பால்கனியில், இரவு வானத்தில் எதையோ தேடுபவன் போல வெறித்துக்கொண்டு, கைகளை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான் ஆதி.
“வெறுந்தரையில ஏன்டா படுத்துருக்க?” என கேட்டுக்கொண்டே கோகுல் அங்கே வர, தன் தேடலை நிறுத்தாதவன், “சும்மா தான்” என்றான் மெல்ல.
ஆதியின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்தான் கோகுல்.
“பசிக்குது! சாப்பிடலாம் வா!”
ஆதி, “நீ சாப்பிடு, நான் அப்பறமா வரேன்” என்றிட, அயர்வாய், ‘உப்ப்’ என வாய்வழி பெருமூச்சு விட்ட கோகுல், “நானே கண்ணு வச்சுட்டேன் போல மச்சி!” என்றான்.
அவன் கூற்று விளங்காமல் போக, “என்னடா சொல்ற?” என்றான் ஆதி.
கோகுல், “நானே எத்தனை முறை கேட்டுருப்பேன் உன்கிட்ட? எப்பவும் எல்லா பிரச்சனைக்கும் இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்க உன்னால மட்டும் எப்படி முடியுதுன்னு?” என்றவன்,
“இன்னைக்கு ஒரு நாள் உன்னை ‘உம்முன்னு’ பார்க்கவே அவ்வளோ கஷ்டமா இருக்குடா எனக்கு! நான்தான் கண்ணு வச்சுட்டேன் போல” என்றான் வருத்தமாய்.
எழுந்து அமர்ந்து கோகுலை தோளோடு அணைத்த ஆதி, “என்னடா ஃபீல் எல்லாம் பண்ற?” என்றான் சிரிப்பை முகத்தில் வரவழைத்து.
செயற்கையாய் தனக்காக சிரிக்கும் நண்பனை கண்ட கோகுல், வருத்தமாய் முறுவலிக்க, “ஆல் இஸ் வெல்… தட் என்ட்ஸ் வெல்’ன்னு ஒரு பெரிய மகான் சொல்லிருக்காரு! அந்த மகான் யாருன்னு கேட்டுடாத! எனக்கு தெரியாது” என்ற ஆதி,
“இதுவரைக்கும் நான் பண்ண கலாட்டால யாரும் பாதிக்கப்பட்டது இல்லை! அப்படிதான் நினைக்குறேன்! முதல்முறை பாதிக்கப்பட்ட ஒருத்தனை பார்த்துட்டு அதை ‘ஈஸி’யா கடந்து வர எனக்கு மனசு வரலை! அவனோட வலி என்னன்னு தன்யா ஏற்கனவே என்க்கிட்ட நிறைய சொல்லிருக்கா! இப்ப அவனை நேருல பார்த்த பிறகு, மனசு ஒருமா…..திரி…..!!!” என ஆதி மேற்கொண்டு பேச முடியாது, தன் நெஞ்சை நீவியபடி வெளியை வெறிக்க, ஆதரவாய் அவனை பிடித்துக்கொண்டான் கோகுல்.
“க்க்கும்…!!” மெலிதாய் குரலை செருமி தன் வரவை பதிந்தார் ஜெயதேவ். இருவரும் திரும்பி அவரை பார்க்க, “வாங்க அங்கிள்” என்ற கோகுல், அவர்களுக்கு தனிமை கொடுத்து எழுந்து வெளியே சென்றான்.
அமைதியாய் வந்து ஆதியின் அருகே அமர்ந்துக்கொண்டார் ஜெயதேவ். ஆதியும் தந்தை ஏதேனும் பேசுவார், குறைந்தபட்சம், தான் செய்ததற்கு ‘திட்டுவார்’ என எதிர்ப்பார்க்க, இரவின் வெளிச்சத்தில் அவர் கண்கள் பளபளத்தது போல தோன்றியது அவனுக்கு.
சந்தேகத்துடன் ஆதி, ‘ப்பா…?’ என அவர் தோள் தொட, சட்டென மறுபுறம் திரும்பி தன் கண்ணோரத்தில் துளிர்த்திருந்த இருதுளி நீரை தன் கட்டைவிரல் கொண்டு சுண்டி விட்டிருந்தார் ஜெயதேவ்.
[the_ad id=”6605″]
தந்தையின் கலக்கத்தை முதல்முறையாய் கண்டதும் பதைபதைத்து அவரை நெருங்க, “ஒன்னும் இல்ல… ஒன்னும் இல்ல” என்றார் இயல்புபோல.
“என்னப்பா?” என்ற ஆதிக்கு குற்றவுணர்வு அதிகரித்திருந்தது.
தன் கலக்கத்தை மறைக்க, வான்வெளியை வெறித்து, ஆழ மூச்செடுத்தவர், “இதுவரைக்கும் உன்னை எல்லாத்துக்கும் நான் திட்டிட்டே தான் இருந்துருக்கேன்! அதுக்காக உன்மேல எனக்கு பாசம் கிடையாதுன்னு இல்ல ஆதி!” என்று சொல்ல,
“ப்பா…? எனக்கு தெரியாதா?” என்றான் சிறு கோபமாய்.
“இன்னைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போற சந்தோசத்தை விட, என்னோட நண்பன் இனி காலத்துக்கும் என்னோட உறவா இருப்பான்! காலம் கடந்தும் எங்க நட்பு உறவா மாறி சந்ததி சந்ததியா தொடரும்ன்னு ரொம்ப சந்தோசமா இருந்தேன்! அவனும் தான்!” என்றவர் நிறுத்தி,
“எங்க ஆசை எல்லாம் இப்படி ரெண்டே நாள்ல நிராசையா போகும்ன்னு நினைக்கல ஆதி! இத்தனை வருஷமா வீம்பு பிடிச்சுக்கிட்டு பேசாம இருந்தோம்! எதுடா சாக்கு கிடைக்கும், ஒண்ணா சேரலாம்ன்னு இருந்த எங்களை என்ன என்னவோ ‘டிராமா’ போட்டு சேர்த்து வச்சீங்க!” என்று அவர் சொல்ல,
தாங்கள் நடத்திய நாடகத்தை அவர் அறிந்துக்கொண்டார் என்பதில் திகைத்து, “ப்பா…?” என்றான் ஆதி.
“என்னடா? இத்தனை வருஷமா உங்களை பார்க்குற எனக்கு, நீங்க செய்யுற ‘தகுடு தத்தம்’ தெரியாதுன்னு நினைச்சீங்களா?” என்றார் குறும்பாய் சிரித்து.
அசடு வழிய ஆதி தலைகுனிய, அவனை தோளோடு அணைத்தவர், புன்னகை மறைய “பயமா இருக்கு ஆதி! எங்க ராஜாவை இதோட இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு” என்றார் உண்மையான கலக்கத்துடன்.
ஆதி கலக்கமாய் பேசும் தன் தந்தையை வியப்பாய் பார்த்துக்கொண்டிருக்க, “என்னடா நம்ம அப்பா, பையன் கல்யாணம் நின்னதை விட, ஏதோ பிரண்ட்ஷிப் போச்சேன்னு ஃபீல் பண்றாறேன்னு என்னை மனசுக்குள்ள திட்டுறியா?” என்றவர் கேட்க,
“ச்சே ச்சே” என ஆதி மறுக்கும் முன், “நானும் ராஜாவும் சின்ன வயசுல விவரம் தெரிஞ்சதுல இருந்தே பிரண்ட்ஸ் ஆதி! நட்பையும் தாண்டி எங்களுக்குள்ள ஒரு நல்ல பாண்டிங் இருந்துச்சு!” என்ற ஜெயதேவ் ஒரு நொடி நிறுத்தி, பின்,
“எந்த ஒரு உறவுக்குள்ளையும் ‘ஈகோ’ மட்டும் வந்துடவே கூடாது! அப்படி வந்துட்டா அது ரொம்ப நாள் நீடிக்காது! யார் முதல்ல இறங்கி வரதுங்குற ‘வீம்பு’லயே இத்தனை வருஷத்தை வீணடிச்சுட்டோம்! இனி கடைசி காலத்தையாவது நாங்க பழைய நட்போட தொடரனும்ன்னு நேத்து கூட அவன் கிட்ட பேசிட்டு இருந்தேன்! ஆனா, அதுக்குள்ள….” என்றார் கண்கள் பனிக்க.
ஆதிக்கு எந்த விதத்தில் ஆறுதல் கொடுப்பது என விளங்கவில்லை. ‘எல்லாம் சரியாகிவிடும்’ என நம்பிக்கை கொடுக்க ஒரு நொடி கூட ஆகாது. ஆனாலும், சொன்ன வார்த்தையை நடத்திக்காட்டும் வழி இன்னும் அவனுக்கு கிட்டவில்லையே!?
மதுதேவா மெல்ல அந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் அரவம் உணர்ந்து இருவரும் திரும்ப, “அண்ணனும் அண்ணியும் காலைல இருந்து ‘கால்’ பண்ணிட்டே இருக்காங்க! இன்னைக்கு நடந்தது எதுவும் அவங்களுக்கு தெரியாது! என்ன பண்ணட்டும்?” என்றிட, ஆதி ஜெயதேவை நோக்கினான்.
ஜெயதேவ், “அம்மாவை பேச சொல்லு”
மது, “அம்மா பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க!”
“என்னாலையும் பேச முடியாது” என்றார் ஜெயதேவ்.
ஆதி தான், “நீயே பேசிடு மது! பங்க்ஷன் நல்லவிதமா முடிஞ்சுது, போட்டோஸ், வீடியோஸ் எல்லாம் பொண்ணு வீட்ல எடுத்தாங்க, அப்பறமா வாங்கி அனுப்புறேன்னு சொல்லு! எல்லாரும் டையர்ட்ல தூங்குறோம்ன்னு சொல்லு” என சொல்ல,
“ம்ச்! ஹி வோன்ட் பிலீவ்!” என்றாள் மது சோர்வாய்.
ஆதி, “வேற வழி இல்லை! நம்புறமாறி பேசு!” என்றதோடு முடித்துவிட்டான்.
ஜெயதேவ் அவன் தோள் தட்டியவர், “நீ செய்யுறதையெல்லாம் குறை சொல்லியே பழகிட்டேன்! பட், பார் த பர்ஸ்ட் டைம், ஐ சப்போர்ட் யூ!” என்றுவிட்டு எழுந்துக்கொண்டார்.
“நாளைக்கு மார்னிங் பிளைட்ல நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்! அங்க எல்லாம் அப்படியே இருக்கு!” என்றுவிட்டு ஒரு குறுநகையுடன் நகர்ந்துவிட்டார் ஜெயதேவ்.
தந்தையின் இந்த அனுசரணையான பேசும், கலங்கிய தோற்றமும் முற்றிலுமாய் அவனுக்கு புதிது! அதிலேயே அவன் தடுமாறி நிற்க, அடுத்த சில நிமிடங்களில் அவனருகே வந்தார் தெய்வானை.
“ஆதி கண்ணா, நாளைக்கு காலைல கிளம்பனும்ன்னு அப்பா சொன்னாரு! நீ நல்லா சாப்புடு! உடம்பை பார்த்துக்கோ!” என்றார்.
இயல்பாய் சிரிக்க முயன்றான் ஆதி.
அடுத்து எதையோ சொல்ல அவர் முயல்வதும் தயங்குவதுமாய் இருக்க, எப்போதும் ‘பட் பட்’டென பொரிந்துத்தள்ளும் அன்னையின் தடுமாற்றமும் ஆதியை நிலையின்றி தவிக்க வைத்தது.
“என்னம்மா?”
“இல்ல ஆதி! அப்பா… ரொம்ப வருத்தப்படுறாரு! அவரை நான் இப்…படி பார்த்ததே இல்லை…” என்று சொல்லிமுடிக்கும் முன்னே அவர் குரல் கமற ஆரம்பித்தது.
தன்னை சமாளித்துக்கொண்டு, “எல்லாத்தையும் நீ சரி பண்ணிடுவ ஆதி! உன்னால முடியும்! சீக்கிரமே எல்லாம் மாறும்!” என்றார் தெய்வா நம்பிக்கையாய்.
ஆதி பார்த்தது பார்த்தபடி அப்படியே நிற்க, அவர் கரத்தை தன்னிரு கைகளால் அழுத்தி பிடித்தவர், “சரிப்பண்ணிடு ஆதி! எப்படியாவது!” என்று சொல்ல, அவர் கண்களில் இருந்து சிந்திய இரு துளி கண்ணீர் அவன் மணிக்கட்டில் பட்டு தெறித்தது.
எப்போதும் எதையும் இலகுவாய் எடுத்துக்கொண்டு உலாவரும் அன்னை, தந்தையின் கலக்கத்தை காண சகிக்காது வருந்த, அவர்களின் வருத்தம் ஆதியை உலுக்கியது என்பது நிஜம்.
இங்கே இவர்கள் வார்த்தையில் தங்கள் வருத்ததை தெரிவித்திருக்க, அங்கே ராஜகோபாலும் லட்சுமியும் ஆறுதலுக்கு கூட ஆளின்றி மௌனமாய் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தனர்.
தன்யாவின் அறைக்கதவை இருமுறை மெலிதாய் தட்டினான் சுரேன்.
“வா சுரேன்”
உள்ளே நுழைந்தவன், “உனக்கு அவனை பிடிக்கல தானே? கம்பெல் பண்ணி தானே இந்த நிச்சயத்துக்கு ஒகே சொல்ல வச்சாங்க?” என்றான் நேரிடையாய்.
கசப்பான முறுவல் ஒன்று அவளிடம் இருந்து வெளிப்பட, “இட்ஸ் ‘ஹை-டைம்’ சுரேன், நம்ம இதைப்பத்தி பேசுறது வேஸ்ட்ன்னு நினைக்குறேன்” என்றாள் தன்யா.
“தன்யா அவன் நல்லவன் இல்ல” என சுரேன் சொல்ல தொடங்கும்போதே அவன் முன் கை உயர்த்தி பேச்சை நிறுத்திய தன்யா, “உன் சம்மதம் இல்லாம இங்க எதுவும் நடக்காது சுரேன்! ஐ ப்ராமிஸ்! போகும்போது டோர் லாக் பண்ணிட்டு போய்டு” என்றாள், இதற்குமேல் நாம் பேசிக்கொள்ள வேண்டாம் என்பதை போல.
சுரேனுக்கு தன்யாவின் நடவடிக்கை யாவும் புதிராக தெரிந்தது.
ஆதி மேல கோவமா இருக்காளா? இல்லையா? என குழம்பி நின்றான். அதே குழப்பத்துடன் அவன் அங்கிருந்து வெளியேற, “உன்கிட்ட நான் பேசுனது, மோட்டிவேட் பண்ணது, உன்னை வெளில வர வச்சது, எல்லாம் நானா பண்ணல! ஆதி சொல்லி தான் செஞ்சேன்!” என்ற தன்யா, தன் மெத்தையில் படுத்து தலை வரை போர்வையை போர்த்திக்கொண்டு “குட் நைட்” என்றாள் சுரேனை மேற்கொண்டு பேச விடாமல்.
அன்றைய பொழுது இனிமையாய் ஆரம்பித்து, அனைவர் உறக்கத்தையும் பறித்துக்கொண்டு விடைபெற்றது.
மறுநாள் மாலை ஆள்நடமாட்டம் குறைந்த கடற்கரை சாலையில் தன்யாவுக்காக காத்திருந்தான் ஆதித்யா.
[the_ad id=”6605″]
ஜெயதேவும் தெய்வாவும் மதுவுடன் அன்று காலை தான் சென்னையில் இருந்து கிளம்பியிருந்தனர். நிம்மதியற்ற முகத்துடன் செல்லும் மூவரையும் கண்டதும், ‘தான் ஏதாவது செய்ய வேண்டும்’ என ஆதிக்கு மனதுக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்க, அதற்காக மார்க்கம் ஏதேனும் கிடைக்குமா என ஒரு ஆறுதலுக்காக தன்யாவை சந்திக்க அழைத்திருந்தான்.
காரை ஓரமாய் நிறுத்திவிட்டு அவனிடம் வந்த தன்யா, “உன் இஷ்டத்துக்கு வா’ன்னு சொன்னா நான் வந்து நிக்கனுமா?” என்றாள் சீற்ற முகமாய்.
வந்தவளை நிமிர்ந்துப்பார்த்த ஆதி, “இந்த கேள்வியை இவ்ளோ தூரம் வந்து தான் என்கிட்ட கேட்கணும்ன்னு இல்ல! நான் ‘வா’ன்னு ‘கால்’ பண்ணப்போவே சொல்லிருக்கலாம்” என்றான் அமைதியாய்.
‘அதுவும் உண்மைதானே? அவன் அழைத்தபோதே, மறுத்திருக்கலாமே! ஆதியை காண வேண்டும் என்ற ஏதோ ஒரு உந்துதலில் வந்துவிட்டாள். வந்த பிறகு தான், அவன் அழைத்தவுடன் கிளம்பி வந்துவிட்டதற்கு ஏதேனும் நினைத்துக்கொள்வானோ என்றெண்ணி கோவமுகம் பூசிக்கொண்டு நின்றாள்.
அவன் கேட்டதற்கு பதில் சொல்லாது, “எதுக்கு என்னை வர சொன்ன? அதை சொல்லு” என்றாள் தன்யா.
“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்றான் ஆதி திடுமென!
“வாஆஆஆட்ட்…..?”
ஆதி, “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன்! நம்ம மேரேஜ் நடந்தா ரெண்டு குடும்பமும் சந்தோஷமா இருக்கும்! உன் அண்ணனோட கோவத்தை எப்படியாவது சரிப்பண்ணிடலாம்” என்று சொல்ல,
“ஓ! அப்போ திருட்டுத்தனமா கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு சொல்றியா?” என்றாள் தன்யா.
“ஏன் இதுக்கு முன்னாடி நம்ம பண்ணிக்கலையா?”
அவன் கேள்வியில் வாயடைத்து நின்றாள் தன்யா.
ஆதி, “நம்ம செய்யாத தப்புன்னு ஏதாவது மிச்சம் மீதி இருக்கா? சொல்லு பார்ப்போம்?” என அடுத்த கேள்வியை முன்வைக்க,
“ஸ்டாப் இட் ஆதி! என்னால உன்னை கல்யாணம் செஞ்சுக்க முடியாது! அவ்வளோதான்” என்றாள் தன்யா.
“ஏன்?”
“ஏன்னா? உனக்கு தெரியாதா?”
“என்ன தெரியாதா? இல்லை என்ன தெரியும் எனக்கு? சொல்லு பார்ப்போம்!” என்ற ஆதி,
“நீயா ஒரு நாள் வந்த, ‘இட்ஸ் ஓவர்’ன்னு சொல்லிட்டு சென்னைல வந்து ஒளிஞ்சுக்கிட்ட! நானும் என்ன காரணம்ன்னு தெரியாம உன் பின்னாடி ‘நாய்’மாறி சுத்துனதுக்கு, ‘உன்னால என் கற்பு போச்சு, மண்ணாங்கட்டி’ன்னு அழுத! வெறுத்துப்போய் உன்னை விட்டு போன நான், முழுசா நாலு வருஷத்துக்கு அப்புறம் திரும்ப வெட்கமே இல்லாம வந்து நிக்குறேன்! இன்னமும் பைத்தியம் மாறி ‘நான் வேண்டாம்’ன்னு மட்டுமே சொல்லிட்டு இருக்க நீ!” என்றான் ஆவேசமாய்.
“இப்போ இதெல்லாம் பேசத்தான் என்னை வர சொன்னியா?” தன்யா சலிப்புடன் கேட்க, தன் ஆவேசத்தை அடக்கிய ஆதி, “லுக் தன்யா! உன் அண்ணன் சம்மதிச்சு நம்ம கல்யாணம் நடக்குறதுங்குறது இப்போதைக்கு இம்ப்பாசிபில்!” என்றான்.
“அதுக்கு என்ன செய்யணும் ஆதி? யாருக்கும் சொல்லாம கல்யாணம் செஞ்சுட்டு போய் நிக்க சொல்றியா?” என்றவள்,
“எனக்கு என் அண்ணனும் முக்கியம்!” என்றாள் ‘அண்ணனும்’ என்பதில் அழுத்தம் கொடுத்து.
“அப்போ நான் வேண்டாமா உனக்கு?”
“உன்னை நான் வேண்டாம்ன்னு தான் பல வருஷமா சொல்லிட்டு இருக்கேன்”
ஆதி, “அப்பறம் எதுக்குடி நிச்சயதார்த்தத்துக்கு சம்மதிச்ச? வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிருக்க வேண்டியது தானே!?”
ஆதி மாப்பிள்ளையாக இல்லாவிட்டால் நிச்சயமாக தன்யா எங்கேனும் சொல்லாமல் சென்றிருப்பாள் தான்! ஆனால், அதை அவனிடம் ஒப்புக்கொள்ள அவளது ‘ஈகோ’ இடம் தரவில்லை.
“அப்படி போக தான் நினைச்சேன், என் அம்மா ப்ளாக்மெயில்க்காக தான் ஒகே சொன்னேன்! கண்டிப்பா மேரேஜ்க்கு முன்னாடி ஓடிப்போயிருப்பேன்” என்றாள் வேண்டுமென்றே அவனை காயப்படுத்தும் எண்ணத்தில்.
ஆனால், அவள் பேச்சை எப்போதும் இலகுவாய் எடுத்துக்கொள்ளும் ஆதி, அன்று தன்னிலையில் இல்லை.
“அப்போ நான் உனக்கு வேண்டாமா?” என்றான் இறுதியாய்.
“வேண்டாம்” என்றாள் தன்யா பட்டென.
[the_ad id=”6605″]
“ம்ம்ம்! நான் பின்னாடியே சுத்துறேன்ல? அந்த கொழுப்பு டி உனக்கு! அதான் இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற!” என்ற ஆதி, ஒரு முடிவு எடுத்தவனாய்,
“உன் மனசுல என்னைத்தவிர வேற யாரும் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்… நான் இல்லாம உன்னால இருக்க முடியாதுன்னு கூட எனக்கு தெரியும்!” என்றான்.
அவள் ஏளனமாய் உதடு சுழிக்க, “அதை நீயே ஒரு நாள் உணருவ! என் ஆதி தான் எனக்கு வேணும்ன்னு வாய்விட்டு அழுவ! ஆதி இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு சொல்லுவ! உன்னை நான் சொல்ல வைப்பேன்! இன்னும் கொஞ்ச நாள்ல அதெல்லாம் நடக்கும்! அதுவரைக்கும் இந்த ‘ஆதி’ நீ இருக்க திசை பக்கம் கூட வரமாட்டான்டி!” என்றான் அழுத்தமாய்.
அப்போதும் அவன் பேச்சை பெரிதாய் நினைக்கவில்லை தன்யா. அவளை திரும்பியும் பாராது விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டான் ஆதி.
ஒரு வேகத்தோடு வீட்டிற்கு வந்த ஆதி உடமைகளை தன் பை’யில் அடுக்க ஆரம்பிக்க, “டேய் என்னடா பண்ற?” என்றான் கோகுல்.
அடுக்குவதை நிறுத்தாமல், “அவளுக்கு மனசுல பெரிய இவ’ன்னு நினைப்புடா! நான் இறங்கி வர வர ரொம்ப தான் மலை ஏறிட்டு இருக்கா! அவளுக்கு நான் யாருன்னு இன்னும் சரியா தெரியல” என்று சொல்ல,
“தன்யா மேடமை சொல்றியா?” என்றான் கோகுல்.
“அந்த ‘மேடாஆஆஆத்த’ தான் சொல்றேன்”
“அதுக்காக நீ என்ன செய்யுற இப்போ?”
ஆதி, “நான் எங்க வீட்டுக்கு போறேன்டா, இனி அவளா கூப்பிடுற வரை நான் இங்க வர போறதில்லை!” என்றான், மொபைலில் மகாராஷ்டிரா செல்வதற்காக அடுத்த விமானத்தை தேடியபடி.
“நீ இருக்கும்போதே உன்னை கண்டுக்காதவங்க, நீ இல்லாதபோ எப்படிடா உன்னை நினைப்பாங்க?” என கோகுல் சொல்ல, ஒரு நொடி அவன் முகத்தை பார்த்த ஆதி, “நான் ஏற்ப்பாடு பண்றேன்” என்றதோடு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அவன் சென்று சரியாய் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கோகுலுக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
‘யாரது?’ என்ற சலிப்புடன் கோகுல் அழைப்பை இயக்கி காதில் வைக்க,
“ஹலோ!!! நான் ‘பிரியா’ பேசுறேன்” என்றாள் ஒருத்தி…!