“யோவ்… நானும் பார்க்கிறேன். என்ன? என்ன உனக்கு நினைப்பு? நீ இப்போ நான் சொல்லறதை கேட்க போறியா, இல்லை நான் நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி சொல்லிக்கவா? ஏதோ அந்த பொண்ணை நீ தான் பிடிச்சு தந்தியேன்னு உன்கிட்ட பேச வந்தா ரொம்ப பேசற” என கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.
அவனை எதிர்த்துப் பேசுவாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், அவனது கோபத்தின் போதும், அதைத் துளியும் பொருட்படுத்தாமல் எதிர்த்துப் பேசுவாள் என்பதை முதன் முதலில் உணர, அசந்தே விட்டான் அவளது பேச்சில்.
இதற்கு மேலே எங்கே காய்வது. சொல்லு என்பது போல அவளையே பார்த்து அமர்ந்திருந்தான். வாய்மொழியாகச் சொல்லவில்லை.
அவனை முறைத்தாலும் தொடர்ந்து பேசினாள். “அந்த பெண்ணை மட்டும் தண்டிச்சா போதுமா?”
அப்பொழுதும் பார்த்திருந்தானே தவிர, எதிர்க் கேள்வியோ, பதிலோ இல்லை அவனிடம். அதிலும் அவனது பார்வையில், ‘அவளுக்குப் பரிந்துரையா?’ என்பது போல இளக்கார பாவனை இருக்க,
“இப்ப அவ அப்படி செய்யலைன்னா… இன்னும் கொஞ்ச நாளுல… வீட்டுல, ‘அம்மா… அம்மா’ ன்னு அழுதுட்டு இருக்கே அந்த குழந்தையையும் சேர்த்து ஒண்ணுக்கு மூணு குழந்தையை கொன்னுட்டு, இவளும் தற்கொலை செஞ்சிருப்பா” என்றாள் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு.
அவனது புருவங்கள் யோசனையாக முடிச்சிட,
“அந்த பெண்ணுக்குக் குழந்தை பிறந்து ஐம்பது நாள் ஆச்சு. இன்னும் அவ புருஷனோ, இல்லை புருஷன் வீட்டிலேயோ ஒருத்தரும் வந்து பார்க்கலை. ஏன்னா, ஏற்கனவே ஒரு பொண்ணு, இப்ப இன்னும் ரெண்டு பொண்ணு… மொத்தம் மூணு பொம்பளை பிள்ளைங்க… அவ புருஷன் முதுகெலும்பில்லாத கோழையா இருந்திருப்பான். அவனை நம்பி தாலியை வாங்கிக்கிட்டதுக்கு இவளும் பிழைக்க வழி தெரியாம இப்படி செஞ்சிருப்பா” என்றாள் முகத்தை அருவருப்பாக வைத்தபடி.
அவளுக்கும் அந்த பெண்ணின் செய்கை கோபமென்று அவளது பாவனையிலேயே புரிந்தது.
“அவ புருஷன் எப்படி இருந்தா என்ன? இந்த பொண்ணு, யார்கிட்டயாவது சொல்லியிருக்கணும். இல்லை இந்த பொண்ணு தன்னோட குழந்தைகளை காப்பாத்தி இருக்கணும். அதுவும் முடியலையா ஆசிரமத்துலயாவது குழந்தைகளை விட்டிருக்கணும். அதை விட்டு இப்படிச் செய்ய எப்படி மனசு வரும்? அவளும் ஒரு பொண்ணா?” என்று வெறுப்பாகக் கூறினான்.
“தெரியலை. அந்த பொண்ணு மன அழுத்தம் தாங்காம செஞ்சிருக்கலாம். தப்பு தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா, நிராதரவா இருக்க பொண்ணு…” என்று கூறும்போதே அவன் யோசனையாக பார்க்க,
“கண்டிப்பா நிராதரவு தான். இப்போ வேணா அவங்க அம்மா, அப்பா கவனிச்சுப்பாங்க. ஆனா, காலம் முழுக்க…? முடியாதில்லையா?” என்றவள், மேலும் தொடர்ந்து, “அதுலேயும், மூணு குழந்தைகளை விட்டுட்டு அந்த பொண்ணு வேலைக்கு போயி அவங்கள கரை சேர்க்கிறது? அதுலேயும் படிக்காத கிராமத்து பொண்ணு… ரொம்ப கஷ்டம் இல்லையா? இப்போ இல்லைன்னாலும், எப்பவாவது தன் குழந்தைகளையும் கொண்ணுட்டு அவளும் தற்கொலை செஞ்சு இறந்து போயிருப்பா…” என்று கூறினாள்.
[the_ad id=”6605″]
அவள் கூறுவதில் இருக்கும் நிதர்சனம் அவனுக்கு அவ்வளவு எளிதாகப் புரியாத போதும், அந்த காட்சி கற்பனையில் விரிய அது இன்னமும் கொடூரமாக இருந்தது. அவனும் இன்று காலையில் கூட அது குறித்துச் சிந்தித்தானே, ஏன் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டாளோ, கணவன் இறந்துவிட்டாளோ தனித்துச் செயல்பட முடிவதில்லை என்று? இப்பொழுது செந்தாமரையின் விளக்கத்தில் அவனுக்குரிய பதில் கிடைக்கும் போல இருந்தது.
“நீ சொல்லும் எல்லாம் சரியா இருக்கலாம். ஆனால் இன்னும் அந்த பொண்ணு செய்ததை என்னால ஏத்துக்க முடியலை…” என்றான் ஆயாசத்துடன்.
“ஆனா, அவளை அந்த நிலையில் நிறுத்தின அவளோட கணவனும் குற்றவாளி தானே?” என்று செந்தாமரை கேட்டாள்.
“கண்டிப்பா” என்று ஆமோதித்தவன், “அவனுக்குரிய தண்டனையும் கிடைக்கும்” என முடித்தான்.
இந்த பதில் அவளுக்குத் தேவையானதாக இருந்தது. கூடவே, ஒரு பாவமும் அறியாத இரண்டு பச்சிளம் குழந்தைகளின் இறப்பிற்கு, இவர்கள் இருவருக்குமான தண்டனை மட்டும் எந்த நியாயமும் செய்து விடாது என்றும் புரிந்தது. மேலும் உயிருடன் இருக்கும் இன்னொரு குழந்தையோ தாயின் அரவணைப்பின்றி தவிக்கும் தவிப்பை எந்த தண்டனையின் கீழ் சேர்ப்பது? அந்த குழந்தை செய்த பிழை தான் என்ன? என்று மனம் தவித்தது. மறக்கவும் முடியாமல், மன்னிக்கவும் முடியாமல் அவர்கள் செய்த பிழை செந்தாமரையின் மனதை ரணமாக்கியது.
எப்படியோ, அந்த பெண்ணின் கணவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தாள்.
சில நொடி மௌனங்களில் கரைய, அவனது கைப்பேசி சிணுங்கியது. ‘யார்?’ என்னும் அலட்சியத்துடன் எடுத்தவன், தனது தாயின் கைப்பேசி எண்ணைப் பார்த்ததும் இன்பமாய் அதிர்ந்தான்.
‘நான் கிளம்பவா? போன் பண்ணறேன்’ என்று சைகையில் சொல்லியபடி செந்தாமரை நகரப்போக, ‘போகாதே!’ என்னும் விதமாக சைகை செய்தவன், கைப்பேசி அழைப்பை ஏற்றான்.
வீடியோ கால் வந்திருந்தது. தாயின் சோர்ந்த முகத்தைத் தான் சில நொடிகள் பார்த்தான். கணவனை இழந்து, மகனையும் பிறந்து தவிக்கும் தாயின் நிலை அவனுக்குப் புரியாதா என்ன?
கைப்பேசி அழைப்பை ஏற்றும் தன்னிடம் பேசாமல் தன்னையே ஆராய்ந்து கொண்டிருக்கும் அன்னையை அவனும் ஆசையாகப் பார்த்திருந்தான். அதற்கு மேல் முடியாது என்பது போல, அவனது அன்னை மஞ்சுளா, “இந்தா நீ பேசு…” என அருகில் இருப்பவனிடம் நீட்ட, கைப்பேசி இப்பொழுது அவனுடைய தம்பி முத்துக்குமாரின் கரங்களில் தழுவியது.
அவனோ, அன்னையை விட வீம்பாக, “நான் கூடத்தான் அவன்கிட்ட பேச மாட்டேன். என்கிட்ட ஏன் தரீங்க” எனச் சிறு பிள்ளையின் வீம்போடு அன்னையிடம் மீண்டும் தந்தான்.
“நீயே கேளு டா… நிஜமான்னு…”
“ஏன் நீங்களே கேளுங்களேன். உங்க அருமை மகன் கிட்ட”
“அதோ அப்ப அந்த வாயாடிகிட்ட குடு” இப்படியாக இருவரும் ஒரு வார்த்தையும் பேசாமல் மூன்றாவதாக ஒரு நபரிடம் கைப்பேசி இடம் மாறியது.
இவர்களின் தமிழ் மொழி புரியாமல் கைப்பேசியை வாங்கிய சிமிர்தி, “என்ன விளையாடறீங்களா… வெற்றிக்குக் கல்யாணம் அவ்வளவு தான். இதைச் சொல்லவே எனக்கு எத்தனை நாள் ஆயிடுச்சு. இனி உங்க பஞ்சாயத்தை வேற நான் தீர்த்து வெக்கணுமா… ஆளை விடுங்க” என மீண்டும் கைப்பேசியை முத்துவிடம் துணித்து விட்டு வீட்டை விட்டு ஓடியிருந்தாள்.
மெல்லிய புன்னகையோடு வெற்றிச்செல்வன் பார்த்திருக்க, ஒன்றும் புரியாமல் செந்தாமரை பார்த்திருந்தாள்.
மீண்டும் அன்னையின் குரல் தான் கேட்டது. “எப்போ அந்த பொண்ணுகிட்ட பேசுனான்? அவளை போய் பார்க்கிறதை ஏன் நம்மகிட்ட சொல்லலைன்னு கேளேன் முத்து” எனத் தம்பியிடம் பேசுவது போல, வெற்றியிடம் கேள்வி கேட்டார்.
[the_ad id=”6605″]
இந்த விளையாட்டு எல்லாம் சில வினாடிகள் தான். வெற்றிச்செல்வனின், “அம்மா…” என்னும் உயிர் உருகும் அழைப்பு காதில் விழும் வரை தான். அதற்குமேல் மஞ்சுளாவால் கோபம் போலக் காண்பித்துக் கொள்ள முடியவில்லை.
வெற்றியை பார்த்து முறைத்தார். கண்கள் ஒரு பக்கம் நீரைச் சுரந்தது. மீண்டும், “அம்மா பிளீஸ்…” என்றான் கமறிய குரலில். குரலை செருமி சரிசெய்யத் தோன்றவில்லை அவனுக்கு.
“அழாதே படவா… எங்க பேச்சை கேட்காம போயிட்டு, இப்போ மட்டும் என்ன?” என்று அதட்டினாள் அன்னை.
“அம்மா…” என்றான் மீண்டும். விழிகள் கசிந்தே விட்டது. எத்தனை மாத பிரிவு!
“ஸ்ஸ்ஸ்… சரி சொல்லு… எப்போ பார்த்த? ஏன் எங்ககிட்ட சொல்லலை?” என்று கேள்விகளை அடுக்கினார்.
“நான் தேடிப் போகலை மா. அவ தான் நம்ம ஊருக்கு வந்தா, பார்த்ததும் எனக்கு யாருன்னு தெரிஞ்சுடுச்சு. அப்பா சொன்னாருங்கிறதுக்காக மட்டும் இல்லை மா, எனக்கும் அவளைப் பார்த்ததும் ரொம்ப பிடிச்சது” என்றவனின் பார்வை அவளைத் தழுவி மீண்டது.
‘என்ன பார்வை இது?’ சிலிர்த்தடங்கினாள் பெண். அதிலும் அவர்கள் பேசிக்கொள்வது எதுவும் புரியவும் இல்லை. என்று தான் இவன் புரியும்படி பேசியிருக்கிறான் என்றும் சலிப்பு வந்தது.
வெற்றியோ தன் அன்னையிடம் பேச்சில் மூழ்கி விட்டான், செந்தாமரை அருகில் இருப்பதையும் மறந்து. “அவளை ஏன் பிடிச்சதுன்னு காரணம் தெரியலை மா. இப்ப வரைக்கும். ஆனா, அவளை முதல்முறை பார்த்தப்ப, ஏதோ வலியோடு தான் வந்திருந்தா, அவ வருத்தத்தை உடனே சரி செய்யணும் தோணுச்சு. என் முன்ன அவளை அத்தனை தைரியமா காட்டிக்கிட்டா, ஆனாலும் என்னால அவளை, அவளுக்குள்ளே இருந்த வலியை, தவிப்பை, வேதனையை புரிஞ்சுக்க முடிஞ்சது. அது எப்படின்னு இப்போ வரைக்கும் எனக்கு புரியலை மா. அத்தனை நேரமும் தைரியமா இருந்த மாதிரி காட்டிக்கிட்டவ, அப்பா உயிரோட இல்லைன்னு தெரிஞ்சதும்… அம்மா நீ அவளை பார்த்திருக்கணுமே…” என்று அன்றைய நாளை குறித்து தாயிடம் சொல்லிக்கொண்டே சென்றவன், அப்பொழுது தான் அவளும் அங்கு இருக்கிறாள் என்பது புரிந்து பேச்சை நிறுத்திக் கொண்டான்.
அந்த பேச்சை எல்லாம் அந்தரத்தில் உடனே விட்டுவிட்டு, “அம்மா என் கூட இனிமே பேசேன். ஐ மிஸ் யூ அ லாட் மா. உன்னை பார்க்கணும் போல இருக்கு” என்றான் சிறு பிள்ளையைப் போல.
“நீ எங்களை ஏமாத்த செந்தாமரை போட்டோ அனுப்பலையே?” என மஞ்சுளா கேட்க,
“அச்சோ அம்மா, அவளும் இங்க தான் இருக்கா, நானே அதை மறந்து என் காதல் கதையை சொல்லிட்டு இருக்கேன். நீங்க இன்னும் நம்பலையா? நீங்களே நேருல பார்த்து கன்பார்ம் பண்ணிக்கங்க” என்று சட்டென்று அவளருகே சென்று கைப்பேசியில் இருவரும் தெரியும் படி அம்மாவிற்குக் காட்டினான்.
சங்கடமாகச் செந்தாமரை விலகி நிற்க, “நல்லா இருக்கியா மா?” என்றார் மஞ்சுளா வாஞ்சையுடன்.
ஒன்றும் புரியாமல் அவசரமாகத் தலையசைத்தாள். அதற்குள் இத்தனை நேரமும் ஒதுங்கி இருந்த முத்து, “ஹாய்… எப்படி இருக்கீங்க?” என்றான் ஆர்ப்பாட்டமாக.
“அண்ணின்னு சொல்லுடா” என்று மஞ்சுளா எடுத்துத் தர,
“அம்மா, சின்ன பொண்ணா தெரியறாங்க” என்றான் யோசனையாக.
“அதுதான் முறை” என மஞ்சுளா விளக்கம் தரவும்,
“சரி சரிம்மா” என்றவன், “ஏன் அண்ணி அவசரப்பட்டீங்க. உங்களுக்கு இன்னும் பெட்டரா பையன் கிடைப்பான். இவனை வேண்டாம் சொல்லிடுங்க. நான் இருக்கேன்” என்று கூற, அவள் அதிர்ந்து விழித்தாள்.
“அடேய்… என்ன பேசற?” என மஞ்சுளா அதட்டவும்,
“ஏன் மா? நான் அண்ணிக்கு நல்ல பையனா பார்க்க மாட்டேனா?” என்றான் புரியாமல்.
“ஐயோ! அதுக்கு நான் இருக்கேன்னு சொல்லக் கூடாது, நான் பார்த்து தருவேன்னு சொல்லணும்” என்று மஞ்சுளா விளக்கம் தர, ‘உப்…’ என்று இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டாள் செந்தாமரை.
முத்துக்குமாரோ, “எல்லாம் ஒன்னு தான். நான் பேசும்போது கன்பியூஸ் பண்ணாதீங்க” என்று விளக்கம் சொல்லிவிட்டு,
“அண்ணி, அவனை வேண்டாம்ன்னு சொல்லுங்க…” என அதிகாரம் செய்ய, என்ன பதில் சொல்ல எனத் தெரியாமல் விழித்தாள் செந்தாமரை.
[the_ad id=”6605″]
“டேய், தடியா என்ன அண்ணியை மிரட்டி வெச்சிருக்கியா?” என அண்ணனையும் முத்துக்குமார் அதட்ட,
“என்கிட்ட தான் நீ பேச மாட்டியே, அப்பறம் ஏன்டா என்கிட்ட கேட்கிற? உன் வேலையை பாரு” எனத் தம்பியிடம் சண்டையிட்டான் வெற்றிச்செல்வன்.
‘இவனோடு தனிமையில் இருக்கும் பொழுதுகளில் முற்றிலும் புதிய ஒருவனாக இவன் தெரிகிறான்’ என்று குழப்பமாக ஏறிட்டாள் செந்தாமரை.
முத்துவோ, “நீ தான் அவங்களை என்னமோ சொல்லி வெச்சிருக்க, பாரு உன் மூஞ்சியை தான் பார்க்கிறாங்க. அப்பா தான் சொல்லி இருக்காங்களே, அண்ணி ரொம்ப தைரியமான பொண்ணுன்னு. அவங்களையும் மாத்திட்டியா, தடியா… தடியா…” என்று அண்ணனிடம் வம்பு செய்தான்.
‘டேய், என்ன டா பேசிக்கறீங்க?’ எனச் செந்தாமரை நொந்து விட்டாள்.
வம்பும், வழக்குமான பேச்சுகள் சிறிது நேரத்தில் ஓரம் கட்டப்பட, செந்தாமரையிடம் மஞ்சுளாவும், முத்துக்குமாரும் வெகு நேரம் பேசினார்கள். அதில் அவர்களது பிரியத்தை அவளால் உணர முடிந்தது.
கூடவே, இதுவரை வெற்றிச்செல்வன் அவளிடம் தெரிவிக்காத ரகசியமான, ‘அவளைத் தேர்ந்தெடுத்தது அவனின் தந்தை’ என்றும் தெரியவந்தது.
செந்தாமரையின் புண்ணியத்தில், தாயும், தம்பியும் வெற்றிச்செல்வனிடம் இணக்கம் காட்டி, சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
காலையிலிருந்து மனதை பாரங்கள் மட்டும் அழுத்திக் கொண்டிருக்க, அந்த நாளின் முடிவில், அவனுக்கு இதம் தரும் விஷயம் கிடைத்ததில் மனம் நெகிழ்ந்தான்.
புன்னகையோடு கைப்பேசியில் உரையாடி அழைப்பைத் துண்டித்தவன், மனம் நிறைந்திருந்ததில், இயல்பு போலச் செந்தாமரையை நெருங்கி அவளை மென்மையாக அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு,
“தேங்க்ஸ்… எல்லாம் உன்னால தான்… மாசக்கணக்கா என்கிட்ட பேசாம இருந்தாங்க” என்று நெகிழ்ச்சியாகக் கூற,
சுதாரித்து அவனை விலக்கும் முன்பு அவன் இதழ்கள் கன்னம் தீண்டி இருக்க, அவன் பேசப் பேச விலக்கி விட்டாள்.
அவன் யோசனையாகப் பார்க்க, “உங்களைப் பத்தி எதுவும் தெரியாம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது, பரமேஸ்வரன் ஐயாவோட பேருக்கு களங்கம் வர கூடாதுன்னு தான்… உங்களை விரும்பி இல்லை” என்றாள் முகத்தினில் அடித்தாற்போல.