அவளது கேள்வியைக் கண்டுகொள்ளாமல், “பைத்தியமா உனக்கு? உன்னை யாரு இங்க வர சொன்னது?” என மீண்டும் அதட்டினான்.
அவன் கோபம், ஆத்திரம் எல்லாம் எப்பொழுதுமே எல்லையைக் கடக்கும் என்று தெரியும் தான். ஆனால், இந்தளவு அடித்துத் தள்ளுவான் என்றெல்லாம் தெரியாது. முதல்முறை இவனது மற்றொரு முகத்தை நேரில் பார்க்கிறாள். அதனால் வெகுவாக நடுங்கி போனாள். இப்பொழுது அவன் அதட்டி வேறு கேட்கவும்,
அவன் மேலேயே சாய்ந்து கதறத் தொடங்கினாள்.
அவளது செய்கையில் சற்று தளர்ந்தவன், “ம்ப்ச் என்ன பண்ணற? எதுக்கு அழற?” ஏற்கனவே இருந்த கடுப்பில், இவள் இங்கு வந்தது வேறு இன்னும் அதிக கோபத்தை அவனுக்கு தந்திருந்தது.
அதிலும் அனைத்தையும் நேரில் பார்த்து மிரண்டு வேறு நிற்கவும், எப்பொழுதுமே அவனைக் கவரும் அந்த தைரியமும், வீம்பும் அவளிடம் காணாமல் போயிருக்க அவனுக்கு இந்த சூழலைக் கையாள தெரியவில்லை.
“என்ன பண்ணி வெச்சிருக்கீங்க? எதுக்கு இவ்வளவு கோபம்?” அவன் மேலே சாய்ந்தபடி கதறி அழுபவள் மீது அந்த நேரத்தில் கோபத்தைக் காட்டவும் வெற்றிக்கு முடியவில்லை.
“ஒன்னுமில்லை ரிலாக்ஸ்… உன்னை யாரு இங்க வர சொன்னது? போன் பண்ண வேண்டியது தானே?” முன்பு கேட்ட கேள்வியையே சற்று வேறு தொனியில் கேட்டான்.
[the_ad id=”6605″]
“எதுக்கு இத்தனை கோபம் உங்களுக்கு? என்ன பண்ணி வெச்சிருக்கீங்க அவனை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என மீண்டும் மீண்டும் அழுபவளை என்ன சொல்லித் தேற்றுவது என அவனுக்கு புரியவில்லை.
“ஸ்ஸ்ஸ்… முதல்ல அழறதை நிறுத்து… அவன் பண்ணுன வேலைக்கு வேற என்ன பண்ண முடியும். குழந்தைங்க கிட்ட போயி… ச்ச… இவனையெல்லாம்…” என ஆத்திரமாகப் பேசியவனை,
“பிளீஸ்… பிளீஸ்… கோபப்படாதீங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு… ஏன் இப்படி நடந்துக்கறீங்க? அவன் செஞ்சது தப்பு தான்… அதுக்காக இப்படி வைலண்டா…”
“குழந்தை மாதிரி பேசாத மாஹி… அவனுக்கு எல்லாம் என்ன பெருசா தண்டனை கிடைச்சுட போகுது… அந்த தைரியத்துல தான் இந்த ஆட்டம் ஆடறான். அவனை நான் பெருசா எல்லாம் எதுவும் பண்ணலை. அவன் கையை மட்டும் தான் ஒடச்சு வெச்சிருக்கேன். பரதேசி இனி எந்த புள்ளைகிட்ட அவன் கை நீளுதுன்னு பார்க்கிறேன்” என்றான் ஆக்ரோஷமாக.
“என்ன கையை ஒடைச்சிட்டீங்களா?” செந்தாமரை அதிர்ந்து பார்க்க,
“அச்சோ, என்ன உனக்குப் பிரச்சனை? ஏன் இப்படி படுத்தற…? சின்ன சேதாரம் தான். கொஞ்ச மாசத்துல சரியாயிடுவான். ஆனா காலத்துக்கும் மறக்க மாட்டான்” என்றான் உறுதியோடு.
‘எத்தனை கோபம் இவனுக்கு வருகிறது?’ முகமே விழுந்துவிட்டது செந்தாமரைக்கு. இப்பொழுது தன்போல அவனிடமிருந்து விலகி நின்று கொண்டிருந்தாள்.
“என்ன மாஹி… இந்த பிரச்சனை எல்லாம் உனக்கெதுக்கு” என வாஞ்சையோடு கேட்டு வெற்றிச்செல்வன் அவளைத் தேற்றப் பார்க்க,
“எனக்குப் பயமா இருக்கு. எதுக்கு இத்தனை கோபம்?” என்றாள் மீண்டும் விசும்பியபடி.
“ம்பச்” என்றவன் சற்று விலகி நின்றிருந்தவளை அருகில் இழுத்து அணைத்து, “இவனுங்களுக்கு இதெல்லாம் தேவை தான் மாஹி… இதுல பயப்பட என்ன இருக்கு? தப்பு செஞ்சானுங்க அனுபவிக்கிறானுங்க” என்று வெகு இலகுவாகப் பதில் கூற,
அவனிடமிருந்து விடுபட போராடியபடி, அவனைப் பாவமாகப் பார்க்க, “ஹே நீதானாடி விலகி நின்ன அதான் கிட்ட இழுத்தேன். பாரு என் சட்டை எல்லாம் நனைச்சு வெச்சிருக்க?” என அவள் அழுத ஈரத்தைச் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டான்.
அவளுக்கு தான் அவஸ்தையாக இருந்தது. அப்பொழுது அவன்மீது சாயும் பொழுது தெரியாத வித்தியாசம் இப்பொழுது நன்றாகவே தெரிந்தது. அதிலும் முன்பு இவளாக சாய்ந்திருந்தாள். இப்பொழுது அவன் இவளது இடையை அல்லவா அழுத்திப் பிடித்து, வெகு அருகில் நிறுத்தி வைத்திருக்கிறான்.
இத்தனை அருகில் இழுத்து நிறுத்தி, விளக்கம் வேறு சொல்லிக் கொண்டிருந்தான். அது எதுவும் காதிலும் வேற விழ மறுத்தது பெண்ணுக்கு.
மலங்க மலங்க அவள் விழிக்க, “என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீ நெளிஞ்சுட்டே இருக்க?” ஒன்றும் புரியாமல் அவன் கேட்க,
“கொஞ்சம் விடுய்யா. உன் விளக்கத்தை மெதுவா கேட்டுக்கறேன். நான் கிளம்பணும்” என்றாள் சத்தமே எழும்பாத குரலில்.
[the_ad id=”6605″]
“விடுய்யா வா…?” என்று வாயைப் பிளந்தவன், அவள் அவஸ்தையைப் புரிந்து கொண்டு, “ஏய் நீயும் தான சாஞ்ச, நான் கிட்ட இழுத்தா மட்டும் என்னைப் பேட் பாய் மாதிரி நினைப்பியா?” என நியாயம் கேட்க,
பதில் பேசும் நிலையிலா இருக்கிறது அவர்களது நெருக்கம். ‘இம்சை பண்ணறானே!’ என மனதிற்குள் நொந்து கொண்டாள்.
“இதெல்லாம் சுத்தமா சரி இல்லை மாஹி… நான் எதுவுமே பண்ணலை…” என்று பெரு மூச்சோடு அவளை விடுவிக்க,
அவளுக்கு இப்பொழுது தான் நன்றாக மூச்சே விட முடிந்தது. அவன் கிண்டலாக வேறு சிரிக்கக் கோபமாய் வந்தது.
‘கொழுப்பு கூடிப்போச்சு…’ என முணுமுணுத்தாள்.
இதற்கும் அவன் சிரிக்க, அவசரமாக வாயைப் பொத்தியவள், “இங்க ஒருத்தனை அடிச்சு துவைச்சு போட்டுட்டு… இப்படி எல்லாம் பண்ணறது உங்களுக்கே நியாயமா?” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
“என்னது உன்னைக் கட்டிப்பிடிக்கிறதா?” என்றான் கண்ணடித்து.
முயன்ற மட்டும் முறைத்தவள், “நான் கிளம்பறேன்…” என்று சொல்ல,
அவள் கைப்பிடித்துத் தடுத்து நிறுத்தியவன், “இங்க எதுக்கு வந்த?” என்றான்.
“உங்களுக்கு போன் போட்டேன் எடுக்கலை… அதான் இவனை எதுவும் செஞ்சுடுவீங்களோன்னு பயந்து…”
“உனக்கு ஏன் அப்படி தோணுச்சு?” எப்படிச் சரியாகக் கணித்தாள் எனப் புரியாமல் குழப்பமாகக் கேட்டான்.
“ரெண்டு நாளா ஸ்கூலுக்கு இவன் உருப்படியா வந்தான். அப்பவே, எதுவும் பெருசா செய்ய போறீங்களோன்னு பயம். இன்னைக்கு உங்களுக்கு லீவு தான், அப்படியிருந்தும் என் போன் எடுக்கலைன்னதும்…”
“ஓ… சரி நான் இங்க இருப்பேன்னு எப்படி தெரியும்?”
“ம்ம்ம் பெரிய ரகசியம் பாருங்க”
அவள் கரங்களைப் பிடித்திருந்த அழுத்தம் அதிகரிக்கவும், “ஒருநாள் உங்களை இந்தப்பக்கம் பார்த்தேன். அப்போ இந்த இடத்தை கவனிச்சேன்” என்றாள் மென்குரலில்.
‘இந்த இடத்தை கவனிக்கிறளவு என்னைத் தெரியுமா இவளுக்கு?’ என்று ஆச்சரியமாக இருக்க, “என் பின்னாடி சுத்தறதே உனக்கு வேலை என்ன?” என்று அவளைச் சீண்டினான்.
“ரொம்ப தான் உங்களுக்கு நினைப்பு. நான் என் பாட்டனி ப்ராஜெக்ட்’க்கு செடி கோடி தேடி தோப்புக்கு வந்தேன். அப்போ உங்களை பார்த்தேன். அவ்வளவு தான்…” என்றாள் அலட்டாமல்.
“ஆமா, ஆமா இந்த ஊருக்கு வந்ததுல இருந்தே… என்னைச் சுத்தி வரதுக்கு இப்படியொரு பேரு வேற…” எனக் கேலியாகச் சிரித்தான்.
“என்னவோ நினைச்சுக்கங்க. உங்க யூகத்துக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது” என்று சிலுப்பினாள்.
“பாத்து பாத்து… வாய் சுளுக்கிக்க போகுது. எப்ப எப்படி கேக்கணுமோ, அப்போ கேட்டுக்கறேன்… போ போ என்கிட்ட மாட்டாமையா போக போற…” என்றான் அவனும் விடாது.
“எப்படிக் கேட்டாலும் உண்மையை தான சொல்ல முடியும்…” என அதற்கும் பதில் வைத்திருந்தாள்.
[the_ad id=”6605″]
‘அப்படியா?’ என்ற வெற்றிச்செல்வனின் பார்வை அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.
அவள் படிப்பு விஷயமாகத் தோட்டம் சுற்றியது உண்மை தான். அப்படி வரும்போது தொலைவிலிருந்து வெற்றிச்செல்வனை பார்த்தும் இருக்கிறாள். அவனின் செய்கைகள், பாவனைகள், நடை, கம்பீரம், நேர்கொண்ட கூர் பார்வை எல்லாம் பரமேஸ்வரன் ஐயாவை கொண்டிருந்தது. அதனால், மேலும் மேலும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் தன்னையறியாமல் நோட்டமிடத் தொடங்கியிருந்தாள்.
அது பிடித்தம் வரையும் போயிருக்க சைட்டும் அடித்திருந்தாள். இது எதுவும் யாருக்கும் தெரியாது என அவள் நினைத்திருக்கச் சம்மந்தப்பட்டவனுக்கே தெரிந்திருக்க அவள் பதறித் தான் போனாள்.
“நான் உண்மையைத் தான் சொல்லறேன். விடுங்க போறேன்” என்றாள் கையை உருவ முயன்றபடி.
“நீ பொய் சொல்லறேன்னு சொல்லலையே! முழு உண்மையையும் சொல்லுன்னு தான் நான் சொன்னேன்” என்றான் கண்ணடித்து.
“முதல்ல மயங்கி கிடக்கிறவனை பாருங்க. ஹாஸ்பிட்டல்ல எதுவும் சேர்த்துங்க, இப்படி ஒருத்தனை அடிச்சு துவைச்சிட்டு… நீங்க பண்ணற வேலை இருக்கே…” என அவன் கையில் சிறைப்படாத மற்றொரு கையால் தன் தலையில் அடித்துக் கொள்ள, அவன் சிரித்தான்.
“சரி சரி நேரமாச்சு. கிளம்பு. வீரமணியும், பாண்டியும் உன்னை விடறதுக்கு வருவாங்க” என்றவன் கூடுதல் தகவலாக, “அவனுக்கு மயக்கம் தெளிய நேரம் ஆகும். எழுந்ததும் கொஞ்சம் பேச்சுவார்த்தை நடததிட்டு ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்துடறோம்” என்றான்.
“ஹ்ம்ம்… இதுனால எதுவும் பிரச்சனை வந்துடாதே” என்றாள் கலக்கமாக.
“எதுவும் வராது” என்று ஆறுதலாகக் கூறியவன், “அப்பறம் இங்க இப்படி என்னைத் தேடி, தனியா வரது இதுவே கடைசி முறையா இருக்கட்டும்” என்று எச்சரிக்கையும் செய்தான்.
தலையை மட்டும் சரியென உருட்டினாள்.
“பயப்படாம போ. எதுவும் ஆகாது” என மீண்டுமொருமுறை ஆறுதல் சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.
‘பாக்க மட்டும் தான் அடாவடி. மத்தபடி சுத்த வெத்து வேட்டு’ என தன்னவளை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அத்தனை நேரம் இருந்த கோபம் குறைந்து மனம் இலகுவானதை போல உணர்ந்தான்.