காலை உணவை தட்டில் சுட சுட பறிமாறிக்கொண்டிருந்தார் தேவி. ஜேகோப் நன்றாக மூச்சை இழுத்து வாசனையை நுகர, அதை பார்த்து முறுவலுடனே அடுத்து கணவனின் தட்டை நோக்கி நகர்ந்த தேவியின் கைகள் அவரது முகத்தில் இருந்த இறுக்கம் கண்டு லேசாக நடுங்கியது.
சிரித்துக்கொண்டு வாசலில் நின்ற மனிதர் பரமேஸ்வரனின் வண்டி தங்களை கடந்து சென்றதுமே மீண்டும் உர்ராங்கொட்டான் ஆகிப்போனார். அப்போதிருந்து அதே போல தான் இருக்கிறார். எப்போது வேட்டு வெடிக்கும் என தெரியாத பீதியில் உலவிக்கொண்டிருந்தார் தேவி.
அக்கன்னா போல வீட்டின் மூவரும் அமர்ந்திருக்க பொதுவில் அமர்ந்து பறிமாறிக்கொண்டிருந்தார் தேவி. ரோஷிணி தனக்கு எதிரே இருந்த ஜேகோபை குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனோ தட்டில் இருந்ததை எல்லாம் ‘பூட் மோட்’ போட்டு மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான்.
‘ஃபோனை வச்சுட்டு சாப்பிடுப்பா’ என சொல்ல வாய்வரை வந்தது தேவிக்கு. கணவனின் முகத்திற்காக வாயை திறக்காமல் அவர் பொறுக்க, ‘இவன் போட்டோ எடுத்து முடிக்கும் முன்ன மதிய சாப்பாட்டு நேரமே வந்துடும் போலயே’ என்று நினைத்தாள் ரோஷிணி. அத்தனை நேரமாய் எல்லா ஆங்கிளிலும் கிளுக்கிக்கொண்டிருந்தான்.
ஆவி பறக்க வைத்த இட்லி நொந்துக்கிடக்க, ஓரமாய் வைத்த கெட்டி சட்னியில் இருந்து நீர் பிரிந்தது. தட்டில் வைத்தபோது பீரடிக்கும் தொப்பை போல உப்பியிருந்த பூரி, இப்போது நடிகையின் இடையை போல சுருங்கி கிடந்தது. இதில் எதிலும் சம்பந்தப்படாமல் சூர்யவம்சம் சின்ராசை போல அசோகா அல்வா ஒதுங்கி நிற்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னிடம் வந்துவிடுவேன் என சொல்லிக்கொண்டே நகர்ந்துக்கொண்டிருந்தது வடகறி.
பொறுத்து பொறுத்து பார்த்த தேவி, வாயை திறக்கும் முன், “ஃபோனை வச்சுட்டு சாப்பிடு” அதட்டியிருந்தார் சத்தியநாதன்.
திடீரென்ற அவர் அதட்டலில் ரோஷிணிக்கு புரை ஏற, தேவி திடுக்கென பார்க்க, ஜேகோபோ கொஞ்சமும் அசராமல், “அவ்ளோதான்… முடிஞ்சுது” என்றுவிட்டு ‘லோ ஆங்கிளில்’ எடுத்துக்கொண்டிருந்தான்.
மறுநொடி வெடுக்கென அவன் கரத்தில் இருந்து மொபைலை பிடுங்கிய சத்தியநாதன், “சாப்புடு” என்று அதட்ட, இரு பெண்களும் பதட்டமாய் பார்க்க, அவனோ, “இன்ஸ்டா’ல போட்டுட்டு தரேன்” என்றான் அவரிடம் கைநீட்டியபடி’.
“மண்டைலையே நாலு போடுவேன் சொல்லிட்டேன்… மரியாதையா சாப்புடு” அவர் குரல் உயர,
“ஃபோன் குடுத்தா தான் சாப்புடுவேன்” சின்னப்பிள்ளை போல சொன்னான் அவன்.
“சரி நீ சாப்பிடவே வேண்டாம்” என்றவரோ மொபைலை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொள்ள, ரிச்சர்டை எளிதாய் சமாளிப்பதை போல இவரை சமாளிக்க முடியாது என்று உணர்ந்தவன், “ப்ச்! வெரி பேட் அங்கிள்!” என்றான் உம்மென.
அவன் முகத்தில் வருத்தம், கோபம் போன்ற எதுவுமே இல்லை. ஏதோ இயல்பு போல அடுத்து அவன் தட்டில் கைவைக்க, பார்த்துக்கொண்டிருந்த தேவிக்கு தான் ‘பக்கு பக்கு’ என்றிருந்தது. அவருக்கு ஜேகோபின் குணம் பற்றியும் அவ்வளவாய் தெரியாதல்லவா!? எங்கே கணவர் பேச, பதிலுக்கு அவனும் கோபம் கொண்டு எதிர்வினை புரிந்து ஆசாபாசம் நிகழ்வதற்கு பதில் ரசபாசம் ஆகிவிடுமோ என்ற ஐயம்!
ரோஷிணி ‘பே’வென்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ பல காலம் பழகியவர்களை போலல்லவா இருக்கிறது இவன் செய்கை?! அதிலும் தந்தை… சிரிப்பதென்ன? அதட்டுவதென்ன?!
அவளுக்கு அண்ணனின் நினைவு வந்தது. சென்னையில் ஒரு மென்மொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துக்கொண்டிருக்கிறான் திரவியன். எவ்வளவு வளர்ந்தபோதும் தந்தையிடம் ‘ஆங் ப்பா… சரிங்’ப்பா!’ தவிர வேறு பேச்சு வராது… அவன் தலை ‘ஆம்’ என்பதை தாண்டி அவரிடம் ஆடாது. எது சொன்னாலும் ‘சரி’ என தலையாட்டும் நல்லவன்…!
அவன் இங்கே இருந்து இப்படி மொபைலை நோண்டியிருந்தால்…? அவள் நினைத்துப்பார்க்க, கற்பனையில் கூட தந்தைக்கு பிடிக்காததை செய்யமாட்டேன் என கவனமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் அவள் தமையன்.
‘அட ச்சை!’ சலித்தது அவளுக்கு.
எதிரே ரசித்து ரசித்து உண்டுக்கொண்டிருந்த ஜேகோபை பார்த்தபோது ‘எப்படி அப்பாவை கரெக்ட் பண்ணிருப்பான்? குளிக்க போன கேப்’ல என்ன நடந்துருக்கும்?’ என தீவிரமாய் யோசித்துக்கொண்டே அவள் உணவில் கவனமின்றி உண்ண, அமைதியாய் உண்டுக்கொண்டிருந்த சத்தியநாதன் திடுமென துள்ளினார்.
“என்னங்க? என்னாச்சு?” தேவி பதற, தொண்டையை கனைத்தவர், “ஒன்னும் இல்ல” என்றார் உள்ளே போன குரலில்.
“அப்பறம் ஏன் கத்துனீங்க?”
“சட்னி சூடு!” அவர் வாய்க்கு வந்ததை சொல்ல, “சட்னி சூடா இருக்கா? தேங்கா சட்னி எப்டிங்க சூடா இருக்கும்?” என்று தேவி ஆராய,
“எனக்கு சுட்டுடுச்சு டி… வாயை மூடிக்கிட்டு வடகறியை வையு!” சிடுசிடுத்தவரை மேற்கொண்டு துருவாமல் அவர் கேட்டதை வைக்க, ஏதோ அசௌகர்யமாகவே அவர் இருந்ததை போல தோன்றியது பெண்களுக்கு. கேட்டால் சொல்லவா போகிறார்? என்ற கடுப்பில் இருவரும் அமைதியாய் இருக்க, மீண்டும் முன்பை விட வேகமாய் துள்ளினார் சத்தியநாதன்.
இம்முறை வாயில் உள்ள இட்லியோடு அவர் துள்ள, மெலிதாய் புரை ஏற, தேவி தண்ணீரை நீட்டியதும் வாங்கி மடக் மடக்கென குடித்தவர், அடுத்த நொடி அவர் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து ஜேகோபிடம் நீட்டியிருந்தார்.
கன்னக்கதுப்பில் அதக்கிய சிரிப்போடு அவரை பாராமலே மொபைலை வாங்கியவன் மீண்டும் உணவை தொடர, “எனக்கு போதும்” எழுந்து அவசரமாய் சென்றார் அவர்.
“ஏங்க, இன்னும் ஒரு இட்லி போட்டுக்கோங்க” தேவி கத்த, “தோப்பு வீட்டு சாவி எங்க?” என்று பதிலுக்கு அறைக்குள் இருந்து கத்தினார் அவர்.
“அங்க தான் இருக்கு” என்ற தேவியோ, “என்ன வேணுமோ போட்டு சாப்டுங்க, நான் இதோ வரேன்” என்றுவிட்டு கணவரிடம் ஓடினார்.
பெருந்தலைகள் இரண்டும் மறைந்ததும், “ஹே என்ன செஞ்ச எங்க அப்பாவ?” என்று முன்னே குனிந்து கிசுகிசுத்தாள் ரோஷிணி.
அவனோ நிமிர்ந்துக்கூட பாராது, “நான் என்ன செஞ்சேன்?” என்றான் பதிலுக்கு.
“எங்க ப்பா இப்படியெல்லாம் சிரிக்க மாட்டாரு! அவரை எதிர்த்து பேசுனாலே அவ்ளோதான் நாங்க! நீங்க என்னவோ வருஷக்கணக்கா ஒண்ணா திரிஞ்சவங்க மாறி ஒரே நாள்ல மாறிட்டீங்க… அதுவும் இப்ப நீ கேட்காமையே போனை குடுத்துட்டு போறாரு… என்ன நடக்குது இங்க?” என்றாள்.
“என்ன நடக்குது? நீ நடக்குற… நான் நடக்குறேன்…”
“ஹலோ ஹலோ இந்த மதுரை முத்து ஜோக் எல்லாம் நான் வயசுக்கு வந்ததுக்கு முன்னாடியே வழக்கொலிஞ்சு போச்சு”
முதலில் அவள் பேசும்போது ‘மதுரை முத்து’ யாரு என கேட்க வந்தவன் அவளது பிற்பாதி பேச்சில், “வயசுக்கு வரதுன்னா என்ன?” என்றான் ஆர்வமா அவளை பார்த்து.
அவன் திடீரென முகம் பார்த்துவிட அவன் புறம் குனிந்து பேசிக்கொண்டிருந்தவள் சட்டென தலையை இழுத்துக்கொண்டாள்.
“சொல்லு.. அப்டின்னா என்ன?”
“ரொம்ப முக்கியம்! அதெல்லாம் ஒரு எதுகை மோனைக்கு பேசுறது…”
“எது கை மோனகை ன்னா?” அவன் அதற்கும் கேள்வி கேட்க, “யப்பா சாமி! உன்கிட்ட இனி வசனம் பேசுனா என்னை என்னனு கேளு நீ!” என கை சேர்க்காமல் கும்பிட்டாள்.
“தெரியாத வேர்ட்ஸ்’க்கு மீனிங் கேட்டா தப்பா?”
“தப்பே இல்ல… நீ இப்படி எடக்குமடக்கா கேள்வி கேட்பன்னு தெரியாம உன்கிட்ட வாயை கொடுத்தேன் பார்த்தியா? என் தப்பு தான்!”
“என்கிட்டே வாய குடுத்தியா? எப்போ?” இரட்டை அர்த்தமாய் அவன் கேட்க, அவனை முறைக்க நிமிர்ந்தவள், அவன் முகத்தில் குறும்பு வழிவதை கண்டு தன்னை சீண்டுகிறான் என்பது புரிய,
“ப்ச், ரொம்ப ஆர்வமா இருக்கு ஜாக்கு! என்ன செஞ்சேன்னு சொல்லேன்!” மிஞ்சுவது வேலைக்காகாது என கெஞ்சலில் இறங்கினாள்.
“கொஞ்சம் சட்னி போடு!” அவன் அமர்த்தலாய் கேட்க, முறைத்துக்கொண்டே தட்டில் வைத்தாள் ரோஷிணி.
ரோஷிணி, “சொல்லு…”
“வாட்டர் எடு!” அடுத்து அவன் சொல்ல, கடுப்பை விழுங்கிக்கொண்டே எடுத்து நீட்டியவள், “ரொம்ப ஸீன் போடாம சொல்லு” என்றாள்.
“சொல்றேன்… ஃபர்ஸ்ட் நான் கேட்குறதுக்கு நீ சொல்லு”
“என்ன?”
“வயசுக்கு வரதுன்னா என்ன?”
“ஏய் பைத்தியம்… அதெல்லாம் பொண்ணுக்கிட்ட கேட்கக்கூடாது” சங்கோஜமாய் அவள் நெளிய,
“அப்போ பையன் கிட்ட மட்டும் சொல்லலாமா?” என்றான்.
“தெரியாம சொல்லிட்டேன் சாமி… விட்டுத்தொல!”
“முடியாதே! ஐ வான்ன க்னோ தி மீனிங்” என்றவன், “நீ சொல்லலன்னா என்ன? ஆன்ட்டி கிட்ட கேட்டுக்குறேன்” என்றுவிட்டு சொன்னதை போலவே அங்கே வந்த தேவியிடம் சத்தமாய் கேட்க, திடுக்கிட்டு நின்றுவிட்டார் அவர்.
“உனக்கு யாரு சொன்னா அந்த வார்த்தையை?” அவர் கேட்க, இங்கோ தன் தட்டோடு குனிந்துக்கொண்டு, ‘சொல்லாத சொல்லாத ப்ளீஸ் ப்ளீஸ்’ அவன் மட்டும் கேட்கும்படி ஜபித்துக்கொண்டிருந்தாள் ரோஷிணி.
“அது” என ஆரம்பித்தவன் ரோஷினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஒரு வீடியோ’ல பாத்தேன்” என்றான்.
அதற்குள் வாசலில் சத்தியநாதன் பைக் ஹாரனை அலறவிட, “நீ எடுத்துப்போட்டு சாப்பிடு, நான் இதோ வரேன்” என்று மின்னலாய் வாயிலுக்கு ஓடினார் தேவி.
அவர் போனதும், “பைத்தியமா நீ? எதெல்லாம் கேட்குறதுன்னு விவஸ்தை இல்ல” கடிந்தவளோ, “அது கேர்ள்ஸ் ப்ரோப்ளம்! உனக்கு புரியாது” என்று மழுப்ப, அனைத்தையும் கோர்த்து பார்த்தவன்,
“ஹே, யூ மீன் ‘பூபர்ட்டி’?” வினவினான் அவளிடம்.
‘ஆம்!’ என தலையாட்டியவளும், அந்த வார்த்தையை கேள்வியுற்றிருக்கிறாள், ஆனால் அவன் கேட்கையில் சட்டென நினைவு வராது போனது.
“பூபர்ட்டி இஸ் இன்டீட் அ ஓவர்ரேட்டட் திங் இன் இந்தியா. இட்ஸ் ஜஸ்ட் எ காமன் திங் ஃபோர் போத் பாய் அண்ட் கேர்ள். உங்களுக்கு எவிடென்ட்’டா தெரியும், வேர்அஸ் எங்களுக்கு தெரியாது… தட்ஸ் இட்!” சிம்பிளாக முடித்துவிட்டு கடைசி பூரியில் கைவைத்தான் ஜேகோப்.
“சரி இப்போவாது சொல்றியா?”
“எதை?”
‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்று அவளுக்கு தோன்ற, “அதான் எங்கப்பா சாப்பிடும்போது ஏன் குதிச்சாருன்னு!?” என்று வினவ,
“அதுவா?” என அவன் ஆரம்பிக்கையில் கணவனை வழியனுப்பிவிட்டு வந்து சேர்ந்தார் தேவி.
“இன்னும் அப்படியே வச்சுருக்க? நல்லா சாப்பிடு” கவனித்துவிட்டு தனக்கொரு தட்டோடு மற்றொரு நாற்காலியில் அவர் அமர்ந்துவிட, அவருக்கு தெரியாமல் சைகையில், “சொல்லு” என அவனை நச்ச்சரித்துக்கொண்டிருந்தாள் ரோஷிணி.
அவனோ, “லேட்டர்!” என்றான் சைகையிலேயே.
“நோ.. இப்போவே சொல்லு… சொல்லு!” சத்தமில்லாமல் அவள் தொணதொணக்க, அடுத்து சில வினாடிகளில் சத்தியநாதன் அளவுக்கு இல்லாமல் விலுக்கென்று துள்ளினாள் ரோஷிணி.
தேவியோ, “என்னடி? உனக்கென்ன ஆச்சு?” என்று கேட்க, காதில் விழுந்தாலும், பதில் சொல்ல சுயநினைவு இருந்தால் தானே!?
எச்சில் கூட்டி விழுங்கியவள், கண்களை மட்டும் தாழ்த்தி கீழே பார்க்க, அவள் கட்டியிருந்த பாவாடை முட்டி வரை ஒரு பக்கம் மேலேறி, அது இருந்த இடத்தில் ஜம்மென உரசிக்கொண்டிருந்தது ஜேகோபின் பாதங்கள். உரச மட்டும் தான் செய்தது!!!
அதற்கே மின்சாரம் பாய்ந்ததை போல ஃபிரீஸ் ஆகி அமர்ந்திருந்தாள் ரோஷிணி. அவனோ வெகு இயல்பாக உண்டு முடித்து, “சோ யம்மி ஆன்ட்டி!” என்ற பாராட்டோடு நகர்ந்து விட, அவன் போன பிறகும் கூட அவன் பாதங்கள் அவள் கால்களுக்கிடையே உரசுவதை போன்ற பிரம்மையில் சிலிர்த்து எழுந்த மயிர்கால்கள் அடங்க வெகு நேரம் பிடித்தது.
எல்லாம் அந்த நொடி…நிமிடம் தான்!!!
அதன் பின்னே உள்ளுக்குள் ரெஸ்ட் மோட்’டில் இருந்த ஏஜென்ட் டீனா கையில் ஃபோர்க்குடன் வெளியே வந்து, “என்ன தைரியம் இருந்தா என் மேல கையை வச்சுருப்பான்?” என பொங்க ஆரம்பிக்க, அவள் சொன்ன கதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சங்கவி, “கை இல்ல டி… காலு!” என திருத்த,
“அவன் வச்சான் டி என்மேல காலு… அடுத்து நான் வைக்குறேன்டி அவன் மூஞ்சில என் பீசாங்கையு”
“ரைமிங் பாக்காதடி… நான் வச்சு செய்யப்போற டைமிங் பாரு!” என்று சொல்ல, “இருந்தாலும் இது ஓவர் தான்! சும்மா இருந்தவன் கிட்ட நீயா தானே போய் ‘என்ன செஞ்ச என்ன செஞ்ச’ன்னு கேட்ட?” என்று சங்கவி என்ற நியாயஸ்தி வினவியதும்,
“கேட்டா? கேட்டா செஞ்சுடுவானா? வெளிநாட்டுக்காரன்னா என்ன வேணா பண்ணலாம்ன்னு சட்டமா என்ன? அவ்ளோ தைரியமாகிடுச்சு! அவனுக்கு நான் யாருன்னு தெரியல… காட்டுறேன்… இந்த ரோஷிணி சத்தியநாதன் யாருன்னு காட்டுறேன்” என்று கறுவினாள் ஏஜென்ட் ரோஷிணி.
‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு…
சும்மா கிடந்த ஜேகோபை சொரிஞ்சு விட்டு பழிவாங்குறேன்னு பல்பு வாங்குமா? இந்த மக்கு…!’