தோழிகளை சந்தித்துவிட்டு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டிருந்தது. அவர்கள் பேச்சின் தாக்கம் மட்டும் அஷ்ட்டாவை விட்டு நீங்கவில்லை.
எந்நேரமும் ஒரு சிந்தனை படிந்த முகத்துடனே வலம் வந்தவளை என்ன கேட்டும் எதையும் வாய் திறந்து சொல்ல மறுத்துவிட்டாள்.
அன்று நண்பகல் தாண்டிய நேரம்,
“இந்த படத்தை நீயும் எத்தனை தடவை தாண்டி பார்ப்ப?” என தொலைகாட்சி முன்னே அமர்ந்து யோசனையில் இருந்த அஷ்டாவிடம் வினவினார் நீலா.
“எத்தனை தடவை பாத்தேன் சொல்லுங்க?”
நீலா, “ஆமா, இதுக்கு கணக்கு வேற வச்சுக்குறாங்க! இந்த படத்தை தான் சீரியல் கணக்கா எந்நேரமும் போட்டுட்டு இருக்கானே இந்த டிவிக்காரன்”
அஷ்டா, “அப்போ அடுத்து என்ன நடக்கும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்?” நீலாவுக்கு டெஸ்டிங் வைத்தாள்.
“க்கும்! தெரியாது பாரு! அந்த ஹீரோவும் ஹீரோயினும் லவ் பண்ணுவாங்க, வில்லன் வருவான், ஹீரோ சண்ட போட்டு ஹீரோயினை கல்யாணம் கட்டிக்குவாரு!” என சொல்ல,
“ம்மா! சரியான போங்கு’ம்மா நீங்க! குத்து மதிப்பா அடிச்சு விடுறீங்க பாருங்க”
நீலா, “சரி சரி! வேற எதாவது மாத்து, பாப்போம்!”
மங்களம் பாட்டி அசதியாய் இருப்பதாய் சொல்லி உறங்க சென்றிருக்க, தைரியமாய் மகளை அதட்டிக்கொண்டிருந்தார் நீலா.
அஷ்டா சேனலை திருப்பிக்கொண்டே வந்தவள் சன்மியூசிக்யில் நிறுத்த, அதில் ஓடிக்கொண்டிருந்த பாட்டினுடன் தானும் பாடிக்கொண்டே அதை ரசித்துக்கொண்டிருந்தாள்.
டிவியையும் மகளையும் மாற்றி மாற்றி பார்த்தவர், “இதெல்லாம் ஒரு பாட்டாடி? வார்த்தையும் புரியல, ஒன்னும் புரியல! டமால் டுமீல்ன்னு மியூசிக்கை போட்டுடுறானுங்க! அந்த காலத்துல எல்லாம் பாட்டு எப்டி இருக்கும் தெரியுமா?” என அவர் காலத்து பாடல்களை சிலாகித்து சொல்ல துவங்க,
“இப்போ உங்களுக்கு என்னம்மா வேணும்?” என்றாள் அஷ்டா.
அதற்கே காத்திருந்தவர் போல, “எதாவது பழைய படமா போடேன்! பக்கத்து வீட்டுல எம்.ஜி.ஆர் படம் ஓடுற சத்தம் கேட்குது” என்று சிறு பிள்ளை போல ஆசையாய் சொல்ல,
“அதை நேராவே கேட்க வேண்டியது தானே?” என்ற அஷ்டா நீலா கேட்டதை வைத்து கொடுத்ததும், முகமெல்லாம் மலர ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆரை ரசிக்க ஆரம்பித்தார் நீலா.
அடுத்த சில நிமிடங்களில் வாசலில் நிழலாட படத்தில் இருந்து கவனம் கலைந்து வாசலை பார்த்த நீலா, அங்கே தனது தம்பி நிற்ப்பதை கண்டு, “டேய் சிதம்பரம்? வாடா வாடா” என்றார் கை ஊன்றி எழுந்தபடி.
அந்த ‘டேய்’யில் தான் எத்தனை வாஞ்சை கொட்டிக்கிடந்தது…!
உடன் வந்த சண்முகம், “பாருடா சிதம்பரம், வாரா வாரம் வர உன்னை, என்னவோ வருஷக்கணக்குல பார்க்காத மாறி வரிஞ்சுக்கட்டி கூப்பிடுறா!” என மனைவியை கிண்டல் செய்ய,
“என்ன மாமா, அக்காவை கிண்டலடிக்குற சாக்குல நான் வாராவாரம் வீட்டுக்கு வரேன்னு குத்திக்காட்டுறீங்க போலயே?” என தன் மாமனையே திருப்பி கேட்டார் சிதம்பரம்.
சிதம்பரம் அப்படி கேட்டதும் கொஞ்சம் கூட பதறாமல், “அப்படி தான்னு வச்சுக்கோயேன்! அதுக்காக கோச்சுக்கிட்டு கிளம்பிடுவியா என்ன?” என்றார் சண்முகம்.
“வாய்ப்பில்லை மாமா! அதுக்கெல்லாம் வேற ஆளை பாருங்க” என்றவர், “என்ன அஷ்டா, பொழுதெல்லாம் எப்படி போகுது?” என்றார்.
“ப்ச்! போகுது மாமா!” என சலிப்பாய் சொன்னாள் அவள்.
அதற்குள் தம்பிக்கு ஜில்லென மோர் கொண்டு வந்து கொடுத்த நீலா, “ஜோசியர் என்னடா சொன்னார்?” என்றார் அவரிடம் வந்ததும் வராததுமாய்.
“எல்லாம் நல்லதா தான் சொன்னார்” என்ற சிதம்பரம், “தரகர் கிட்ட பாப்பா ஜாதகத்தை குடுத்தாச்சு!” என சொன்னபோது, வெடுக்கென, “மாமா, நான் ஒன்னும் பாப்பா இல்ல” என்று எரிச்சலாய் இடையிட்டாள் அஷ்டா.
“சரிமா பெரிய மனுஷி!” என அவள் எரிச்சலை கண்டுக்கொள்ளாத சிதம்பரம், “இன்னும் ஒரே மாசத்துல நமக்கு தோதான வரனா வரும்… நீயே பாரு!” என்றார் அக்காளிடம் நம்பிக்கையாய்.
“அந்த நம்பிக்கையில தான்டா நானும் இருக்கேன்… இந்த வருஷமாவது நல்ல வரனா வந்துட்டா தேவலாம்!” என்றவர்,
“ஜாதகத்துல குருபலன் வந்துருச்சா? நல்ல வரனா வரும்ன்னு சொன்னாரா?” என்றார் மீண்டுமாய் எதிர்ப்பார்ப்புடன்!
“அதெல்லாம் ஜோரா வருமாம்! கல்யாணத்துக்கு முன்ன ரெண்டு பரிகாரம் மட்டும் செய்ய சொல்லிருக்காரு!” என்ற சிதம்பரம், ஜோசியர் குறித்து கொடுத்த சீட்டை எடுத்து நீலாவிடம் நீட்ட, அதை வாங்கி படித்தவர்,
“இந்த கோவிலுக்கு போக சொன்னாரா?” என்றார் அதில் இருந்ததை காட்டி.
“ஆமாக்கா! இந்த கோவிலுக்கு போய் ‘சுமங்கலி தானம்’ செஞ்சா சீக்கிரமே வரன் தகையுமாம்! நம்ம பாப்பாவோட செவ்வா தோஷமும் அடிப்படும்ன்னு சொன்னாரு” என்றதும், மிகுந்த நம்பிக்கையுடன் தலையாடிட்டிய நீலா, பாரம் நீங்கியவராய்,
“வீட்டுல ஜெயந்தி, குட்டிப்பையன் எல்லாம் சௌக்கியமா?” என பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு சென்றார்.
அங்கே நடக்கும் தன் திருமண பேச்சை கேட்டும் கேளாதபடி டிவியில் கண்ப்பதித்திருந்த அஷ்டாவிடம், “குட்டிமா, எதாவது நியூஸ் சேனலா வைடா” என சண்முகம் சொல்ல,
அஷ்டா, “ப்பா! அம்மா ஆயிரத்தில் ஒருவன் படம் பாக்குறாங்கப்பா” என்றாள்.
‘அப்படியா?’ என ஒரு நொடி கூட தயங்காத சண்முகம், “அவளுக்கென்ன, டிவி ல எதை போட்டாலும் பார்த்துட்டு இருப்பா! நீ வேற வை குட்டிமா” என்றார் டிவியில் கண் வைத்தபடியே வெகு அசட்டையாய்.
அன்னையை திரும்பி பார்த்த அஷ்டா அவர் முகத்தில் எந்தவித வருத்தமோ, மறுப்போ தென்படாமல் போக, தந்தை கேட்டதை வைத்துக்கொடுத்தாள்.
இது அந்த வீட்டில் புதியதாய் நடக்கும் விஷயமெல்லாம் இல்லை. எப்போதும் நடப்பது, இன்று ஏனோ அவள் கண்களுக்கு வித்தியாசமாய் பட்டது.
‘அம்மாவின் குறைந்தபட்ச விருப்பத்துக்கு கூட மதிப்பில்லையா?’ என்ற திடீர் கருத்து அவளுள் தோன்ற ‘நம்மளும் வளர்ந்துட்டோம்! அதான் இப்படியெல்லாம் தோணுது’ என தன்னை நினைத்தே பெருமைப்பட்டுக்கொண்டாள் அவள்.
****
கற்கடேஸ்வரர் கோவில் கொடிமரத்தை நிமிர்ந்து பார்த்து மூச்சுவிட்டபடி, மனம் நிறைந்த புன்னகையுடன், “நீ வேணா பாரு, இந்த முறை கண்டிப்பா முடிஞ்சுடும்!” என்றார் விஜயவேணி.
அவர் உடன் நின்று கொடி மரத்தை பார்த்து பக்தியாய் கும்பிட்டவன், “இதேதான் ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரப்போவும் சொல்றீங்க!” என சீண்டலாய் தன் அன்னையை பார்த்தான் வீரா.
“போடா தடியா” என செல்லமாய் மகனை விரட்டியவர், “இந்த கோவில்க்குள்ள வந்ததுல இருந்து என் மனசு அமைதியா இருக்குடா! கண்டிப்பா நல்லது நடக்கும்ன்னு தோணுது” என சொல்ல,
அவரது நிறைவான குரலை, அதில் தெரிந்த நிம்மதியை கெடுக்கா வண்ணம், “கும்பகோணம் தாண்டி இந்த கிராமத்துக்குள்ள இருக்க கோவிலை யாருமா உங்களுக்கு சொன்னது?” என்றான் வீரா.
“வேற யாரு? எல்லாம் கௌசி தான்! கடகராசிக்காரங்க இந்த கோவிலுக்கு வந்தா ரொம்ப நல்லதாம்! இங்க இருக்க ‘சுயம்புலிங்க’த்தோட மேனியில ஒரு துளையும், வெட்டு பள்ளமும் தெரியும் பாரு! அதுதான் இந்த லிங்கத்தோட சிறப்பே!”
“அது ஏம்மா அப்படி இருக்கு?”
“அது ஒரு குட்டி கதை டா” என விஜயா சொல்ல, “எப்படியும் இந்த பிரகாரத்தை சுத்த ஐஞ்சு நிமிசம் எடுக்கும்! அதனால சொல்லுங்க, கேட்போம்” என்றான் வீரா.
அவனோடு நடந்தபடியே தனக்கு தெரிந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.
“ஒருசமயம் துர்வாச முனிவர் சிவபூஜை செஞ்சுட்டு இருந்தபோ அந்த வழியே வந்த கந்தர்வன், அவரோட வயசான உருவத்தை கிண்டல் செஞ்சுட்டானாம்! சும்மா விடுவாரா அவரு?”
வீரா, “அதெப்டி விட்டுருப்பாரு? அவருக்கு தான் கோவம் மூக்கு மேல வருமே!” என்றான்.
“அதே தான்! உடனே கந்தர்வனுக்கு ‘நண்டா’ பொறக்க சாபம் குடுத்துட்டாரு! அப்பறம் நண்டா பொறந்த கந்தர்வன் இங்கிருக்க சிவனை பூஜித்து சாப விமோசனம் அடைஞ்சதால, இதுக்கு ‘நண்டாங்கோவில்’ன்னும் ஒரு பேர் இருக்குடா!” என்றார்.
“ஓஓஓ” என கேட்டுக்கொண்டவன், “அதுக்கும் சிவனோட வெட்டு காயத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் புரியாமல்.
“இன்னும் நான் முழுசா சொல்லலடா தடியா!” என்ற விஜயா, “நண்டா பொறந்த கந்தர்வன் அங்கிருக்க தாமரை பூவை பறிச்சு தினமும் சிவனுக்கு பூஜை செய்யுமாம்! அப்படி ஒருநாள் நண்டு பூஜை செய்யுறப்போ அதை பார்த்த இந்திரன், தான் பூஜை செய்யணும்ன்னு நினைச்சு இங்க வந்தா, எனக்கு முன்ன மலர் பறிச்சு இந்த நண்டு பூஜை பண்ணுதா? அதுக்கு அப்படி என்ன தகுதி இருக்கு?ன்னு ஆணவத்துல அந்த நண்டை வெட்ட நினைச்சானாம்!
அந்த நண்டும் ஓடி போய் சிவலிங்கம் மேல ஏற, அந்த நண்டு ஒளிய ஒரு துளை போட்டு அதை தனக்குள்ள ஒளிச்சுக்கிட்டாராம் சிவன். ஆனாலும், இந்திரன் அதைக்கொல்ல வாளை வீச, அது லிங்கத்து மேல பட்டு வெட்டு காயம் ஆகிடுச்சு!”
வீரா, “அச்சச்சோ! அப்புறம்? அந்த இந்திரனுக்கு சாபம் குடுத்து வண்டா மாத்திட்டாங்களா?” என கேலியாய் சொல்ல,
“ஏய்…” என அவன் தோளில் அடித்தவர், “சாபம் எல்லாம் குடுக்கலடா! ‘ஆணவத்துல இருக்க யாராலும் எந்த செயல்லையும் வெற்றி பெற முடியாது, பணிவு தான் சிறந்த குணம்’ன்னு இந்திரனுக்கு புத்தி சொல்லி அனுப்பிட்டாரு சிவன்! இங்க வந்து இந்திரன் திருந்துனதால இந்த இடத்துக்கு ‘திருந்துதேவங்குடி’ன்னு ஒரு பேரும் இருக்கு” என்றார்.
“யப்பாஆஆ…! எத்தனை பேரு” என போலியாய் திகைத்தான் வீரா.
பிரகாத்தை சுற்றி முடித்து ஒரு தூணின் அருகே வந்து அமர்ந்ததும், கூடையில் இருந்து தேங்காய் மூடியை எடுத்து தரையில் தட்டி உடைத்தான் வீரா.
ஒரு கீற்று அன்னைக்கு கொடுத்துவிட்டு, மீதியை அவன் கடிக்க, சிறிது நேரம் அந்த ஜனநெருக்கடி அற்ற, பறவைகளின் ஓசையோடு அமைந்த கோவில் சுற்றுபுறத்தை வேடிக்கை பார்த்தனர்.
அதன் அமைதியில் மனம் மயங்கியபடியே, “மனசே அமைதியா இருக்கு… இல்லம்மா?” என்றான்.
திரும்பி தன் மகனை பார்த்தார் விஜயா. ஏதோ ஏகாந்த நிலையில், நிர்மலமான மனதின் வெளிச்சம் முகத்தில் அடிக்க, சுத்தமான காற்றின் ஸ்பரிசம் அவன் கேசம் கோத, முத்துப்பற்கள் தெரிய, அவன் வெட்டவெளியை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்த நிலையை ஒரு தாயாய் அவரால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
“என் அழ….கு செல்லம்…” அவன் முகத்தை வலித்து பத்து விரல்களை மடக்க, ‘படபட’வென நெட்டி முறிந்தது.
“பாரு, எவ்ளோ திருஷ்டின்னு!”
“ஹாஹா! இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீங்களே என்னை கொஞ்சுவீங்களோ தெரியல” பெருத்த சோகம் போல அவன் சொன்னது அப்போது புரியாது, சில நொடிகள் கடந்தே புரிய,
“அடி படவா” என கையை ஓங்கிக்கொண்டு கலகலவென சிரித்தார் விஜயா.
“சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க! என் சந்நியாசி பொழைப்ப நினைச்சா சிரிப்பா இருக்கா உங்களுக்கு?” என அவன் விடாமல் கோவம் போல முகத்தை தூக்கிக்கொள்ள,
“நீயேண்டா சந்நியாசி ஆக போற? என் மருமக உன்னை அப்படி விட்டுடுவாளா என்ன? நான் திரும்ப திரும்ப சொல்றேன், நீ வேணா பாரு! என் மருமக சீக்கிரமே உன்னை தேடி வந்து, ஜம்முன்னு ஜோடி போட்டு நிக்கப்போறா! பார்த்துட்டே இரு!” என்றிட, “பாக்குறேன் பாக்குறேன்” என அவனும் சொல்ல,
சீர்காழி வைத்தியநாதசுவாமி கோவிலில் அங்காரகன் சந்நிதானத்தில், கண்மூடி வேண்டுதலில் நின்றிருந்த நீலாவின் தோளை சுரண்டி கிசுகிசுத்த குரலில்,
“ம்மா, இப்ப செவ்வா தோஷம் போயிடுச்சா? எனக்கு கல்யாணம் ஆகிடுமா?” என்றாள் அஷ்டா.
கண்களை திறவாமலே கடிந்த பற்களுக்கிடையே, “அதெல்லாம் கடவுள் பார்த்துப்பார், நீ ஒழுங்கா வேண்டுதலை வை” என நீலா சொன்னதும்,
“அப்பறம் எதுக்கு என் ஜாதகத்தை தரகர்ட்ட குடுத்தீங்கலாம்? சாமி பாத்துக்கும்னு விட்டுருக்கலாம்ல?” என அஷ்டா துடுக்காய் கேட்டதும், சுள்ளென எழுந்த கோபத்தோடு கண்களை திறந்த நீலா, அருகே திரும்பி முறைக்க, இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல படக்கென கண்களை மூடிக்கொண்டு முனுமுனுவென வேண்ட ஆரம்பித்து விட்டாள் அஷ்டலட்சுமி.
‘அதிகபிரசங்கி…’ என அன்னை கடித்து துப்புவது தெரிந்தாலும், அதை கண்டுகொள்வது அவளுக்கு பழக்கம் அல்லவே!!!
ஒருவழியாய் திருமண தடை நீங்க, தங்களால் முடிந்த வேண்டுதலைகளையும், பரிகாரங்களையும் இரு வீட்டாரும் செய்ய, பரிகாரங்களின் பலனோ, விதியோ, இல்லை கடவுளின் கிருபையோ, அடுத்த முப்பதாவது நாளில் வீரகேசரியின் ஜாதகம், அஷ்டலட்சுமியின் வீட்டு மேசையில் ‘ஜம்’மென அமர்ந்திருந்தது.