“ஆஆஆஆ….. அம்மாஆஆ” என கிச்சனில் இருந்து அலறல் கேட்க, வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடினர் இருவரும்.
அங்கே தன் காலை பிடித்துக்கொண்டு அஷ்டா கீழ உட்காந்திருக்க, பால் அடுப்பு தாண்டி, சிலாப்பில் சிந்தி, தரையில் சொட்டிக்கொண்டிருந்தது.
சூடான பால் காலில் பட்டு தான் கத்துகிறாள் என நொடியில் உணர்ந்துக்கொண்ட வீரா, “நீங்க இப்படி வாங்க முதல்ல” என்று கைத்தாங்கலாய் அவளை எழுப்பி வெளியே கொண்டு வந்து அமர வைத்தான்.
விஜயா பதைப்புடன் அவர்கள் பின்னே வர, “நீங்க ஏம்மா இவங்களை வேலை சொன்னீங்க?” என்றான் அவரிடம்.
“இல்லடா, பால் தான் காய்ச்சிக்க சொன்னேன்!”
“எந்த வேலை சொன்னாலும் இனி நீங்களும் கூட நில்லுங்கம்மா, தனியா எதுவும் செய்ய சொல்ல வேண்டாம்” வாய் பாட்டிற்கு அன்னைக்கு கட்டளை இட்டுக்கொண்டிருந்தாலும், அவன் கண்களும் கைகளும் அவள் காயத்தை தேடிக்கொண்டிருந்தன.
மகன் சொன்னதற்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே, ‘சரி’ என கேட்டுக்கொண்டார் விஜயா. கூடவே, “புண்ணுக்கு போடுற களிம்பு இருக்கு கொண்டு வரவாடா!” என்று கேட்டதோடு அதை கையோடு கொண்டு வந்து நீட்டினார்.
அதை வாங்கிக்கொண்டவன், “கொஞ்சமா எரியும், பொறுத்துக்கோங்க” என்றபடி, “காயம் எங்க பெருசா இருக்குன்னு காட்டுங்க, போடுவோம்” என்றான்.
“ஐயோ, அம்மா” என்ற முனகல்களுக்கு நடுவே, அவள் தன் மேல் பாதத்தை காட்ட,
“ஒன்னும் தெரியலையேங்க! மேல இருக்கோ?” என அவன் புடவையை கொஞ்சமாய் தூக்கப்போக, “ம்ஹும்… ம்ஹும்…” என அழுகையோடு மறுத்தபடி, மீண்டும் அவள் மேல் பாதத்தையே காட்ட,
“ஒருவேள உள்காயம் பலமா இருக்குமோடா?” என பதறினார் விஜயா.
இத்தனைக்கு நடுவிலும் அஷ்டாவின் முனகலும், அனத்தலும் குறையாது இருக்க, “ஹாஸ்பிடல் போய்டலாம்மா” என்றான் வீரா.
விஜயா, “காயத்துக்கு மருந்து போட்டுட்டு போலாம்டா, இல்லன்னா கொப்பளிச்சுடும்”
வீரா, “ஏங்க, காயத்தை காட்டுங்களேன்”
வீரா கெஞ்சலாய் தவிப்புடன் கேட்க, முனகலை குறைத்தவள், மீண்டும் தன் முன் கொசுவத்தை சற்றே உயர்த்தி மேல் பாதத்தை காட்ட, அப்போதும் வீராவுக்கு காயம் எங்கே என்றே தெரியவில்லை.
அவன் தேடுவதை உணர்ந்தவள், அவள் கால் கொலுசை நகர்த்தி காயத்தை சுட்டிக்காட்ட, பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால் கூட புள்ளியாய் கூட தெரியாத அந்த பொட்டு காயத்திற்கு இத்தனை நேரமும் ‘ஐயய்யோ வேறு! அம்மம்மா வேறு’
அவள் காட்டிய இடத்தை பார்த்தவன், ‘என்னை வச்சு ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே?’ என்ற பாவத்தில் அவளை நிமிர்ந்து நோக்க, அவளோ பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டிருந்தாள்.
விஜயாவுக்குமே அதை பார்த்து சப்பென்று ஆனது.
வீரா, “எப்டிங்க இவ்ளோ பெரிய காயம் ஆச்சு?” போலி திகைப்புடன் கேட்டான்.
அவன் கிண்டலை உணராதவள், “பால் பொங்குதேன்னு வேகமாய் போய் அதை அடுப்புல இருந்து இறக்க பார்த்தேனா? ஸ்லிப் ஆகி கொட்டிடுச்சு! என் கால்ல கொட்டிருக்க வேண்டியதுங்க! லாஸ்ட் மினிட்ல நான் சுதாரிச்சு தள்ளி போனதால ஜஸ்ட் தெளிக்க மட்டும் செஞ்சுது! ஆனாலும், செம்ம எரிச்சல் தெரியுமா?” என்ற வசனத்தோடு, ‘அம்மா!!!!’ என காலைப்பிடித்துக்கொண்டு அவள் பேசி முடிக்க, அம்மாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அடுப்பில் கவனமின்றி வெளிபேச்சில் காதை வைத்திருந்ததால் தான் இந்த ரோதனை என்பது அவள் மட்டுமே தெரிந்தது.
அதற்குமேல் ஹாஸ்பிடல், டாக்டர் என அலப்பறை செய்யாது, அவளை அறைக்கு சென்று ஓய்வெடுக்க சொல்லிவிட்டான் வீரா. மறவாது ஒரு பெரிய குவளை நிறைய மைலோவை கொண்டு வந்து அவளிடம் கொடுத்ததும், நல்லபிள்ளையாய் வாங்கிக்கொண்டவள், “இதை முன்னவே கொடுத்திருந்தா அரைலிட்டர் பால் மிட்சமாகிருக்கும்ல?” என்றாள் பகுமானமாய்.
கொஞ்சமாய் முறைத்தவன், “எங்க தப்புதாங்க மகாராணி! இனி இப்படி நடக்காம பார்த்துக்குறோமுங்க” என்று கேலியாய் பணிவுக்கொண்டு சொல்ல, அவன் தோரணைக்கண்டு கிளுக்கி சிரித்தாள் அஷ்டா.
அவள் சிரிப்பை ரசனையாய் பார்த்தான் வீரா.
“நீங்க பங்க் போலையா இன்னைக்கு?” தன்னுடன் அறையில் சுவாதீனமாய் அமர்ந்திருந்த வீராவிடம் கேட்டாள்.
“ப்ச்!!! எப்டிங்க போறது? பொண்டாட்டி இப்படி படுத்த படுக்கையா இத்தாஆஆஆம்பெரிய காயத்தோடு இருக்கப்போ எந்த புருஷனுக்கு தான் வேலைக்கு போக தோணும்? சொல்லுங்க பார்ப்போம்?” சோகத்தை குரலில் குழைத்து அடித்தான்.
அவன் தன்னை கேலி செய்வதை கண்டு முகம் தூக்கியவள், “எல்லாம் அவங்க அவங்களுக்கு வந்தா தெரியும்!!!” என்றாள் முறுக்குடன்.
“அது என்னவோ சரிதாங்க” என்றவனின் குரலில் ஏகத்துக்கும் கிண்டலே இருந்தது.
அதை உணர்ந்தவள் பேச்சை மாற்றும் பொருட்டு, “அத்த எங்க?” என்று கேட்க,
“மருமகளுக்கு இப்படி ஆனதும் ஸ்ரீரங்கம் கோவிலை ஆயிரத்து எட்டுமுறை அங்கபிரதக்ஷனம் செய்யுறேன்னு மஞ்ச புடவை கட்டிக்கிட்டு கிளம்பி போயிருக்காங்கங்க” சிரியாமல் கலாய்த்துக்கொண்டிருந்தான் அவளை.
அவளால் புசுபுசுவென மூச்சால் புகைவண்டி விட மட்டுமே முடிந்தது.
‘இதுக்குமேல வண்டி தாங்காது!’ என்பதை அவள் முகம் கண்டு உணர்ந்தவன், “அப்புறங்க! இங்க எல்லாம் செட் ஆகிடுச்சா? ஓகே’வா?” என்றான் பொதுவான பேச்சுக்கு தாவி.
அதில் சற்று சகஜமடைந்த அஷ்டாவும், “ஹ்ம்… எல்லாம் ஓகே! ஒன்னும் ப்ராப்ளம் இல்ல” என்றாள்.
“சூப்பருங்க”
“ஆமா, நீங்க எதுக்கு என்னை ‘ங்க;ங்க” சொல்லி பேசுறீங்க? நான் உங்க வைஃப் தானே? போ, வா’ன்னே பேசலாமே?” கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட ஒருமாதம் நெருங்கும் நிலையில் இந்த சந்தேகம் வந்தது அவளுக்கு.
“அது……….” என இழுத்தவன், “நமக்குள்ள ஒரு சின்ன டிஸ்டன்ஸ் இருக்கிறது உங்களுக்கு தான் நல்லதுங்க! நான் ரொம்ப நெருங்கிட்டா அப்புறம் எக்குத்தப்பா எதாவது ஆகிடும், நீங்க, நான் குடுத்த வாக்கை காப்பாத்தாம போயிட்டேன்னு என்னை தான் திட்டுவீங்க” என்றதும்,
அவன் எதை சொல்கிறான் என புரிந்தவளுக்கு வாய் கப்’பென மூடிக்கொண்டது.
அதற்கு மேல் அவள் அவனை நிமிர்ந்தும் பாராது அமர்ந்திருக்க, “என்னங்க அமைதியா இருக்கீங்க? வழக்கமா எதாவது சந்தேகம் வருமே உங்களுக்கு? ஒன்னும் தோனலையோ இப்ப?” என்று எடுத்துக்கொடுத்தான் அவளுக்கு.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களை பார்த்ததுல இருந்தே இந்த சந்தேகம் இருக்கு எனக்கு! உங்களுக்கு கோவமே வராதா?” என்றாள்.
வாய்விட்டு சிரித்தான் வீரா.
“கோவம் வந்தே ஆகணுமோ?” அவன் எதிர்கேள்வி கேட்க, “இல்ல, எப்படி இவ்ளோ பொறுமை?” என்றாள்.
“பெருசா கோவப்பட எந்த சூழ்நிலையும் அமைஞ்சது இல்லங்க! எனக்கு எவ்ளோ கோவம் வரும்ன்னு எனக்கே தெரியாது! என் அம்மாக்கு பொறுமை ஜாஸ்தி, அதனால நானும் பொறுமையா இருக்கேன் போல…” என்றான்.
‘அம்மா’ என்றதும் அவளது நெடு நாளைய சந்தேகம் நியாபகம் வந்தது.
“உங்க அம்மா நல்லா சிவப்பா அழகா இருக்காங்க! நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க?”
வீரா, “இப்படி இருக்கேன்னா? எப்படி? கருப்பாவா?”
உடனே, “இல்லையே! நீங்க கருப்புன்னு இல்ல… ஆனா சிவப்பும் இல்ல” என்றாள்.
“கருப்பு இல்லன்னா வேற என்ன? அசிங்கமா இருக்கேன்னு சொல்றீங்களோ?”
முன்னதை விட வேகமாக, “ச்ச…ச்ச” என்று மறுத்தாள் அஷ்டா.
“அப்போ அழகா இருக்கேன்னு சொல்றீங்க?” அவனே கேட்க, அதை ஒப்புக்கொள்ள மனமில்லாது முகத்தை அவனுக்கு காட்டாது திருப்பிக்கொண்டாள் அவள்.
“நான் என் அப்பா மாதிரிங்க! நிறம், ஜாடை எல்லாமே அப்பா தான்! அம்மா மாதிரி இருந்திருந்தா இன்னும் அழகா இருந்துருப்பேனோ என்னவோ?”
‘இதுவே போதும்’ என சன்னமாய் முனகினாள் அவள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவள் முனகலும் தெரிந்துவிட, “அடிக்கடி வாய்க்குள்ளயே முனுமுனுக்குறீன்களே?” என்றான்.
மாட்டிக்கொண்டதில் விழித்தவள், “இல்லையே… இல்லையே” என்று சொல்ல, மெதுவாய் எழுந்து அவள் அருகே வந்தான் வீரா.
இடையே இருந்த ஐந்தடி தொலைவை அவன் நொடியில் கடக்க, இவள் இதயம் எகிற ஆரம்பித்தது.
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் அருகே வந்து அமர்ந்தான் வீரா. அவனது திடமான புஜம், இவள் இடப்பக்கத்தை மோத, நகர தோன்றாமல் அந்த அவஸ்தையை அனுபவித்து அமர்ந்திருந்தவளின் காதருகே வந்தவன்,
“என்னால ரொம்ப நாள் நல்லவன் வேஷம் போட முடியாது! என் பொறுமையை ரொம்ப சோதிக்காம சீக்கிரமே ஒரு நல்ல பதிலா சொல்லணும்! இல்லன்னா அடிக்கடி இந்த முனகுற உதடு காணாம போய்டும்! சரியா?”
அவனிரு விரல்களுக்கிடையே சிக்கிக்கொண்ட அவள் கீழுதடும், அதில் அவன் கொடுத்த அழுத்தமும் வலித்தாலும் கூட புதுவிதமாய் உடலை கிளர்ச்சிக்கொள்ள செய்ய, அடுத்து என்ன செய்வானோ? என்ற எதிர்ப்பார்ப்புடன் கண்மூடி படபடப்புடன் காத்திருந்தவளை இமைக்கொட்டாது பார்த்துகொண்டிருந்தான் வீரா.
நெடு நிமிடங்களுக்கு பின்னும் ஒன்றும் நடவாது போக விழி திறந்தவள் அவனை கேள்வியாய் பார்க்க, தன்வசம் இருந்த உதட்டை விடுவித்தான் வீரா.
அவளிடம் இருந்து நகர்ந்து அறையின் வாசலுக்கு சென்றான். அஷ்டாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் காட்டிய நிமிட நேர நெருக்கத்திற்கும் இப்போது சட்டென அவன் தூர சென்று நிற்ப்பதற்கும் அர்த்தம் விளங்காமல் அவள் விழிக்க,
அவளை உணர்ந்தவன், “இப்போ ஆரம்பிச்சா எதுவுமே முடியாது! அதான் வந்துட்டேன்” என்றவன், “சீக்கிரமே நீங்க எனக்கு பரிசு கொடுக்க வேண்டிய நேரம் வரும்! அப்போ நான் எது கேட்டாலும் மறுக்காம குடுக்கணும்!” என்றுவிட்டு, அவள் கண்ணை உற்று நோக்கி, “ஏமாத்தாம குடுக்கணும்!” என அழுத்தி சொல்லிவிட்டு சென்றான்.
அவன் அறையை விட்டு சென்றுவிட்டான் என்பது மட்டுமே அவளுக்கு புரிந்தது. ‘என்ன குடுக்கணும்? எதுக்கு குடுக்கணும்? என்ன சொல்றாரு?’ என மண்டைக்காய அவள் அமர்ந்திருக்க, அவள் அலைபேசி சிணுங்கியது.
அன்னையின் அழைப்பு என்றதும், ‘போச்சு! பாலை கொட்டிட்டேன்னு நியூஸ் போய்டுச்சு போல!’ என எண்ணிக்கொண்டாள்.
அழைப்பு நின்றுப்போக, மீண்டும் ஒலித்த அலைபேசி ஒலி, ‘உன்னை விட மாட்டேன்’ என நீலா கத்துவதை போல கேட்க, கடுப்புடன் எடுத்தவள், ‘ஹலோ’ கூட சொல்லாது,
“ஆமா, நான் பாலை கொட்டிட்டேன்! ஒரு வேலை செய்ய கூட லாயக்கு இல்ல நானு! கட்டிக்குடுத்த வீட்டுல வந்து உங்க மானத்த வாங்குறேன்! நீங்க என்னை பெத்துருக்கவே தேவையில்லை. நான் சரியான வேஸ்ட்டு, தண்டம்…..” நீலா சொல்லப்போவது இதானே!? என்ற நினைப்பில் அவள் தன்னைத்தானே பேசிக்கொண்டே செல்ல,
“என்னடி சொல்ற? பாலை கொட்டிட்டியா?” என திகைப்பாய் கேட்டார் நீலா.
‘என்ன மம்மி ஷாக் குடுக்குறாங்க? அப்போ அவங்களுக்கு விஷயமே தெரியாதா? நானா தான் உளறிட்டேனா?’
“யாருமேல டி பாலை கொட்டி தொலைச்ச?”
“என்மேல தான்”
“நல்ல வேளை அந்த மட்டும் நிம்மதி எனக்கு! ஒரு பாலை காய்ச்சி வைக்கக்கூட துப்பில்லாத….”
“ம்மா… ம்மா.. அவரு கால் பண்றாரு! அப்புறம் கூப்பிடறேன்” எங்கே விட்டால் நீலா ஆரம்பித்துவிடுவாரே என்று அவசரமாய் ஒரு பொய்யை சொல்லி அழைப்பை துண்டித்தாள் அஷ்டா.
‘யப்பா அஷ்டா! தேவையில்லாம சிக்கிருப்ப! இன்னும் ரெண்டு நாளுக்கு வீட்டுக்கு ஃபோனே பண்ணக்கூடாது!’ என அவள் அவசர முடிவெடுக்கையில் மீண்டும் அழைத்தது அலைபேசி.
‘ஐயோ இந்த அம்மாவோட!!!!’ புலம்பிக்கொண்டே முகத்தை தூக்கிவைத்தபடி அழைப்பை எடுத்தவளுக்கு, அதில் ‘ஜோதி’ என்ற பெயர் ஒளிர, அவசரமும் ஆர்வமுமாய் அழைப்பை ஏற்று, ‘ஹாய் ஜோதி’ என்றாள் அஷ்டா.
மறுப்பக்கம், “சாரிடி உன் மேரேஜ்க்கு வர முடியல… கோச்சுக்காத!” என்றாள் ஜோதி.
“நீ வந்துருக்கலாம்… ப்ச்! பரவால்ல விடு! நீ எப்டி இருக்க? குட்டி பையன் எங்க இருக்கான் இப்போ?”
“என்கிட்டே தான் இருக்கான்! அப்பா போய் அழைச்சுட்டு வந்துட்டாரு போன வாரமே!”
“ம்ம்! நீ ஹேப்பி தானே?”
ஜோதி, “ம்ம்ம்! சரி உன் மேரேஜ் லைப் எப்படி போகுது? எல்லாம் செட் ஆகிடுச்சா? சந்தோசமா இருக்கியா?”
“ஓஓஓ! செம்ம ஜாலியா இருக்கேன்! அம்மா திட்டுல இருந்து எஸ்கேப்! எல்லா வேலையும் என் புருஷனும் மாமியாருமே செஞ்சுடுவாங்க! நான் ஜாலியா மொபைல் நோண்டிட்டு இருப்பேன்! அம்மா வீட்டுல கூட நான் இப்படி இருந்தது இல்ல தெரியுமா?”
அதைக்கேட்ட ஜோதி, “நீ வேலை செய்யலன்னு மாமியார் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?” என ஆச்சர்யமாய் கேட்க,
“இதுவரைக்கும் கேட்டதில்ல” என்றாள் அஷ்டா.
“அதுக்காக நீ இப்படியே இருக்காத, எதாவது ஒன்னு ரெண்டு வேலை செய்யு!”
அரை மனதாய், ‘ம்ம்ம்’ கொட்டினாள் அஷ்டா.
“அப்புறம் உன் ஹஸ்பன்ட் எப்படி? நல்லா பேசுறாரா?”
அஷ்டா உற்சாகமாய், “ம்ம்ம்…. ரொம்ப நல்லவரு! கோவமே பட மாட்டாரு! என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறாரு” என்றாள்.
ஜோதி, “கேட்கவே சந்தோசமா இருக்குடி! புருஷனை கைக்குள்ளையே வச்சுக்கோ… உன் பேச்சு கேட்குற மாதிரி பார்த்துக்கோ… ஆரம்பத்துல விட்டுட்டா அப்புறம் பிடிக்கவே முடியாது! என்னை மாதிரி தனியா தான் நிக்கணும்”
அவளிடம் பெருமை பீத்த எண்ணி, “அதெல்லாம் எப்போவோ கைக்குள்ள போட்டாச்சு! என் பேச்சை மீறி ஒன்னும் செய்ய மாட்டாரு” என்றாள் அஷ்டா.
“ஹே லூசு, இன்னும் ஒரு மாசம் கூட ஆகல… அதுக்குள்ள என்னத்த நீ கைக்குள்ள போட்ட? போடி பைத்தியம்” அவள் சிரிக்கிறாள் என்பது குரலில் தெரிய,
“நிஜமா தான் ஜோதி! நான் சொன்னா அவர் கேட்ப்பார்! கல்யாணத்துக்கு அப்புறம் என்னை தொடக்கூடாதுன்னு சொன்னேன்! இப்போ வரைக்கும் அவர் என் கிட்ட வரதே இல்ல தெரியுமா? எனக்கும் எல்லாம் தெரியும்!” என்றாள் மிடுக்காய்.
“என்னடி ஒளருற?”
ஜோதி நம்பாது கேட்க, “உண்மை தான்! ஆறு மாசத்துக்கு என் கிட்டே வரக்கூடாது! நமக்குள்ள ஒன்னும் கிடையாதுன்னு சொன்னேன்! அதுக்கு சம்மதிச்ச பிறகு தான் கல்யாணமே செஞ்சேன்” என்றாள் அஷ்டா.
“அப்போ இன்னும் உங்களுக்குள்ள ஒண்ணுமே நடக்கலையா?” நம்பமாட்டாத ஆச்சர்யம் ஜோதியின் குரலில்.
“ம்ஹும்!!!”
“நீ சொன்னதுக்காக தான் அவர் கிட்ட வராம இருக்காரா?” சந்தேகம் முளைத்தது ஜோதிக்கு.
“ப்ச்! இதென்ன கேள்வி?”
“இல்லடி! எனக்கென்னவோ நம்புறமாதிரி இல்ல! ஊருல எந்த ஆம்பளை கல்யாணத்துக்கு பிறகும் சந்நியாசியா இருக்கான் சொல்லு? அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி நீ சொன்னதுக்காக இப்போ வரைக்கும் உன் பேச்சை மதிக்குறதெல்லாம் எனக்கு தெரிஞ்சு வாய்ப்பே இல்லை”
“……….”
“என்ன அமைதியா இருக்க? உன் ஆளுக்கு முப்பது வயசுக்கு மேல இருக்குமா? இத்தனை வருஷம் காத்திருந்து கல்யாணம் செஞ்சவரு பொண்டாட்டியை வச்சு பூஜையா செய்வாரு? அப்படி செய்யுறாருன்னா அது நீ சொன்னதுக்காக இருக்காது! எனக்கென்னவோ………… அவருக்கு தான் இதுல கொஞ்சம் பிரச்சனைன்னு….” முடிக்காமல் நிறுத்தினாள் ஜோதி.
திகைத்துப்போய் திறந்த வாய் மூடாது சமைந்த அஷ்டா, “என்னடி சொல்ற?” என்றாள்.
ஜோதி, “இங்க பாரு! இப்படிதான் இருக்கும்ன்னு நான் உறுதியா சொல்லல! நீ சொல்றதை வச்சு ‘இப்படியும் இருக்கலாம்’ன்னு தான் சொல்றேன்! இந்த காலத்துல யாரயுமே நம்ப முடியாது பாரு… நீ வேற அரேஞ் மேரேஜ்!” என்றாள்.
அஷ்டா மனம் குழம்பிப்போனது.
“கண்டதும் நினைச்சு குழம்பிக்காதடி! சீக்கிரமே வாழ்க்கையை ஆரம்பிச்சு என்ஜாய் பண்ணுங்க! புரியுதா? ம்ம்ம்… சரி நான் வச்சுடுறேன்டி! அப்பா கூப்பிடுறாரு” என்று அழைப்பை நிறுத்தினாள் ஜோதி.
காதில் இருந்து அலைபேசியை எடுத்துவிட்டாலும், இன்னமும் ஜோதி கிளப்பிவிட்ட பூகம்பத்தில் இருந்து வெளியே வரவில்லை அஷ்டா. அதன் தாக்கம் ஆழமாய் இறங்கியிருந்தது அவளுள்.
‘பார்க்க அழகா இருந்தும் இத்தனை வருஷமா ஏன் கல்யாணம் ஆகாம போச்சு அவருக்கு?’
‘கோடிக்கணக்குல வியாபாரம் செய்யுற அளவு வசதி இருந்தும் எதுக்காக சாதாரண வீட்டுல இருந்து பொண்னெடுக்கணும்?’
‘எந்த புருஷன், பொண்டாட்டி துணியை துவைச்சு குடுக்குறான்?’
‘எந்த மாமியார் மருமகளை உட்கார வச்சு வேலை செய்யுறாங்க!’
‘தன் பக்கம் இருக்க குறையை மறைக்க தான் இப்படியெல்லாம் நடந்துக்குறாங்களோ?’
‘ஒருவேளை அப்டி இருந்தா? அதான் நான் போட்ட கண்டிஷனுக்கு உடனே சம்மதிச்சாரோ?’
‘அப்போ என் வாழ்கை!!!!!?’
ஏகத்துக்கும் குழம்பி தவறான பாதையில் தன் சிந்தையை செலுத்திக்கொண்டிருந்தாள் அஷ்டா, அது அவள் வாழ்க்கையை எந்த அளவு தண்டிக்கப்போகிறது என்பதை உணராது!