*** இரவு நேரத்தில் குளிர்காற்று உடலைத் துளைக்க, தந்திருந்த போர்வைகள் எல்லாம் மதனிற்கு போதவேயில்லை. பொதுவாக இந்தளவு குளிரில் விரைவிலேயே உறக்கம் வந்துவிடும். மதன் மட்டும் சில நாட்களாக விதி விலக்காய் இருக்கிறான்.
அதீத குளிரினால்தான் வயிறு நிறைய உண்ணாதபோதிலும், மற்ற அனைவரும் நன்கு உறங்கி விடுகிறார்கள். என்னதான் அடிமை வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், உறக்க விஷயத்தில் இங்கிருந்தவர்கள் அனைவரும் புண்ணியம் செய்தவர்களே! ஆனால், உறக்கம் மட்டும் போதுமா?
மதனின் சிந்தை முழுவதும் இங்கிருந்து தப்பிக்கும் மார்க்கத்தைத் தேடியே பயணித்துக் கொண்டிருப்பதால், அவன் தன் உறக்கத்தைத் தொலைத்திருந்தான்.
இந்த அதீத குளிர் அவனுக்கு அனுமானமாக உணர்த்திய விஷயம் இது தமிழக குளிர்பிரதேசங்களாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்பது! ஏனென்றால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களின் குளிர் அவனுக்குப் பரிச்சயம் தான். சில முறை சென்றிருக்கிறான். இந்த குளிர் அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டதாகவே தெரிந்தது. பிறகு சிம்லாவின் குளிரில் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்.
‘ஆமா, அப்படியே ஊட்டியிலேயே பிறந்து வளர்ந்தவன் மாதிரி யோசிக்கிற? நீ பெரும்பாலும் போனது சம்மர் டைம். குளிர் குறைவா இருக்கலாம். குளிர்காலத்துல மாறுதல் தெரியும் தானே?’ அவனது மனசாட்சியே அவனது ஊகத்தைக் குறை கூறியதில் குழப்பம் அடைந்தான்.
அவனால் சிறு விஷயத்தில் கூட ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எந்த தடயமும் இல்லாமல் மிகவும் தடுமாறினான்.
அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவனின் செவிகளில் மிக மெல்லியளவு தெள்ளத்தெளிவாக விழுந்தது காலடி ஓசைகள்.
போர்வையை மெலிதாக விளக்கிச் சுற்றத்தை ஆராய்ந்தான். கண்கள் அந்த இருளுக்குப் பழக்கப்பட சில நொடிகள் பிடித்தது. ஒருவழியாகக் கண்களில் காட்சிகள் தென்படவும் கூர்ந்து கவனிக்கலானான்.
சற்றே நல்ல உயரமான ஒருவன், மிக மெதுவாக அந்த அறையின் வாயிற்கதவை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். மதனிற்குப் பலத்த ஆச்சரியம்.
அந்த இருட்டில் செல்பவன் யாரென்று அவனால் அனுமானிக்க முடியாத போதிலும், வாயில் கதவை நோக்கிச் செல்கிறான் என்றதுமே, அவனும் நம்மைப்போலத் தப்பிக்க நினைக்கும் ஆள் என அவனுக்குப் புரிந்து போனது. தனக்குத் துணை கிடைத்த மகிழ்ச்சி அவனுக்கு.
ஆச்சரியமும், பரவசமுமாக எதைப்பற்றியும் யோசிக்காமலே இவனும் தன் இடத்திலிருந்து மெதுவாக எழ முயற்சிக்க, அதற்குள் கதவின் அருகில் சென்றவன், மெல்லக் கதவினைத் திறந்து வெளியேறி இருந்தான்.
அவனைப் பின்தொடர நினைத்த மதனும் இப்பொழுது மெல்ல, சத்தம் எழுப்பாமல் தனது கால்களை எட்டிப்போட்டான்.
அமைதியின் ஆபத்தை இருவரும் உணரவில்லை. பட்டுத் தெரிந்து கொள்வார்களோ என்னவோ?
மதன் மெதுவாகச் சென்று கதவைத் திறக்க, ரயில் பெட்டி போலக் குறுகலான நீண்ட வராண்டா ஒன்று இருந்தது. அனுதினமும் இந்த வழியாகத்தான் வருகிறான் என்றபோதிலும், இப்பொழுது யாருமற்ற அவ்விடம், அதில் மெல்லிய கீற்றாய் பரவும் வெளிச்சம், அவ்விடத்தின் நிசப்தம் என ஒட்டுமொத்தமாய் அவனை அச்சுறுத்தியது. வயிற்றில் எதுவோ ஒன்று பிசையும் உணர்வு.
அந்த திகில் நிமிடங்களைத் தனது வேரூன்றிய கால்களை மெல்ல இயக்கி, பலத்த போராட்டத்தின் பின்பு மெதுவாக நடந்து கடக்க முயற்சித்தான்.
தனக்கு முன்பு வெளியேறிவனை அவனால் அந்த இருளில் இனம் காண முடியவில்லை. உடலில் ஒருவித நடுக்கம் பரவிக் கொண்டேயிருக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி அந்த வராண்டாவின் எல்லையை ஒருவழியாக அடைந்திருந்தான்.
அங்கிருந்த கதவினைத் திறப்பதற்கு மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. இந்த வராண்டாவைக் கடந்தால் சற்றே விசாலமான ஒரு அறை இருக்கும். அதையடுத்து இந்த வீட்டின் வரவேற்பறை வந்துவிடும். வீட்டினுள் இரவு வேளையில் அவன் கவனித்த வரையிலும் காவலுக்கு ஆட்கள் இருப்பது போலத் தெரிவதில்லை. ஆனால், அதுவும் உறுதியாகத் தெரியவில்லை. வெளியில் யாரேனும் இருந்து விட்டால்? அதை நினைக்கவே அச்சமாக இருந்தது.
தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி மெல்லக் கதவினைத் திறந்தான். இதற்கு அடுத்த அறையும் இருளில் குளித்துக் கொண்டுதான் இருந்தது. யாரும் இருப்பதற்கான தடயம் இல்லாததால், ஆசுவாசமாக மூச்சினை விட்டபடி, மெதுமெதுவாய் அவன் செல்லும் அளவிற்கு ஏதுவாய் கதவைத் திறந்து வைத்தான். இதயத்துடிப்பு இவ்வளவு அதிகரிக்கும் என்பதை அவன் வாழ்நாளில் முதல்முறை உணர்கிறான்.
[the_ad id=”6605″]
சத்தம் செய்யாமல் வெளியேறி, கதவைத் திறந்தது போலவே மீண்டும் மூடி வைத்தான். அடுத்து வரவேற்பறை தான். அங்கிருந்து வெளியேறினால், வீட்டை விட்டுச் சென்று விடலாம். பிறகு வெளிப்பகுதியை நன்கு ஆராய்ந்தால், விடிவதற்குள் முகப்பு வாசலைக் கடக்கவும் வழி அமையலாம். இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரைக் கடந்து விட்டால் போதும், எங்கேனும் பதுங்கியிருந்து, இங்கிருந்து மொத்தமாக தப்பித்து விடலாம். பிச்சை எடுத்தேனும் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டும். அவனது கண்கள், அவனது கனவிலும், ஆசையிலும் ஜொலிஜொலித்தது.
இத்தனை நேரமும் கொண்ட தவிப்பின் பொருட்டு, சற்று ஆழ மூச்செடுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
‘அடுத்த அறையும் இதேபோல வெறுமையாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என அவன் மனம் இடைவிடாது பிரார்த்தனை செய்தது.
நல்லவேளையாக அடுத்த அறையின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ளக் கதவினைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அறையிலிருந்தே கண்காணிக்க ஜன்னல் இருந்தது. ஜன்னலின் வழியே வெளியே இருக்கும் சூழலைச் சரி பார்க்கலாம் என்ற யோசனை தோன்றியது.
மீண்டும் அதே திக் திக் நிமிடங்கள். ஏன் இத்தனை தூரம் பயம் கொள்ளத் தோன்றுகிறது என்று அவனுக்கே புரியவில்லை!
அந்த பய உணர்வு, அவனது நடையில், மூச்சு விடும் சத்தத்தில் கூட அவனையும் அறியாமல் பிரதிபலித்தது. மெல்ல நடந்து ஜன்னலின் அருகே சென்றவன், சத்தம் செய்யாமல் சிறிதே சிறிது திறக்க முயற்சித்தான். அவனது பதற்றத்திலும், பயத்திலும் மிக மெல்லியளவு திறந்திருக்க, வரவேற்பறையிலிருந்து வந்த ஓலத்தில் மதனது இரத்தம் உறைந்தது.
ஒலி ஊடுருவாத அறையாக அந்த வீட்டின் மொத்த அறைகளும் வடிவமைப்பட்டிருக்க, இத்தனை நேரமும் அவனுக்கு வரவேற்பறையில் நடந்து கொண்டிருந்த கலவரம் தெரியவில்லை. இப்பொழுது மெலிதாக ஜன்னலைத் திறந்திருக்க, அங்கு நடந்து கொண்டிருக்கும் கலவரம் காதில் விழ உறைநிலைக்கே சென்றுவிட்டான்.
ஒருவன் அலறும் சத்தமும், பல நாய்களின் குரைக்கும் சத்தமும்… அவனது செவிப்பறையைக் கிழித்தது.
அலறுவது, இவனுக்கு முன்பு வெளியேறியவனாக இருக்க வேண்டும். அந்த நாய்களும் வெறுமனே பயப்படுத்துவதற்காகக் குரைத்து மட்டும் கொண்டிருப்பது போலத் தோன்றவில்லை. வெளியேறிவனை பதம் பார்க்கிறதோ என்று தோன்றுமளவு அவனின் அலறல் இருந்தது.
பயத்தில் மதனின் உடல் நடுங்கிற்று. வெளியில் சென்றவனின் கதி என்ன என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது. வறண்ட நாவினை எச்சில் கூட்டி, விழுங்கி சமன் செய்யக் கூட தோன்றாமல், இன்னும் மெலிதாய் ஜன்னலினை திறந்து வைத்து, கிடைத்த இடைவெளியில் பார்வையைப் பதித்துப் பார்த்தவனின் சர்வமும் அடங்கியது.
கடந்து வந்த அறைகளைப் போன்றில்லாமல், வெளியில் நன்றாகவே வெளிச்சம் பரவிக் கிடந்தது.
மதனுக்கு முன்பு வெளியேறிவனை சுற்றியும் ஆறேழு நாய்கள் அவனது உடலின் பாகத்தை வெவ்வேறு குறி வைத்துக் கொண்டிருந்தது. வெளியேறியவன் யாரென்று கூட தெரிந்துகொள்ள முடியாதளவு ரத்தக்காயங்கள் அவனது உடலிலும், முகத்திலும் நிறைந்திருந்தது. அலறித் துடித்து அவன் தவிப்பதைப் பார்க்கையில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.
இத்தனை கொடூர தண்டனையா மதனின் நெஞ்சம் விம்மியது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு விசில் சத்தம் கேட்டது. நாய்களின் வேட்டை அந்த விசில் சத்தத்தில் அடங்கியது. அனைத்தும் சிதறி ஓடி ஒவ்வொரு மூலையில் நின்றது. முதல் மாடியிலிருந்து ஆஜானுபாகுவான இருவர் கீழிறங்கி வர, இவன் நடுக்கம் குறையாமல் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இங்க யாருக்கும் தப்பிக்கிற தைரியமே இல்லையே? நம்மகிட்ட அவ்வளவு வாங்கி கட்டியும் இவனுங்களுக்கு ஏன் இப்படி தோணுது?” என்றொருவன் கேட்க,
“விடு தற்கொலைக்கு முயற்சி செய்யறவனை தடுத்தா நிறுத்த முடியும்?” என்று பதில் தந்தான் இன்னொருவன்.
[the_ad id=”6605″]
“ஆமா இந்த கதவுங்க எல்லாம் பூட்டி தானே இருக்கும்? இவன் எப்படித் திறந்தான்?”
“தெரியலையே…” என்ற மற்றவன் சுற்றத்தை ஆராய்ந்து விட்டு கீழே கிடந்த கம்பியை எடுத்து, “இவன் ஏதோ திருடன் போல டா. இவ்வளவு சின்ன கம்பியை வெச்சு கதவை திறந்துட்டான் பாரு” என்று கூறினான்.
“உயிர் இருக்கா இல்லையா பாரு”
“நம்ம முன்னாடியே கவனிச்சு வந்திருந்தா பிழைச்சிருப்பான். இப்போ ரொம்ப மோசமான நிலைமைக்கு போயிட்டான்” என்று கீழே விழுந்து கிடந்தவனின் மூக்கில் கைவைத்து ஆராய்ந்தபடி இன்னொருவன் பதில் தந்தான்.
“என்னவோ வேணும்ன்னே நம்ம சர்வைலன்ஸ் கேமராவை செக் பண்ணாத மாதிரி சொல்லற? காம்பவுண்டுக்கு வெளியே என்னமோ வித்தியாசமா தெரியுதேன்னு கவனிச்சு இதை கோட்டை விட்டுட்டோம். சரி இவன் எல்லாம் உயிரோட இருந்து என்ன சாதிக்க போறான். தூக்கிப் போடு” என்றான் கோபமாக.
‘என்ன கேமிரா இருக்கா?’ என்று அதிர்ந்த மதனிற்கு இந்த செய்தி முற்றிலும் புதிது. அவன் அலசி ஆராய்ந்தவரை அவன் பார்வையில் கேமிரா விழுந்ததேயில்லை. அதோடு வெகு சாதாரணமாக, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனைத் தூக்கிப் போடச் சொல்கிறார்களே என்று அடிவயிறு கலங்கியது.
அதற்குள் அந்த ஆஜானுபாகுவான தோற்றத்தினன், “இல்லை அவசரப்படாதே! இவனுங்களை கொல்லறது நம்ம வேலை இல்லை” என்று சமாதானம் கூறினான்.
“என்கிட்ட எல்லாம் கேட்டா உயிரோடு புதைச்சிட சொல்லுவேன். இவன் எல்லாம் வாழ்ந்து என்ன சாதிக்க போறான்?” என்று கத்தினான் முதலாமவன்.
“விடு விடு. அள்ளி போட்டுக் கொண்டு போவோம். அந்த டாக்டர் வேற தூங்கிட்டு இருப்பான்…” என இன்னொருவன் கூற, நடக்கும் களேபரத்தில் மதனுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
[the_ad id=”6605″]
என்ன நடக்கிறது இங்கு? எனப் புரியாமல் அவனுக்கு மண்டை காய்ந்தது. அவர்கள் தன்னை எங்கேனும் கவனித்து விடப்போகிறார்கள் என்ற அச்சம் வேறு எழ, அவர்கள் கவனிக்கும் முன்பு சென்று விடலாம் என்று யோசித்தவன், மிக மெதுவாய் ஜன்னலை மூடி, உள்ளிருந்து வந்தது போலவே சுவடேயின்றி தன் இடத்திற்கு மீண்டும் சென்று விட்டான்
இரத்தக்கரைகளுடன் இருந்தவனின் தோற்றமும், அவனது அலறலும் மீண்டும் மீண்டும் மதனின் செவிகளில் கேட்டு அவனை நடுங்க வைத்தது. உறங்கவே முடியாமல் அதன் தாக்கம் அவனது ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தது.
ஒருவேளை முதல் ஆளாகத் தான் சென்றிருந்தால் தன் நிலைமை என்னவாகியிருக்கும் என்று எண்ணி அவன் கலங்கியதே அவனது அச்சத்திற்குக் காரணம். நடந்து முடிந்த நிகழ்வின் தாக்கம் அவ்வளவு எளிதினில் அவனிடமிருந்து போகாது. அந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறான்.
ஏற்கனவே நடந்த சம்பவங்களால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவன், இப்பொழுது உடல்நிலையும், மனநிலையும் ஒத்துழைக்காமல் சதி செய்ய, உறக்கத்தைத் தொலைத்து, காய்ச்சலைக் கொண்டுவந்திருந்தான்.
முதலில் தப்பிக்க முயற்சி செய்தவன் தீவிர சிகிச்சையில் சுயநினைவின்றி இருக்க, மதன் காய்ச்சலின் தீவிரத்தால், தன் சுயநினைவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான்.