அதிகாலை பனிபெய்யும் பொழுதில், லேசாக எட்டிப்பார்த்த சூரியனால் இருள் விலக ஆரம்பித்திருந்த நேரத்தில், “போயே ஆகணுமா?” என முறைத்துக்கொண்டு நின்றான் வீரகேசரி.
அவன் முறைப்பை கிடப்பில் போட்டவராய், “போய்தான் ஆகணும்!” என பிடிவாதமாய் தர்க்கம் செய்துக்கொண்டிருந்தார் விஜயா.
கடந்த இரு நாட்களாகவே இப்பேச்சு நடந்துக்கொண்டு தான் இருக்க, இறுதியாய் ‘யெஸ்! ஆர் நோ’ சொல்ல சொல்லி கேட்டுக்கொண்டிருந்தான் அவன்.
“நீயும் ஹனிமூன் போக மாட்ட! நானாவது நாலு ஊரு சுத்திப்பார்க்கலாம்ன்னு பிரியப்பட்டா அதுக்கும் என்னை அனுப்ப மாட்ட! காலம் முழுக்க இந்த திருச்சிக்குள்ளையே கடந்து, கடைசில ஓயாமாரி’ல [சுடுகாடு] ஓய்ஞ்சுப்போய் படுக்கணும் நானு! அதானே உன் எண்ணம்?”
விஜயா பொரிய, “ச்சை, ஏம்மா இப்படி?” என முகத்தை சுளித்தான் வீரா.
“நான் நாற்பதாயிரம் கட்டிட்டேன்! பத்து நாளுக்கு வடநாட்டு கோவில் எல்லாம் சுத்தி காட்டி, ஏத்திட்டு போன இடத்துலேயே கொண்டாந்து இறக்கியும் விட்டுடுவாங்க! நான் மட்டும் போகல! என்னோட சேர்ந்து இன்னும் முப்பது பேருக்கு மேல வராங்க!” இரண்டு நாளாய் சொன்னதையே மீண்டும் ஒருமுறை ஒப்பித்தார் விஜயா.
“நீங்க எங்கயுமே தனியா போனதே இல்லையேம்மா?”
“எதுக்கும் ஒரு ஆரம்பம் வேணாமா?”
“ம்மா? நான் உங்களை கூட்டிட்டு போறேன்ம்மா! இப்படி யாரோ ஒருத்தர் கூட எப்படி உங்களை அனுப்புறது?”
“நான் என்ன குழந்தையா? எனக்கும் வயசு ஐம்பது தாண்டுது! எங்களுக்கும் போக வர எல்லாம் தெரியும்!” இளக்கமே இல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டே பேசினார் விஜயா.
மகன் சொல்லி இதுவரை மறுத்தது என பெரிதாய் ஒன்றுமே இருக்காது அவருக்கு. அதே போல தான் அவனும்! இப்போது முதல்முறையாய் வீரா கெஞ்சுவதையும் கண்டுக்கொள்ளாது பிடிவாதமாய் அவர் பேச, எங்கே அவன் முகம் பார்த்தால் தன் பேச்சில் சுருதி இறங்கிவிடுமோ? அவன் அவரை கரைத்து விடுவானோ? என அஞ்சியே முகம் பார்ப்பதை தவிர்த்து கோபகவசம் மாட்டிக்கொண்டு நிற்கிறார் விஜயா.
“சொல்றதை கேளுங்கம்மா! கட்டுன பணம் போனா போகட்டும்! அடுத்த மாசம் நீங்க, அஷ்டா, அவங்க வீட்டு ஆளுங்க, நான் எல்லாருமே சேர்ந்து டூர் போலாம்!” சின்ன குழந்தைக்கு மிட்டாய் காட்டி ஐஸ்கிரீம் வேண்டாம் என சமாதானம் செய்வதை போல பேசிக்கொண்டிருந்தான் வீரா.
விஜயாவோ, ‘சரியான சாமியார பெத்து வச்சுருக்கேன் நானு! பொண்டாட்டியை கூட்டிட்டு தனியா போக நினைப்பானா, இப்போதான் போருக்கு போரவனாட்டம் படை திரட்டுறான்!
நானே இன்னும் ஒரு வாரத்துல ‘ஆடி’ வருதே! அது வரைக்கும் சிறுசுங்க தனியா இருக்கட்டுமேன்னு யோசிச்சு வெளில நகருறேன்! இவன் கிறுக்கனாட்டம் என்னை பிடிச்சு வைக்கவே பாக்குறான்!
யோவ்! ராகவா? இதெல்லாம் நீ பார்த்துட்டு தான் இருக்கியா?’
மனதோடு மகனை வறுத்தவர், இறுதியில் கணவரையும் கடிந்துக்கொள்ள மறக்கவில்லை.
“ம்மா! நான் பேசிட்டே இருக்கேன்! நீங்க அமைதியா இருந்தா எப்படி?” வீரா அவர் யோசனையை கலைக்க, அதே நேரம் சீரான வேகத்துடன் வந்து நின்றது ஒரு வேன்!
அதன் முன்னே ‘இன்ப சுற்றுலா’ பேனர் ஒன்று தொங்கிக்கொண்டிருக்க, அதற்குள் ஏற, தன் பைகளை எடுத்துக்கொண்டார் விஜயா.
இதற்குமேல் அன்னை போவதை தடுக்க முடியாது என புரிந்தது அவனுக்கு.
அதை அவர் கரத்தில் இருந்து வாங்கியவன், தானே உள்ளே சென்று நல்ல சீட்டாய், சௌகர்யமான இடமாய் பார்த்து வைத்துவிட்டு, வெளியே வந்து ஜன்னல் அருகே நின்றான்.
அவன் காட்டிய இடத்தில் அமர்ந்துக்கொண்டு வெளியே நிற்கும் வீராவை பார்த்தவருக்கு முதல் நாள் பள்ளிக்கு ‘டாடா’ சொல்லிவிட்டு செல்லும் குழந்தையின் பாவமே!
வீரா, “கண்டிக்க ஆள் இல்லன்னு கண்டதையும் வாங்கி சாப்பிடாதீங்க! இனிப்பு அறவே வேண்டாம்! வேளா வேளைக்கு மருந்து எடுத்துக்கோங்க… தண்ணி நிறைய குடிங்க! போனதும் ஃபோன் பண்ணுங்க! டெய்லி ரெண்டு முறையாவது பேசிடனும் என்கிட்ட! கைல காசு இருக்கு தானே? ஏதாவதுன்னா கூப்பிடுங்கம்மா! புது புது இடத்தை பார்க்குற குஷில க்ரூப்பை விட்டு எங்கயும் தனிச்சு போய்டாதீங்க! போனோமா வந்தோமான்னு பத்திரமா இருக்கணும்!”
இன்னும் என்ன என்ன வகுப்பு எடுத்திருப்பானோ? வண்டி கிளம்ப ஆரம்பித்திருந்தது.
அப்போதும் விடாமல் அவன் சொல்லிக்கொண்டே மெதுவாய் ஓடி வர,
“டேய், நான் உனக்கு அம்மாடா! என்னை நான் பார்த்துப்பேன்! நீ என் மருமகக்கூட சந்தோசமா இரு!” என சிரித்துக்கொண்டே கரம் அசைத்து விடைபெற்றார் விஜயா.
இருவருக்குமே இது முதல் பிரிவு! வீராவுக்கு வெளியூரில் வேலை இருந்தால் கூட கையோடு அன்னையை அழைத்துசென்றே தான் பழக்கம்!
அப்படிப்பட்டவனுக்கு இந்த ‘பத்து நாட்கள்’ பிரிவு அவன் மனதை சற்றே சுனக்கிப்போட்டது. அவனை மட்டுமல்ல… மகனின் சந்தோசத்திற்காக என சொல்லி செல்லும் விஜயாவுக்கு கூட இது பெரும் துயரே! இருப்பினும், வீராவின் மகிழ்ச்சியை மட்டுமே கணக்கில் கொண்டு செல்பவருக்கு அவர் திரும்பி வருகையில் எல்லாம் தலைகீழாய் போயிருக்கும் என தெரியாமல் போனது.
அன்னையை அனுப்பிவிட்டு திரும்பி வந்த வீராவை வாசலிலேயே வரவேற்றாள் அஷ்டா.
மனைவியை கண்டதும் மனதின் சுணக்கம் வடிய, “என்னங்க இது? நான் ஒன்னும் கனவு காணலையே?” என கேட்டுக்கொண்டே பைக்கை நிறுத்தினான் வீரா.
“ம்ம்ம்?” என முறைத்தவள், “சொல்லாம கொள்ளாம வீட்டுல இருக்கவங்க காணா போனா எப்படி தூக்கம் வரும்?” என்றாள் இறுதியில் ஒரு கொட்டாவியை மறைத்தபடி.
“உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னு தான் சொல்லாம கிளம்பினோம்!”
“அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டீங்களே!” அலுத்துக்கொண்டே மீண்டும் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள் அஷ்டா.
“அம்மாவை பத்திரமா பஸ் ஏத்தி விட்டுட்டேன்!” அவள் கேட்காமல் அவனாகவே சொன்னான்.
“ம்ம்ம்… ம்ம்ம்…” என்ற முனகலுக்கு பின்னே வந்த சீரான மூச்சு அவள் உறங்கிவிட்டதை சொல்ல, “அதுக்குள்ள தூக்கத்தை பாரேன்! சரியான கும்பகர்னி” என பொய்யாய் அலுத்துக்கொண்டவன், தன் அன்றாட வீட்டு வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.
பங்க் பக்கம் வர வேண்டாம் என பரசுராம் சொல்லியிருக்க, தனிமை கொடுக்கிறேன் பேர்விழி என அன்னை கிளம்பி சென்றிருக்க, இப்போது அஷ்டாவும் வீராவும் மட்டுமே வீட்டில் பொழுதை கழித்தனர்.
புது மனைவியுடன் ஏகாந்த பொழுதுகள்!
எப்படி எப்படியோ இருக்க ஆசை வந்தாலும், அதில் மனம் முழுதாய் லயிக்க முடியாமல், கரையான் புற்றாய் உறுத்திக்கொண்டிருந்தது பரசுராம் அங்கிளுக்கு கொடுக்க வேண்டிய ரொக்கத்தொகை!
தியேட்டர் விவகாரதிற்க்காக அப்போது தான் ஒரு நல்ல இடத்தை கைமாத்தி விட்டிருந்தான். அதுவே அவன் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது. இதில் இப்போது ஒரு தொகை புரட்ட வேண்டும் என்றால்……??? வங்கியில் கடன் கேட்கலாம் என்றாலும் எதை வைத்து கேட்கலாம் என பிடிப்படவில்லை.
ஆடிட்டரிடம் பேச வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தான்.
விஜயா கிளம்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. வீட்டில் தானும் மனைவியும் மட்டுமே என்பது கூட ஒருவித சுகமாய், சுதந்திரமாய் இருந்தது அவனுக்கு.
அஷ்டா தன் ஐவிரலில் சாயம் தீட்டிக்கொண்டிருந்தாள்.
காலை தூக்கி சோபாவின் கைபிடியில் போட்டுக்கொண்டு அதன்மேல் தன் இடக்கையை ஊன்றி, லேசாக வெளிப்பட்ட நுனிநாக்கு பற்களின் நடுவே சிக்கிக்கொண்டு தெரிய, வேலையில் கவனமாய் அவள் வண்ணம் தீட்டிக்கொண்டிருக்க, அப்படியே அள்ளிக்கொள்ளலாம் போல இருந்தது வீராவுக்கு.
இப்பொழுதெல்லாம் அவளை பார்த்தாலே அவனுக்கு ஏடாகூடமாய் தான் தோன்றிக்கொண்டிருந்தது. அவள் அனுமதிக்காமல் வரம்பு மீறக்கூடாது என்ற திண்ணம் எல்லாம் திருமணமான முதல் நாளே கரைய ஆரம்பித்திருக்க, இப்போது ஒப்புக்குக்கூட கண்ணியவானாய் நடிக்க முடியவில்லை அவனால்.
தலைவாழை இலை போட்டு விருந்து வைத்து, ‘தொடாதே! பார்த்துக்கொண்டு மட்டும் இரு!’ என்றால் முடியுமா என்ன?! பார்க்க பார்க்க பசி பேயாட்டம் பிடிக்க தொடங்கிருந்தது.
முடிந்தவரை வாக்கு தவறக்கூடாது! அவளிடத்தில் நன்மதிப்பை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்க முயன்றான்.
ஆனாலும் அவனுக்கு இருநாட்களாய் அதீத குழப்பம்!
அஷ்டா இயல்பாய் இருக்கிறாளா என்று!!!
எப்போதும் தூக்கி கட்டி, எல்லாப்பக்கமும் ‘பின்’ குத்தி கட்சிதமாய் இருக்கும் புடவை, இப்போதெல்லாம் அங்கங்கே நழுவிக்கொண்டிருந்தது.
முன்னமும் கால் மேல் கால் போட்டு அமர்வாள் தான்! ஆனால், இப்போது போல கணுக்கால் புடவை முழங்கால் ஏறி அவன் பார்த்ததில்லை.
அவன் அருகே இருந்தால் கூட, எதார்த்தமாய் கைகளை தலைக்கு மேல் நீட்டி சோம்பல் முறிப்பது, அப்போது எக்குத்தப்பாய் விலகும் மாராப்பு மடிப்பை கூட சரி செய்யாது விடுவது….
அள்ளி சொருகிய புடவையுடன் அடிக்கடி வீட்டில் வலம் வருவது….
சரியாய் பின் குத்தாத புடவை தோளில் இருந்து பலமுறை சரிந்து விழ பார்த்து கண நேரத்தில் தப்பித்திருக்கிறது. அப்போதெல்லாம் அவன் இதயம் துடிக்கும் துடிப்பு……!!!! அம்மம்மா!
புடவைக்கு தான் இந்த பாடென்றால், சுடிதாரில் அந்தோ பரிதாபம்!
அவளது அங்க அளவுகள் என்ன என்ன? என்று தேர்வு வைத்தால், பிழை இன்றி முதல் வகுப்பில் தேர்வான் வீரா! அந்த அளவுக்கு இறுக்கமாய் இருந்தது அவள் உடை.
முன்பெல்லாம் இரவில் கூட சுடிதாரில் இருந்தவள், இப்போது ‘நைட்டி’க்கு முன்னேறியிருந்தாள்.
சுருக்கமாய் சொன்னால், வீராவின் ஹார்மோன்களை கொதிநிலையில் தத்தளிக்க விட்டுக்கொண்டிருந்தாள் அவள்.
இதெல்லாம் இயல்பாய் எதார்த்தமாய் நடப்பதாய் வீரா நினைக்க, அனைத்தும் வினையத்துடன் தான் நடக்கிறது என்பதை அவள் மட்டுமே அறிவாள்!!!
ஓர்நாள் வீரா சொல்ல சொல்ல கேட்காமல், வீட்டை துடைப்பதாக சொல்லி அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தாள் அஷ்டா.
சுடிதாரின் துப்பட்டாவை குறுக்கே கட்டிகொண்டு சிகையை அள்ளிமுடிந்து, அவள் கருமமே கண்ணாய் வீடு துடைக்க, வீராவுக்கு கண்கள் கன்னாப்பின்னாவென அலைந்தது.
‘எழுந்து உள்ளே போ’ என மனம் சொன்னாலும், கால்கள் அவன் பேச்சை கேட்டால் தானே?
அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பார்ப்பது தெரிந்து, வேண்டுமென்றே அவனை சுற்றியே செய்துக்கொண்டிருந்தாள் அஷ்டா.
இதேநிலை தொடர, அந்த மோனநிலையை கிழித்தது வாசல் மணி!
மனமே இன்றி எழுந்து சென்றான் வீரா.
வாசலில் இருந்தவன், “அண்ணே! வண்டிங்களை சர்வீசுக்கு விட சொன்னீங்களே? எல்லாம் முடிஞ்சுது! காசு குடுத்தா கட்டிட்டு, எல்லாத்தையும் சவாரிக்கு அனுப்பலாம்” என்றான்.
“ம்ம்ம்” என்ற வீரா, போதை நிலை கலையாமலே மனைவியை பார்த்துக்கொண்டே அறைக்குள் சென்று பீரோவை திறக்க, முழு போதையும் ‘கப்’பென்று இறங்கிவிட்டிருந்தது.
“ஏங்க? என்னங்க?” அங்கிருந்தே அவன் கத்த, கையில் இருந்ததை அப்படியே போட்டுவிட்டு அவனிடம் சென்றாள் அஷ்டா.
“ஏங்க? இங்க பணம் வச்சுருந்தேனே பார்த்தீங்களா?”
“நான் தான் எடுத்தேன்! நீங்க தானே அன்னிக்கு எடுத்துக்க சொன்னீங்க?” அமைதியாய் சொன்னாள்.
“ஒரு லட்சம் பக்கம் வச்சுருந்தேனே?”
“ஆமா”
“எதுவும் எமர்ஜென்ஸியா?” எதற்காக அத்தனை பணம் தேவைப்பட்டது என அறிய அவன் கேட்க,
“என் அப்பாக்கு தொழில் கொஞ்சம் டல்! அதான் அவருக்கு குடுக்கலாம்ன்னு எடுத்தேன்” என்றாள் அவனை கூர்மையாய் நோக்கி.
‘தொழில் டல்’லா?’
தொழிலை மேம்படுத்த ஏற்ப்பாடு செய்து, அது முன்பை விட இரட்டிப்பு லாபத்துடன் நடப்பது தான் அவனுக்கு தெரியுமே!!!
அவன் அப்படியே நிற்க, “என்ன அப்படி பார்க்குறீங்க? என் அப்பாக்கிட்ட காசு வாங்க உங்களுக்கு உரிமை இருக்கு, ஆனா, காசு குடுக்க உரிமை இல்லையா?” என்றாள்.
“நான் அப்படி சொல்லலையே? திடீர்ன்னு ஒரு லட்சத்தை காணோம்ன்னதும்……”
“காணோன்னதும்? என்ன நினைச்சீங்க?” சீறலாய் வந்தது கேள்வி.
வெளியே ஆளை நிறுத்தி வைத்துக்கொண்டு இந்த வாக்குவாதம் அர்த்தமற்றது என தோன்ற, வெளியே வந்தவன், “நீ அவரோட ‘கூகிள் பே’ நம்பர், இல்லனா அக்கவுன்ட் நம்பர் வாங்கிட்டு எனக்கு அனுப்பு தம்பி! நான் காசு போட்டு விட்டுடுறேன்… அவர்கிட்ட சொல்லு, கேட்டுப்பாரு” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
அவன் உள்ளே வந்ததும், “நான் காசு எடுக்க உரிமை இல்லையா? என் அப்பாக்கு குடுக்கக்கூடாதா?” என்றாள் அஷ்டா.
“நான் எப்பவுமே அப்படி சொல்ல மாட்டேங்க! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அதுக்கேத்த மாதிரி ப்ளான் செஞ்சுருப்பேன்! வீட்டுல பணம் இருக்க நினைப்புல நான் அடுத்த மூணு மாசத்துக்கு வீட்டு பட்ஜெட் ஒதுக்கலை”
“ஏன்?”
“ஏன்னா? உங்ககிட்ட தான் சொன்னேனே! இப்போதைக்கு கொஞ்சம் பணத்தேவை இருக்கு! அங்கிள்’க்கு பணம் செட்டில் பண்ணணும்!”
இதற்கு தானே காத்திருந்தேன் என்பதை போல,
“பணகஷ்டம் இருக்க நேரத்துல உங்க அம்மாக்கு மட்டும் ஏன் எதுக்குன்னு கேட்காம நாற்பதாயிரத்தை கேட்டதும் தூக்கி குடுத்தீங்க? நான் என் அப்பா கஷ்டத்துக்கு உதவுனா அது தப்போ?”
வீரா பேசவில்லை.
“நானாவது என் அப்பா கஷ்டத்துக்காக குடுத்தேன்! ஆனா, உங்கம்மா ஜாலியா ஊரு சுத்த காசு வாங்கிருக்காங்க”
அவனை ஆழம் பார்க்க எண்ணி அவள் தூண்டில் வீச, “நான் வெளில போயிட்டு வரேங்க! பார்த்துக்கோங்க” என நைசாக நழுவிவிட்டது அந்த விலாங்குமீன்.
பெரும் வாக்குவாதத்தை எதிர்ப்பார்த்தவளுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.