ஊருக்குள் நடக்கும் விஷயங்கள் எல்லாம் பரவுவது எளிதாக இருக்குமல்லவா? அப்படித்தான் அந்த துக்க வீட்டில் நடந்த சம்பவங்களும், ஊரிலுள்ள அனைவருக்கும் பரவிக் கொண்டிருந்தது.
செந்தாமரை, இன்னமுமே பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி வினோதினியின் விஷயத்தில் என்ன செய்வது என்று குழப்பமான மனநிலையில் தான் சுற்றி திரிகிறாள். ‘என்ன தீர்வு?’ என்றுதான் யோசிக்கிறாளே தவிர, அதை மற்றவர்களிடமோ, வெற்றிச்செல்வனிடமோ கொண்டு செல்லலாம் என்னும் எண்ணம் மட்டும் வருவதாய் இல்லை.
வெற்றிச்செல்வன் என்னும் ஜீவன் இன்னும் அவளது சிந்தனை வட்டத்திற்குள் வர மறுக்கிறான். உதவி தேவை என்றதும் அவன் முகம் அவளது மனதில் மின்னவில்லை. இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை, அவனது கோபம் ஊரறிந்த ரகசியம். கோபத்தில் எதையாவது செய்து விடுவான் என்னும் அச்சமே, அவளை இது போன்ற பிரச்சனைகளை அவனிடம் கொண்டு சேர்க்காமல் விலக்கி நிறுத்தியது. இதே பரமேஸ்வரன் ஐயாவாக இருந்திருந்தால், நிச்சயம் தயங்கி கொண்டு இருக்கமாட்டாள்.
இப்படி அவள் அலட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், அந்த இளம் தாயினைப் பற்றிய செய்தி அவளை வந்தடைந்தது. மனதை பாரமாக்கும் செய்தியல்லவா? இரண்டு பச்சிளம் குழந்தைகளை, அதுவும் அவர்கள் பெண்ணாய் பிறந்துவிட்ட காரணத்தால்… பெற்ற தாயே கொன்று விட்டாள் என்றால், இதயமே நடுங்கியது.
செந்தாமரைக்கு அவளின் தமக்கை அன்பழகியின் முகம் நினைவில் வர முகமே கசங்கியது. தமக்கையின் நினைவில் பொங்கிய கண்ணீரை உள்ளிழுக்க அத்தனை சிரமமாக இருந்தது.
சாதாரணமாக இந்த விஷயத்தை அவளால் கடந்து விட முடியவில்லை. அத்தனை தூரம் இதயம் முழுவதும் வலி கொண்டாள்.
ஸ்டாப் ரூமில் இருந்த பிற ஆசிரியைகளிடம் மேலும் அந்த சம்பவம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தாள். அது மட்டும் போதாது என்பது போல, பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவள் தனக்குத் தெரிந்த பாட்டி ஒருவரிடமும் மொத்த விவரங்களையும் சேகரித்தாள்.
அந்த பெண் ஏன் அப்படிச் செய்தாள் என்பதில் தொடங்கி, அந்த பெண்ணை கைது செய்தது முதல், அவளது மூன்று வயதுக் குழந்தையை சமாதானம் செய்ய முடியாமல் அங்கே அனைவரும் தவிப்பது வரை அந்த பாட்டி எல்லா விஷயங்களையும் கூறியிருந்தார்.
அந்த பெண் செய்தது மன்னிக்க முடியாத பாவம் தான். அதை மறுப்பதற்கில்லை. யாராலும் மறுக்கவும் முடியாது. ஆனால், அந்த பாவம் செய்யத் தூண்டியவர்கள்? வேறு வழி தெரியாமல் அந்த பாவத்தை அந்த பெண் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவளை நிறுத்தி வைத்தவர்கள்? அவர்களும் தண்டனைக்குரியவர்கள் தானே? அதையும் மறுப்பதற்கில்லையே!
இத்தனை நேரமும் நினைவில் வராதவனின் நினைவு செந்தாமரைக்கு இப்பொழுது வந்தது. ஏனென்றால் அந்த பெண்ணின் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததும், அந்த பெண்ணை சிறைபிடிக்கக் காவலர்களுக்குத் தகவல் தந்ததும் அவனன்றோ! அவனிடம் தானே இதர குற்றவாளிகளின் குற்றத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
[the_ad id=”6605″]
அனைத்தையும் தெளிவாக யோசித்தவள், தெரிந்தவரிடம் வீரமணியின் கைப்பேசி எண்ணை வாங்கி அவனை தொடர்பு கொண்டாள். என்னவோ இவளாக வெற்றிச்செல்வனை அழைக்க, அவளுக்கு அந்த சூழலிலும் மனம் வரவில்லை.
இந்த முடிவைக் காலையிலேயே எடுத்து விட்டாள். அதெப்படி அவன் அத்தனை உரிமையாய் அந்த காரியத்தைச் செய்யலாம்? அதிலும் இவள் நகர வழியில்லாத நேரத்தில்? இவள் இணங்கி நின்றது வேறு இன்னும் கோபத்தைக் கிளறியது. ‘அவன் அப்படிச் செய்துவிட்ட பிறகு, எக்காரணம் கொண்டும் நாமாக அவனை அழைக்கக் கூடாது. அவன் அழைத்தாலும் பேசக் கூடாது’ என்று காலையிலேயே கண்டிப்புடன் நினைத்திருந்தாள்.
நாமாக முதலில் சென்று பேசினால் அவனது செய்கையை அங்கீகரிப்பது போலாகிவிடும் என்னும் எண்ணத்தில் அழைப்பு விடக்கூடாது என்று நினைத்திருந்தவளுக்கு, இப்பொழுது நேரில் சென்று பார்க்கும் சூழல்.
வீரமணி, இவளது கைப்பேசி அழைப்பை ஏற்றதும், “அண்ணா செந்தாமரை பேசறேன்” என்றாள் அறிமுகமாக.
“சொல்லுங்க மா” நொடியில் அவரிடம் சிறு பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவரது குரல் மரியாதையைப் பறைசாற்றியது.
“நீங்க எங்க இருக்கீங்க?”
“மில்லுல மா”
“அவரு?” என்றாள் தயக்கத்துடன்.
“இங்கே தான் மா”
“அது… நான் அவரை பார்க்கணும்…” எனத் தயக்கமாகக் கூறி நிறுத்தினாள்.
“மில்லுல ஆறு மணிக்கு எல்லாரும் கிளம்பிடுவாங்க மா. ஐயா கொஞ்ச நேரம் கணக்கு வழக்கு பார்ப்பாரு. ஆனா, அப்பவும் இங்க கொஞ்ச பேரு இருப்பாங்க, அவருகிட்ட கணக்கு வழக்கு காட்ட, லோட் அனுப்ப வேண்டியது பத்தி பேச…” எனச் சங்கடமாகக் கூறியவரின் நிலை அவளுக்குப் புரிந்தது.
“இல்லைண்ணே மில்லுல வேணாம். ஆளுங்க இருந்தாலும் சங்கடம்… இல்லாட்டியும் சங்கடம்” என்று அவளும் மறுத்தே பேசினாள்.
“பின்ன எப்படிம்மா?”
“தெரியலைண்ணா… அவருக்கிட்ட கேட்டு சொல்லுங்க”
“ஐயாவுக்கு போன் போட்டு கேட்டீங்களா ம்மா” நான் எப்படிக் கேட்க முடியும் எனும் சங்கடம் அவனுக்கு.
“இல்லை” என்றாள் செந்தாமரை.
“இன்னொரு நாள் பேசிக்கறீங்களா மா. இன்னைக்கு ஊருக்குள்ள நடந்த பிரச்சனையில ஐயா கொஞ்சம் கோபமா இருக்காரு” மெல்லிய தடுமாற்றத்துடன் அவன் கூற, அவளுக்கு சற்று வீம்பு வந்தது.
“அவருகிட்ட கேட்க சொன்னா எனக்கு கதை சொல்லறீங்க… சரி நானே கேட்டுக்கறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவள், கொள்கையைத் தளர்த்தி தன்னவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
ஆனால், செந்தாமரை நினைத்தது போலவெல்லாம் வெற்றிச்செல்வனிடம் எதிர்வினையில்லை.
“வேலையா இருக்கேன். நாளைக்கு பேசறேன்” என்று இவள் பேசுவதற்கு வாய்ப்பே தராமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
கோபம் கிளர்ந்த போதும், காரியம் முக்கியமாகப் பட, மீண்டும் அழைத்திருந்தாள்.
[the_ad id=”6605″]
அதே கோபத்துடன், “நான் தான் வேலையா இருக்கேன்னு சொன்னேனல்ல…” என வெற்றிச்செல்வன் பொரிய,
“நான் வெட்டியா இருக்கேன் பாருங்க” என்று கடுப்பாகச் செந்தாமரை கூறினாள்.
அவள் குரலில் மாறுபாடு தெரிய, “என்னாச்சு?” என்றான் முயன்று வரவழைத்த நிதானத்துடன்.
“உங்ககிட்ட பேசணும். நேருல பேசுனா சரியா இருக்கும்ன்னு தோணுது”
“நேரம் ஆயிடுச்சே… இனி எப்படிப் பார்க்க முடியும்? போன்’ல சொல்லு என்ன விஷயம்ன்னு? எதுவும் பிரச்சனையா?” என்று மாரியப்பனின் நினைவில் யோசனையுடன் கேட்டான். மாரியப்பன் ஏதாவது தன்னிடம் வாலாட்ட முடியாமல் அவளுக்குத் தொல்லை தருகிறானோ என்று பதற்றம் வந்திருந்தது.
அவனாக கேட்கும்போதே சொல்லிவிடலாம் என்று தோன்றியதால், “அந்த குழந்தைங்க இறந்தது தொடர்பா… அதுல அவங்க அம்மா மேல மட்டும் தப்பில்லையே? அவங்களை அப்படி செய்ய வைத்தவங்க…” என்று தயக்கத்துடன் தொடங்கியவளுக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. பேசும் முன்பே வெற்றிச்செல்வன் குறுக்கிட்டிருந்தான்.
வெற்றிச்செல்வன் சற்று கோபக்காரன். மனதில் பட்டதைச் சொல்லி விடுவான். அதிலும் கோபத்தில் வரும் சொற்கள் எல்லை மீறும். அதனால் தான் முடிந்தவரை அந்த நேரங்களில் தனிமையைத் தேர்ந்தெடுத்து விடுவான்.
செந்தாமரையின் பேச்சும், கேள்வியும் கோபத்தைத் தூண்ட, “இதை பத்தி பேசறது எனக்குப் பிடிக்காது. இனி இது பத்தி எந்த பேச்சும் பேசக்கூடாது. புரிஞ்சதா?” என்று எரிச்சலான கண்டிக்கும் குரலில் அதட்டி விட்டு மீண்டும் கைப்பேசி அணைப்பை துண்டித்திருந்தான்.
‘அடுத்தவர்களைப் பேசவே விடாத செய்கை! எத்தனை ஆதிக்க மனப்பான்மை அவனுக்கு?’ என்று கோபம் கொண்டவளுக்கு, அவனது தலைக்கனமான செய்கை மிகுந்த எரிச்சலையும் வரவைத்தது.
அத்தோடு விலகி விட்டாள் அவள் செந்தாமரை அல்லவே! துன்பம் துரத்தும் போதே துணிவுடன் செயல் பட்டவள், இப்படி இவனின் கோபத்தின் முன்பா பின் வாங்கி விடுவாள்?
மீண்டும் அழைப்பு விடுத்தாள். இந்தமுறை அவன் அழைப்பை ஏற்கவில்லை. எரிச்சல் அதிகமானது. தொடர்ந்து அழைப்பு விடுத்தாள். அவனுக்கும் கோபம் தான், ஆகவே ஒருநிலைக்கு மேல் பொறுக்கமாட்டாமல் கைப்பேசியை வீரமணியிடம் தந்து, “யார் போன் பண்ணினாலும் நான் வேலையா இருக்கேன் சொல்லிடு” என்று கோபத்துடன் கூறினான்.
[the_ad id=”6605″]
வீரமணிக்கு யாரிடமிருந்து அழைப்பு வரும் என்று தெரியுமே! இருவரின் இடையேயும் மாட்டிக்கொண்டு விழிக்கும் தன் நிலையை எண்ணி சுயபட்சாதாபம் எழுந்தது. ‘கடவுளே! ஏன் இத்தனை சோதனையைத் தர… காப்பாத்தி விட்டுடு பா’ என்று பாவமாக வேண்டுதல் வைத்தான்.
கைப்பேசி வாங்கி வெற்றிச்செல்வனின் அறையை விட்டுத் தான் வெளியே வந்திருப்பான். அதற்குள் செந்தாமரையிடமிருந்து அழைப்பு. பரிதாபமாக அழைப்பை ஏற்று, வெற்றிச்செல்வன் கூறியதை அப்படியே கூறினான். பதில் கூடச் சொல்லாமல் செந்தாமரை அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
‘இவங்க இனி என்ன பண்ணுவாங்களோ!’ என வீரமணி பெருமூச்சு விட்டான்.
அதற்குள் அடுத்த பதினைந்து நிமிடத்தில் செந்தாமரை மில்லுக்கு வந்திருந்தாள். நடக்கும் தூரம் தான் என்பதினால் நடந்தே வந்துவிட்டாள். அவள் மூச்சிரைக்க வந்ததிலேயே அவளது நடையின் வேகம் புரிந்திருந்தது.
‘இதென்ன வம்பா போச்சு!’ என வீரமணி முழிக்கும் போதே, “அண்ணா நான் ஊர்த்தலைவரை பார்க்கணும்” என்றாள் வந்தவுடன்.
“அம்மா… ஐயா ரொம்ப கோபமா…” என அவன் சொல்லத் தொடங்கியபோதே,
“நான் உங்க நொய்யாவை பார்க்க வரலை. ஊர்த்தலைவர் கிட்ட ஒரு விஷயமா பேச வந்தேன். பார்க்க முடியுமா முடியாதா? இல்லாட்டி நான் அடுத்து போலீஸ் ஸ்டேஷன் தான் போ வேண்டியிருக்கும்” என அதட்டினாள்.
‘இதுக்கு எதுக்கு போலீஸ்’ என நொந்தவன், மேற்கொண்டு பேச வழியில்லாமல், வெற்றிச்செல்வன் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றான்.
வீரமணி கதவைத் தட்டி உள்ளே எட்டிப் பார்க்க, “என்ன?” என்றான் வெற்றிச்செல்வனும் அதட்டலாக.
“அது… அம்மா…” என எச்சில் விழுங்க,
“யாரு அம்மா?” என்றான் யோசனையாக. கூடவே, “உங்க அம்மாக்கு எதுவும் உடம்பு சரியில்லையா?” என்றான் புரியாமல்.
“இந்த ஊரு ஸ்கூல் டீச்சர் செந்தாமரை வந்திருக்கேன்னு சொல்லுங்க போதும்” என்று கணீர் குரலில் செந்தாமரை பேசியது வெற்றிச்செல்வனுக்கு கேட்கவே,
‘இவ எதுக்கு இங்க வந்தா? அதுவும் இந்த நேரத்துல’ என்று யோசித்தவன்,
“வீரா நீ கிளம்பு” என்று மட்டும் கூற, அவன் என்ன செய்ய எனப் புரியாமல், சங்கடமாக செந்தாமரையைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே வெளியே சென்றான்.
செந்தாமரையை வெற்றி உள்ளே அழைக்கவில்லை. சிறிது நேரம் மரியாதைக்குக் காத்திருந்தவள், பொறுமை பறந்து விட, படாரென்று கதவைத் திறந்து உள்ளே சென்றிருந்தாள்.
“என்ன விஷயம்? இந்த நேரத்துக்கு எதுக்கு வந்திருக்க? அறிவில்லை உனக்கு” என்றான் எரிச்சலாக.
“நான் இந்த ஊர்த்தலைவரைப் பார்க்க வந்திருக்கேன். மரியாதை ரொம்ப தேயுது” என்று அவளும் அதே எரிச்சலோடு பேசினாள்.
“கிளம்பு டி. சும்மா நொய் நொய்ன்னுட்டு…” அவளது எரிச்சலை மதியாமல் பேசி அவளை மேலும் கோபப்படுத்தினான்.