செந்தாமரை தன் பெற்றோர்களிடம் ஒரு வழியாகச் சமாதானத்திற்கு வந்திருந்தாள்.
அம்மாவிடம் தனியாகப் பேசும்போது, “அதுக்காக ஊருக்கெல்லாம் வர சொல்லாதீங்க ம்மா” என்று கண்டிப்புடன் கூறினாள்.
“உன்னை ஊருக்கு கூட்டிட்டு போயிட்டா… மாப்பிள்ளை?” என வெற்றியை மனதில் வைத்து அம்பிகா கேட்க,
மறுபடியும் திருமண பேச்சா என பயந்தவள், “அம்மா கல்யாணம் அது இதுன்னு பேசாதீங்க” என்று அடமாகக் கூறினாள்.
“என்ன தாமரை இப்படி சொல்லற? வெற்றி தம்பி கிட்ட உன்கிட்ட கேட்டுட்டு சொல்லறதா சொல்லி இருக்கோமே” அம்பிகாவுக்கு எதுவும் தெரியாததால் இயல்பாகக் கூற,
செந்தாமரைக்குத் திக்கென்றது. “யாரு மா?” என்றாள் மலங்க விரித்தபடி.
“எங்களை கூட்டிட்டு வந்தாரே வெற்றி தம்பி அவங்க தான். உன்னை கட்டிக்க கேட்டிருக்காங்க. கையோட உன் ஜாதகத்தையும் எடுத்துட்டு… நம்ம குலசாமிக்கு மஞ்ச துணியில காச முடிஞ்சு வெச்சுட்டு தான் வந்திருக்கேன். பார்க்க நல்ல மனுஷனா தெரியறாரு. இந்த இடமே தகைஞ்சு வந்துடணும். உன் வாழ்க்கை செழிப்பா இருக்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்” என்றார். அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும் என்னும் தவிப்பு அவரிடம். ஏற்கனவே ஒரு மகளை இழந்து விட்டவர் அல்லவா! அந்த தவிப்பு அவருக்கு! இனி மொத்த பிடிப்பும் இளையவள் மட்டும் தானே!
அம்மா எதுவும் தெரியாமல் பேசுவதால் குற்றவுணர்வாய் போய்விட்டது மகளிற்கு. “அம்மா எனக்கே அவர் மேல விருப்பம்ன்னு… நானே சொல்லலாம்ன்னு இருந்தேன் மா” என்றாள் மென்று விழுங்கியபடி.
[the_ad id=”6605″]
அம்பிகா மெலிதாக சிரித்தபடி, “அதனால என்ன தாமரை? இதுல நீ சங்கடப்பட என்ன இருக்கு? ரொம்ப நல்ல தம்பி. அவங்க வீட்டுல இருக்கறவங்க கிட்டயும் போன்’ல பேசுனோம். நல்ல மாதிரி தான் தெரியுது. அப்பா கூட தெரிஞ்சவங்க மூலம் விசாரிச்சதுக்கு திருப்தியா தான் சொல்லியிருக்காங்க. அப்பா நேரிலேயும் கொஞ்சம் கண்காணிச்சு பார்த்தாரு. எல்லாமே திருப்தி தான்” என்றார் புன்னகை முகமாக.
இங்கேயே பெற்றோர்கள் தங்கி விட்டதன் காரணம் இப்போது புரிந்தது செந்தாமரைக்கு. விழிகள் விரிய அன்னை சொன்னதை ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். மனதிற்குள் திருமண பேச்சு தித்தித்துக் கொண்டிருந்தது.
அவளது மனச்சஞ்சலத்தை வார்த்தைகளால் சொல்லாமலேயே வெற்றிச்செல்வன் தீர்த்து வைத்திருந்தான். அவளது மனம் முழுவதும் இதம் பரவியது. இப்படியும் ஒருவனால் இருக்க முடியுமா? ‘என்ன வேண்டும்? என்ன தேவை?’ என்று கேட்டுக்கொள்ளாமலேயே தீர்த்து வைக்க? மனதோடு வியந்து போனாள். ‘தன்னவன்’ என்னும் கர்வம் இயல்பாகவே வந்துவிட்டது.
பெற்றவர்களோடு இணைந்ததோடல்லாமல், அவர்களும் சம்மதம் சொல்லி திருமண ஏற்பாடும் நடக்கவிருக்கிறது. அதுவொன்றே அவளது மற்ற சஞ்சலங்களை மறக்க செய்தது. அவளது மனமும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது.
“நாளைக்கு நாங்க தம்பிகிட்ட பேசலாம்ன்னு இருக்கோம் தாமரை” என அன்னை கூற, புன்னகையோடு தலையசைத்தாள் மகள்.
இரவு உறங்குவதற்கு முன்பு செந்தாமரை வெற்றிச்செல்வனை அழைக்க, “உதை வாங்கப் போற பாத்துக்க… இன்னொரு முறை அந்த டீச்சர், டீச்சர்ன்னு வாயை திறந்தீனா?” என்று அழைப்பை ஏற்றதும் எரிந்து விழுந்தான் வெற்றிச்செல்வன்.
தென்னந்தோப்பு குடிசைக்குச் சென்று வந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கடந்த இரண்டு தினங்களாக கைப்பேசி அழைப்பு விடுப்பதும், “அந்த டீச்சரை ஹாஸ்பிடல்’ல சேர்த்துட்டீங்களா?, எப்போ சரியாகும்ன்னு சொன்னாங்க?, எதுவும் பிரச்சனை வராதே?” என்று கேள்வியாய் கேட்டு குடைவதால் இன்று அழைப்பை ஏற்றவுடன் கத்தியிருந்தான்.
ஆனால், மூன்று நாட்களாக அதில் மட்டுமே உழன்றவள், இன்று திருமண பேச்சுவார்த்தை வந்ததில் தான், அந்த விஷயத்தை மறந்து இலகுவாகி இருந்தாள். தன்னவனோ மீண்டும் அதே விஷயத்தையே கிளற, அவளிடம் நிசப்தம் மட்டுமே பதில்.
[the_ad id=”6605″]
பதில் எதுவும் வராததால், “லைன்’ல இருக்கியா?” என்று கடுப்பான குரலில் கேட்டான் வெற்றி.
“ஹ்ம்ம்…”
“என்ன இப்ப கோபம்? நான் இல்லாததையா சொன்னேன்? என்கிட்ட பேசவா போன் பண்ண போற” என்று சாதாரண குரலில் பேச தொடங்கிடவன் கொஞ்சம் ஸ்ருதியை ஏற்றி, “அந்த பொ*** பத்தி பேசத் தானே போன் பண்ணற?” என்றான்.
‘இது நல்ல கதையா இருக்கே, இவரு மட்டும் நம்ம கிட்ட போன் பண்ணி மணிக்கணக்கா பேசறாரா?’ என மனதிற்குள் நினைத்து நொடித்துக் கொண்டாள்.
அதோட அவனது வார்த்தை வேறு தடிக்கவும், “ஸ்ஸ்ஸ்… வெற்றி… முதல்ல இப்படியெல்லாம் கத்தி கத்தி பேசாதீங்க. அதுவும் பேட் வேர்ட்ஸ் என்கிட்ட வரவே கூடாது” என்றாள் கட்டளையான குரலில்.
“ஏன் ஏன்… அது இந்த ஊருல யூஸ் பண்ணற சாதாரண பேட் வேர்ட் தான். நான் அப்சர்வ் பண்ணியிருக்கேன். அதை பேசினா என்ன?” என்று மறுத்து வாதாடினான்.
“யாரோ பேசினா நீங்களும் பேசுவீங்களா? அதுவும் என்கிட்டேயே? நீங்க ஊர்த்தலைவர்’ன்னு உங்களுக்கு ஞாபாகப் படுத்திட்டே இருக்கணுமா? இந்த பழக்கம் தான் எப்பவும் தொடரும்… நாளைக்கு குழந்தைங்க முன்னுக்கும் இப்படியே பேசுவீங்க. குழந்தைகளும் உங்களால கெட்டு போவாங்க. எங்க அப்பா, அம்மா எல்லாம் எங்க முன்னாடி கெட்டவார்த்தை பேசவே மாட்டாங்க தெரியுமா?” ஆதங்கமும், ஆவேசமுமாகச் செந்தாமரை படபடத்தாள்.
திருமணத்திற்கு பெற்றவர்கள் பேசினார்கள் என்பதை சொல்ல வந்தவள், பிள்ளை குட்டிகளை வளர்ப்பது தொடர்பாக வருங்கால கணவனுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.
அவள் பேசிய தினுசில் வெற்றி சிரிக்க, “என்ன?” என்றாள் குழப்பமாக.
[the_ad id=”6605″]
“இல்லை முதல்ல குழந்தைகளை பெத்துக்குவோம். அப்பறம் எப்படி வளர்க்கிறதுன்னு பேசிக்கலாம்” என்றான் சிரிப்பினூடே. அப்பொழுதே தான் பேசியதன் அர்த்தம் விளங்க முகம் சூடாகிச் சிவந்து போனது மங்கைக்கு.
அதை உணர்ந்தவன் போல, “மாஹி…” என்றான் சரசமாக.
அவனது குரலின் மாற்றத்தில் சுதாரித்துக் கொண்டாள் அவனின் காதலி. அதைத் தொடர விடும் தைரியம் இல்லாததால், “அச்சோ… நான் சொல்ல வந்ததையே மறந்துடுவேன். அப்பா, அம்மா நம்ம கல்யாண விஷயமா என்கிட்ட பேசினாங்க. நாளைக்கு உங்ககிட்டேயும் பேசுவாங்கன்னு நினைக்கிறேன். எனக்குத் தூக்கம் வருது நான் வெக்கிறேன் பை…” என படபடவென பொறிந்துவிட்டு, அதே வேகத்தில் அழைப்பையும் துண்டித்த பிறகே நிதானித்தாள்.
‘ச்ச என்ன எல்லாம் பேசி வெக்கிறேன்…’ என தன் பேச்சை நினைத்து அவளுக்கே சங்கடமாக இருந்தது.
அதற்குள் வெற்றி மறுபடியும் அழைத்திருந்தான் வீடியோ காலில். விழி விரித்தவள் எடுக்க முடியாது என்பது போல முரண்டு பிடித்து தலையை இட வலமாக அசைத்தாள். என்னவோ அவன் எதிரில் இருக்கும் நினைப்பு போல!
‘போன் எடுக்கலை. காலையில அங்க இருப்பேன்’ என்ற எச்சரிக்கையான செய்தியோடு குறுஞ்செய்தி அனுப்பினான்.
‘போன் பண்ணறேன்’ என டீல் பேசினாள். இப்படி இரவு உடையைப் போட்டுக் கொண்டு அவனிடம் எப்படி வீடியோ காலில் பேசுவாள்? அவள் சங்கடம் அவளுக்கு.
அவன் அடம் செய்தான். முடியவே முடியாது என்பதாக. தயங்கித் தயங்கி வீடியோ கால் செய்தாள். அவன் முகம் பார்க்க வேறு சங்கடமாக இருந்தது.
“என்னவோ சொன்னியே, இப்ப சொல்லு” என்றான் நிதானமாக.
“என்ன?” என்றாள் தயக்கமாக, எதைக் கேட்கிறான் எனப் புரியாமல்.
“முதல்ல என் முகத்தைப் பார்த்துப் பேசு. அதுக்கு தானே வீடியோ கால்” திருமண விஷயத்தை எத்தனை நாட்களாக எதிர்பார்க்கிறான். இவளானால், வேக வேகமாகக் கொட்டி, பதில் கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்து விட்டாளே! அப்படியென்ன அவசரம்? என்னும் எண்ணம் அவனுக்கு.
“எதை சொல்லணும்” என்றாள் சற்றே அவன் முகத்தைப் பார்த்தபடி.
“உன் அம்மா, அப்பா என்ன சொன்னாங்க?” என்றான் ஆர்வமாக.
நாணச்சிரிப்பும், நாணத்தினால் சிவந்த கன்னங்களும் அவளது முகத்தை அலங்கரித்திருந்தது. அதன்பிறகு அவர்கள் பேசி முடித்து உறங்கிய பொழுதை இரவும், நிலவும் பார்க்கவில்லையாம். விடியலின் பனித்துளி அறிந்திருக்குமோ என்னவோ?
அதன்பிறகு வந்த நாட்களில் திருமண வேலைகள் ஒருபுறம் வேகமெடுக்க, வெற்றிச்செல்வன் தங்கள் மில்லில் எந்த குளறுபடிகளும் வராமல் பார்த்தபடி, மாரியப்பனுக்கு தொல்லை தந்தான்.
[the_ad id=”6605″]
மாரியப்பனுடைய நிழல் தொழில் வெற்றியின் யோசனையால் வெளிச்சத்திற்கு வந்தது. ஏற்கனவே ஊர்த்தலைவராக இருந்தபொழுது செய்த ஊழல்கள், பரமேஸ்வரனால் வெட்ட வெளிச்சமாகியிருக்க, அதனால் பல சொத்துக்களும் முடங்கியிருந்தது. அப்பொழுதே சிறைவாசம் வேறு அனுபவித்திருக்க… இப்பொழுது இருக்கும் ஒரே பிடிப்பு இந்த தொழில் தான்.
கிட்டத்தட்ட இந்த டிராவல்ஸ் தொழிலும் (டிராவல்ஸ் என்ற பெயரில் நடக்கும் விபச்சார தொழில்) இல்லாவிட்டால் மாரியப்பனுக்கு மொத்தமும் காலி என்னும் நிலை. இப்பொழுது இந்த தொழிலும் காவலில் பிடிபட, இதுபோன்ற பிரச்சனையில் மாட்டியது வேறு அவமானம் தாங்க முடியாமலிருக்க, நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தான்.
பஞ்சாபிலிருந்து வெற்றியின் திருமணம் குறித்துப் பேசுவதற்கு அவனது அன்னை மஞ்சுளாவும், தம்பி முத்துக்குமாரும் சேலத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தான் திருமண வேலைகள் அனைத்தையும் பொறுப்பேற்றிருக்க,
வெற்றி எந்த நிர்ப்பந்தமும், இடைஞ்சலும் இல்லாமல் மாரியப்பனின் விஷயத்தில் முழு வீச்சாக நடப்பதை கண்காணித்து வந்தான். வெற்றி ஏற்பாடு செய்தது போலவே மாரியப்பனின் சந்தேகம் இவன் புறம் திரும்பவே இல்லை.
ஏனென்றால், மாரியப்பன் பணம் தந்து விலைக்கு வாங்கிய ஆட்களை வெற்றிச்செல்வன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதாவது கண்டுபிடித்து தண்டனை தரவோ, வெளியே அனுப்பவோ இல்லை. அதோடு வெற்றியே தன் வாடிக்கையாளர்களை வைத்து, ‘உங்கள் மில்லிலிருந்து வந்த அரிசி தரமானதாக இல்லை. எங்களுக்கு உங்களிடமிருந்து நஷ்ட ஈடு வேண்டும். காண்ட்ராக்ட் கேன்சல் செய்து விடுகிறோம்’ என்பது போல போலியாகச் சண்டை போட வைத்திருக்க, வெற்றி அந்த பிரச்சனையில் உழல்வது போல மில்லில் காட்டிக் கொண்டான். இப்பொழுது அவனுக்குத் திருமணம் வேறு நிச்சயமாகியிருக்க, இத்தனை அலைச்சலில் இருப்பவனால் இப்படி திட்டம் தீட்டி மாட்டிவிட இயலாது என மாரியப்பன் உறுதியாக நம்பினான்.
அதோடு மாரியப்பனுக்கு விரோதிகளும் அதிகம். அதனால் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த படியே தன் ஆட்களை முடக்கி விட்டிருந்தான். யார்? என்ன? என்று கண்டுபிடிக்கச் சொல்லி.
அனைத்து விஷயங்களும், மாரியப்பனைச் சுற்றி நடக்கும் சிறு சிறு நகர்வுகளும் வெற்றிச்செல்வனின் கவனத்திற்கு வந்தபடி தான் இருந்தது. அதற்குத்தக்க முன்னேற்பாடுகளையும் செய்து கொண்டு தான் இருந்தான்.
வெற்றிச்செல்வன், செந்தாமரையின் திருமணம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவாகியிருந்தது. அதுகுறித்து கூட எதிலும் தலையிடாமல் இந்த வேலைகளில் தான் முழுவதுமாக ஈடுபட்டிருந்தான். செந்தாமரையுடனான பேச்சுக்கள் கூட வெகுவாக குறைந்திருந்தது. அவளுக்கு மிகவும் ஏமாற்றம். ஆனால், எதையும் காட்டிக்கொள்ளவும் இல்லை. நம் நினைவே இருப்பதில்லை? எப்படி? எனப் புரியாமல் தவித்தாள். திருமணம் நிச்சயமான பெண்களுக்கு இருக்கும் சாதாரண ஏக்கம் தான். ஆனால், அவன் இருக்கும் சூழலில் அவனுக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை.