காதல் 6:
மறுநாள் கண்விழித்த மகா பத்ரா கண்டது என்னவோ, தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பிரகதீஸ்வரனைத் தான். காலையில் எழுந்து, எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் நடிக்கும் அளவிற்கு அவள் சின்னப் பிள்ளையில்லை. முதல் நாள் நடந்த அனைத்தும் அவளுக்கு ஜென்மத்திற்கும் மறக்காததைப் போல் இருக்க, அடுத்த நாள் காலையிலேயே மறந்து விடுமா என்ன..?
அவளின் யோசனை எல்லாம் கீழே படுத்திருந்த ஈஸ்வரனைப் பற்றி தான்.
‘பொண்ணு நானே, தைரியமா கட்டில்ல படுத்துட்டேன். இவன் எதுக்கு கீழ படுத்திருக்கான். என்ன காரணமா இருக்கும்..?’ என்று யோசிக்க,
“உன்மேல அவ்வளவு பயம் போல..” என்றது மனசாட்சி சிரிப்புடன்.
“இருக்கலாம் தப்பில்லை. ஆனா, இந்த அளவுக்கு பயம் தேவையில்லாத ஒன்னு. இந்த மகா அந்த அளவுக்கு கொடுமைக்காரி எல்லாம் கிடையாது..” என்று, நக்கலாய் பேசிய மனதிடம் சீரியசாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
கொஞ்சம் யோசித்தவள்,
“ஈஸ்வர்.. ஏங்க ஈஸ்வர்..” என்று தூங்கிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.
இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால் அவன் கண்கள் நெருப்பாய் எறிந்தன. ஆனால், மகா விடாமல் எழுப்பிக் கொண்டிருக்க, அலுப்புடன் கண்களைத் திறந்தான். விழித்தவன், ஒரு நிமிடம் அரண்டு விழித்தான்.
“நீயா..?” என்றவன் பெருமூச்சு விட,
“ஏன்? யாரை எதிர்பார்த்திங்க..?” என்றாள் கோபமாக.
“அம்மா தாயே..! காலையிலையே ஆரம்பிக்காத. உன் முகத்தை முதல்ல கண்ணாடில பாரு. நான் ஏன் பயந்தேன்னு உனக்கே தெரியும். இப்படியா பேய் மாதிரி வந்து எழுப்புவ..?” என்றான், சோம்பல் முறித்தபடி.
“அப்படியா இருக்கு?” என்று கண்ணாடியில் பார்த்தவள்,
“ப்பா..அப்படித்தான் இருக்கு..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“எதுக்காக கீழ தூங்குனிங்க..? நானே தைரியமா கட்டில்ல தூங்கும் போது, உங்களுக்கு என்ன பயம் அப்படி..?” என்றாள்.
“இதை கேட்க தான் எழுப்புனியா..?” என்றான்.
“ஆமா..!” என்றாள்.
அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன்,
“சொல்ல முடியாது..!” என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான் ஈஸ்வரன்.
‘மகா, ஒருநாள் பாடே உனக்கு திண்டாட்டமா இருக்கே. கொஞ்சம் சிரமம் தானோ..?” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள், அப்படியே கீழே சென்றாள்.
அவள் வந்த கோலத்தைப் பார்த்த மஞ்சரி தலையில் அடித்துக் கொண்டாள்.
“கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாது..” என்று முனங்கிவிட்டு செல்ல,
“என்ன மகா, குளிக்கலையா..?” என்றார் வசுந்தரா.
“எனக்கு காபி குடுக்குறிங்களா.. குடிச்சுட்டு போய் குளிக்கிறேன். ரொம்ப தலைவலிக்குது அத்தை..” என்றாள் மகா, கொட்டாவியை விட்டபடி.
“இன்னைக்கு ஒருநாள் குளிச்சுட்டு வந்திடுமா. அப்படியே இந்த புடவையை பாத்ரூம்லயே போட்டுரு. மஞ்சரி அலசி போட்ருவா..” என்றார் வசுந்தரா.
“என்னோட புடவையை அவங்க எதுக்கு துவைக்கணும் அத்தை..?” என்றாள் புரியாமல்.
“இது நாத்தனார் சம்பிரதாயம் மகா..!” என்றார்.
“புரியலை அத்தை..” என்று சொல்ல,
“ம்ம்.. முத ராத்திரிக்கு கட்டிட்டு இருக்குற புடவையை நாத்தனார் தான் துவைக்கணும். அதுக்குத்தான் மஞ்ச புடவையை கட்ட சொல்றது. நம்ம பக்கம் இது தான் வழக்கம். இது கூட தெரியலை..” என்று மஞ்சரி சைடு வாக்கில் பேச,
“அதெல்லாம் சரித்தான். நடக்காத ராத்திரிக்கு, எதுக்கு சடங்கு சம்பிரதாயம்..?” என்று அவள் பட்டென்று கேட்க,
“இவ என்னடி சொல்ற மஞ்சு..?” என்ற ருக்கு பாட்டி நெஞ்சில் கை வைக்க,
“ஈஸ்வரன் உன்கிட்ட நல்ல விதமா நடந்துக்கலையா மகா..?” என்றார் மஞ்சரி.
“அதையெல்லாம் நீங்க ஏன் விசாரிக்கிறிங்க..? அது எங்க பர்சனல்..” என்றாள் பட்டென்று.
“இப்ப எதுவும் நடக்கலைன்னு நீதான சொன்ன..? அதையே நாங்க கேட்டா தப்பா..? எல்லாம் எங்க தலைஎழுத்து..” என்று மஞ்சரி நொடித்துக் கொண்டாள்.
‘ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு அக்கப் போறா..?’ என்று நினைத்தவள், மீண்டும் அறைக்கே சென்றாள். அதற்குள் ஈஸ்வரன் குளித்துவிட்டு வந்திருந்தான். அவன் முகம் இறுகிப் போயிருந்தது.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா தான இருந்தான்..?” என்று யோசித்தவள், அதையே வாய்விட்டு கேட்கவும் செய்தாள்.
“ஒண்ணுமில்லை..” என்று பட்டும் படாமல் சொன்னவன், வெளியே சென்று விட்டான்.
“இந்த வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசுல இருக்காங்கப்பா..!” என்று நினைத்தவள், குளிக்க சென்றாள்.
வெளியே சென்ற ஈஸ்வரனைப் பிடித்துக் கொண்டாள் மஞ்சரி.
“என்னடா நினைச்சுட்டு இருக்குறா உன் பொண்டாட்டி. எங்க எதைப் பேசனும்ன்னு தெரியாதா அவளுக்கு. என்னா வாய்..? வாயைத் திறந்தா மூடவே மாட்டாளா..? இதையெல்லாம் ஆரம்பத்துலையே நீ கண்டிச்சு வைக்கணும் ஈஸ்வரா..! இல்லைன்னா, உன் தலையில ஏறி, அவ டான்ஸ் ஆடுனாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்லை..” என்று மஞ்சரி கடுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“சரிக்கா..!” என்றவன், அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
“என்ன ஈஸ்வர், காலையிலேயே எங்க கிளம்பிட்ட..?” என்றார் வசுந்தரா.
“தோப்பு வரைக்கும் போயிட்டு வந்திடுறேன் அம்மா..!” என்றவன், அவர் கொடுத்த காபியை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கே போகலைன்னா என்ன ஈஸ்வரா..? ஒரு ரெண்டு நாள் வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்ல..” என்றார் வசுந்தரா.
“வேலையெல்லாம் இல்லம்மா..! போன உடனே வந்துடுவேன்..” என்றவன் கிளம்ப முற்பட, குளித்து முடித்து வந்து கொண்டிருந்தாள் மகா. அவளின் பேரைப் போலவே மகாலட்சுமி போல் வந்தவளை, பார்க்காதவன் போல் பார்த்து வைத்தான் ஈஸ்வரன்.
“குளிச்சுட்டேன் அத்தை..! விளக்கேத்திட்டு வரேன்..!” என்றவள், பூஜையறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“புருஷன்னு ஒருத்தன் என்ன பண்றான்னு கூட தெரியலை. வம்சம் தழைஞ்ச மாதிரி தான்..” என்று ருக்கு முனங்கிக் கொண்டிருந்தார்.
“இவ்வளவு குழப்பத்துக்கு அப்பறம் கல்யாணம் நடந்திருக்கு. போக போக சரியாகிடும் அத்தை..” என்றார் வசுந்தரா.
“என்னவோ..? என் பேரனுக்கு ஒரு நல்லது நடந்தா சரி. இல்லைன்னா, இந்த வாயாடியை கட்டிட்டு வரணும்ன்னு நமக்கு என்ன தலை எழுத்தா..?” என்று நீட்டி முழக்க,
“அத்தை காபி..!” என்றவள் அங்கிருந்த சோபாவில் அமர,
“வயசானவ நானே கீழ உட்கார்ந்திருக்கேன்.. ஒரு மட்டு மரியாதை இல்லை..” என்றார் ருக்கு.
“எனக்கு இன்னமும் வயசாகலை பாட்டி. வயசான காலத்துல நானும் கீழயே உட்கார்ந்துக்கிறேன்…” என்றாள் படக்கென்று.
“ஆத்தி.. இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு படக்குபடக்கு பதில் சொல்றவ..?” என்று ருக்கு கேட்க,
“பக்கு பக்குன்னு இருக்குறதால தான் படக்கு படக்குன்னு பதில் சொல்ல வேண்டியிருக்கு..” என்றாள் மிடுக்காய்.
“பணக்காரன் மக, பண்ணைக்காரன் வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தாளாம்..” சும்மாவா சொன்னாக பழமொழி, என்று ருக்கு பாட்டி சொல்ல,
“இதுல பணக்காரன் யாரு..? பண்ணைக்காரன் யாரு..?” என்றாள் சிரிக்காமல்.
“நீங்க பேசாம இருங்க பாட்டி. இவகிட்ட வாயைக் குடுத்து எதுக்கு வாங்கிக் கட்டுறிங்க..?” என்றாள் மஞ்சரி.
“இப்ப தான் சரியா பேசுறிங்க சித்தி..” என்றாள் மகா.
அவளின் செல்போனிற்கு அழைப்பு வர, அதைப் பேசிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டாள் மகா. அவள் செல்லும் வரை அமைதியாக இருந்த வசுந்தரா,
“கொஞ்சம் பார்த்து பேசு மஞ்சு..” என்றார் மகளிடம்.
“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்ப என்னை வாயடைக்க வந்துட்டிங்க..?” என்றாள் மஞ்சரி கோபமாக.
“நான் அதுக்கு சொல்லலை மஞ்சு. நம்ம வீட்ல நடந்தது எல்லாம் உனக்கத் தெரியும் தான? உன் தம்பிகிட்டையும் ஒரே நாள்ல மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. நம்ம மகாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. ஈஸ்வர் கூட விலகியிருக்கலாம் இல்லையா..?” என்றார் வசுந்தரா.
“அவன் ஆம்பளை..! முன்ன பின்ன இருக்கத்தான் செய்வான். அதையெல்லாம் சரி பண்ணி குடும்பம் நடத்தத்தான இவளைக் கட்டிட்டு வந்திருக்கிங்க..? இதை சொன்னா கூட நான் பொல்லாதவ ஆகிடுவேன். இனி உங்க வீட்டுப் பிரச்சனை எனக்கெதுக்கும்மா. நான் இன்னைக்கே என் வீட்டுக்கு கிளம்புறேன்..” என்றாள் மஞ்சரி.
“தொட்டதுக்கெல்லாம் கோவிச்சுகிட்டா என்ன செய்ய முடியும் மஞ்சு..? மகா யாரு..? அப்படி பார்த்தா உன்னோட மச்சான் மக தான. உனக்கும் பொண்ணு மாதிரி தான். நம்ம காயத்ரி பேசுனா பொறுத்துப் போக மாட்டியா..? அது மாதிரி நினைச்சுக்க..” என்றார் பொறுமையாய்.
“என்னால வேற என்ன செய்ய முடியும்ன்னு நினைக்கிறிங்க..? இதுக்குத்தான் தலைப்பாடா அடிச்சுகிட்டேன், நம்ம காயத்ரியையே கட்டி வச்சுடலாம்ன்னு..” என்று மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்தார் மஞ்சரி.
“எனக்கு அடுப்படில வேலையிருக்கு..” என்று இடத்தை காலி செய்தார் வசுந்தரா.
வெளியே சென்ற ஈஸ்வரன் சிலமணி நேரத்தில் வந்துவிட்டான். நேராக அறைக்குள் சென்றவன், கையில் இருந்த சில பத்திரங்களை அவனுடைய பீரோவில் வைத்து பூட்ட, அதுவரை அங்கு இருந்த மகாவை கவனிக்கவில்லை. ஆனால், மகா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். பூட்டிவிட்டு நிமிர்ந்தவன் அவளைக் கண்டு திகைத்தான்.
“நம்மளைப் பார்த்து ஷாக் ஆகுற அளவுக்கு என்ன இருக்கு..?” என்று நினைத்தவள், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“இங்கயே என்ன பண்ற?” என்றான்.
“வெளிய போய் மட்டும் என்ன பண்ண போறேன்..?” என்றாள் பதிலுக்கு.
“உனக்கு நார்மலாவே பேசத் தெரியாதா..? இல்ல, தெரியாத மாதிரி நடிக்கிறியா..?” என்றான்.
“யாரு நானா நடிக்கிறேன். நல்ல ஜோக்..”என்றவள்,
“எனக்கு எங்க வீட்டுக்குப் போகணும்..” என்றாள்.
“என்னால கூட்டிட்டு போக முடியாது..” என்றான் பட்டென்று.
“நானும் உங்களை கூட்டிட்டு போக சொல்லலையே..? எங்க வீட்டுக்கு போகணும்ன்னு மட்டும் தான் சொன்னேன்..நானே போய்க்குவேன்..” என்றாள் மிடுக்காய்.
“நீ மட்டும் தனியா போனா, என்னை என்ன நினைக்க மாட்டாங்க. இன்னைக்கெல்லாம் வேண்டாம். நாளைக்கு நானே கூட்டிட்டு போறேன்..” என்றான் எரிச்சலுடன்.
‘அப்படி வாங்க வழிக்கு..’ என்று நினைத்தவள்,
“எதோ, நீங்க சொல்றதால பேசாம இருக்கேன். இல்லைன்னா, இப்பவே கிளம்பிடுவேன்..” என்று அவள் சொல்ல, ஈஸ்வருக்கு இல்லாத தலைவலி கூட அப்போது வந்தது.
அப்போது வசுந்தரா சாப்பிட அழைக்க, அவனுக்கு முன்னால் மகா கிளம்பி சென்றாள்.
“சோறுன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுவா போல..” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றான் ஈஸ்வர்.
வேகமாய் சென்று அமர்ந்தவள், சாப்பாட்டை போட்டு சாப்பிடப் போக,
“புருஷன் சாப்பிட்டானா இல்லையான்னு எல்லாம் பார்க்க மாட்டியா..?” என்று மஞ்சு கேட்க,
“இந்த வீட்டுக்கு நான் தான் புதுசு, உங்க தம்பியில்லை. அதனால எனக்குத் தான் கேட்டு சாப்பிட கூச்சமா இருக்கும். அந்த இங்கிதம் தெரிஞ்சிருந்தா, உங்க தம்பி தான், நான் சாப்பிட்டேனா இல்லையான்னு கவனிச்சிருக்கணும். பொண்டாட்டி கட்டிட்டு வர்றது முக்கியமில்லை. அவளை எப்படி நடத்தனும்ன்னு தெரிஞ்சிருக்கணும். எங்க, இங்க அதுக்கெல்லாம் ஒரு வழியும் இல்லை. உங்க சோறும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். நான் எங்க வீட்டுக்கு போயே சாப்பிட்டுக்கிறேன்..” என்று வேகமாய் அவள் எழுந்திருக்க, அவள் பின்னால் வந்த ஈஸ்வரனின் காதில் அவள் வார்த்தைகள் ஒன்று விடாமல் கேட்டது.
“என்ன மகா நீ? அவதான் ஏதோ சொல்றான்னா.. நீயும் சரிக்கு சரி பேசிகிட்டு. இனி இது தான் உன்வீடு. இங்க எல்லா அதிகாரமும் உனக்கு இருக்கு. முதல்ல உட்கார்ந்து சாப்பிடும்மா..” என்றார் வசுந்தரா.
“கோபத்துல சொல்லலை அத்தை, நான் சொல்றது உண்மைதான். நேத்து தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். வந்த மறுநாளே, இந்த வீட்ல எது எங்க இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும். இந்த சினிமாவுல வர்ற மாதிரி மறுநாளே குடும்பத்துக்கே சமைக்கிற அளவுக்கு திறமையெல்லாம் எனக்கு இல்லை. முதல்ல இங்க இருக்குற மனுஷங்களைப் பழகணும், அதுக்கப்பறம் வீடும் தானா பழகிடும். நான் பிராக்ட்டிகலா யோசிக்கிறேன். அது இவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது..” என்றாள் மகா.
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவள் அருகில் அமர்ந்த ஈஸ்வரன், அவனே தட்டில் வைத்து, ‘சாப்பிடு’ என்று அவள் புறம் நகர்த்தினான்.
“நீங்க எனக்கு வைங்கம்மா..” என்றான்.
‘கடைசில என் தம்பியவே சாப்பாடு போட வச்சுட்டாளே..! இவகிட்ட கொஞ்சம் பார்த்து தான் இருக்கணும்..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் மஞ்சரி.
அன்றைய பகல், சில சோதனைகளுடன் மகாவிற்கு செல்ல, அவள் சொன்ன செக்கேன்ட் நைட்டும் வந்தது. அதுவரை தன்னை திடமாக கட்டிக் கொண்டவளுக்கு ஏனோ அவளின் அத்தனை திடமும் அவளை விட்டு போவதைப் போல் இருந்தது.
‘நீ எதுக்கு பயப்படுற..? நீதான் தைரியமான ஆளாச்சே..?’ என்று மனம் ஒரு புறம் கூப்பாடு போட,
“என்ன பண்ணிடுவான் வெங்காயம். பார்த்துக்கலாம் விடு மகா..” என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் ஈஸ்வரன்.
அவன் உள்ளே நுழைந்தவுடன் அவள் முகம் போன போக்கைக் கண்டு, அவள் எதைப் பற்றிய எண்ணத்தில் முகத்தை அப்படி வைத்திருக்கிறாள் என்று ஓரளவுக்கு கணித்தான் ஈஸ்வரன்.
கையில் கொண்டு வந்த பைலை கபோர்டில் வைத்துக் கொண்டிருக்க, அதில் சில பேப்பர்கள் கீழே விழுந்தது.ஒன்றிரண்டு அவள் காலடியில் விழுந்து கிடக்க, அதை எடுத்து அவனிடம் கொடுக்கப் போனவளின் பார்வை எதேச்சையாக அதில் பட, ஏதோ ஒன்று உறுத்தியது. மீண்டும் அதை தெளிவாய் பார்க்க, அவளால் நம்ப முடியவில்லை.
“எங்க நிலத்தோட பத்திர ஜெராக்ஸ் மாதிரி இருக்கு..?” என்றாள் சந்தேகமாக.
“மாதிரி என்ன? அதேதான்..” என்றவன், அவள் கையிலிருந்த பேப்பர்களைப் பிடுங்கி, உள்ளே வைத்துப் பூட்ட,
“இதெப்படி உங்ககிட்ட வந்தது..?” என்றாள் கோபமாக.
“உங்கப்பாகிட்ட போய் கேளு..” என்றான் பட்டென்று.
“எங்கப்பா கொஞ்ச நாளா ஆளே சரியில்லை. இப்பத்தான புரியுது, நீதான் ஏதோ பண்ணி அவரை மிரட்டியிருக்க..அதான் அவரு அப்படி இருந்திருக்காரு..” என்றாள் மகா.
“அப்படியா..? இது கூட நல்லாயிருக்கே..?” என்றான் நக்கலாய்.
“இந்த கல்யாணத்தையும் மிரட்டி தான் பண்ணியா..?” என்று அவள் இஷ்ட்டத்துக்கு பேசிக் கொண்டு போக,
“வாயை மூடு..! விட்டா உன் இஷ்ட்டத்துக்கு பேசிட்டே போற..? எதையுமே யோசிக்க மாட்டியா நீ..? உங்கப்பாவை மிரட்டி காரியம் சாதிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் ஒன்னுமில்லாதவனும் இல்ல, அடுத்தவங்க சொத்துக்கு அலையறவனும் இல்லை, புரியுதா..” என்றான் கடுமையாக.
“எந்த அயோக்கியன் தான் தன்னை அயோக்கியன்னு சொல்லியிருக்கான். எதோ பிடிக்காம கல்யாணம் பண்ணாலும், போகப் போக சரியாகிடும்ன்னு நினைச்சேன். நடக்குறதை எல்லாம் பார்த்தா, அப்படி தெரியலை..” என்றாள்.
“வேற எப்படி தெரியுது..?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்க,
“கொலைகாரன் மாதிரி தெரியுது. எங்கப்பாகிட்ட அவ்வளவு சொன்னேன். பொண்டாட்டியை கொன்ன கொலைகாரனை நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு. மனுஷன் எங்க கேட்டார்..? அதையும் இதையும் சொல்லி வாயை அடைச்சிட்டார். சரின்னு உன்கிட்ட சொன்னேன். நீதான் இதுக்காகவே காத்திருந்த ஜீவன் ஆச்சே. கிடைச்ச சான்ஸ எப்படி விடுவ..?” என்று அவள் போக்கில் பேசிக் கொண்டிருக்க,
“ஏய்..!!” என்று அவளின் கையைப் பிடித்து முறுக்கியவன்,
“நீ பார்த்தியா..? நான் கொலை பண்ணதை நீ பார்த்தியா..?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,
“நான் வேற பார்க்கனுமா..? அதான் ஊரே சொல்லுதே..? கையை விடுடா, வலிக்குது” என்றாள்.
பாவம் பார்த்து அவள் கையை விட்டவன், தன்னைத் தானே நிதானப் படுத்திக் கொண்டான்.
“இங்க பாரு மகா..! நடந்தது தற்கொலை. நான் எதுவும் பண்ணலை. இந்த பேச்சை மறுபடியும் பேசி என் கோபத்தைக் கிளராத..” என்றான் பொறுமையாய்.
“தற்கொலையாவே இருந்தாலும், அதுக்கு நீதான் பொறுப்பு. அன்னைக்கு நைட் அவளை என்ன பாடு படுத்துனியோ..?” என்றாள் வெடுக்கென்று.
“இதென்னா வாயா.. வண்ணான் தாழியா..?” என்றவன்,
இப்ப என்ன சொல்ல வர்ற..?” என்றான்.
“இந்த பத்திரத்தை எல்லாம் எங்க அப்பாகிட்டையே குடுத்துடு..” என்றாள்.
“சரி அப்பறம்..?” என்றான்.
“அப்பறம் என்ன, பேசாம படுத்துத் தூங்கு..!” என்றவள் முந்தைய நாளைப் போலவே படுத்தவுடன் தூங்கி விட, ஈஸ்வரனின் தூக்கம் என்பது தொலை தூரம் போனது.
‘இவ அப்பன் வழிய வந்து பொண்ணைக் கட்டிக் குடுத்த மாதிரியா பேசுறா..? என்னமோ, நான் இவளை கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ண ரேஞ்சுக்கு பேசுறா..? இவளை இப்படியே விட்டா சரிப்பட்டு வராதே. இவ்வளவு பொறுமையா இவளை இனி ஹேண்டில் பண்ணவே கூடாது ஈஸ்வரா..” என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, நியாபங்கள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்று வந்தது.