திருமதி: ஆ
ஆதவன் செவ்வென தன் வேலையை எவர் தூண்டலமின்றி செய்ய அவருக்கு உறுதுணையாய் தன் வேலையையும் வீறிட்ட குரலால் செய்தான் கிருஷ். ஆதவனின் கதிர்கள் திரைச்சீலையுடன் கண்ணாம்பூச்சு ஆட அந்த பட்டும்படாத வெளிச்சத்தில் தனக்கருகில் அழுது கொண்டிருந்த க்ருஷை தன் புறம் இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள் மங்கை. அன்னையின் சூட்டை உணர்ந்த க்ரிஷ் அவள் மார்பில் முட்டி மோதி தன் பசி தீர்க்க முயல, பட்டென விழிகளை திறந்தாள் மங்கை. விழித்ததும் வழக்கமாக செல்லும் இடத்திற்கு விழிகள் மேய, மணி ஆறை நெருங்கி காட்டியது. மேலே எதுவும் யோசிக்க விடாமல் க்ரிஷ் அழுகையை கூட்ட, அவனை தூக்கிக்கொண்டே எழுந்தாள் பெண். மடியில் அவனைக் கிடத்தியவள் அருகில் அவனின் பாட்டிலில் இருந்த நீரைத் தற்காலிகமாக புகட்ட, அதன் ருசிகண்டு தன் வாயிலிருந்து அதை தட்டிவிட்டான் க்ருஷ்.
“அழறான்ல பால் கொடுத்தா தான் என்ன?” கணவனின் குரல் க்ருஷையும் மீறி சத்தமாக ஒலித்தது.
“ப்ச்… இன்னும் பால் காய்ச்சல… அதுவரை இதை கொஞ்சம் குடிக்கட்டுமேனு கொடுத்தேன்…” என்று மங்கை பதில் கூற, க்ரிஷின் அழுகை அதிகமாகியது.
“தாய்ப்பால் தான் வேணும்னு அழறான். அதை கொடுத்தா தான் என்ன? ஏழு மாச பிள்ளைக்கு தினமும் அந்த பாக்கெட் பாலை கொடுத்தா அவனும் என்ன தான் செய்வான்.” மகனின் அழுகை பொறுக்காது மனைவியை கண்டித்தான்.
“புரிஞ்சி தான் பேசுறீங்களா விவேக். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வேலைக்கு போய்டுவேன். ஏற்கனவே உங்க பையன் ஒழுங்கா வேற எதையும் குடிக்கவோ, சாப்பிடவோ மாட்டேங்கிறான். நான் பக்கத்தில் இல்லாதபோது என்ன செய்வான்? நானும் ஒரு மாசமா மற்ற உணவுக்கு பழக்க முயற்சி செய்றேன் எதற்கும் அசைய மாட்டீங்குறான்…” சலிப்பாய் வந்தது மங்கையின் குரல்.
அவனின் பதிலை எதிர்பாராது மகனை தோளில் போட்டுக்கொண்டு வேகமாய் சமையலறை புகுந்து அவனுக்கான கஞ்சியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டாள். அவளைத் தொடர்ந்து வந்த விவேக்,
“ காலையிலும், இரவிலும் உன் பால் குடுன்னு நானும் பலமுறை சொல்லிட்டேன் மங்கை… நீ கேட்காம அவனை அழவச்சிட்டு இருக்க…”
“ஆமா அவன் அழறதை பார்க்க எனக்கு ஆசை தான் பாருங்க…” என்று கழுத்தை வெட்டியவள் மகனை சமாதானம் செய்துக்கொண்டே ஏற்கனவே காயவைத்து வறுத்து பொடித்து வைத்திருந்த ப்ரோட்டீன் தூளை தண்ணீரில் கரைத்து அடுப்பில் ஏற்றினாள்.
க்ரிஷோ பொறுமையின்றி அவள் தோளில் பற்களற்ற தன் ஈர்களை கொண்டு கடித்து வைத்தான்.
“ஸ்… ஆ… க்ரிஷ் அம்மா உனக்கு தான் கஞ்சி போட்டுட்டு இருக்கேன். அமைதியா இரு…” என்று அவனை அதட்ட க்ரிஷின் அழுகை கூடியதே தவிர குறையவில்லை.
“அதட்டாமா அமைதியா எப்படி அவனை சமாளிக்கணும்னு உனக்கு தெரியவே தெரியாதா மங்கை?” விவேக் கடிந்து கொண்டே க்ருஷை வாங்கிக்கொண்டான்.
“ஏன் உங்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வி விவேக்கை சேரும் முன்னே க்ரிஷின் அழுகை மட்டுப்பட்டு இருந்தது.
எப்படி என்று மங்கை பார்க்க அவசியமின்றி ‘பா பா பிளாக் ஷீப்’ என்ற ரைம்ஸ் விவேக்கின் அலைபேசியிலிருந்து ஒலித்தது.
“விவேக்… இது தான் நீங்க அவனை சமாதானம் செய்கின்ற லட்சணமா?” விழியிலும், மொழியிலும் கடினத்தை காட்டிய மங்கை க்ரிஷை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, “பால்காரர் பால் பாக்கெட் போட்டுட்டு போயிருப்பார். போய் எடுத்துட்டு வந்து காபி போடுங்க. நான் இவனுக்கு கஞ்சு ஊட்டிவிட்டு வரேன்…” என்று கஞ்சியை எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டாள்.
“இவனுக்கு ஊட்டும் போது சிந்திய கஞ்சியெல்லாம் காலில் பிசுபிசுன்னு ஒட்டுது இன்னைக்கு வீட்டுக்கு மாப் போட்டுடு,” விவேக்கும் வேறு வழியின்றி போகிற போக்கில் கட்டளையாய் சொல்லிவிட்டு வாசலில் கிடந்த பாலையும், பேப்பரையும் எடுத்துக் கொண்டு காலை பானத்தை தயாரிக்க சென்றுவிட்டான்.
மூவரின் இந்த பஞ்சாயத்தில் வீடே பெருமழையடித்து ஓய்ந்தது போல இருந்தது.
காபிக்கு மட்டுமே இந்தநிலை என்றால் இன்னும் இவர்கள் சமைத்து, குளித்து, கிளம்பி அப்பப்பா… இதற்கிடையில்,
“இன்னைக்கு யு.எஸ் கிளைண்ட்ஸ் கூட மீட்டிங் இருக்கு. நான் வர நடுநிசி ஆகிடும். நீ பத்திரமா இருந்துக்கோ…” என்றபடியே கூடத்தில் அவள் அருகில் காபியுடன் வந்தமர்ந்தான் விவேக்.
“ம்… கஞ்சி குடிச்சிட்டான் இனி அழ மாட்டான். இங்க விளையாட விட்டுட்டு போறேன் பார்த்துக்கோங்க…” என்றவள் பதிலெல்லாம் எதிர்பார்க்கவில்லை… க்ருஷை விவேக்கிடம் கொடுத்துவிட்டு அறைக்கு சென்று மறைந்து விட்டாள்.
விவேக் க்ரிஷையும், செய்தித்தாளையும் பரிதாபமாக பார்த்து வைத்தான்.
ஆனால் சென்ற வேகத்தில் திரும்பிவந்த மங்கை க்ரிஷின் மெத்தை மற்றும் விளையாட்டு பொருட்களை எடுத்துவந்து, விவேக்கின் அருகிலேயே அதை விரித்து க்ரிஷையும் விளையாட விட்டுச் சென்றாள்.
அவளிடம் ஒன்றும் சொல்லமுடியாமல் காபியை குடித்துவிட்டு செய்தித்தாளை எடுத்து படிக்க ஆரம்பித்துவிட்டான் விவேக். க்ரிஷ் சிறிது நேரம் அவனுள் ஏதோ உழப்பிக்கொண்டே தன் விளையாட்டு காரை வைத்து விளையாடிவிட்டு வாயில் வைத்து சப்ப, அவனின் அமைதியை கண்டுகொண்ட விவேக் புருவம் சுருக்கி செய்தித்தாளில் இருந்து லேசாக எட்டிப்பார்த்து பதறிவிட்டான்.
“டேய் மகனே… தினமும் என்னை உன் அம்மாட்ட திட்டு வாங்க வைக்காம விடமாட்டியா?…” என்று அங்கலாய்த்துக்கொண்டே காரை அவனிடமிருந்து பிடுங்கி க்ரிஷை தூக்க, தன் கார் பறிபோன துக்கத்தில் மறந்திருந்த அழுகையை மீண்டும் தொடர்ந்தான் மகன்.
“நான் அழவிடுறேனு சொல்லிட்டு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க விவேக்… ஒரு நாளாவது நான் சமைக்கும் போது அவன் அழுகாம பார்த்துகிறீங்களா? தினம் காலையில ஒரு பத்து முறையாவது அழுதிடுறான்.” மகனின் கனீர் அழுகுரல் நெஞ்சை பிசைய, விவேக்கை கடிந்து கொண்டே சமையலறையிலிருந்து ருத்திரதேவியாய் வெளிவந்தாள் மங்கை.
தாயிடம் இருக்கும் போது மகன் அழுதால் தகப்பனுக்கு மனைவியின் மேல் கோபம் வந்துவிடுகிறது; அதுவே அவனிடம் இருக்கும் போது அழுதால் தாயினால் தாள முடியவில்லை.
“அவன் காரை பிடுங்கிட்டேன்னு அழறான்…” என்று விவேக் தன்னை நியாயப்படுத்த,
“தினமும் இப்படி தான் ஒரு காரணம் சொல்றீங்க…” என்று மங்கை எகிற, விவேக்கும் இடக்காய் பிரச்சனையை வளர்த்தான்.
“ஏன் நீயும் அதே தானே பண்ற?”
“என்ன என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க? நானே தனியா எவ்வளவு தான் பார்ப்பேன்? குழந்தையை பார்க்கவா இல்லை வீட்டை பார்க்கவா இல்லை என் ஆபிஸ் வேலையைத் தான் பார்ப்பதா? இதேது கம்பெனில வேலை பார்த்திருந்தா கூட வேலையை விட்டிருப்பேன். அரசு வேலையை எப்படி விடுறது? என்னால முடிந்த அளவு எல்லாம் செய்திட்டு தான் இருக்கேன். ஆனால் நீங்க??? என்னை ஏதாவது சொல்றதையே வேலையா வச்சிருக்கீங்க…”
“நான் உன்னை அப்படி என்ன குறை சொல்லிட்டேன்னு இப்படி பேசுற? நீ சிரமப்படுவதை பார்த்து நானும் தான் உனக்கு எல்லாவற்றிலும் உதவுறேன். காலையில் நீ சமைத்தால் இரவு நான் செய்றேன்… என்னால முடிந்த நேரத்தில் குழந்தையை பார்த்துகிறேன். எல்லாருடைய துணியையும் மெஷின்ல போட்டு, காய வைத்து இஸ்திரி போடற வரைக்கும் எல்லாம் செய்றேன்… இன்னும் என்ன செய்யணும்னு நீ எதிர்பார்க்குற?”
அதோ இதோ என்று உள்ளுக்குள் உறுமிக்கொண்டிருந்த எரிமலை அழுத்தத்தில் வெடித்துச் சிதறியது. என்றோ வரவேண்டிய சண்டை இன்று வந்தே விட்டது.
“இதெல்லாம் செய்ய உங்களுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தா உங்க அம்மாவை கொஞ்ச நாள் வந்து அவங்க பேரனை பார்த்துக்க சொல்றது…” மனதில் இருந்தது சண்டையோடு சண்டையாய் முட்டிமோதி சந்தர்ப்பம் கிடைத்ததும் வார்த்தைகளாய் புகைச்சலுடன் சினத்தை கக்கியது.
சண்டை என்றான பின் விடுவதா? என்று விவேக்கும் ஆவேசத்துடன், “உங்க அம்மாவைக் கூட யாரும் இங்க வர வேணாம்னு சொல்லல…”
“அவர்களால முடிஞ்சா வர மாட்டாங்களா?”
“என் அம்மா மட்டும் நம்ம கஷ்டப்படட்டும்னு விட்டுட்டு போன மாதிரி பேசுற? அவர்களாலும் வர முடியாத சூழல்.”
“சும்மா பூசி மெழுகாதீங்க… நம்ம காதலிச்சு கல்யாணம் பண்ணது உங்க அம்மாவுக்கு பிடிக்கல… ஏதோ க்ரிஷ் உருவானதும் கொஞ்சம் முகம் கொடுத்து பேசுனாங்க. அவன் பிறந்ததற்கு பிறகு என்ன செஞ்சாங்க?”
“நீ உன் அம்மா வீட்ல இருந்த… அங்கு வந்து உன்னை பார்த்துக்க முடியுமா என்ன? நீ இங்க வந்த நேரம் மும்பைல இருக்குற அக்காக்கு எமெர்ஜென்சி… உன்னையும், க்ரிஷையும் தனியா விட்டுட்டு போக தயங்கிய போது கூட நீ தான் போயிட்டு வாங்க அத்தை நான் தனியா இருந்துப்பேணு சொல்லி அனுப்பி வைச்ச… இப்போ என்னனா இந்த குதி குதிக்கிற…”
“ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிடுங்க… துணைக்கு யாராவது இருக்கும் போது சமத்து பையனா இருந்துட்டு இப்போ யாரும் இல்லாத போது விஷமம் பண்றான் உங்க அருமை புள்ள…” க்ரிஷுக்கும் சேர்ந்து திட்டுக்கள் விழுந்தது.
“குழந்தைனா அப்படி தான் இருப்பாங்க. நீ தான் பொறுத்து போகணும்…”
“எல்லாத்துக்கும் நான் தான் பொறுத்து போகணும். ச்ச…” அகத்திலும், புறத்திலும் ஏற்பட்ட அலுப்பும், சலிப்பும் புறத்திலும், வார்த்தைகளிலும் அப்பட்டமாய் வெளிப்பட்டது.
“நானும் ஒன்னும் சொகுசா இல்லை மங்கை. உனக்காகவும், க்ரிஷுக்காகவும் நிறைய பொறுத்து போயிட்டு தான் இருக்கேன். நீ அதை கவனிக்கலைனு சொல்லு…” தன் மீது குற்றம் சுமத்தப்பட்ட கடுப்பு எழ சீறினான் விவேக்.
சண்டை வளர்ந்ததே தவிர, தீர்வுகள் எட்டப்படவில்லை.
அவனிடம் சண்டையிட்டு நேரத்தை வீணாக்குவதைத் தவிர பயன் ஏதும் இல்லை என்றுணர்ந்த மங்கை தங்களுக்கான உணவை தயார் செய்ய சென்றுவிட, க்ரிஷை தூக்கிக் கொண்டு வெளியே சென்றான் விவேக்.
‘இந்த சமையலும் வேற என்னை இம்சை செய்யபோகுது… இனி எப்போ காலைக்கும், மதியத்திற்கு உணவு செய்து, க்ரிஷை கிளப்பி கிரீச்சில் விட்டு எப்போது வேலைக்கு செல்வது?’ என்ற கவலை பிறக்க, பொறுப்புகள் சுமையாய் தெரிந்தன.
காதலிச்சிட்டு மட்டுமே இருந்திருக்கலாம். திருமதி ஆன பின்பு சண்டை தான் இரண்டு பேருக்கு இடையிலும்… செல்வியாகவே(Ms) இருந்திருக்கலாமோ? சலனமுற்ற மனம் சஞ்சலமாகவே சிந்தித்தது.
புதிய உறவுக்குள் அடியெடுத்து வைக்கும் போது ஒருவர் தன் இயல்பிலிருந்து மாறியாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர். மாற்றம் அதன் போக்கில் தன்னாலே நிகழும். சிலரின் மாற்றம் வெளிப்படையாய் தெரிகிறது, பலரது மாற்றங்கள் தெரிவதில்லை.
எப்போதுமே சூழ்நிலைகள் மாறும்! காட்சிகள் மாறும்!
அதை புரிந்துகொள்ளாத மானிடர்கள் பலர்… அதில் மங்கையும், விவேக்கும் இணைந்து இப்படி சண்டகோழியாய் சிலிர்த்து நிற்க, காலம் அவர்களை தயவு தாட்சண்யம் இன்றி அதன் போக்கில் இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது.
★★★