து கத்துப்பாங்க. இனிமேல் பசங்கள ஸ்கூல்க்கு சீக்கிரம் அழச்சிட்டு வாங்க. லேட்டா வராதீங்க” என்றாள்.
அவள் இவ்வாறு பேசுவதில் ஒருவேளை தன்னை அடையாளம் தெரிந்திருக்கிறதோ என்று நினைத்தவன்,
“என்னை தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்க, ஒருமுறை அவனை மேலும் கீழும் பார்த்தாள். கோடு போட்ட சட்டையும் லுங்கியுமாய் இருந்தான்.
“டிரைவர் தானே!” என்றாள்.
எத்தனையோ முறை அவளைப் பார்த்திருக்கிறான் ஆனால் அவள் முதல் முறையாக கவனிக்கும் போது இப்படியா வரவேண்டும் என்று அவனை எண்ணி அவனே நொந்துகொண்டான்.
ஒரு முறை சுற்றிலும் திரும்பிப் பார்த்தவன் தன்னை யாரும் பார்க்காததை உறுதிப் படுத்திக்கொண்டு, ‘ஆமாம்’ என்று அவளிடம் தலையசைத்தான். மேலும் அவளோடு பேச விரும்பி,
“நீங்க தமிழ் பாடம் நல்லா எடுப்பீங்கன்னு சொல்லுவாணுக. அவனுகளுக்கும் தமிழ் ரொம்ப பிடிக்கும். நல்லா படிப்பாணுக. நீங்களும் நல்லா சொல்லிக் கொடுங்க” என்றான்.
‘நாங்க எப்போ சொன்னோம்’ என்பதாய் மூவரும் திரும்பிப் பார்க்க,
“நேரா போனீங்கனா மூணாவது கிளாஸ்” என்று அருந்தமிழ் மாறனுக்கு கைகாண்பித்தாள்.
“அங்க யாரு இருக்கா?”
“தமிழ் டீச்சர். அங்கதான் இருக்காங்க. அவங்க கிட்ட சொல்லிட்டு போங்க”
“அப்போ நீங்க?”
“அண்ணே இவங்க சைன்ஸ் டீச்சர் ண்ணே” என மக்கள் மூவரும் கோரஸ் பாட,
“அப்பறம் ஏண்டா தமிழ் டீச்சர்ன்னு சொன்னீங்க” என அவர்களை பாவமாய் பார்த்து வைத்தான் மாறன்.
“அது அவங்க பேருண்ணே” என்றுவிட்டு வகுப்பறைக்குள் சென்றுகொள்ள, மாறன் அப்படியே திரும்பி வெளியே சென்றான். இதற்கு மேல் அவமானப்பட அவனிடம் தெம்பில்லை.
அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே திரும்பிய அருந்தமிழ் செல்லும் அவனை எப்படி அழைப்பதென்று தெரியாது,
“ஹலோ” என்றழைத்தாள்.
மாறனோ கேட்டும் கேட்காததுபோல் சென்றான்.
“டிரைவர் சார்” என்றாள்.
அப்போதும் திரும்பவில்லை. அது அவன் காதில் விழவில்லையோ என்று நினைத்தவள் நொடியில் அவனை அப்பெயரைக் கொண்டு அழைத்திருந்தாள்.
“மிஸ்டர். கட்டவண்டி”
அதில் உடனே திரும்பிப் பார்த்தவன் ‘என்னையா?’ என்பதாய் ஆள்காட்டி விரலை அவனை நோக்கி காண்பித்து கேட்க ‘உங்களை தான்’ என்று அவளும் தலையசைத்தாள்.
“பசங்க இவ்வளவு லேட்டா வந்தா பாடம் கவனிக்க முடியாம போய்டுது. அதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க” என,
“சரிங்க” என்று தலையசைத்து வந்தவன் ஜீப்பை கிளப்பி அவளையும் ஒரு பார்வை பார்த்துச் செல்ல, தன் பாடத்தைத் தொடர்ந்தாள் அருந்தமிழ்.
வாசம் வீசும்..!