வேலைகள் முடிந்து வீட்டிற்குச் சென்று, உணவை முடித்து ஓய்விற்காக அறைக்கு சென்றான். எப்பொழுதுமே சிறிது நேரம் படிப்பான். இன்று அதற்கும் மனம் செல்லாமல் செந்தாமரையின் ஞாபகமே! ஏன் இப்படி என்று அவனுக்கே விளங்கவில்லை. அவளைக் கைப்பேசியில் அழைத்திருந்தான்.
கைப்பேசி எண்கள் பரிமாறியதிலிருந்து அவசியத்திற்காக அன்றி இருவரும் பேசிக்கொண்டதே இல்லை. இன்று தான் அவனுக்காகத் தோன்றி அழைப்பு விடுத்திருக்கிறான்.
செந்தாமரை அழைப்பை ஏற்றதும், “சொல்லுங்க…” என்றாள் மலர்ச்சியாக! அவளுக்கும் ஒரு எதிர்பார்ப்பு, இன்றாவது அழைப்பானா என்று! அழைத்தால் வினோதினி விஷயமாக சொல்லி விடலாம், அவன் எதுவும் தீர்வு தருவான் அல்லது பிரச்சனையைத் தீர்த்து வைப்பான் என்றும் தோன்றியிருந்தது. அவனது இன்றைய செய்கை விளைவித்த நம்பிக்கையின் பலன்!
“ஹ்ம்ம் அப்பறம்… அம்மா, அப்பா எல்லாம் வந்திருக்காங்க… எப்படி போச்சு?” என்றான் ஆர்வமாக. இன்னமும்… “எனக்காகவா?” என்று ஆசை ஆசையாக அவள் கேட்ட குரல் அவனுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அந்த குரல் ஒருவித போதையை, மயக்கத்தை அவனுக்கு தந்திருந்தது.
[the_ad id=”6605″]
அவளும் இலகுவான மனநிலையில் “ரொம்ப சந்தோசமா…” என்றாள் அனுபவித்து.
மெலிதாக சிரித்தான். புன்னகையோடே, “என்ன சொல்லறாங்க?” என்றான் திருமண விஷயம் குறித்து அவளுடைய பெற்றோர்கள் எதுவும் கேட்டிருப்பார்களோ என்று நினைத்து.
இன்னமும் அவளிடம் அந்த பேச்சுவார்த்தை தொடங்காத காரணத்தால், எதுவும் புரியாமல், “என்ன சொல்லுவாங்க?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“எதுவும் உன்கிட்ட கேட்கலையோ?”
“கேட்காமையா இருப்பாங்க. ஒரே அட்வைஸ். ஏன் இப்படி செஞ்சன்னு அம்மா செம அழுகை, அப்பாக்கு பயங்கர கோபம். அழுகை, சண்டை, திட்டு, சமாதானம்ன்னு ஓடிக்கிட்டு இருக்கு… இன்னும் எதுவும் முடியலை… ஆனாலும் நிம்மதியா, சந்தோசமா பீல் பண்ணறேன். உங்களால…” என்றாள் உணர்ந்து… மகிழ்ந்து…
திருமண பேச்சுவார்த்தை பற்றி இன்னும் எதுவும் பேசியிருக்க மாட்டார்கள் என்று புரிந்து கொண்டான்.
‘சரி என்ன அவசரம்?’ என்று இலகுவாக விடுவது போலவும்.., ‘ஏன் இன்னும் பேச்சை தொடங்கவில்லை?’ என்று செல்ல கோபம் கொண்டும்.., ‘எப்பொழுது பேசுவார்கள்?’ என்று எதிர்பார்ப்புடனும் அவன் மனம் மாறி மாறி ஆர்ப்பரித்தது.
இதெல்லாம் ஒருமாதிரி புதுவித உணர்வு… அவனை இம்சை செய்தும்… அந்த இம்சையை அவனாலேயே ரசிக்க முடியும் என்று உணர வைத்தும்… ஆர்ப்பரிக்கும் அழகிய உணர்வு.
“என்னங்க பதிலே காணோம்?” என்று செந்தாமரை அவனது நினைவுகளைக் கலைக்க. இன்னமும் அவளது குரலில் ஆசையும், கொஞ்சலும் குழைந்திருப்பதை அவனால் நன்கு உணர முடிந்தது.
அதில் அவனுள்ளும் மாய உணர்வுகள் குமிழியிட, “மாஹி… இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா பேசற…” என்றான் குரலைத் தழைத்து.
“நீங்க கூடத்தான் ரொம்ப வித்தியாசமா எனக்கு போன் போட்டு இருக்கீங்க…”
“நானா? ஏன் நான் உனக்கு போன் செஞ்சதே இல்லையா?”
“காரணம் இல்லாம போன் செஞ்சதில்லை” என்றாள் முதல்முறை கணித்துச் சொன்னது போலவே!
“ஓஹோ… அப்ப இப்ப…”
பதில் சொல்லாமல் சிரித்தாள்.
“ஏன் ஏன் இப்பக்கூட உங்க அம்மா, அப்பா வந்திருக்காங்க, அதைப்பத்தி விசாரிக்க போன் செஞ்சேன்” என்றான் போலி கெத்தாக.
இந்தமுறையும் பதில் சொல்லாமல் சற்று சத்தமாகவே சிரித்தாள். “அதுக்கெல்லாம் போன் போடுவீங்களா என்ன?” ‘உன்னை நானறிவேன்’ என்னும் பாவனையில் அவளது ஒவ்வொரு பேச்சிலும் பிரதிபலிக்க அவனுக்கு அது மிகவும் பிடித்தது.
“ஏன் இந்த விஷயத்துக்கெல்லாம் போன் செய்ய மாட்டேனா?”
“எங்க அப்பா, அம்மாவை அழைச்சிட்டு வர போகும்போதே நீங்க போன் செய்யலை… அழைச்சிட்டு வந்த பிறகா போன் செய்ய போறீங்க” என்று கூறி மீண்டும் சிரித்தாள்.
[the_ad id=”6605″]
அதை ரசித்தபடி, “இப்படி எல்லாம் அறிவா பேசி வெக்காத…” என்றான் மென்னகையோடு.
“ஏன்? ஏன்?”
“ஹ்ம்ம்… அப்பறம் உன்கிட்ட கரண்டியால அடி வாங்க வேண்டி வரும்”
“அடியா…? நான் எதுக்கு உங்களை…” என்றவளின் வார்த்தைகள் பாதியாய் தேய்ந்தது.
“என்ன? ஞாபகம் வந்ததா? எனக்கு நீ தந்த அடி மட்டும்தான் ஞாபகம் இருக்கா? இல்லை….” சரசமாக அவன் கேட்க,
“ஸ்ஸ்ஸ்….” என்றாள் அவசரமாக.
இம்முறை பலமாகச் சிரிப்பது அவன் முறையாயிற்று. “ஓகே மாஹி… குட் நைட்… வெற்றி ட்ரீம்ஸ்…” எனச் சொல்லி அழைப்பைத் துண்டிக்க நினைத்தான்.
“இருங்க இருங்க… நான் பேசணும்…” என அவசரமாக இடை நிறுத்தினாள் பெண்.
“ஹ்ம்ம் சொல்லு மாஹி… மாஹி ட்ரீம்ஸ் தானே! அதுதான் வரும்ன்னு நினைக்கிறேன்” என்றான் புன்னகையோடு.
“அச்சோ…”
“சரி சரி சொல்லு என்ன விஷயம்?” என்றான் புன்னகை முகமாகவே!
“அது ஒரு பிரச்சனை…” என்றாள் தயக்கமாக.
“என்ன பிரச்சனை?” மீண்டும் மாரியப்பனின் நினைவே வந்தது. எதுவும் வம்பு செய்கிறானோ என்பது போல! சற்றே பயம் கூட எழுந்தது.
“அது…” என்றவள் தயங்கித் தயங்கி வினோதினி விஷயத்தைக் கூறி முடித்தாள்.
“உனக்கெப்போ தெரியும்?” சற்றே கோபம் எட்டிப்பார்த்தது அவன் குரலில்.
“பத்து நாள் முன்னாடி” என்றாள் தயக்கமாக.
“இப்ப நான் போன் பண்ணாட்டி சொல்லி இருக்க மாட்ட அப்படித்தானே?” சரியாகக் கணித்துக் கேட்டிருந்தான். குரல் சூடாக வந்தது.
அவனின் குரல் மாறுபாடு புரிந்து விட்டது. “இல்லைங்க. போன் பண்ணுவீங்க நினைச்சேன்…”
“அதான்… பத்து நாளா நினைச்சுட்டு மட்டும் இருக்க? நேத்து என்னைப் பார்க்க வந்தப்ப கூடச் சொல்லலை. அப்படித்தானே?”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. நானே சரி பண்ணிக்கலாம் நினைச்சேன்” என்று தவிப்பாகக் கூறினாள். திரும்பத் திரும்ப சண்டை அவளுக்குச் சற்று பயமாக கூட இருந்தது.
“அப்ப நீயே சரி பண்ணிக்க…” என்று கோபமாகக் கூறியவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
பதறிப்போய் மீண்டும் அழைக்க, இருமுறை அழைத்து ஓய்ந்த பின்னே அழைப்பை ஏற்றான். எதுவும் பேசவில்லை. “பிளீஸ்… எதுக்கு கோபப்படறீங்க? என்னால சமாளிக்க முடியுமான்னு பார்த்தேன் அவ்வளவு தான். அதுக்குள்ளே என்னென்னவோ நடந்துடுச்சு. உங்ககிட்டயும் சொல்லற சூழ்நிலை வரலை. அதான் உங்ககிட்ட இப்போ சொல்லலாம்ன்னு…”
“என் மேல நம்பிக்கை இல்லைன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே”
“அப்படி எல்லாம் இல்லைங்க… என்மேல நம்பிக்கை இருந்ததுன்னு வெச்சுச்கங்களேன்…”
[the_ad id=”6605″]
“இரிடேட் பண்ணாத… என்மேல நம்பிக்கை இல்லைன்னா காலம் முழுசும் கூட வரதுல அர்த்தமே இல்லை”
“சும்மா எப்ப பார்த்தாலும்… என்ன பிரச்சனைன்னாலும்… கல்யாணம் வேண்டாம்ன்னு மட்டும் தான் சொல்ல தோணுமா உங்களுக்கு?” அவளும் சற்று சூடாகவே கேட்டாள்.
அவன் பதில் சொல்லவில்லை. “உங்ககிட்ட பிரச்சனையை சொல்லணும்ன்னு தோணுச்சு. சொல்லிட்டேன். இனிமேல் நீங்க பாரத்துக்கங்க. அதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்மேல கோபம் வந்தா… கோபம் போனதும் பேசுங்க… சும்மா கழட்டி விடலாம்ன்னு எல்லாம் யோசிக்காதீங்க. அப்படி எல்லாம் விட முடியாது” என்று கத்தியவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.
‘சரியான திமிரு…’ என்று கோபமாக நினைத்தவன், அலைப்பேசியைச் சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
காரசாரமான விவாதம் இருவரின் மனநிலையையும் கெடுத்திருந்தது.
*** சிம்லாவின் குளிரில் அடிமைகள் அனைவரும் சுருண்டு உறங்கியிருந்த வேளை. “சமீபமா… யாருக்கும் எந்த தண்டனையும் தரலை” இரவின் இனிமையை ரசிக்க முடியாமல் காவலுக்கு இருந்த ஒருவன் கேட்டான்.
“ஹ்ம்ம் ஆமா, நாலு மாசமா தண்டனை பாக்கி இருக்கு…”
“இன்னும் இவனுங்களை வெச்சு சோறெல்லாம் போடணுமா? இவனுங்க செய்யறதுக்கு…” என்று பல்லைக் கடித்தான் ஒரு கோபக்காரன்.
“டேய்… இவன் போஸ்டிங் போற ஏரியா பாவம் டா… என்ன கோபம் வருது…” என்று ஒருவன் கேலி செய்ய,
“ஏன்டா உங்களுக்கெல்லாம் கோபம் வரலையோ?” எனச் சிடுசிடுப்பாகக் கேட்டான்.
“வருது தான்… அவனுங்களை உயிரோட கொல்லணும்ன்னு… அணுஅணுவா சித்திரவதை செய்யணும்ன்னு… உயிரோட மதிப்பை உணர வைக்கணும்ன்னு… அவனுங்க ஆம்பிளைங்கற திமிரை ஒடுக்கணும்ன்னு… இன்னும் நிறைய கொடூர தண்டனைகள் கூட! எங்களுக்கு மட்டுமில்லை… இந்த உலகத்துல இருக்க ஒவ்வொருத்தர் மனசுலயும் இந்த மாதிரி குற்றம் செய்யறவங்களை பத்தி கேள்விப்படும்போதோ… அது சம்மந்தமான செய்திகள் படிக்கும் போதோ, பார்க்கும்போதோ… இதை விட அதிகமான ஆத்திரம் வரும். கோபம் வரும். அந்த பாவம் செஞ்சவங்க நம்ம முன்னாடி இருந்தா கல்லால அடிச்சே கொன்னுடணும்ன்னு ஒரு வெறி வரும்… அது எல்லாரோட இயல்பு தான்… ஆனா, முடியாதே!”
“நமக்கு தான் இப்போ ஒரு வாய்ப்பிருக்கே!”
“நீ கோபத்துல பேசற டா… இதுக்கு தீர்வு தான் யோசிக்கணும்… எத்தனை பேரைக் கொல்ல முடியும்?”
“தீர்வு தானே தாராளமா யோசிக்கலாம். இந்த மாதிரி பொறுக்கிங்களை வெச்சுட்டு, தீர்வை பத்தி யோசிக்கணும்ன்னா… ஆதி காலம் மாதிரி பொண்ணுங்களை வீட்டுக்குள்ளேயே அடைச்சி தான் வெக்க வேண்டி வரும்” என்றான் எகத்தாளமாக.
அவன் ஆதங்கம் மற்ற அனைவருக்கும் புரிந்தது தான். ஆனால், இப்படி காமவெறி பிடித்த மிருகங்கள் நிறைய இருக்கிறார்களே, எத்தனை பேரைக் கொல்ல முடியும்? அதை அரசாங்கமும் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விடுமா?
“நீ ஆத்திரப்படாத டா… ஏதோ நம்மாள முடிஞ்ச தண்டனை தர முடியுதேன்னு திருப்திப் படு…”
“ஹ்ம்ம் வேற வழி…” என்றான் வேண்டா வெறுப்பாக. இந்த கயவர்களிடமிருந்து பெண்களை காக்க நம்மாளான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.
“சரி நம்ம அவங்க கிட்ட பேசலாம். இவனுங்க செஞ்ச தப்பைச் சொல்லி… என்ன தண்டனை தரலாம்ன்னு கேட்போம்… என்ன சொல்லறாங்களோ அப்படியே செஞ்சுடுவோம்”
“அவர்களுக்கும் இதெல்லாம் புதுசு தான். அதுனால பழைய வழிமுறையை கேட்பாங்க. அதெல்லாம் சரியா சொல்லணும்”
“முன்னாடி அதைத் தானே பாலோ செய்ய சொன்னாங்க. அதுப்படி தான் செஞ்சுட்டும் வந்தோம் … இந்த நாலு மாசம் அவங்க தான் நான் சொல்லறேன்னு நிறுத்தி வெச்சாங்க”
“சரி விடுங்க… ஆட்கள் அதிகமாவதால் எதையும் யோசிச்சு சொல்லி இருப்பாங்க”
“இருக்கலாம். இப்ப அவங்க தலையில தானே மொத்த பாரமும்…”
“ஹ்ம்ம் சரி யாரு இந்த வேலையை எடுத்துக்கிறது? அவங்ககிட்ட பேசிட்டு வேலையை தொடங்கணுமே….”
“கண்டிப்பா நீ இல்லை டா. உனக்கிருக்க கோபத்துக்கு எல்லாரையும் கொன்னுட்டு தான் மறுவேலை பார்ப்ப…”
இம்முறை அவனுமே சற்று இலகுவானான். “சரிடா உங்க விருப்பம்… நான் இதுக்கு வரலைப்பா”
“ஹாஹா… சரிடா நாங்க ரெண்டு பேரும் அவங்ககிட்ட பேசிட்டு சொல்லறோம்” என பேச்சுவார்த்தையை முடித்தனர் கூட்டத்தினர்.
தங்களுக்குத் தண்டனை கிடைக்கவிருக்கிறது என்பது கூட தெரியாமல் நல்ல உறக்கத்திலிருந்தனர் அடைபட்டிருந்தவர்கள்.
மதனுக்கு, ‘இங்கிருந்து தப்பிக்க வழியே இல்லையா?’ என்னும் ஏக்கம் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே சென்றது.
‘சரி தவறு செய்து விட்டோம். அதற்காக இங்குக் கொண்டு வந்து என்ன பயன்? இப்பொழுது எங்கள் தவறை உணர்ந்து திருந்த நினைத்தால் கூட விடுதலை இல்லையா? இந்த நிலை என்றேனும் மாறுமா?’ எனத் தவிப்பாக நினைத்தான்.
‘யாரிடம் என்ன பேச வேண்டும்? விடுதலையை யாரிடம் யாசிக்க வேண்டும்? தவறை உணர்ந்து விட்டதை யாரிடம் சொல்ல வேண்டும்’ எதுவும் புரியாமல் யோசித்து யோசித்து குழம்பினான்.
அவனுக்கான தண்டனை என்னவாக இருக்குமோ?