ஜீவ தாளம் : 2
அத்தியாயம் : 2
பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அவ்வலுவலகத்திற்குள் நிமிர்ந்த நடையுடன் நுழைந்தாள் ஜீவா. வரவேற்பு அறையிலிருந்து தொடங்கி, பணியாளர்கள் தத்தம் கணினித் திரைகளில் மூழ்கி வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பரபரப்பான சூழலை ஒருவித ஆழ்ந்த நோட்டமிட்டவாறு கடந்தவள், மேலாளர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
அவளது வருகைக்காகவே காத்திருந்த பூபாலன், மரியாதையுடன் எழுந்து நின்று, தான் அமர்ந்திருந்த மேலாளர் நாற்காலியைச் சுட்டிக்காட்டி அவளை அதில் அமருமாறு கூறினார். ஆனால், ஜீவா மென்மையாக மறுத்துத் தலையசைத்தபடி, அவரையே அந்த இருக்கையில் அமருமாறு சைகை செய்தாள்.
“என்னம்மா இது? உன்னை இந்த இடத்துல உட்கார வச்சு அழகு பாக்கணும்னு நெனைச்சேன்; ஆனா நீ என்னையே உட்காரச் சொல்றியே!” என்று ஆதங்கத்துடன் சொன்னார்.
Advertisement
அவள் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. “அங்கிள், நான் இந்த நாற்காலியில் அமர்ந்து அதிகாரம் செய்ய அமெரிக்காவிலிருந்து வரல. ஏதோ ஒரு சில முக்கியமான நிறுவனக் கோப்புகளில் கையெழுத்திட சொன்னதால்தான் வந்தேன்” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள்.
“இருக்கட்டுமே ஜீவா! அதுக்காக வந்த நேரத்திலிருந்து இப்படி விலகி நிற்கணுமா? இது உன் அப்பாவும் நானும் ரத்தம் சிந்தி உருவாக்கின சாம்ராஜ்யம். இதோட ஒரே வாரிசு நீதான்! இந்த நிறுவனத்தோட ஒவ்வொரு அணுவும் உனக்கு மட்டுமே சொந்தம். இதே இருக்கையில அமர்ந்து நீயே காலம் முழுக்க வழிநடத்தணும்னு நான் ஆசைப்படுறேன்” என்றார் பூபாலன்.
அவள் மௌனமாக மறுப்புத் தெரிவிக்க, அவர் விடாமல் தொடர்ந்தார். “உன் அப்பா உயிரோடு இருந்தப்ப எத்தனையோ முறை இங்கே வரச் சொல்லிக் கெஞ்சினேன். அப்போ எல்லாம் ‘வேலை வேலை’ன்னு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி பிடிவாதமா மறுத்துட்டான். அவன்தான் வரல, அவனோட பிம்பமா இருக்குற நீயாவது நான் சொல்றதைக் கேளம்மா!” என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
Advertisement
அவள் கண்கள் சட்டெனக் கலங்கின. “அங்கிள், என் அப்பாவுக்குப் பிடிக்காத எதையும் நான் என் வாழ்நாளில் செய்ததில்லை; இனிமேலும் செய்ய மாட்டேன். என்னோட ஒவ்வொரு அசைவும், பழக்கவழக்கமும், ஏன்… என் சுவாசமும் கூட அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணும்னுதான் சின்ன வயசுல இருந்தே என்னை நானே செதுக்கிக்கிட்டேன். இப்போ அவர் நம்மைக் கைவிட்டுப் போயிட்டார்ங்கிற ஒரே காரணத்துக்காக, அவருக்குக் கொடுத்த வாக்கை நான் மீறக் கூடாது இல்லையா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.
Advertisement
அவளது அந்த ஒரு பதிலிலேயே, மறைந்த தன் நண்பன் மீது அவள் வைத்திருந்த அளவற்ற பாசமும் மரியாதையும் பூபாலனுக்குப் புரிந்தது.
“அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வாழ்க்கையை ஒரு தனி மரமா நின்னு எதிர்கொள்றதை நினைக்குறப்போ நெஞ்சு வலிக்குது அங்கிள். அவங்க போயிட்ட அதே இடத்துக்கே நானும் போயிடமாட்டேனான்னு என் மனசு தவிக்குது. இன்னைக்கு உலகத்தோட கண்ணுக்கு வசதியும் பணமும் மட்டும்தான் பெருசா தெரியலாம். ஆனா, உண்மையான பாசம், மாறாத அன்பு, உயிருக்கு மேலா நம்பிக் கொடுத்த வாக்குறுதி… இதோட மதிப்பெல்லாம் யாருக்கும் புரியறதில்லை. மத்தவங்களுக்காக நான் என்னை மாத்திக்கப் போறதில்லை. நான் இப்படித்தான், அப்பாவின் கொள்கைகளோடவே கடைசி வரை வாழ ஆசைப்படுறேன்.”
அவளது குரலில் இழைந்த அந்த உறுதி பூபாலனை ஒரு கணம் நிலைகுலையச் செய்தது. இத்தனை உறுதியான பெண்ணை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று அவர் மனசாட்சி குரல் கொடுத்தது. சூழலை மாற்றும் பொருட்டு, “அன்பு இறந்துட்டதால், அவன் பேர்ல இருந்த அத்தனைச் சொத்துக்களையும் உன் பேருக்கு மாத்தி எழுதிட்டேன். அதுல நீ கையெழுத்திட்டு, இந்த நிறுவனத்தை முறைப்படி உன் பொறுப்புல எடுத்துக்கணும்.
Advertisement
யாருமே இல்லாத அநாதை போல நீ அமெரிக்காவில் தனிமையில வாட வேண்டாம். உன் தம்பி ஆதர்ஷை இங்கேயே கூட்டிட்டு வந்துடலாம். அங்க கிடைக்கிறதை விடவும் மேலான சிகிச்சையை இங்கே கொடுக்க நான் ஏற்பாடு செய்றேன். உனக்கு ஒரு நல்ல வாழ்வு அமைஞ்சா தான் உங்க அப்பாவோட ஆத்மா சாந்தியடையும். எல்லாமே முடிஞ்சுட்டதா நினைச்சுக் கலங்காதே அம்மா!” என்று தந்தைக்கே உரிய வாஞ்சையுடன் ஆறுதல் கூறினார்.
அவள் ஒரு கசந்த முறுவலை உதிர்த்தாள். பெற்றோர் மறைந்த அந்தச் சில மாதங்கள் அவளுக்குப் பல கசப்பான பாடங்களைக் கற்பித்திருந்தன. தன் தந்தை வியர்வை சிந்தி உருவாக்கிய இந்த நிறுவனத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவள் ஒற்றைப் பெண்ணாக நின்று போராடி மீட்டிருந்தாள். போலியான ஆவணங்களைத் தயாரித்து, நிறுவனத்திற்குக் கடன் இருப்பதாகக் கூறி ஏமாற்ற முயன்ற நயவஞ்சகர்களைத் தந்திரமாகச் சட்டத்தின் முன் நிறுத்தினாள்.
வீடு, நிறுவனம் என அனைத்தையும் தனது இரும்புப் பிடிக்குள் கொண்டு வந்தாள். அப்பாவின் கடன்களைக் காப்பீட்டுப் பணம், தனது சேமிப்பு மற்றும் திருமணத்திற்காக அப்பா சேர்த்து வைத்திருந்த நகைகள் ஆகியவற்றைக்கொண்டு அடைத்தாள். ஹிரித்திக் வீட்டிற்குச் சீதனமாகக் கொடுத்திருந்த அனைத்தையும் மீட்டு, ஒரு பைசா பாக்கியில்லாமல் மொத்தக் கடனையும் தீர்த்து முடித்தாள். அவளது இந்த அசாத்தியமான துணிச்சலும் உழைப்பும் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு பெண் சிம்மமாக நிமிர்ந்து நின்றவள், எந்த ஓர் ஆணுக்கும் தலைவணங்க மறுத்தாள். திருமண உறவை முறித்துக்கொண்ட பிறகும் அவளைத் தேடி வந்து பேசத் துடித்த ஹிரித்திக்கை, அலுவலக வாசலிலேயே காவலாளியை கொண்டு அப்புறப்படுத்தினாள்.
ஹிரித்திக்கின் தந்தை வந்து ‘நின்று போன திருமணத்தை மீண்டும் நடத்தலாம்’ என்று கேட்டபோது கூட, அதை மிக நாசூக்காகவும் உறுதியாகவும் மறுத்துவிட்டாள். அவளுக்கு இப்போது இருக்கும் ஒரே லட்சியம், தம்பி ஆதர்ஷின் உடல்நிலை தேறி அவன் பழையபடி துள்ளித் திரிய வேண்டும் என்பது மட்டும்தான்!
அந்த லட்சியத்தைத் தவிர வேறு எந்த எண்ணத்தையும் அவள் தன் அருகில் நெருங்க விடவில்லை. இரவு பகலாகத் தன்னை வேலையில் மூழ்கடித்துக்கொண்டாள். அவளது அயராத உழைப்பின் பலனாக, ஒரு காலத்தில் முதன்மையான தொழிலதிபராகத் திகழ்ந்த அவளது தந்தையின் பெயர் மீண்டும் சந்தையில் புகழுடன் ஒலிக்கத் தொடங்கியது.
உடல்நலம் குன்றிய தம்பியையும், முறிந்து போன திருமணத்தையும் நினைத்து அவள் ஒரு மூலையில் முடங்கியிருந்தால் இது எதற்கும் சாத்தியமில்லாமல் போயிருக்கும். பிரதிபலன் எதிர்பாராத அவளது நேர்மையான உழைப்பு இன்று அவளைச் சமூகத்தில் நிமிர்வுடன் உலவ வைத்தது. தன்னைத் தோற்கடிக்கக் காத்திருந்த எதிரிகளுக்குப் பாடம் புகட்ட, தன்னையும் அவள் ஒரு கம்பீரமான ராணியாகவே மாற்றிக்கொண்டாள்.
இளமை ததும்பும் ஒரு பெண் தனிமையில் இருக்கிறாள் என்றால், இந்தச் சமூகம் அவளுக்கு எத்தனை இடையூறுகளைத் தரும்? அதிலும் அமெரிக்கா போன்ற தேசத்தில் ஆதரவற்ற நிலையில் இருப்பவள், எந்த அளவிற்கு தன்னைப் பாதுகாப்புடன் வைத்திருப்பாள்? அப்படிப்பட்டவளை, சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கிவிடுமாறு சொன்னால் அவளது மனம் எப்படிச் சம்மதிக்கும்?
“சரிம்மா, இங்கிருக்கும் பொறுப்பை இப்போதைக்கு ஏற்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிற… ஆனா, சில நாட்களாவது எங்க வீட்டுல தங்கிட்டுப் போ. நான் உனக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய மீதியிருக்கு”
அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று புரியாமல் அவள் பார்க்க, “நமது நிறுவனத்தின் தொடர்புகள், பணப் பரிவர்த்தனைகள், பங்குதாரர்களின் விவரங்கள், ஊழியர்களின் பணிகள், அவர்களுக்கு நாம் வழங்கிய சலுகைகள்… அனைத்தையும் உங்க அப்பா கிட்ட நான் ஒளிவு மறைவு இல்லாம பகிர்ந்து வந்தேன். இப்போ, அவன் இடத்துல நீ இருப்பதால், ஒரு வாரிசா இதையெல்லாம் முறைப்படி தெரிஞ்சுக்கணும்” என்று அவள் மறுக்க முடியாத காரணங்களை அடுக்கினார்.
அவர் சொல்வதில் இருந்த நியாயம் ஜீவாவைச் சிந்திக்க வைத்தது.
“வெளிநாட்டில் அரிதாகக் கிடைக்கும் பொருட்களை இங்கிருந்து அனுப்பி வைப்பதும், அங்கிருக்கும் நவீனக் கருவிகளை இங்கே கொண்டு வருவதுமான ஏற்றுமதி இறக்குமதித் தொழில் மிகவும் சீராக நடந்து வந்தது. இடையில் ஒருமுறை கப்பல் கவிழ்ந்த நிலையில் ஏற்பட்ட நட்டத்தை நானே முன்னின்று சரிசெய்தேன். நீ ஒரு பெண் என்பதால் உனக்கு எந்தப் பாரமும் தெரியக் கூடாதுன்னு இத்தனை காலம் நான் உழைத்தேன்.
ஆனா இப்போ வந்து நீ ‘எல்லாம் முடிஞ்சிடுச்சு. நான் கிளம்புறேன்’னு சொன்னா எப்படி ஏத்துக்க முடியும்? என் மீது உனக்கு கொஞ்சமாவது அன்பு இருந்தா, ஒரு மாதமாவது எங்களோடு தங்கியிருந்து இந்தக் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துட்டுப் போ” என்று கோரிக்கை விடுத்தார்.
அவர் செய்த உதவிகளுக்குத் தான் என்ன பிரதிபலன் செய்வது என்று தெரியாமல் அவள் திகைத்தாள். “என் மனைவி பாரதியும், என் மகன் கபிலனும் உன்னைத் தங்கள் உயிராகக் கவனிப்பார்கள். நீயாகப் போவதா சொல்லும் வரை நாங்க ஒரு வார்த்தை கூட உன்னை வற்புறுத்த மாட்டோம். சம்மதம்தானே?” என்று கேட்க, தம்பி ஆதர்ஷை நினைத்து அவள் தயங்கினாள்.
“ஆதர்ஷ், அங்கேயே பாதுகாப்பா இருப்பான். கவலைப்படாதே! ஒரு மாதம் மட்டும் இங்கே இருந்துட்டுப் போ” என்று அவர் மீண்டும் உறுதி அளிக்க, ஒரு மாத விசா அவளிடம் இருப்பதை நினைத்துக்கொண்டாள். தவிர்க்க முடியாத காரணத்தால் அவளது சம்மதம் தலையசைப்பாக வெளிப்பட்டது.
அதே நேரத்தில், “எனக்குத் தெரியாமல் எதையும் செய்யக் கூடாது, பிடிக்காத எதற்கும் வற்புறுத்தக் கூடாது” என்ற நிபந்தனையுடன் அவர் வீட்டில் தங்கச் சம்மதித்தாள்.
பூபாலன் மகிழ்ச்சியில் திளைத்தார். அதன்பிறகு அலுவலகப் பணிகள் அவர்களை சூழ்ந்து கொண்டன. நிறுவனத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் கபிலன் அவளுக்குத் தெளிவாக விளக்கினான். மதிய உணவு நேரத்தில் பூபாலன், கபிலன் மற்றும் ஜீவா மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.
பூபாலனின் மனைவி பாசத்துடன் சமைத்து அனுப்பிய உணவை உண்டபோது, ஜீவாவிற்குத் தன் அம்மாவின் கைமணம் நினைவில் வந்து கண்களைக் கசிய வைத்தது. இனி அந்தப் பாசம் கிடைக்காது என்று தெரிந்தாலும், தாய்மடியைத் தேடும் அவளது மனதைப் பலவீனமடைய விடாமல் அலுவலக வேலைகளில் திணித்துக்கொண்டாள்.
கபிலனின் சுறுசுறுப்பும், வேலையில் அவனுக்கு இருந்த நேர்த்தியும் ஜீவாவிற்குப் பிடித்திருந்தது. கபிலன் நிறுவனத்தின் அத்தனை விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தான். பூபாலன் ஐம்பது வயதைத் தொட்டாலும் இன்றும் ஒரு இளைஞனைப் போல உழைத்தார். தன் தந்தை வைத்திருந்த நம்பிக்கையைத் தான் சிதைத்து விடக்கூடாது என்பதில் ஜீவா உறுதியாக இருந்தாள்.
இவர்களின் அர்ப்பணிப்பைக் கண்ட பிறகு, ‘அமெரிக்காவில் இருப்பதை தான் பார்த்துக்கொள்ளலாம், சென்னையில் இருப்பதை இவர்கள் கவனித்துக் கொள்ளட்டும். இதில் தனக்குப் பங்கு எதுவும் வேண்டாம்’ என்று மனதிற்குள் முடிவு செய்தாள்.
பூபாலன் வீட்டில் தங்கியிருந்த நாட்களில், பாரதியின் அன்பான உபசரிப்பு அவளுக்குத் தன் தாயைப் போலவே இருந்தது. கபிலனுடன் பழகியபோது ஒரு சிறந்த நண்பன் கிடைத்த உணர்வு ஏற்பட்டது. பூபாலனோ ஒரு தந்தையாகவே அவளைக் கவனித்துக்கொண்டார். மீண்டும் அமெரிக்கா சென்றால் கிடைக்கப்போகும் அந்தப் பயங்கரத் தனிமையை நினைத்து அவளது மனம் ஏங்கியது.
தினமும் இத்தகைய உணர்ச்சிப் போராட்டங்களில் சிக்கித் தவிப்பவள், மாலையில் மனதை அமைதிப்படுத்திக்கொள்ள அருகில் இருந்த பூங்காவிற்குச் செல்வது வழக்கம். அன்றும் அதேபோல சென்றிருக்க, பூங்காவில் சிறுவர்களின் விளையாட்டும் சிரிப்பொலியும் அந்த இடத்தையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தன. ஜீவா ஒரு இருக்கையில் அமர்ந்து அவர்களின் மகிழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது, உதிர்ந்து கிடந்த மஞ்சள் நிறப் பூக்களைச் சேகரித்த சிறுவர்கள், தரையில் வண்ணக் கோலங்கள் இடுவதைக் கண்டாள். தன் தம்பியோடு தானும் இப்படி விளையாடிய ஞாபகம் அவளுக்குள் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்தது. ஆர்வம் தாளாமல் எழுந்து அந்தச் சிறுவர்களின் அருகில் சென்றாள்.
பூக்கள் தரையில் வெகுநேரமாக கிடந்து காய்ந்து போயிருந்ததால், உயிருள்ள பூக்களை அவர்களுக்கு அளிக்க எண்ணி, தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு மரக்கிளையைப் பிடித்து பலமாக உலுக்கினாள். மஞ்சள் நிறப் பூக்கள் அவள் மீதும், அந்தச் சிறுவர்கள் மீதும் பூமாரியாய்ப் பொழிந்தன. அதன் நறுமணமும் குழந்தைகளின் ஆரவாரமும் அவளை ஒரு நிமிடம் தன் கவலைகளை மறக்க வைத்தன.
அதே சமயம், சற்றுத் தொலைவில் நின்று தனது புகைப்படக் கருவி வழியாக இயற்கையைப் படம் பிடித்துக் கொண்டிருந்த ஆனந்த், இந்தக் காட்சியைக் கண்டு ஸ்தம்பித்தான். மஞ்சள் நிறப் புடவையில், உதிர்ந்து விழும் மலர்களுக்கு இடையே ஒரு தேவதையைப் போலத் தெரிந்த அந்தப் பெண்ணின் அழகு அவனது கேமராவிற்குள் சிறைப்பட்டது.
விமான நிலையத்தில் கைப்பேசியைத் தட்டிவிட்டுச் சென்றவளின் முகம் அன்று அவனுக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இன்று, தன் கண் முன்னே ஒரு குழந்தையைப் போலப் பூக்களுடன் விளையாடும் அவளது முகம் அவனுக்குப் புத்தம் புதியதாக இருந்தது.
கிளைகளை உலுக்கிக் கொண்டிருந்த ஜீவா, பூக்கள் போதுமான அளவு சேர்ந்ததும் பிடியை விட முயன்றாள். ஆனால், வீசிய பலமான காற்றின் வேகத்தில் அந்த மரம் அவளைத் தன்னுடன் மேலே இழுப்பது போல அடம் பிடித்தது. அவள் திகைத்து நின்ற அந்த நொடிக் கணத்தில், இரு வலுவான கரங்கள் அந்த மரக்கிளையைப் பற்றின.
எதிர்பாராத விதமாக அவள் கைநழுவி அவன் மார்பில் வந்து மோதினாள். ஒரு கையால் அவளை அரவணைத்துத் தாங்கிய ஆனந்த், மறு கையால் லாவகமாக மரக்கிளையைச் சமன்படுத்தி அவளைப் பாதுகாப்பாக விடுவித்தான்.
வளைக்கும்போது பூங்கொடியாய் வளைந்து கொடுத்த அந்த மரம், பிடியை விட்டவுடன் ஏன் இத்தனை வேகம் காட்டியது? அதன் இலைகள் காற்றில் படபடவென அடித்துக்கொண்ட விதம், ஏதோ ஒரு சீற்றத்தைப் போலவோ அல்லது ஒரு பிடிவாதத்தைப் போலவோ அவளுக்குத் தோன்றியது. திகைப்புடன் அவள் அந்த மரத்தையே அண்ணாந்து பார்க்க, ஆனந்த் தன் உதட்டோரம் ஒரு குறும்புச் சிரிப்பை ஏந்திக்கொண்டு அவளருகே வந்தான்.
இந்த மரத்தைப் பார்… அது வெறும் மரம் மட்டுமல்ல, ஒரு பேராசைக்காரன்! உன் மெல்லிடைக்கு அத்தனை வலிமை ஏதென்று வியந்து போயிருக்கிறது. அடர்ந்த படர்கொடிகளைத் தன் தோளில் சுமந்து நின்ற அதற்கு, ஒரு சின்னஞ்சிறு கொடியைப் போன்ற நீ, தனக்கே சவால் விடுவது போல் தெரிந்திருக்கிறது.”
அவளது விழித்திரைகள் படபடவென அடித்துக் கொண்டன. ‘யார் இவன்? அறிமுகமே இல்லாமல் இத்தனை உரிமையுடன் உரையாடுவது?’ என்று அவள் மலைத்து நிற்க, அவனோ ஒரு கவிஞனாக மாறித் தன் வர்ணனைகளால் அவளை வாயடைக்கச் செய்தான்.
”அந்தப் பொறாமைதான், நீ பிடியை விட்டதும் மரத்தைத் துள்ளிக் குதிக்க வைக்கிறது. தரைக்கு அனுப்ப மனமில்லாமல், விண்ணை நோக்கி உன்னையும் இழுக்கப் பார்த்திருக்கிறது!”
அவள் நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் பார்க்க, அவன் மேலும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவன் முகம் அத்தனை வசீகரமாக மாறியது. ஆனால், ஏற்கனவே மனதளவில் அவள் பட்டிருந்த காயங்கள், அந்தப் புன்னகையை ரசிக்க விடாமல் அவளை அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று போகச் செய்தன.
ஆனால் அந்தக் குறும்புக்காரனோ, அத்தனை எளிதில் அவளை விடுவதாக இல்லை!
அவன் தன் கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, “ஆகாயத்தில் விமானப் பயணச் சீட்டு பெறாமல், சுதந்திரமாகப் பறந்து செல்ல இருந்தவரைக் காப்பாற்றி அழைத்து வந்ததற்கு ஒரு சிறு நன்றிகூடக் கிடையாதா?” என்று கேட்டான். அவன் எகத்தாளமாகக் கேட்ட அந்த நொடியில், காற்றில் ஆடிக்கொண்டிருந்த மரக்கிளைகள் கூட அவன் பக்கமே சாட்சி சொல்வது போல் அசைந்தன.
ஜீவாவின் அலட்சியமான வேகநடை, ஆனந்தின் வம்புகளைக் காற்றோடு கரையச் செய்தது. ஆனாலும் அவன் விடாமல், “இந்தப் பெண்களே இப்படித்தான்! கொஞ்சம் கூட நன்றி விசுவாசமே இல்லையே!” என்று சத்தமாகச் சொன்னது, மரத்தின் இலைகளில் பட்டு எதிரொலித்து அவளைத் துரத்தியது.
அவள் ஒருமுறை கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. அவளது மௌனமும், பிடிவாதமான வேகமும் ஆனந்திற்குள் பழைய பிம்பத்தை நிழலாடச் செய்தது. அப்போதுதான் அவன் மூளையில் மின்னல் வெட்டியது! விமான நிலையப் பரபரப்பில், கூட்ட நெரிசலுக்கு இடையே தன்னைத் தட்டிவிட்டுச் சென்ற பெண்ணின் ஞாபகம், நினைவலைகளை ஆக்ரோஷமாக முட்டியது.
