“உங்க ரெண்டு பேருக்கும் என்ன சண்டை விஜய்..? துளசி ஏன் கோபமா போறா..?” என்றார் வள்ளி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி..! அவளுக்கு கோபப் பட ஏதாவது ஒரு சாக்கு வேணும், அவ்வளவு தான்..!” என்றான் விஜய். கண்ணனுக்கு என்னவோ அது சாதாரண கோபம் போல் தெரியவில்லை. திரும்பி கல்லூரி வந்து சேரும் வரை துளசி அப்படியே இருந்தாள். யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நாட்கள் அதன் போக்கில் செல்ல, நண்பர்கள் மூவரும் அவர்களின் படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தனர். இறுதி செமஸ்டர் என்பதால், விஜய்க்கு இருந்த நேரமே போதவில்லை. காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருந்தான் விஜய். அதற்கடுத்து அவனுக்கான பொறுப்புகள் வரிசையாக காத்திருந்ததே அதற்கு காரணம்.
இதில் விஜய்யை பார்க்க முடியாமல் அதிக கஷ்ட்டப் பட்டவள் வந்தவனா மட்டுமே.அவன் அந்த காலேஜில் இருக்கும் நாட்கள் குறைய குறைய, வந்தனா ஒரு வித மன அழுத்தத்திற்கு ஆளானாள்.
“என்னாச்சு சிம்ரன் உனக்கு..? ஏன் எப்பப் பார்த்தாலும், யோசனையாவே இருக்க..? ஒன்னு தரையைப் பார்க்குற.. அப்படி இல்லைன்னா வானத்தைப் பார்க்குற..? என்ன பிரச்சனைன்னு சொன்னாத்தான தெரியும் சிம்ரன்..!” என்றாள் ப்ரீத்தி.
“இன்னும் ஒரு பத்து நாள் தான். அதுக்கப்பறம் இந்த வருஷம் முடிஞ்சுடும்..!” என்றாள் வேதனையுடன்.
“ம்ம் ஆமா..! அடுத்து நம்மளும் பைனல் இயர் போய்டுவோம்..! இதுல கவலைப்பட என்ன இருக்கு..?” என்ற ப்ரீத்தி, “ஒருவேளை இதுலயும் அரியர் வந்துடுமோன்னு பயப்படுறியா சிம்ரன்..?” என்றாள்.
“நமக்கு அடுத்த வருஷம் இருக்கு. ஆனா, விஜய்க்கு படிப்பு முடியிது. இனி அவரைப் பார்க்கவே முடியாது ப்ரீத்தி..!” என்ற வந்தனாவின் முகம் மட்டுமல்ல, வார்த்தைகளும் கலங்கித் தான் இருந்தது.
“நீ என்ன சொல்ல வர சிம்ரன்..?” என்றாள் ப்ரீத்தி, திகைத்த பார்வையுடன்.
அவளின் கேள்விக்கு வந்தனாவின் கலங்கிய முகம் மட்டுமே பதிலாய் கிடைத்தது. ஆனால் அந்த கலக்கத்தில் இருந்து அவள் சொல்லாமலேயே அவளின் மனதைப் புரிந்து கொண்டாள் ப்ரீத்தி.
“இது எப்ப இருந்து சிம்ரன்..? நான் நீ விளையாட்டா பழகிட்டு இருக்கன்னு நினைச்சேன். ஆனா, இதெப்படி..? எனக்குப் புரியலை..!” என்றாள் ப்ரீத்தி.
“நான் யார்கிட்டயும் சொல்லலையே ப்ரீத்தி..!” என்றாள் இயலாமையுடன்.
“யார்கிட்டயுமேன்னா..? விஜய்கிட்டவும் சொல்லலையா..?” என்றாள்.
“சொல்லலாம்ன்னு நினைக்கிறப்ப எல்லாம் ஏதோ ஒன்னு தடுக்குது. ஆனா, விஜய் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினச்சு கூட பார்க்க முடியாது ப்ரீத்தி. இத்தனை நாள் பெரிசா தெரியாத எல்லா விஷயமும் இப்ப பெரிசா தெரியுது..எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை..?” என்றாள் வந்தனா.
“முட்டாளாடி நீ..! விஜய்கிட்ட உன்னோட லவ்வ சொல்லாமலேயே நீயா மனசுல நினைச்சு, நீயா கவலைப் பட்டு, நீயா ஒரு முடிவும் எடுக்குற..? சொல்ல தைரியம் இல்லாதவங்க லவ் பண்ணவே கூடாது. இந்த காலத்துலயும் இப்படியா இருப்ப..? விஜய்கிட்ட நேரா போய் சொல்லிடு..!” என்றாள் ப்ரீத்தி.
“இத்தனை நாள் இதுக்காகத்தான் என் கூட பழகுனியா அப்படின்னு விஜய் கேட்டா..?” என்றாள் வந்தனா கேள்வியுடன்.
“ஆமாம்ன்னு சொல்லு..!!” என்றாள் ப்ரீத்தி பட்டென்று.
“அவர் மட்டும் அப்படி ஒரு எண்ணம் இல்லைன்னு சொல்லிட்டா, என்னால தாங்க முடியாது ப்ரீத்தி..”
“என்னோட கணிப்பு சரின்னா, விஜய் அப்படி சொல்ல மாட்டார். அவரும் உன்னை லவ் பன்றாருன்னு தான் நினைக்கிறேன். அவர் பார்வையிலேயே தெரியுது. அது மட்டுமில்லாம அவருக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும்டி..!” என்றாள்.
“என்னைப் பிடிக்கும் தான்..! ஆனா, எங்கப்பா யாருன்னு தெரிஞ்சா பிடிச்சவங்களுக்கு கூட பிடிக்காம போய்டும். அதுலயும் விஜய்க்கு சுத்தமா பிடிக்காது..!” என்றாள் வந்தனா.
“எதை வச்சு நீ இப்படி சொல்ற..?” என்றாள்.
“ஒரு தடவை அவங்க பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்..! அதனால தான் நான் அவரோட பொண்ணுன்னு சொல்லலை..!” என்றாள்.
“நீயென்ன லூசா..? அரசியல்வாதின்னா விமர்சனம் வரத்தான் செய்யும். நம்மளே எத்தனை பேரை கழுவிக் கழுவிக் ஊத்தியிருக்கோம்..? அப்படி இருக்கும் போது, அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?” என்றாள் ப்ரீத்தி.
“ஈரோடுல முக்கால்வாசிப் பேரை எங்கப்பா பகைச்சு தான் வச்சிருக்கார். அதனால தான் நான் அங்க போறதேயில்லை. சென்னை வீட்லயே இருந்துக்கறது..!” என்றாள்.
“நீ எந்த காலத்துல இருக்க வந்தனா. இப்ப வரைக்கும் உங்கப்பா யாருன்னு யாருக்கும் தெரியாதுன்னு நீ வேணா நினச்சுட்டு இரு. ஆனா, பாதிப் பேருக்குத் தெரியும். தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருந்துக்குவாங்க. நம்ம பேமிலிக்கும் மேல ஸ்டேட்டஸ்ல இருக்கவங்க தான் இந்த காலேஜ்ல அதிகம். சோ, யாருக்கும் யாரைப் பத்தி யோசிக்கிற டைம் இல்லை. வீணா மனசைப் போட்டுக் குழப்பாம, விஜய்கிட்ட போய் லவ்வ சொல்ற வழியைப் பாரு..!” என்றாள் ப்ரீத்தி.
“நான் அந்த துளசிகிட்ட போய் பேசிப் பார்க்கட்டுமா..?” என்றாள்.
“இதுக்குமேல நான் பேச என்ன இருக்கு? எதையும் நேரா பேசிட்டா எந்த பிரச்சனையும் இல்லை. அவ்வளவு தான் சொல்லுவேன். இப்ப தூங்கு… காலையில பேசிக்கலாம்..!” என்றபடி படுத்து விட்டாள் ப்ரீத்தி.
ஆனால் வந்தனாவிற்கு தான், தூக்கம் என்பது துளியும் வரவில்லை. ஒருவாரத்திற்கு முன்பு, எப்படியாவது விஜய்யிடம் காதலை சொல்லி விட வேண்டும் என்று சென்றவளுக்கு, விஜய்யும், பிரவீனும் பேசிக் கொண்டது நியாபகத்திற்கு வந்தது.
“மனுஷனாடா இவனெல்லாம்..? உயிரோட எரிச்சிருக்காணுக..! நினைக்க நினைக்க மனசு பதறுதுடா..!” என்றான் பிரவீன்.
“எல்லாம் பதவி குடுக்குற திமிர் பிரவீன்..!” என்றான் விஜய்.
“கொஞ்சநாள் ஈரோடு பக்கம் வராம இருந்தான். இப்போ வந்துட்டான் போல. பழைய படி ஈரோடு, பிரச்சனை பூமி ஆகுது..!” என்று பிரவீன் சொல்ல,
“அவனுக்கும் ரெண்டும் பொண்ணுங்க தானாமே..! அவங்க யாரையவாது லவ் பண்ணி இழுத்துட்டு ஓடிட்டா, இப்படித்தான் உயிரோட எரிச்சுக் கொல்லுவானா..? இவன் மனுஷ லிஸ்ட்லயே வரமாட்டான் மச்சான். மிருகம்ன்னு சொன்னா, அந்த மிருகத்தையே கொச்சைப் படுத்துற மாதிரி..!” என்று விஜய் பொங்கிக் கொண்டிருந்தான்.
தன் கட்சிக்காரனின் மகள், வேறொரு ஜாதிப் பையனை காதல் திருமணம் செய்ததால், கனகவேல் செய்து வைத்த வேலைதான் அது. அந்த பெண்ணையும் சேர்த்து எரித்துக் கொலை செய்திருக்க, பதவியின் பலம் மூலம், தன்னுடைய பெயர் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொண்டார் கனகவேல். ஆனால் படித்த இளைஞர்களுக்கு தெரியாமலா போகும், இந்த கொடூர செயலுக்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்று.
“நம்ம பேக்டரிக்கு எதிர்த்த மாதிரி இருந்த இன்னொரு பேக்டரியையும் இந்த ஆள் வாங்கிட்டதாத்தான் சொல்றாங்க. இப்போதைக்கு பினாமி பேர்ல வாங்கியிருக்குறதா சொல்றாங்க..!” என்று பிரவீன் சொல்ல,
“சனியனைத் தூக்கி பனியன்ல போடுறான்னு சொல்ற..? நம்ம அங்க போன உடனேயே சிறப்பா செஞ்சுடுவோம்..!” என்று விஜய் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கேட்டவளுக்கு சர்வமும் ஆடிப் போனது.
அவர்கள் பேசியது நூறு சதவிகிதம் தன்னுடைய அப்பாவைத் தான் என்பது வந்தனாவிற்கு தெளிவாக விளங்கியது. அப்படியே திரும்பி வந்துவிட்டாள்..அதை இன்று எண்ணியவளுக்கு ஏனோ மன அழுத்தம் கூடித் தான் போனது.
அவளுக்கும் கனகவேல் செய்யும் செயல்கள் சுத்தமாகப் பிடிக்காது. அவருக்கு மகளாய் பிறந்தது அவள் செய்த தவறில்லையே. அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிய வந்தனா, ஒருகட்டத்தில் அவருடன் பேசுவதையே நிறுத்தியிருந்தாள். அப்படியே கனகவேல் இவளிடம் பேசினாலும், அதிலும் இவளை குறை மட்டும் தான் சொல்லுவார். மறுநாள் எப்படியாவது விஜய்யிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியுடன் தூங்கிப் போனாள் வந்தனா. அதே நேரத்தில் விஜய்யின் அறையில்,
“இந்த வந்தனாவைப் பத்தி என்ன நினைக்கிற விஜய்..?” என்றான் பிரவீன்.
“என்ன பிரவீன் திடீர்ன்னு..?” என்றான் விஜய் புரியாமல்.
“எனக்கென்னவோ, அந்த பொண்ணு உண்மையாவே உன்னை லவ் பண்ணுதுன்னு தோணுது..! அதே சமயம் உன்னோட மனசுல என்ன இருக்குன்னு தான் தெரியலை..?” என்றான் பிரவீன்.
“ரொம்ப நல்ல பொண்ணு. கொஞ்சம் வெகுளி.. யாருக்கும் பிடிக்காம இருக்காது..!” என்றான் விஜய்.
“யாருக்கும் பிடிக்காம இருக்குறது இருக்கட்டும். உனக்கு என்ன தோணுது..?” என்றான் பிரவீன்.
“எனக்கும் பிடிக்காம இல்லை பிரவீன். ஆனா, அது காதலான்னு கேட்டா, அது தெரியலை. பட், ஐ லைக் ஹெர் வெரி மச்..!” என்றான் விஜய்.
“அப்போ, லைக் லவ்வா மாற ரொம்ப நாள் எடுத்துக்காது..அப்படித்தானே..?” என்றான் பிரவீன்.
“இருக்கலாம்..!” என்ற விஜய் யோசனைக்கு செல்ல,
“என்ன யோசனை..?”
“எனக்கு வந்தனாவை ரொம்ப பிடிக்குது. ஆனா, இப்போவே காதலை சொல்லி, காதலனா சுத்த எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. முதல்ல இது காதல் தானான்னு நான் உறுதிப் படுத்திக்கணும். தென், எனக்கான பொறுப்புகள் நிறைய காத்துகிட்டு இருக்கு. அதையெல்லாம் நான் சரியா பண்ணனும். எனக்கான இடத்தில் நான் உறுதியா நிக்கணும். அதுக்கு அப்பறம் தான் இதைப் பத்தி யோசிக்கணும்..!” என்றான்.
“அதுக்குள்ள, வந்தனாவுக்கு வேற இடத்துல கல்யாணம் ஆகிட்டா..?” என்றான் பிரவீன் கேள்வியுடன்.
“சிம்பிள்..! லைப்ல அடுத்த கட்டத்தை நோக்கி போயிட்டே இருக்கணும்..! இப்ப தூக்கம் வருது, தூங்கனும்..!” என்ற விஜய், நிமிடத்தில் தூங்கிப் போனான். ஆனால் பிரவீனின் தூக்கம் தான் அந்த நிமிடம் அவனிடத்தில் இருந்து விலகிப் போயிருந்தது.
“இப்போ எதுக்கு பிரவீன் இத்தனை கேள்விகள்..?” என்றான் கண்ணன். அவ்வளவு நேரம் வெறும் பார்வையாளன் மட்டுமே அவன்.
“சும்மாதாண்டா கேட்டேன்..!” என்பதோடு முடித்துக் கொண்டான். ஆனால் கண்ணனுக்கு மனதிற்குள் ஏதோ புரிவதைப் போல் இருந்தது. ஆனால், அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.
மறுநாள் கல்லூரி வழக்கம் போல், பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்க, ரோஸ்லினுடன் கேண்டீனில் இருந்த துளசி, கையில் இருந்த காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.
“துளசி, என்ன ரெண்டு சீனியரும் நம்மளை நோக்கி வராங்க..!” என்று கிண்டல் பண்ண, விஜய்யும், கண்ணனும் அங்கே வந்து அமர்ந்தனர்.
“என்ன சீனியர் உங்களைப் பார்க்கவே முடியலை..!” என்றாள் ரோஸ்லின்.
“நேரமே இல்லை ரோசு..! ஓவர் பிசி நாங்க..!” என்றான் கண்ணன்.
“சீன போடுறதுக்கும் ஒரு அளவு இருக்கு சீனியர். உங்களை மாதிரியா எல்லாரும் பிசியா சுத்துறாங்க..?” என்றாள்.
“அவனுக எல்லாம் வேலை வெட்டி இல்லாத பசங்க ரோசு..! நாங்க அப்படியா..?” என்றான் கண்ணன்.
“பாரேன் துளசி..! மத்தவங்க எல்லாரும் வெட்டிப் பசங்களாம்.. சார் மட்டும் பிசியாம்.. என்னமோ பிரதமருக்கு பிஏ வேலை பார்க்குற மாதிரி. எல்லாம் காலக் கொடுமை, இதெல்லாம் எங்க காதுல கேட்கணும்ன்னு..!” என்று அவள் சொல்ல, துளசி வாயைத் திறந்து எதுவுமே பேசவில்லை.
“என்னாச்சு துளசி..? ஏன் இப்பல்லாம் சரியா பேசவே மாட்டேங்குற..?” என்றான் விஜய், கூர்மையான பார்வையுடன்.
“உன்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமே இல்ல குமாரு..!” என்றாள்.
“ஒழுங்கா விஜய்ன்னு சொல்லு..!” என்று கடித்துத் துப்பினான் விஜய். ஏனோ அவள் அழைக்கும் அந்த குமாரு என்ற பெயர் அவனுக்கு எப்போதும் பிடித்தமில்லை.
“சுமார் மூஞ்சி குமாருக்கு இதுவே போதும்..!” என்று முனுமுனுத்தாள்.
“என்னது..?” என்றான் விஜய்.
“ஒண்ணுமில்லை..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வந்தனா அங்கு வந்தாள். உடன் ப்ரீத்தியும் இருந்தாள்.
“இப்ப இவங்க எதுக்கு இங்க வராங்க..?” என்று ரோசு யோசிக்க, துளசிக்கு அந்த யோசனை எல்லாம் சுத்தமாக இல்லை. அவள் எப்போதும் போல் சாதாரணமாக இருக்க, அவள் முகத்தில் இருந்து எதையும் கண்ணனால் கண்டு பிடிக்க முடியவில்லை.
வந்தனாவின் வருகையை, விஜய்யும் எதிர்பார்க்கவில்லை என்பது, அவன் முகத்தில் இருந்தே தெரிந்தது.
“ஹப்பாடா ஒரு வழியா உங்களைப் பார்த்தாச்சு விஜய்..! இனி நிம்மதியா தூங்குவா..!” என்றாள் ப்ரீத்தி. அது விஜய்யின் காதில் தெளிவாக விழவில்லை. ஆனால் துளசியின் காதில் தெளிவாக விழுந்தது.
“என்ன சொன்ன..?” என்றான்.
“நத்திங்..!” என்று ப்ரீத்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“விஜய்..! எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..! தனியா..” என்றாள் துளசி. அவளை யோசனையுடன் பார்த்த விஜய்.. அவளை மட்டும் அழைத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி சென்றான்.
அவர்கள் இருவரும் தூரத்தில் பேசிக் கொண்டிருக்க,
“என்ன விஷயம்..? உடனே தனியா பேசுற அளவுக்கு..!” என்று கண்ணன் கேட்க,
“எல்லாம் காதல் படுத்தும் பாடுதான் சீனியர். மேடம் நைட்டெல்லாம் ஒரே புலம்பல். அதான் விடிஞ்ச உடனே விஜயை பார்க்கணும்ன்னு கூட்டிட்டு வந்துட்டா..!” என்றாள் ப்ரீத்தி.
அவளின் பதில், அங்கிருந்த அனைவரையும் தெளிவாக குழப்பியது. துளசிக்கு அந்த ஆராய்ச்சி எல்லாம் இருக்கவில்லை. அவள் எப்போதும் போல் இயல்பாகவே இருந்தாள். பேசிவிட்டு வந்த விஜய் முகம் ஏதோ யோசனையில் இருந்தது.
“கண்ணா போகலாம்..! பை துளசி..!” என்றவன், அவளை சட்டை செய்யாமல் சென்று விட, அப்போதும் அவள் முகம் தெளிவாகத் தான் இருந்தது.
துளசிக்கு அருகில் வந்த வந்தனா,
“விஜய் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது துளசி. அந்த அளவுக்கு ஆழமா என் மனசுல பதிய வச்சுட்டேன். இப்போ ஏதாவது எதிர்ப்பு வந்தா, நீங்க எல்லாரும் தான் சப்போர்ட்டா இருக்கணும்..!” என்றாள் அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு.
“சாரிங்க..! நான் பொதுவா யார் விஷயத்திலையும் தலையிடுறது இல்லை. விஜய்யே எல்லாத்தையும் பார்த்துப்பான்…!” என்ற துளசி, அடுத்த நிமிடம் அந்த இடத்தை காலி செய்திருந்தாள்.
நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் ஒரு வருடம் முடிந்திருந்தது. வந்தனாவும், ப்ரீத்தியும் அதே கல்லூரியில் பிஜி சேர்ந்திருந்தனர். கனகவேல் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்க, என்ன செய்வதென்று தெரியாமல், ஒரு வழியாக பிஜியில் சேர்ந்திருந்தாள். எந்த நேரமும் அவள் கல்லூரியில் இருந்து நிறுத்தப்படலாம் என்ற நிபந்தனையுடன் தான் கனகவேல் அவளை அனுமதித்து இருந்தார்.
விஜய் இல்லாத கல்லூரி அவளுக்கு வெறுமையே. அவனின் நினைவுகள் அவளுக்குள் ஆழமாகிக் கொண்டே சென்றது. அவர்கள் இருவருக்குமான தூரம், அவளின் தேடலை அதிகரித்தது. ப்ரீத்தியின் துணை மட்டுமே அவளுக்கு கொஞ்சம் ஆறுதல்.
துளசி யுஜியை அங்கு முடித்து விட்டு, அடுத்து மேல் படிப்பிற்காக வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
விஜய்யும், பிரவீனும் தொழிலை… ஈரோட்டிலும், சென்னையிலும் மாற்றி மாற்றி விரிவுபடுத்திக் கொண்டிருந்தனர். வேகமும், விவேகமும் ஒன்றிணைந்தால் எப்படி ஒரு வளர்ச்சி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது இவர்களின் கூட்டணி. கண்ணன் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். விஜய் எவ்வளவு சொல்லியும் அவர்கள் நிறுவனத்தில் அவன் வேலைக்கு செல்லவில்லை. நட்பு வேறு, நடப்பு வேறு என்று உறுதியாக சொல்லிவிட்டான்.
தொழிலில் கால் வைத்த நிமிடத்தில் இருந்து விஜய்யின் மறைமுக எதிரி யாரென்று கேட்டால் அது கனகவேல் தான். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், கனகவேல் நிறுவனத்திற்கு பெருத்த இடியாகவே இருந்தது. அவரும் பல வகைகளில் முயற்சி செய்து பார்த்தார். ஆனால், விஜய்யின் வளர்ச்சியை அவரால் தடுக்கவே முடியவில்லை.
தான் வந்த பிறகு அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக திவ்யா உறுதியாக சொல்லியிருந்தாள் தன் தந்தையிடம். அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை திவ்யா மட்டுமே. தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்க, அவர் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். வந்தனாவின் கல்யானத்தை நடத்திவிட்டால், எப்படியும் தேர்தலில் சில ஆதாயங்கள் கிடைக்கும் என்பதில் அவருக்கு முழு நம்பிக்கை.
கனகவேல் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த நேரம்,
“மாப்பிள்ளை வீட்ல என்னங்க சொன்னாங்க..?” என்றார் ராதிகா.
“எல்லாம் நல்ல விஷயம் தான். இன்னும் ரெண்டு நாள்ல பொண்ணு பார்க்க வரதா சொல்லிருக்காங்க. அன்னைக்கே தட்டை மாத்திக்கலாம். எலக்சனுக்கு முன்னாடி இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்..!” என்றார் கனகவேல்.
“வந்தனாகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு..!” என்று ராதிகா இழுக்க,
“அதெல்லாம் எனக்குத் தெரியும். நாம நாளைக்கு சென்னை கிளம்புறோம். அங்க வச்சே தட்ட மாத்திக்கலாம். சென்னை வீட்டை ரெடி பண்ண சொல்லிடு..! எனக்கு முக்கியமான வேலை இருக்கு..!” என்று கிளம்பிவிட்டார் கனகவேல்.
ராதிகாவும் வேறு வழியில்லாமல் வந்தனாவிற்கு போன் செய்து விஷயத்தை சொன்னார். விஷயத்தை கேள்விப்பட்ட வந்தனாவிற்கு அதிர்ச்சி ஒன்றுமில்லை. ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே. ஆனால், அடுத்து அவள் என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை தான் அவளுக்கு.
“என்ன சிம்ரன்..? என்ன யோசனை..?” என்று ப்ரீத்தி கேட்க, விஷயத்தை கூறினாள் வந்தனா.
“இப்ப என்ன பண்ண போற..? விஜய்க்கு கால் பண்ணி பேசு..! இங்க இருக்குற நிலைமையை எடுத்து சொல்லு..!” என்றாள் ப்ரீத்தி.
“சொன்னா மட்டும் என்ன ஆகிடப் போகுது..!” என்றாள் விரக்தியுடன்.
“லூசு மாதிரி பேசாத சிம்ரன். எதையுமே நீயா நினைச்சு, நீயா ஒரு முடிவு பண்ணிக்காத. விஜய்கிட்ட பேசு. அவர் ஏதாவது வழி சொல்லுவார்..!” என்றாள் ப்ரீத்தி.
கொஞ்சம் தயக்கத்துடன் தான் விஜய்க்கு அழைத்தாள் வந்தனா. நெடு நாட்களுக்குப் பிறகு அவளிடம் இருந்து அழைப்பு. இடையில் பேசிக் கொண்டிருந்தாலும், இப்போது அவன் சரியாக பேச முடியாத அளவிற்கு அவனுக்கும் வேலை.
“சொல்லு வந்தனா..?” என்றான் எடுத்த எடுப்பில்.
“எனக்கு வீட்ல கல்யாணம் நிச்சயம் பண்ண போறாங்க..!” என்றாள் வந்தனா, இயந்திர கதியில்.
அவள் சொன்னதை கேட்டவனுக்கு பக்கென்று இருந்தது.ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தவன்,
“என்ன அவசரம்..? இப்போதான பிஜி பர்ஸ்ட் இயர் பண்ற..” என்றான்.
“அவசரம் எனக்கில்லை..!” என்றாள் வேதனையுடன்.
“இப்போ நான் என்ன பண்ணனும்..?” என்றான் பட்டென்று.
“இப்போ வரைக்கும் உங்களுக்கு என்னைப் பத்தின நினைவோ, கவலையோ இல்லை. அப்படித்தான விஜய்..?” என்றாள் வந்தனா.
“இதுக்கு என்கிட்டே இருந்து என்ன பதில் எதிர்பார்க்குற வந்தனா..?” என்றான் எரிச்சலுடன்.
“உண்மையான பதில் சொல்லுங்க விஜய்..!” என்ற அவளின் குரல் அவனுக்குள்ளும் ஏதோ செய்தது. ஆனால் நிமிடத்தில் அதை ஒதுக்கினான்.
“இப்போ நான் என்ன செய்யணும்..? நான் வேணும்ன்னா உங்கப்பாகிட்ட பேசவா..?அவர் நம்பர் குடு..! இல்லைன்னா நேர்ல வரணுமா..வந்து பேசுறேன்..!” என்றான்.
விஜய் அப்படி சொன்னதும் ஒரு நிமிடம் அவளுக்கு பக்கென்று ஆனது. விஜய், கனகவேலிடம் பேசினால்,மொத்த காரியமும் கெட்டு விடும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.
“அதெல்லாம் வேண்டாம்..! என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லுங்க..! நானே வந்துடுறேன்..!” என்றாள்.
“லூசா வந்தனா நீ..! அப்படி ஒரு அவசியம் எனக்கு எதுக்கு. எனக்கும் குடும்பம் இருக்கு. யாருமே இல்லாத மாதிரி கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதுமட்டுமில்லாம, இந்த வயசுல எனக்கு கல்யாணம் தேவையில்லை..!” என்றான் உறுதியாக.
“ஏன் இருபத்தியஞ்சு வயசுல கல்யாணம் பண்ண கூடாதா..?” என்றாள்.
“தாராளாமா பண்ணலாம்..! ஆனா, என்னால முடியாது. உங்க வீட்ல நான் பேசுறேன்..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே போனை வைத்திருந்தாள் வந்தனா.
“என்னடி சொன்னார் விஜய்..?” என்றாள் ப்ரீத்தி.
“வீட்ல பேசுறேன்னு சொன்னார்..!”
“நீயென்ன சொன்ன..?” என்றாள்.
“என்னை என்ன சொல்ல சொல்ற ப்ரீத்தி..? கனகவேல் மகள் தான் நான் அப்படின்னு சொன்ன அடுத்த நிமிஷம், விஜய்க்கு என் மேல இருக்குற கொஞ்ச நஞ்ச எண்ணமும் இல்லாம போய்டும் பரவாயில்லையா..?” என்றாள் கண்கள் கலங்க.
“அதுக்காக, இந்த விஷயத்தை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்..?” என்றாள் ப்ரீத்தி.
“மறைச்சு தான் ஆகணும்..! விஜய் என் கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் நான் மறச்சு தான் ஆகணும்..!” என்றாள்.
“சரி.. இப்ப என்ன செய்ய போற..?” என்றாள்.
“தெரியலை..! விமல் மாமாகிட்ட தான் உதவி கேட்கணும்..! கண்டிப்பா அவர் செய்வார்..!” என்றாள்.
“எனக்கு இது சரியா படலை சிம்ரன். இது வாழ்க்கை விஷயம், விளையாட்டு காரியமில்லை..!” என்றாள் ப்ரீத்தி.
அவளின் வார்த்தை நிஜமாகப் போகிறது என்பது அப்போதைக்கு இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
“யாரு விஜய்..? போன்ல..?” என்றான் பிரவீன்.
“வந்தனா..!”
“என்னவாம்..?” என்றான்.
“அவளுக்கு மேரேஜ் ப்ராசஸ் போகுது போல அவங்க வீட்ல..!” என்றான் விஜய்.
“இப்போ என்ன பண்ண போற..? உனக்கு வந்தனாவைப் பிடிச்சிருக்கா..? ஆனா, நீ இன்னும் லவ்வை சொன்ன மாதிரி தெரியலையே..?” என்றான் அவனையே கூர்மையாய் பார்த்தபடி.
“அது தான் எனக்கும் குழப்பமா இருக்கு. பிடிச்ச மாதிரித்தான் இருக்கு. ஆனா, ஏதோ ஒரு விஷயம் இடிக்கிற மாதிரி இருக்கு. அதாவது எல்லாமே சீக்கிரமா நடக்குற மாதிரி. என்னால இப்போ உடனே மேரேஜ் எல்லாம் பண்ண முடியாது..!” என்றான் விஜய்.
“சரி, அவங்க வீட்ல பேச வேண்டியது தானே..?” என்றான் பிரவீன்.
“அதுக்கும் சரின்னு சொல்ல மாட்டேங்கிறா..?”
“நீயே போய் பேசிடேன்..!” என்று பிரவீன் சொல்ல,
“அதுவும் சரிதான்..!” என்ற விஜய் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.