கோபத்தில் செந்தாமரையின் வார்த்தைகள் வரைமுறையின்றி பயணித்துக் கொண்டிருந்தது வெற்றிச்செல்வனுக்கு ஆயாசமாக இருந்தது.
“ஸ்டாப் இட் செந்தாமரை. தேர் ஈஸ் எ லிமிட் பார் எனிதிங் அண்ட் எவெரிதிங்…”
“கோபப்பட்டு சமாளிக்காதீங்க… எனக்கு நீங்க செய்யறதை எல்லாம் யோசிச்சு பார்க்கவே பயமா இருக்கு? என்ன செய்யறீங்களோ? அதோட பின் விளைவு என்னவோ? எதையும் யோசிக்காம எப்படி உங்களால இவ்வளவு தூரம் இறங்க முடியுது…” இத்தனை நேரமும் இரைந்து கொண்டிருந்தவள், அழவே தொடங்கி விட்டாள்.
சூழல் கையை மீறி போவதாகவே அவனுக்குத் தோன்றியது. எதையாவது தெளிவாகக் கேட்க வேண்டும். இல்லை என்னையாவது பேச விட வேண்டும். இரண்டும் இல்லாமல் ஏன் இப்படிச் செய்கிறாள்?
மொத்தத்தில் சண்டையை வளர்க்க அவன் விரும்பவில்லை. இப்பொழுது அவள் தன்னிலை மறந்து அரற்றிக் கொண்டேயிருக்க… இந்த நிலையில், சண்டை வளருமே தவிர, பேச்சுவார்த்தைகள் நடக்காது என்று தோன்ற,
“ப்ளீஸ் செந்தாமரை… எதுவா இருந்தாலும், அப்பறம் பேசுவோம். இப்ப நீ வீட்டுக்கு கிளம்பு…” என்று தன்மையாகச் சொல்ல,
“பாருங்க… இப்பவும் என்னைச் சமாளிக்கத் தான் பார்க்கறீங்க…” என்று தேம்பினாள்.
[the_ad id=”6605″]
பெருமூச்சை விட்டவன், “சரி வா… இங்க வந்து உட்காரு… கொஞ்சம் தண்ணி குடி… எதுவா இருந்தாலும் தெளிவா பேசினா தான் புரியும். நீ இப்படி தலையும் புரியாம, வாலும் புரியாம பேசினா… என்னால என்ன செய்ய முடியும்” என்று அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தவன், குடிக்க நீர் எடுத்துத் தர அமைதியாக குடித்தாள்.
தண்ணீரைப் பருகியதும், “ஏன் இப்படி எல்லாம் செய்யறீங்க?” என மீண்டும் அழுகையோடு கேட்க,
“ம்பச்…” என்றவன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான். “முதல்ல அமைதியா நான் சொல்லறதை கேளு… எனக்குக் கொஞ்சம் முரட்டு சுபாவம் தான். அது என்னையும் அறியாம வந்துடுச்சு. எங்க கேங்’ல நான் மட்டும் தான் எல்லாருக்கும் பெரியவன்… கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷம்… அதுனால எல்லாரும் என்னோட பொறுப்பு அப்படிங்கிற கடமை எனக்கு எப்பவுமே இருக்கும். யாருக்கு என்ன பிரச்சனைன்னாலும் நான் தான் முன்ன நிப்பேன்… அப்படித் தொடங்கி, இப்ப இப்படி வந்து நிக்குது.
நான் கோபக்காரன். என் கோபத்தால சுலபமா மத்தவங்க மேல கை வெக்கிறதும் நடக்கும். பஞ்சாப்’ல இருந்தப்ப கூட கம்மி… இங்க வந்து… அந்த மாரியப்பன் அனுப்பற ஆளுங்களை பேஸ் பண்ணி பேஸ் பண்ணி… நல்லாவே முரடாயிட்டேன். இனிமே முடிஞ்சவரை குறைச்சிக்கிறேன். எனக்கும் புரியுது என்னோட புரொபெஷனுக்கு இது சரி வராது. சரி இப்ப அவங்களை அடிச்சதால என்ன பிரச்சனை? அவங்க காணாம போயிட்டாங்களா? அந்த டீச்சர் ஸ்கூலுக்கு வரதில்லை. எங்கே போணானும் தெரியலைன்னு சொன்னாங்க. எல்லாத்தையும் பேஸ் பண்ண பயந்து ஓடிட்டான்னு நினைச்சேன். அந்த சுந்தரேசனையும் காணோமா?”
இதுவரை மனைவி பிய்த்துப் பிய்த்து உளறியதைக் கோர்த்து அவளிடம் கேட்டான்.
‘எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல பேசுவதைப் பார்’ என அவள் மனம் முரண்டியதே தவிர, அவனின் கூற்றையும் கேட்போம் என்ற எண்ணம் அவளுக்கு துளியும் வரவில்லை. இத்தனை நாட்களும் அவன் அவளைக் கொஞ்சமேனும் தேடியிருந்தால், அந்த ஆசுவாசத்தில் இவள் கண்டதையும் போட்டுக் குழப்பி வைத்திருக்க மாட்டாள்.
இவனோ இவனையும் அறியாமல் ஒதுக்கம் காட்டியிருக்க, அதில் இவளுக்குள் இருந்த சிறு சிறு சந்தேகங்கள் எல்லாம் விருட்சமாய் வளர்ந்து நின்றது. இப்பொழுது இவனின் பொறுமையான, புரிய வைக்கும் விதமான பேச்சிலும் கூட தன் சந்தேகங்களை அவளால் அழிக்கவோ, மாற்றவோ இயலவில்லை என்பதுதான் சோதனை.
நீரை அருந்தியும், அமைதியாக அமர்ந்தும், அவனது தெளிவான பேச்சைக் கேட்ட பிறகும் அவளது கோபம் தணியவில்லை. ஆனால், தற்காலிகமாக மட்டுப்பட்டது. அதனால், அவன் கேள்விக்கு நிதானமாகவே பதில் தந்தாள்.
“ஆமா…” என்று மட்டும் சொன்னவள், ‘ஏன் உங்களுக்குத் தெரியாதா?’ என்னும் கேள்வியை வெகு சிரமப்பட்டு அடக்கினாள்.
“சரி அவங்க காணாம போனத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” பொறுமையாகவே கேட்டான்.
அவள் விழிகள் அவனைக் கோபத்தில் உறுத்து விழிக்கவும், “ம்ப்ச்… கேட்டா பதில் சொல்லு. இந்த கேள்விக்கெல்லாம் கோபம் வருமா உனக்கு? இங்க அந்த டீச்சர் அவமானம் தாங்காம ஓடிப்போன மாதிரி, அங்க அவனும் அவமானம் தாங்காம ஓடி இருக்கலாம் இல்ல? அவனையும் செம காட்டு காட்டிட்டேன். அதுவும் ஊர் ஜனங்க முன்னாடியே…” சுந்தரேசனுக்கும் ஊரை விட்டு ஓடிப் போவதற்குக் காரணம் இருக்கிறது என விளக்கினான்.
வெற்றியின் இந்த பொறுமை அரிதிலும் அரிது. மனைவியைத் தனிமையை உணர வைத்து விட்டோமே என்னும் தவிப்பும், திருமணமான சில நாட்களிலேயே அவள் கண்முன்னே கசப்பான எதிர்காலம் விரிந்து விட காரணமாகி விட்டோமே என்று மனதில் எழுந்த குற்றவுணர்வும்… அவனுக்கு இந்த நேர பொறுமையைப் பரிசளித்திருக்கிறது.
ஆனால், செந்தாமரை அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று விதி இருக்கையில் யார் என்ன சொல்லிவிட முடியும்?
கணவனின் இந்த விளக்கத்திற்கும் எள்ளலாய் ஒரு பார்வை பார்த்தாள்.
[the_ad id=”6605″]
அவளின் விழியின் உணர்வுகளைச் சரியாகப் படித்தவன், அதன் பின்னால், அவளது நம்பகமற்ற தன்மை இருப்பதை உணர்ந்தான். அவனது இதயத்தில் சுரீரென்று ஒரு வலி.
‘என்னை இவள் நம்ப மறுக்கிறாளா?’ மனம் அந்த கோட்டைத் தாண்டி பயணிக்க மறுத்தது.
அவளையே உறுத்து விழித்தானே தவிர மேற்கொண்டு அவளிடம் எந்த கேள்விகளையும் கேட்கவில்லை. விளக்கங்கள் சொல்லவும் முயற்சிக்கவில்லை.
ஆனால், அவள் மௌனம் களைத்தாள். எள்ளல் விழிகளில் நடனமாடியது போதாமல் வார்த்தைகளிலும் நடனமாடியது.
“அதெப்படி அவங்க எல்லாம் ஊரை விட்டு ஓடிப்போகக் காரணம் இருக்கா..? ஹ்ம்ம்… யோசிச்சுப் பார்த்தா, அந்த காரணம் கூட நீங்க உருவாக்கினது போல தெரியுது. பிரில்லியண்ட் பிளே!” எனத் தனது புத்திக்கூர்மையை நிரூபித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், பாவம்… அவளது புத்தி தவறான பாதையில் வீரியமாகச் செயல்படத் தொடங்கியிருந்தது.
கணவன் யோசனையாகப் பார்க்க, “இந்த டீச்சரை யாருக்கும் தெரியாம தான் அடிச்சீங்க. ஆனா அவன் கையை உடைச்சு விட்டிருக்கீங்க. அதை எப்படின்னு நம்மாளுங்க துப்பு துலக்கி… அவன் வண்டவாளம் எல்லாம் வெளிய தெரிஞ்சிடுச்சு… அதுல அவமானப் படாம இருக்க முடியுமா என்ன?
ஹ்ம்ம்… அப்பறம் அந்த சுந்தரேசன் சொந்த ஊரிலேயே அடி வெளுத்திருக்கீங்க. அப்படி செஞ்சா ஊருக்காரங்களால நிறைய பிரச்சனை வரும்ன்னு தெரிஞ்சும் செஞ்சிருக்கீங்க. அப்படின்னா… அதுக்கும் அவனை அவமானப் படணும்ன்னு உங்க திட்டம் இருந்திருக்கணும் தான?”
வெற்றி வாயைப் பிளந்தான். இப்படி இவள் காரணங்களைத் தெளிவாக, முறையாக, பிசிரின்றி அடக்கினால், எனக்கே நான் தான் தவறு செய்வதாகத் தோன்றி விடுமே! என எண்ணம் வந்தது.
அவனது முகபாவனையைத் தப்பாக அர்த்தம் கொண்டவள், “என்ன எப்படி கண்டுபிடிச்சேன்னு யோசிக்கறீங்களா? இந்த டீச்சர் ஊரைவிட்டு போகலாம் அவன் பிழைப்பு தேடி வந்தவன்… ஆனா அந்த சுந்தரேசன் என்ன தான் ஊரை விட்டுப் போனாலும்… அது அவன் சொந்த ஊர்… நிச்சயம் கண்காணிச்சுட்டு தான் இருந்திருப்பான். அதாவது அவனா ஊரை விட்டு போயிருந்தா…
ஆனா, அப்படி எதுவும் நடக்கலை. அவனோட அப்பா, அம்மா ஒரு விபத்துல இறந்ததுக்கு கூட அவன் வரலை” முகம் தொங்கிப் போய் கூறினாள். என்ன இருந்தாலும், பெற்றவர்களுக்கு கொல்லி வைக்க முடியாமல் போவதும், பெற்ற மகன் கொல்லி வைக்க கூட இல்லாமல் போவதும் எத்தனை கொடுமை! அவள் மனம் அவர்கள் செய்த பாவத்தையும் மீறி பரிதாபம் கொண்டது.
வெற்றியும் செந்தாமரையின் முகவாட்டத்தைக் கவனித்து விட்டான். அவர்கள் மூவரும், இவள் குடும்பத்திற்கும், சகோதரிக்கும் செய்த கொடுமைகள் என்ன? அதை மீறியும் அவர்களுக்காக வருந்துகிறாளா? பெண்களின் இந்த இளகிய குணம் பேராபத்தாய் அவனுக்கு தோன்றியது.
ஒரு பெருமூச்சை விட்டவன், “தெரியலை. நீ சொன்னதெல்லாம் சரியா பொருந்துது. இப்ப எனக்குமே… அவங்க ஓடித் தான் போனங்களான்னு சந்தேகம் வருது. ஆனா, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றான் உறுதியாக.
நம்பும் நிலையிலா அவள் இருக்கிறாள்? கோபத்தில் வளர்ந்த சந்தேக விதையாயிற்றே! இப்பொழுது அசைக்க முடியாத மரமாக மாறியிருந்தது.
“என்னை நம்ப சொல்லறீங்களா?” அவனை நேருக்கு நேராகப் பார்த்துச் சீறினாள்.
வெற்றியின் பார்வை கூர்மையானது. அவளையே ஆழ்ந்து பார்த்தவன், “என் மேல நம்பிக்கை இல்லையா…?” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தான்.
செந்தாமரை இங்குத் தவறிழைத்தாள். அவனின் விறைப்பான தோற்றத்தில், கூர் பார்வையில், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பில் சுதாரிக்க மறந்தாள். அவனின் மாறுதல்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு அவள் கோபம் பெரிது. அவ்வளவே! அவளது மனவுளைச்சல் அந்த எல்லையில் தான் அவளை நிறுத்தி வைத்தது. “ஆஹான்… தாராளமா… ஏன் நம்பிக்கை இல்லாம? நீங்க தான் இந்த தகிடுதத்தம் செய்யறீங்கன்னு எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு” முரணாகப் பதில் கூறி அவனது பொறுமையை, நிதானத்தை இழக்கச் செய்தாள்.
[the_ad id=”6605″]
பதில் சொன்னது மட்டும் தான் தெரியும்! வெற்றியின் தனது வலக்கரத்தை பின்னால் இருந்த சுவற்றில் ஓங்கிக் குத்தியிருந்தான்.
இருக்கையில் அமர்ந்திருந்தவள் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள். நிச்சயம் அடி பலம் தான் அதில் சந்தேகமே இல்லை. ‘இவன் நல்லதிற்காக தானே சொல்கிறேன். ஏன் இந்த கோபம்?’ பைத்தியம் போல அந்த சூழலிலும் தன் பிடியிலேயே நின்றாள்.
அவனது செய்கையில் பதறியவளாக, “வெற்றி…” எனக் கண்ணீர் வழிய அழைக்க,
“ஸ்ஸ்ஸ்…” என்றான் உறுமலாய்!
“உங்க நல்லத்துக்கு தானே கேட்கிறேன்!” என்றவள் அழுக,
“ஸ்ஸ்ஸ்… நாட் ஈவேன் எ சிங்கிள் வோர்ட்…” எனக் கடுமையாக எச்சரிக்கை விடுக்க, அவள் வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கியது.
“இனியொரு முறை உன்னை நான் பார்க்கக் கூடாது. என் கண்ணு முன்னாடி நிக்காத போயிடு…” வேட்டையாடக் காத்திருக்கும் விலங்கின் உறுமல் குரலில் அவன் கத்த,
அவளுக்குச் சப்தமும் அடங்கியது! ‘என்ன வார்த்தைகள் இது?’ கண்ணில் நீர் நிற்காமல் வழிந்தோடியது.
“ஸ்ஸ்ஸ்… இப்ப நீ இங்கிருந்து கிளம்பலை…” என ஆக்ரோஷமாக அவன் சொல்லி அருகில் வேறு நெருங்கி வர,
மிரண்டவள் பின்னால் கூட நகர முடியாமல் நாற்காலி தடுத்தது.