பிம்பம் -1
“எம்.டி சார் வரும் நேரமாச்சு பேப்பர்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கா? இந்த காண்ட்ராக்ட் சைன் பண்ணதும் அவருக்கு ஃபாரின் டெலிகேட்ஸோட மீட்டிங் இருக்கு” என்று அங்கு மீட்டிங் ரூமில் இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தான் அஜய். நம் நாயகன் சர்வாவின் பி.ஏ.
சர்வஜித் ரகுநந்தன்- சென்னையில் உள்ள மிக முக்கிய பிஸ்னஸ்மேன்களில் சர்வாவும் ஒருவன். அவன் தனியாக தொழிலை கவனிக்க துவங்கி சில வருடங்கள் கடந்து விட்டன. அவர்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை மானுஃபாக்சரிங் செய்து வருகின்றனர். அதோடு வாகனங்களின் பாகங்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இது அவன் தந்தை ஆரம்பித்த தொழில். தாய் தந்தை விபத்தில் திடீரென்று இறந்து விட தன் தந்தையின் உயிர் தோழன் முரளியின் உதவியால் குடும்பத்தையும் தொழிலையும் பார்த்துகொண்டு படித்தும் முடித்தான். முதலில் வெறும் இளநிலை கல்வி மட்டும் பயின்றவன், தொழிலில் இறங்கிய பின்பே தனது முதுநிலை கல்வியை தொலைதூர கல்வி மூலம் முடித்தான். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் சீக்கிரமே தொழிலை நன்றாக கற்றுக்கொண்டான்.
இன்றோ, சர்வஜித் ரகுநந்தன் சி.இ.ஓ ஆஃப் எஸ். ஆர் (SR) இண்டஸ்ட்ரீஸ் என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிஸ்னஸ்மேன்களுக்கும் பரிட்ச்சயம். அவன் தந்தையின் ஊர் உதகை. அங்கு இவர்களின் பரம்பரை சொத்துகள் உள்ளதால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அவன் மட்டும் சென்று பார்த்து விட்டு வருவான்.
………………………………………………………………………………..
அங்கு ஆபிஸ் போக வேண்டிய சர்வாவோ தன் வீட்டின் ஹாலில் அமர்ந்து தன் தங்கைக்காக காத்துக்கொண்டு இருந்தான்.
“அம்மு, கிளம்பிட்டியா இல்லையா… எனக்கு டைம் ஆகிடுச்சு டா” கீழ் இருந்து குரல் கொடுத்தான் சர்வா. “இதோ வந்துடேன் அண்ணா… 5 மினிட்ஸ்…” அவளும் மேலே உள்ள அறையிலிருந்து கத்தினாள். இதோடு எத்தனை 5 மினிட்ஸ் என்று எண்ணி சிரித்து கொண்டான்.” இருங்கண்ணா நான் போய் பார்க்கிறேன்…” என்று விட்டு போனாள் அவனின் முதல் தங்கை அஞ்சு என்கிற அஞ்சனா.
“ஏன்டி இன்னும் உன் மேக்கப் முடியலயா… அண்ணா எவ்வளவு நேரமா வெயிட் பண்றார்.. சீக்கிரம் வர மாட்டியா டி…” பெட்டில் இருந்த தலையனையிலேயே செல்லமாக அடித்தாள்.
“சாரி டி என் செல்லக்குட்டி… தூங்கிட்டேன் அதான்… ஹிஹி.. நானே ஃபர்ஸ்ட் டே டென்ஷன்ல இருக்கேன்… நீ வேற ஏன் டி குழந்தைய திட்டற…” என்று தன் அக்காவை கட்டிக்கொண்டாள்.
அவளும் பதிலுக்கு கட்டிக்கொண்டு, “ஆமா..ஏதோ குழந்தைனு சொன்ன…எங்கே டா காணோம்…” என்றவள், அவள் முறைக்கவும் ” சரி சரி விடு, நமக்குள்ள என்ன… ஆமா, நம்ம கம்பெனிக்கு தானே போற… எதுக்காக டென்ஷனாகுற… அதெல்லாம் அண்ணா பாத்துக்குவாரு… நீ பயப்படாம போய்ட்டு வா. ஈவ்வனிங் வந்து சுப்பரா போச்சு இன்னிக்கு நாள்னு சொல்லப்போற பாரு… நீ சீக்கிரம் வந்தாதான சாப்பிட்டு கிளம்ப முடியும்… அண்ணாவும் இன்னும் சாப்பிடல.. வா கீழ போகலாம்…”என்று அம்முவை அழைத்துச் சென்றாள்.
சர்வஜித்தின் பலம் பலவீனம் இரண்டுமே அவன் தங்கைகள் தான். அன்னையாய் தந்தையாய் தமையனாய் இருந்து தன் தங்கைகளை பாதுகாத்ததோடு அல்லாமல் நன்றாக படிக்க வைத்து அவர்களின் சொந்த காலில் நிற்கும்படி தன்னம்பிக்கையுடன் வளர்த்து உள்ளான்.
“அப்பாடி, ஒரு வழியா அம்முகுட்டி கீழ இறங்கி வந்தாச்சு.சீக்கிரம் வா டா.. இன்னைக்கு முக்கியமான காண்ட்ராக்ட் ஒன்னு சைன் பண்ணனும். அடுத்து ஒரு மீட்டிங்கும் இருக்கு. வா வா… சாப்பிட்டு கிளம்புவோம்.. அஞ்சு மா நீயும் வா டா” என்றுகூறி உணவு மேஜையில் அமர்ந்தான்.
வேலைக்காரம்மா சரோஜா வந்து உணவு எடுத்து வைத்து மூவருக்கும் பரிமாறினார். அனைவரும் உண்ண துவங்கினார். மூன்று இரண்டு பூரியோடு போதும் என்று கூறிய அம்முவை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர். இருக்காதா பின்னே, எக்ஸாமுக்கு சென்றாள் கூட நான்கு பூரியாவது சாப்பிட்டு விட்டு பற்றவில்லை என்று புலம்புபவள் இரண்டோடு போதும் என்றால், எனவே, “என்னாச்சு கண்ணு, ஏன் போதுங்கற.. உடம்புக்கு முடியலையா மா” என்று வினவினார் சரோஜா.
அதற்கு அஞ்சுவோ, “சரோ மா, நீங்க பதறாதிங்க… அவ நல்லா தான் இருக்கா. அது ஒன்னும் இல்லை, அவளுக்கு இன்னைக்கு ஆபீஸ்ல முதல் நாள் இல்லையா.. அதான் எங்க தங்கச்சி தங்கத்துக்கு பயமா இருக்காம்” என்று கூறி விட்டு அம்முவை பார்த்து நாக்கை துருத்தி காட்டி சிரித்தாள். அம்முவின் மனநிலையை மாற்றவே அவ்வாறு வம்பிழுத்தாள்.
“ஏய் நான் எப்போ டி பயமா இருக்குனு சொன்னேன்” என்று எகிறினாள் இளையவள். “நீ தானே டி டென்ஷனா இருக்குனு சொன்ன “ என்று பதிலுக்கு கூறினாள் அஞ்சனா.
அதுவரை அமைதியாக மெல்லிய புன்னகையுடன் கவனித்துக்கொண்டு இருந்த சர்வா, “ஷ்ஷ்… எதுக்கு இப்ப இரண்டு பேரும் சண்டைய ஆரம்பிக்கறிங்க…” என்றவன், அம்முவிடம், “இங்க பாரு டா.. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டு படிச்சுட்டு இப்ப எதுக்கு நீ நெர்வஸ் ஆகிற.. நம்ம ஆபிஸ்கு தானே வரப்போற… எல்லாம் நீ சீக்கிரம் கத்துகிட்டு நம்ம கம்பெனிய திறமையா நிர்வகிக்க போற பாரு… முதல்ல ஒழுங்கா சாப்பிடு.. அப்புறம் தான் மத்த எல்லாம்…” என்று அவளை நிதானமாக்கி சாப்பிட வைத்து அதன் பின்பே மூவரும் கிளம்பினர். அண்ணனின் வார்த்தையில் அம்முவும் தெளிவானாள்.
கிளம்பும் முன் அவர்களின் அன்னை தந்தை படத்தின் முன் மூவரும் நின்று வணங்கி விட்டே கிளம்பினர். இது அவர்கள் மூவரின் வழக்கம்.
அதோடு எப்போதும் போல சரோம்மாவை நேரத்திற்கு சாப்பிட சொல்லவும் அவன் மறக்கவில்லை.
“அஞ்சு, உன்னை இன்னிக்கு நானே டிராப் பண்ணிடறேன். வா டா..” கிளம்பும்போது சர்வா கூற, ” இல்ல ண்ணா, நீங்க கிளம்புங்க..உங்களுக்கு டைம் ஆகிடுச்சு ஏற்கனவே. நான் இன்னைக்கு என் ஸ்கூட்டில போய்ட்டு வந்துடறேன்” என்றாள் அஞ்சனா.
அப்போது திடீரென்று அந்த பங்களாவின் காம்பவுண்டுக்குள் நுழைந்தது அந்த கார். அதில் இருந்து உயரமாக இறங்கியவனை கண்ணடதும் அவனை பார்த்து புன்னகைத்தான் சர்வா. அவனுக்கு பதிலுக்கு ஒரு புன்னகையை பேருக்கு சிந்தி விட்டு, தான் வந்த வேலையை கவனித்துக்கொண்டு இருந்தான் அந்த புதியவன். அதாவது அஞ்சுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தான்.
அதை கவனித்தும் கவனிக்காதது போல், “வாங்க வாங்க… என்ன ஏ.சி.பி சார் இவ்ளோ தூரம் வந்து இருக்கிங்க ” என்று சிரித்துகொண்டே வரவேற்றான் சர்வா.
” இல்ல சர்வா, இன்னும் இரண்டு நாள்ள ஒரு முக்கியமான கேஸ் விஷயமா டெல்லி போறேன். அதான் உங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போலாம்னு…” என்று இழுத்தான் அவன்.
அப்போது தான் உள்ளிருந்து வெளியே வந்த அம்மு, “அண்ணா, அவர் வாய் தான் ண்ணா உங்களுக்கு பதில் சொல்லுது… ஆனால், கண்ணு வேற பக்கம் பார்க்குது பாருங்க ” என்று இடையில் புகுந்து அவன் அஞ்சுவை பார்ப்பதை ஜாடை காட்டி கலாய்த்தாள். அவளின் பேச்சை கேட்டு சிரித்தான் சர்வா.
“ஓய் வாலு, நீயெல்லாம் என்னை ஓட்ற பார்த்தியா, இதான் காலக்கொடுமைங்கிறது. ” என்று அம்முவின் காதை செல்லமாக திருகி விட்டான் அந்த புதியவன்.
“ஆஆஆ… சரி சரி அதான் சொல்லிடிங்களே மாமா… அப்போ, ஆபீஸக்கு டைம் ஆச்சு.. நாங்க கிளம்பட்டுமா ” என்று குறும்பு புன்னகையுடன் கேட்டாள்.
அந்த நெடியவனோ, அவளிடம் எதுவும் கூறவும் முடியாமல் மென்று முழுங்கியவாறு, “சரி…. அம்மு சொல்வதும் சரி தான் மச்சான், நீங்க கிளம்புங்க… எனக்கும் டைம்மாச்சு, நான் வரேன் ” என்று அஞ்சுவை பார்த்தவாறே கிளம்பினான்.
“டேய்… ஆகாஷ், ஒரு நிமிஷம் இருடா.. எனக்கு ஒரு அர்ஜன்ட் மீட்டிங் இருக்கு..நீ போற வழில அஞ்சுவை டிராப் பண்ணிடறியா…” என்று அஞ்சுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கேட்டான் சர்வஜித்.
“ஊஃப்” என்று அந்த பக்கம் திரும்பி ஒரு பெருமூச்சு விட்டு, ” ஷ்யூர் சர்வா… நான் சேஃப்பா கொண்டு போய்விட்டுடறேன்… நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க ” என்றான் உற்சாகமாக.
சர்வாவும் சிரித்துக்கொண்டே, ” சரி பத்திரம் ” என்றவன் அஞ்சுவின் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு “ஈவ்னிங் நான் வந்து பிக்அப் பண்ணிக்கறேன் டா.. கவனம்…” என்று விட்டு கிளம்பிவிட்டான்.
அஞ்சுவும் “சரி ண்ணா ” என்று தன் அண்ணனிடம் கூறிவிட்டு ஆகாஷை பின் தொடர்ந்தாள்.
அம்முவும் சர்வாவின் பின் செல்லும் முன் இவர்கள் இருவரையும் கலாய்த்துவிட்டேசென்றாள்.
………………………………………………………………………………..
அவர்கள் பயணத்திற்குள் அவர்களை பற்றிய சிறு அறிமுகத்தை காண்போம்.
சர்வஜித் ரகுநந்தன்- 29 வயது ஆண்மகன். அழகும் அறிவும் வீரமும் ஒருங்கே பெற்றவன். தாய் தந்தை இல்லாமல் வளர்ந்த தங்கைகளுக்கு எல்லாமுமாக இருப்பவன்.அதிகாமாக பேசமாட்டான். ஆனால் தேவையான நேரத்தில் சரியாக பேசிவிடுவான். எந்த விஷயத்தையும் சிந்தித்து செயல்படுபவன்.
அஞ்சனா- சர்வாவின் முதல் தங்கை. வயது 24. அன்பான அழகான இளம்பெண். பேஷன் டிசைனிங் படித்து விட்டு அண்ணனின் உதவியுடன் பொட்டிக் ஒன்று ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகிறாள். ஆரம்பிக்க உதவியது மட்டும் தான் சர்வா. அதையும் கடனாக பெற்று ஆறே மாதத்தில் திருப்பியும் கொடுத்து விட்டாள் அஞ்சு. மிகவும் திறமைசாலி.
அண்ணனின் மேல் மிகுந்த அன்புடையவள். சொல்லப்போனால் பக்தி. எதுவாக இருந்தாலும் அவன் முடிவிற்கு கட்டுப்படுபவள். அதேபோல தன் தங்கையின் மீதும் மிகுந்த பாசம் வைத்துள்ளவள்.
அஞ்சனாவிற்கும் ஆகாஷ் என்றாள் மிகவும் பிடிக்கும். அவன் தன் தாய் தந்தையுடன் வந்து தன் அண்ணனிடம் நேராக பெண் கேட்கவும் மகிழ்ந்து தான் போனாள். அதுவும் தன் அண்ணன் தன் முகம் பார்த்தே அவளின் விருப்பத்தை அறிந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவும் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்றே எண்ணினாள்.
ஆகாஷ் – சர்வாவின் தந்தை ரவிச்சந்திரனின் நெருங்கிய நண்பனான முரளியின் தவப்புதல்வன். அன்னை சாரதாவின் செல்ல மகன். ஐ.பி.எஸ் முடித்து விட்டு தற்போது சென்னையின் ஏ.சி.பி ஆக பணியாற்றி வருகிறான்.
சிறு வயது முதல் அஞ்சனா மீது அவனுக்கு இருந்த பிடித்தத்தை அவன் ஐ.பி.எஸ் ட்ரெயிங்கிற்காக பிரிந்து டில்லி சென்ற போதுதான் அவள் எந்த அளவிற்கு அவன் மனதில் அவள் பதிந்து உள்ளாள் என்று உணர்ந்து கொண்டான். திரும்பி வந்ததும் அன்னை தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டான். அவர்களுக்கும் அஞ்சுவை மிகவும் பிடிக்குமாதலால் சீக்கிரமே சர்வாவிடம் பேசி நிச்சயத்தை முடித்து அடுத்த மாதம் திருமண தேதியையும் குறித்து உள்ளனர்.
ஆராதனா – வயது 22. வீட்டின் கடைக்குட்டி. அம்மு என்று தான் வீட்டில் அழைப்பார்கள். அனைவருக்கும் மிகவும் செல்லம். தன் அண்ணனை போன்றே பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் முடித்தவள் இன்று தான் முதல் நாள் அலுவலகம் செல்கின்றாள். புத்திசாலித்தனத்தோடு அதற்கு ஏற்ற அழகும் உடையவள். இவளுக்கும் தன் அண்ணன் தான் எல்லாம். அதே நேரம் தன் மனதில் உள்ளதையும் அவனிடத்தில் வெளிப்படையாக கூறிவிடுவாள். தன் அக்காவின் மீதும் உயிரையே வைத்துள்ளாள். அவர்கள் இருவரின் நன்மைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு பாசம் கொண்டவள்.
………………………………………………………………………………..
அங்கு காரில் சர்வாவுடன் அலுவலகம் சென்று கொண்டு இருந்த அம்முவோ தன் அண்ணனிடம் “அண்ணா, ஆகாஷ் மாமாக்கும் உங்களுக்கும் ஒரே ஏஜ் தானே. இப்போ ஆகாஷ் மாமாக்கும் அஞ்சுவுக்கும் கல்யாணம் நடக்கப்போகுது. நீங்களும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க ண்ணா.. நான் வேணும்னா உங்களுக்கு பொண்ணு பாக்கட்டுமா… எனக்கு சீக்கிரமே நம்ம வீட்டுக்கு அண்ணி வரனும்னு ஆசையா இருக்கு அண்ணா…” என்று தன் அண்ணனிடம் கொஞ்சி கெஞ்சிக்கொண்டு இருந்தாள்.
அதற்கு சர்வாவோ, “ அடடா, இன்னிக்கு அம்மு குட்டிக்கு என்னாச்சு… காலையிலேயே அண்ணி வரனும்னு ஆசை.. ம்ம்.. அதுவும் பொண்ணு பாக்கற அளவுக்கு பெரிய பொண்ணு ஆகிடாங்க. நம்ம அஞ்சு கல்யாணம் முடிஞ்சதும் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடனும் போலவே…” என்று கூறி சிரித்தான்.
அதற்கு அவளோ, “போங்கண்ணா, கிண்டல் பண்ணாதிங்க… அண்ணி வந்ததுக்கு அப்புறம் அவங்க கூட ஜாலியா கொஞ்ச நாள் இருந்துட்டு, நம்ம பிஸ்னஸ்லயும் எதாவது சாதிச்சுட்டு அதுக்கப்புறம் தான் என்னோட கல்யாணம் கில்யாணமெல்லாம்.. அதனால நீங்க முதல்ல கல்யாணம் பண்ணிக்கோங்க“ என்று தன் அண்ணனிடம் மல்லுக்கட்டினாள்.
“சரி சரி… அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் டா… இப்ப ஆபிஸ் வந்துடுச்சு.. மீட்டிங்கு வேற டைம்மாச்சு… உள்ளே போலாமா…” என்று கூறி விட்டு காரிலிருந்து இறங்கினான்.
‘எப்போ பார்த்தாலும் அண்ணா எஸ்கேப் ஆகிட்டே இருக்காங்க.. முதலில் முரளி மாமாகிட்டயும் சாரு அத்தைகிட்டயும் அண்ணா கல்யாணத்தை பத்தி சீக்கிரம் பேசனும்’ என்று மனதில் எண்ணிக்கொண்டு இறங்கி அவனுடன் உள்ளே சென்றாள்.
விரைவில் பிரதிபலிக்கும்…..