அவள் தந்த ஒற்றை முத்தத்தில் அவன் தவிப்பு அனைத்தும் மறைய கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டான். அப்போது அங்கே வந்த பார்வதி அவன் முதுகில் சுளிரென்று ஒரு அடி வைத்தாள்.
“ஆ”, என்று அலறியவன் “ஏன் கிழவி அடிச்ச?”, என்று பாவமாக கேட்டான்.
“நான் வந்தது கூட தெரியாம என்ன கனா கண்டுட்டு இருக்க டா?”
“ஏதோ ஒரு கனவு. அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. நான் வீட்டுக்கு போறேன் போ”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
வெளியே எந்த சத்தமும் கேட்க வில்லை என்று உணர்ந்த வினோதினிக்கு வெளியே வரலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது. கதிரும் இளவரசியும் எந்த கோலத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாததால் உள்ளேயே நின்றாள்.
ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு உள்ளே இருந்தே தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். பார்வதி மட்டும் அமர்ந்திருக்கவும் வெளியே வந்தவள் “பாட்டி நீங்க எப்ப வந்தீங்க? இளவரசி எங்க?”, என்று கேட்டுக் கொண்டே அவர் அருகில் அமர்ந்தாள்.
“அந்த கழுதை வீட்டுக்கு ஓடிருச்சு. அப்புறம் வினோதினி, உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன்”
“என்ன பாட்டி?”
“அந்த பய உன் கிட்ட ஏதாவது பேசினானா?”
அவன் என்ன பேசினான் என்று எண்ணியவளின் உடல் சிலிர்க்க அதை அடக்கிக் கொண்டு “பேச வந்தாங்க பாட்டி. ஆனா இளவரசி வந்ததும் எதுவும் பேசலை”, என்றாள்.
“பேசலையா? பின்ன ஏன் இந்த பய ஒரு மார்கமா வந்தான்? சரி விடு. இனி பேச வந்தான்னா அவன் கிட்ட எக்காரணம் கொண்டும் நீ தான் நாங்க பாத்த பொண்ணுனு சொல்லிறாத சரியா?”
“சரி பாட்டி”
“ஆமா நிச்சயம் வரைக்கும் அவனுக்கு நீ தான் பொண்ணுன்னு தெரியவே கூடாது. அந்த அளவுக்கு வீட்ல உள்ளவங்களை படுத்தி எடுத்துருக்கான். அதுக்கு பழி வாங்கணும்ல?”, என்று சொல்ல “நீங்க ஈஸியா சொல்லிறீங்க? ஆனா என்னால தான் அவன் கிட்ட இயல்பா இருக்க முடியலை. உங்க பேரன் என் கிட்ட பேசவா செய்றார்? பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் தான் கொடுக்குறார்?”, என்று மனதில் எண்ணிக் கொண்டு வேறு பேச ஆரம்பித்து விட்டாள்.
அடுத்த நாள் எப்போதும் போல விடிந்தது. “டேய் அம்மாச்சி கொடுத்த ஒரு மாசத்துல ஒரு நாள் முடிஞ்சிருச்சு. வினோதினி கிட்ட உன் காதலை எப்ப சொல்லப் போற?”, என்று கேட்டான் கதிர்.
“சொல்லணும்”
“சீக்கிரம் சம்மதிக்க வை டா”
“ம்ம்”, என்ற இன்பா அன்றும் அவளிடம் பேச சந்தர்பம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கழுகுப் பார்வையை உணர்ந்த அவளும் அவனிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தாள். அதற்கு பார்வதி உதவினார் என்று கூட சொல்லலாம்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து கூட அவனால் அவளிடம் பேச முடியவில்லை. வினோதினி அவன் கண்ணில் படாமலே பேங்க்க்கு சென்று விடுவாள். அதனால் அவளிடம் வெளியே வைத்து பேச முடியவில்லை. அது நான்கு பேரின் கண்ணில் படும் என்பதால் அவன் அதற்கு முயற்சி செய்ய வில்லை.
வீட்டில் வைத்து பேச எண்ணினால் அவளுடன் இளவரசி, பாமா, பார்வதி யாராவது இருந்தார்கள். இல்லையென்றால் அவள் இங்கே வீட்டுக்கு வந்து அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்.
இன்பா எதிர் பார்த்த தனிமை கிடைக்கவே இல்லை. ஒரு வாரம் கழித்து அவனுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வினோதினி எப்போதும் போல் குளித்து உடை மாற்றிக் கொண்டு இன்பா வீட்டுக்குச் சென்றாள். வீட்டில் இளவரசி மட்டுமே இருந்தாள்.
“எங்க இளவரசி யாரையும் காணும்?”
“எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்களுக்கு வளைகாப்புன்னு போயிருக்காங்க கா. வர நைட் ஆகிரும்”
“அப்பா வயலுக்கு போனாங்க. இப்ப வர நேரம் தான். நீங்க ஒரு உதவி பண்ணுறீங்களா?”
“என்ன இளவரசி?”
“அப்பா வரதுக்குள்ள நான் குளிக்கணும். கருக்கல் ஆனதும் குளிச்சா திட்டுவாங்க. வீட்ல யாரும் இல்லாத நேரம் எனக்கு குளிக்க போகவே பயமா இருக்கும். நான் மேலுக்கு குளிச்சிட்டு வரேன். அது வரைக்கும் இங்க உக்காந்துருக்கீங்களா? (Ultram) ”
“இதுல என்ன இருக்கு? நீ போ”
“அப்புறம் அம்மா உங்களுக்கு டீ போட்டுக் கொடுக்கச் சொன்னாங்க. நான் போடுற டீயை நாய் கூட குடிக்காது. அதனால எனக்கும் சேத்து டீ போட்டுத் தறீங்களா?”
“அது ஒரு லூசு. எப்ப வீட்ல இருக்கும், எப்ப வெளிய சுத்தும்னு தெரியாது. எதுக்கும் போட்டு வைங்க. வந்தா குடிக்கட்டும். இல்லைன்னா அப்புறம் சுட வச்சிக் கொடுத்துக்கலாம். அப்பாவுக்கும் சேத்துப் போடுங்க”
“சரி நீ போ”, என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
டீப் போடத் தேவையான எல்லாவற்றையும் சமையல் மேடை மீது எடுத்து வைத்து விட்டு அடுப்பைப் பற்ற வைத்தாள். அவள் டீ போட்டுக் கொண்டிருக்கும் போது தான் இன்பா வந்தான். அவன் பைக் சத்தம் கேட்டதும் ஒரு அதிர்வு உள்ளுக்குள் வந்தது.
“ஐயோ, இவன் கிட்ட இப்ப தனியா சிக்கிட்டேனே? கடவுளே என்னைக் காப்பாத்திரு”, என்று எண்ணிக் கொண்டிருக்க “அம்மா தலை வலிக்குது ஒரு டீ கொடு”, என்று சொல்லிக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தவன் அவளைக் கண்டு இனிமையாக அதிர்ந்தான்.
அவளோ அவனைத் திரும்பிக் கூடப் பார்க்க வில்லை. அவளைக் கண்டதும் மற்ற அனைவரும் வளைகாப்புக்கு சென்றிருப்பது நினைவு வந்தது. இளவரசி அறையை தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். அவள் குளிக்கச் சென்றிருப்பது புரிய “ஹலோ மேடம் உங்க கையால ஒரு டீ கிடைக்குமா?”, என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.
அவன் நெருங்கி வருவது தெரிய அவள் நெஞ்சம் தடதடத்தது. அவன் கேட்டதும் “ம்ம்”, என்றாள்.
“உன் கிட்ட பேசலாம் பேசலாம்னு பாத்தா கண்ணுலே சிக்க மாட்டுக்கியே என்ன விஷயம்?”, என்று கேட்ட படி சமையல் மேடையில் ஏறி அமர்ந்தான்.
அவனுக்கு முகத்தைக் காட்டாமல் டீ சட்டியில் எல்லாம் போட்டவள் “என் கிட்ட நீங்க பேச என்ன இருக்கு?”, என்று கேட்டாள்.
“என்ன டி பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்ட?”
“முதல்ல இந்த டி டின்னு கூப்பிடுறதை நிறுத்துங்க”, என்று வெட்கத்துடன் அவள் முணுமுணுக்க அவனுக்கு அவள் வெட்கம் தெரியவில்லை.
“என் பொண்டாட்டியை நான் அப்படி தான் கூப்பிடுவேன்”, என்று திமிராக சொன்னான். அவன் பேச்சில் தன்னை சமாளித்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் “பொண்டாட்டியா? அதுக்கு என்னோட சம்மதம் வேணும் சார்”, என்றாள்.
“அதைக் கேக்க தானே உன் கிட்ட பேசணும் பேசணும்னு தேடிட்டு இருக்கேன்? இப்ப சொல்லு உன் சம்மதத்தை?”
“அதெல்லாம் சம்மதம் சொல்ல முடியாது”
“ஏன் டி?”
“எனக்கு உங்களைப் பிடிக்க வேண்டாமா?”
“பிடிக்கலையா என்னை?”, என்று அவன் சோகமாக கேட்க “ஆமா”, என்றாள்.
“அப்புறம் ஏன் டி அன்னைக்கு முத்தம் கொடுக்குறப்ப அமைதியா இருந்த?”, என்று கேட்க அவள் முகம் சிவந்தது.
அவளுடைய முகச் சிவப்பைப் பார்த்தவன் “நீ எதுவும் சொல்ல வேண்டாம். உன் முகச் சிவப்பே சொல்லுது. எனக்கு அது போதும்”, என்று சொல்லி விட்டு அந்த மேடையில் இருந்து இறங்கினான். அவன் அங்கிருந்து சென்று விடுவான் என்று எண்ணி “அப்பாடி”, என்று பெருமூச்சு விட அவளை நெருங்கி நின்றவன் “அப்படி என்ன டி பெருமூச்சு?”, என்று கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டாள். “ஏன் டா என்னை மயக்குற மாதிரி இருக்குற? நீ கிட்ட வந்தாலே படபடப்பா வருது”, என்று எண்ணியவள் அதை வெளியே சொல்ல வில்லை.
அவளது அமைதி அவனைத் தூண்ட அவளை ஒட்டிக் கொண்டு நின்றான். அவள் அங்கிருந்து விலக நினைக்க “பிளீஸ் இப்படியே இரு டி. ஒரு ரெண்டு நிமிஷம்”, என்று அவன் கெஞ்ச அதற்கு மேல் அவள் எப்படி விலகுவாள்? அசையாமல் நின்றாள்.
அவன் கைகள் பின்னால் இருந்து அவளை அணைக்க அவளுக்கு வியர்த்தது. அவனது மூச்சுக் காற்று அவள் முதுகில் பட அவன் கரங்களுக்குள் நெளிந்தாள்.
“அசையாம இரு டி”, என்றவன் எதுவுமே செய்யாமல் அவளுடைய அருகாமையை மட்டும் ரசித்தான்.
அப்போது சிதம்பரத்தின் புல்லட் சத்தம் கேட்க அடுத்த நொடி அவளை விட்டுவிட்டு அவனுடைய அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் கொடுத்துச் சென்ற உணர்வுகளின் பிடியில் இருந்தவள் டீ கொதிக்கவும் அதில் கவனம் செலுத்தினாள்.
அன்றோடு சரி அதன் பிறகு அவள் அவனிடம் தனியே சிக்கவே இல்லை. அவனும் எவ்வளவோ அவளிடம் சம்மதம் வாங்க முயற்சி செய்தான். ஆனால் அவளிடம் பேச முடியவில்லை.
“பேச சந்தர்ப்பம் கிடைச்சப்ப எல்லாம் அவ கிட்ட மயங்கி நின்னுக்கிட்டு இப்ப முழிச்சு என்ன பண்ண?”, என்று கேள்வி எழுப்பியது அவன் மனது.
சிதம்பரமே ஒரு நாள் அவனிடம் “என்ன டா, நீ லவ் பண்ணுற பொண்ணை எப்ப கூட்டிட்டு வரப் போற? நாள் போய்கிட்டே இருக்கு. தெரியும் தானே?”, என்று கேட்டு விட்டார்.
“கூட்டிட்டு வரேன் பா”, என்று சொன்னவனுக்கு அதைச் செய்ய தான் மனதில்லை. கதிருக்கும் இன்பாவை நினைத்து கவலையாக தான் இருந்தது. அவனுக்காக வினோதினியிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்தான்.