வெற்றிச்செல்வன் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த சமயம், ராஜேஸ்வரி அம்மாள் அவனிடம் தன் கோபத்தைக் கொட்டினார்.
“யாருகிட்டயும் கேட்காம பெரிய முடிவை எல்லாம் தனியா எடுக்கறீங்க போல”
“இதெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க அப்பச்சி. எனக்கு அதெல்லாம் வராது” என்று நேரடியாகப் பதில் தந்து விட்டான்.
“உனக்கு உங்க அப்பன் தேவலை போல… அவனாவது எவளையோ கூட்டிட்டு வந்து இவளைத்தான் கட்டிக்குவேன்னு பிடிவாதம் செஞ்சான். நீ கல்யாணமே முடிச்சுட்ட போல”
“அம்மாவை பத்தி எதுவும் பேசுனா எனக்கு பிடிக்காதுன்னு தெரியும் தானே அப்பச்சி. அந்த பேச்சை விட்டுடுங்க. என் சூழ்நிலை அப்படி அதுனால அவசரமா கல்யாணம் செய்ய வேண்டியதா போச்சு”
“இப்ப நான் என்ன செய்யணும் நினைக்கறீங்க?”
“அது உங்க விருப்பம்”
“ரொம்ப நல்லா வளர்த்து வெச்சு இருக்காங்க”
“அப்பச்சி… அம்மா, அப்பாவைப் பத்தி பேசாதீங்க சொன்னேன்” என்று குரலை உயர்த்தினான்.
“சரிய்யா நான் அவங்களைப் பத்தி பேசலை. நீ இம்புட்டு துள்ளறியே, உங்க அம்மாகிட்ட ஆச்சும் உன் கல்யாணத்தை சொன்னியா?”
“யாருக்கும் சொல்ல முடியாத சூழ்நிலை…”
“செஞ்ச பாவம் சும்மா விடுமா… என்கிட்ட இருந்து என் மகனை பிரிச்சா. அவனை மயக்கி கல்யாணம் செஞ்சுகிட்டா. அதானே இப்ப அவளுக்கும் நடக்குது. நானாவது என் மகன் கல்யாணத்தை நடத்தி வெச்சேன். அவளுக்கு அந்த பாக்கியம் கூட இல்லையே” என்றார் மனபாரம் தாங்காமல்.
வெற்றிச்செல்வன் மனமும் உறுத்தியது. தாயின் மனதை மிகவும் வேதனை படுத்துகிறோம் என்று நினைத்தான். ஆனால், தன் திருமணம் குறித்து கேள்விப் பட்டால் அன்னை நிச்சயம் மகிழ்வார் என்றே அவனுக்குத் தோன்றியது.
“அப்பச்சி நடந்துடுச்சு. இனி ஆக வேண்டியதை பாருங்க”
“மனசே கேட்கலையா. யாரு எவருன்னு தெரியாத பொண்ணு கூட கல்யாணமா?”
“கண்டதையும் யோசிக்காதீங்க அப்பச்சி. அவ குணத்துல தங்கம். ரொம்ப நல்லவ. அவ சூழ்நிலை சரியில்லை அதான் என்னை மாதிரியே யாருமில்லாம இருக்கா. அதுக்காக அவளைத் தப்பா நினைக்காதீங்க”
“ஏன்யா இப்படி பேசற? யாருமில்லாம இருக்கேன்னு சொல்லற? இந்த கிழவி உன் கண்ணுக்கு தெரியலையா? உனக்கு உன் அம்மா, தம்பி மட்டும் தான் உன் குடும்பமா தோணுதா?” என்ற மூத்தவளின் முகம் சோர்ந்திருந்தது.
“ஏன் நீங்க கூடத்தான் இப்ப என்மேல கோபமா இருக்கீங்க. அவளை பார்த்து, பேசி எதுவும் செஞ்சீங்களா? அதைவிட்டுட்டு ஏன் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு என்கிட்ட சண்டை போடறீங்க. இத்தனை நாளா ஏன் கல்யாணமே செஞ்சுக்க மாட்டீங்கற அப்படின்னு கேட்டுட்டு இருந்தீங்க. இப்ப கல்யாணம் செஞ்சுட்டேன்னு தெரிஞ்சு அதுலயும் குறை சொல்லறீங்க. நான் என்ன முடிவெடுத்தாலும் யாருக்கும் நம்பிக்கையில்லை” என்றான் முகத்தைக் கவிழ்த்தபடி விரக்தியான குரலில். அவனுக்கு அவன் பாட்டியை வழிக்குக் கொண்டுவரும் வழி நன்றாகவே தெரியும். அவன் கொஞ்சம் முகம் வாடினாலும் அவருக்குத் தாங்காது. அவருக்கு இருக்கும் ஒரே பற்றுக்கோல் இவன் மட்டும் தானே.
அவன் எண்ணம் சரியாகவே வேலை செய்தது. “என்னய்யா நீ இப்படி சொல்லிட்ட. நீ எதுவா இருந்தாலும் சரியா தான் செய்வ. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஏதோ உன்மேல இருக்க பாசத்துல ஆதங்கப் பட்டுட்டேன். மன்னிச்சிடுய்யா. நாளைக்கே நல்ல நாள் தான் என் பேத்தியைப் பார்க்க கூட்டிட்டு போய்யா” என்று அவன் வழிக்கு வந்தார்.
“உண்மையா தான் சொல்லறீங்களா?”
“இதுல நான் பொய் சொல்லுவேனா? உனக்கு அந்த பொண்ணு மேல நம்பிக்கை இருக்கல்ல. எனக்கு அது போதும்”
“சரி நாளைக்கு போலாம். அங்க வந்து அவளை எதுவும் பேசிடாதீங்க”
“சரி சரி பேசலை” என்று மோவாயை இடித்தாள் பெரியவள். தான் என்னவோ செய்யப்போய், அது கடைசியில் தனக்கே எதிரானதை நினைத்து நினைத்து நேற்றிலிருந்து ஆதங்கமாக இருந்தவளுக்கு, நடந்ததிலிருந்த ஒரே நல்லது இத்தனை நாட்களும் திருமணம் குறித்தே பேச விடாத பேரன் திருமணம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டது.
என்ன அந்த திருமணம் யாருக்கும் தெரியாமல் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டதும், அந்த பெண் யார் என்ன என்கிற விவரம் எதுவும் தெரியாததும் இன்னமும் உறுத்தல் தான். இருந்தும் பேரனுக்காகச் சமரசம் செய்து கொண்டார்.
பாட்டியை சமாதானம் செய்தவன், மில்லுக்குப் புறப்பட்டுச் சென்றான். மில்லில் மேற்பார்வை பார்த்துவிட்டு கணக்குவழக்குகளைப் பார்க்க அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் இருக்கும்பொழுது செந்தாமரைக்குக் கைப்பேசியில் அழைப்பு விடுத்தான்.
வினோதினி விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்து குழம்பிக் கொண்டிருந்தவள், கைப்பேசி அழைப்பில் கவனம் களைந்து நேரத்தைப் பார்த்தாள். ‘இந்த நேரத்துல என்ன?’ என்ற குழப்பத்துடனே அழைப்பை ஏற்று, “சொல்லுங்க” என்றாள்.
“என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு?”
‘கண்டுபிடிச்சுட்டானோ’ என திகைத்தவள், “அதெல்லாம் எதுவும் இல்லையே. எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க” என்றாள் முயன்று வருவித்த இலகுவான குரலில்.
“இதென்ன உன்கிட்ட பேச என்ன காரணம் வேணும். ஏன் நான் போன் செய்ய கூடாதா?”
“தாராளமா பண்ணலாம் தான். ஆனா நீங்க பண்ண மாட்டீங்க” என்றாள் ஆணித்தரமாக.
“ஏன்?”
“நேத்து நைட் என் நம்பர் கிடைச்சத்தும் போன் பண்ணி இருந்தா… நீங்க சொல்லறதை ஒத்துக்கலாம். நீங்க ஒரு நாள் கழிச்சு தானே போன் பண்ணறீங்க. கண்டிப்பா ஏதாவது காரணத்துக்காகத்தான் போன் பண்ணி இருப்பீங்க. கண்டிப்பா என்கிட்ட பேச இல்லை” என்றாள் அவனைத் துல்லியமாகக் கணித்து.
அவள் கேள்வியில் புன்னகைத்தவன், “என் போன் கால் எதிர்பார்த்தியா என்ன?” என்றான் மென்மையாக.
அவனது குரலின் பேதமும், மென்மையும் அவளை மௌனமாக்கியது. அதோடு தன்னை கண்டுகொண்டானே என்ன சொல்லிச் சமாளிப்பது எனத் தெரியாமல் திணறினாள்.
அவளது மௌனத்தை ரசித்தபடியே, “என் போன் எதிர்பார்த்த தானே?” என மீண்டும் அவன் கேட்க,
“ம்ப்ச்… அதெல்லாம் இல்லை. நீங்க பேச்சை மாத்தாதீங்க”
“ஹாஹா நம்பிட்டேன். நம்பிட்டேன். சரி நாளைக்கு தயாரா இரு. எங்க பாட்டியோட வரேன்”
“எங்க?’
“உங்க வீட்டுக்கு தான்”
“எதுக்கு… என்ன இப்படி திடீர்ன்னு சொல்லறீங்க?” என்று பதற்றமானாள்.
“ஏய் நானே கஷ்டப்பட்டுப் பேசியே எங்க பாட்டியைச் சரி கட்டி இருக்கேன். நீ ஏன், எதுக்குன்னு கேள்வி கேட்கற”
“ஒத்துக்கிட்டாங்களா? ரொம்ப கஷ்டப்பட்டீங்களோ?”
“பின்ன? அதோட இன்னும் நிறையப் பேரைச் சமாளிக்க வேண்டி இருக்கு. நமக்கு நேரமே இல்லை”
“வேற யாரு இருக்காங்க? ரிலேட்டிவ்ஸ் யாருக்கிட்டயும் நீங்க பேசணுமா? முறைப்பொண்ணு எதுவும் இருக்கோ?” என்ன முயன்றும் முடியாமல் சோர்வான குரலில் அவள் கேட்க,
“ஹாஹாஹா அப்படி எல்லாம் யாரும் இல்லை” என்றான் அவளின் தவிப்பை அறிந்து ரசிப்புடனும், புன்னகையுடனும்.
அவளுக்கு அந்த பதிலில் ஆசுவாசம் வந்தது. “பின்ன வேற யாரு கிட்ட கேட்கணும்?” ஒருவேளை தன் பெற்றோரிடம் தான் கேட்கப் போகிறானோ என்கிற ஆவலில் கேட்டாள்.
ஆனால், அவனோ அவள் எதிர்பார்க்காத பெரிய விஷயமாகக் கூறி அவளுக்கு அதிர்ச்சி தந்தான். “அதைவிட முக்கியமானவங்க… என் அம்மாவும், தம்பியும் இருக்காங்க. அவங்ககிட்ட கேட்கணும்”
இந்த செய்தி அவளுக்குப் புதிது. “என்ன இதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே. அவங்க யாரையும் நான் பார்த்ததே இல்லையே? எங்க இருக்காங்க?”
“நீ கூடத்தான் உன் குடும்பத்தைப் பத்தி எதுவும் சொன்னதில்லை” என்றான் அவனும் பதிலுக்கு.
‘அவன் சொல்வதும் சரிதானே!’ என்று புரிய, தயக்கத்துடனேயே, “நேர்ல பேசும்போது சொல்லவா?” என்றாள்.
“நேர்ல எப்படி பேசிக்க முடியும்ன்னு தெரியலை. இங்க நான் உன்னைப் பார்க்க வந்தா அதிக நேரம் பேச முடியுமா என்ன? பேசாம எங்கேயும் வெளிய போவோமா? தப்பா கேட்டிருந்தா சாரி. எனக்கும் உன்கிட்ட பேசணும் அதான். என்னைப்பத்தி, என் குடும்பத்தைப் பத்தி எல்லாம் உன்கிட்ட சொல்லணுமே!”
“நாம மட்டும் எப்படி வெளிய?”
“எனக்கும் தெரியலை… திருட்டுத்தனமா தான் போக வேண்டி இருக்கும் மாஹி” என்றான் சிரிப்புடன்.
“யோவ்… ஊர்த்தலைவர் பேசற பேச்சா இது?”
“யோவ்… யோவ்’ன்னு சொல்லாத… நான் எல்லாம் எவ்வளவு அழகா மாஹின்னு கூப்பிடறேன்”
“என்னது மேகி நூடுல்ஸ்ன்னா?”
‘உனக்கு எல்லாம் போன் எதுக்கு தண்டமா? இன்னுமா மாஹிக்கு அர்த்தம் தெரிஞ்சுக்கலை’ என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவன், பதில் ஏதும் சொல்லாமல் சிரித்து வைத்தான்.
“என்ன பதிலே காணோம்”
“உன் அறிவை நினைச்சு பூரிச்சு போயிட்டேன்”
“அய்யே… ரொம்பத்தான்…” என்றாள் நக்கலாக.
“என்கிட்ட யாருமே இந்த ஸ்லேங்’ல இந்த டோன்’ல பேச மாட்டாங்க. நீ பேசறது வித்தியாசமா இருக்கு… ரொம்ப பிடிச்சும் இருக்கு” என்றான் ரசனையாய்.
“ஆஹா… பெரிய ஊர்த்தலைவர்ன்னு பவுச காட்டறீங்களோ? நீங்க என்ன பிட்டு போட்டாலும் நான் இப்படித்தான் பேசுவேன்” என்றாள் அதே பாணியில்.
“கண்டினியூ ஏஸ் இட் எஸ் பேபி… ஐ ஜஸ்ட் லவ்ட் இட்…”
‘ஆரம்பிச்சுட்டான்டா… நாம இங்கிலீஷ் டீச்சர் இல்லை சயின்ஸ் டீச்சர்ன்னு இவன்கிட்ட சொல்லணும்’ என சாதாரண ஆங்கிலத்திற்கே கடுப்பாக எண்ணியவள்,
“சரி எத்தனை மணிக்கு வருவீங்க”
“காலையில சொன்னாங்க. எதுக்கும் நைட் கன்பார்ம் பண்ணிட்டு கூப்பிடறேன்”