ஒரு நாள் பொழுது எப்படி ஓடியதென்றே தெரியாமல் மின்னலாய் ஓடிப்போனது ஜேகோப்’பிற்க்கு. அந்நாளில் மீதமிருந்த இரு உணவு வேளைகளிலும் கமலத்தின் அருகில் அமர்ந்து அவனது ஆஸ்திரேலிய கதைகளை சொல்லிக்கொண்டே அவருக்கு உணவைப் புகட்டிவிட்டான். தளர்ந்து போயிருந்த தாத்தாவிற்கு கூட புத்துணர்வு வந்ததை போல இருந்தது.
மதியம் குழைய கிளறிய பருப்பு சாதம், மிளகு இடித்துப்போட்ட உருளை வறுவல் என ருக்மணி பக்குவத்தில் உணவு முடிய, மாலை மொறுமொறு கருப்பட்டி பணியாரம் அவன் நாவில் நின்று நர்த்தனமாடியது.
தேவியுடனும் ருக்மணியுடனும் பேசிக்கொண்டே, அவர்கள் செய்யும் வேலைகளை கவனித்துக்கொண்டே என அவனுக்கு அலுப்பில்லாமல் பொழுது கழிய, இரவு ஏழை தொடும்போது கடுகடுவென சத்தம் போட்டுக்கொண்டே வாசலில் வந்து நின்றது வண்டி. வண்டிக்கு போட்டியாய் ஓட்டியின் முகமும் கடுகடுக்க, அதுவரை சிரித்துக்கொண்டிருந்த ருக்மணி பவ்வியமாய் எழுந்து நின்றார்.
உள்ளே நுழைந்த பரமு முதலில் கண்டது ஹாலில் சௌகர்யமாய் அமர்ந்திருக்கும் ஜேகோபை தான்! சுறுசுறுவென ஏறியது அவருக்கு. பின்னாலேயே சத்தியநாதன் வர, “ஹாய் அங்கிள்” என்றான் ஜேகோப். பரமு சட்டென நின்று அவனை முறைக்க, அவனோ சிரித்த முகமாய் சத்தியநாதனை பார்த்துக்கொண்டிருந்தான்.
பரமு திரும்பி சத்தியனை பார்க்க, அவரோ, ஒரு விரலை நீட்டி ‘பத்திரம்’ காண்பிக்க, அவன் இரு விரல்களை சுழற்றி, ‘நண்டு ஊருது நரி வருது’ என ஜாடை காட்டி கிண்டல் செய்துக்கொண்டிருந்தான். இதை பார்த்த பரமுக்கு தான் திகுதிகுவென எரிந்தது. தன் பேச்சிற்கு மரியாதை இன்றி, தன் வார்த்தையை மீறி அவன் அங்கே இருப்பதும், அவரை தவிர அனைவரும் அவனை ஆதரிப்பதும் அவரால் சகிக்க முடியாத ஒன்றாயிற்று.
வழக்கமாய் முற்றத்தில் கைகால்களை சுத்தப்படுத்திக்கொண்டு உள்ளே செல்பவர், இப்போது எதையும் செய்யாமல் விறுவிறுவென அறைக்குள் நுழைந்துவிட்டார்.
பரமு சென்றதும் சோபாவில் வந்து சோர்வாய் அமர்ந்தார் சத்தியநாதன்.
தேவி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, ருக்மணி கணவரை பின்தொடர்ந்து அப்போதே அறைக்குள் சென்றிருந்தார்.
“ஊரு இல்ல… வீடு! ஒன்லி வீடு! ஊரு எங்க காட்டுனீங்க?” வேண்டுமென்றே சோகமாய் சொல்ல, “உன்னை வாய்க்காலுக்கு அழைச்சுட்டு போனதுக்கே எனக்கும் என் அண்ணனுக்கும் வாய்க்கால் தகராறு ஆகிடுச்சு… இதுல உனக்கு ஊர் சுத்தி காட்டவெல்லாம் வந்தேன்னு வையு! அவ்ளோதான் நானு!” என்றார் அவர் வெகு கேலியாய்.
கணவர் பேச்சை கேட்டுக்கொண்டே வந்த தேவிக்கு ஏக ஆச்சர்யம். மனுஷனுக்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா? என்று!!!
ஜேகோபிற்கு அழைப்பு வர, டவருக்காக வீட்டின் பின்னே திறந்தவெளிக்கு சென்றான்.
சத்தியனிடம் தட்டை நீட்டிய தேவி, அவர் அதை வாங்கிக்கொண்டதும், சட்டென அவர் இடுப்பில் கைவைக்க, தட்டில் இருந்த பணியாரமெல்லாம் தரையில் குதித்து விழும் வேகத்திற்கு அவர் குதித்தார் சோபாவில் இருந்து.
குதித்து அடங்கியவரோ அதீத கோபத்தில் தேவியை முறைக்க, அவரோ, “அட ஆமா… நிஜமாவே கூச்சம் வருது தான் போல!” என்று மோவாயை பிடித்தபடி ஆச்சர்யத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார் தேவி.
“என்னடி உளறுற?”
“ஹும்! உங்களுக்கு இடுப்புல தொட்டா கூச்சம் வருமாமே! கட்டிக்கிட்டு புள்ள பெத்த எனக்கு கூட இத்தனை வருஷத்துல இது தெரியல… நேத்து வந்த பய சொல்லி தெரிஞ்சுக்குறேன்!” நொடித்தவர், “அதான் உண்மையா இல்லையான்னு சோதிச்சு பாத்தேன்! உண்மை தான் போல” என்று முனங்கிக்கொண்டே நகர,
மனைவியின் பேச்சில் கோபம் மறைந்து கூச்சம் கொண்டவரோ, “தொட்டு பார்த்துருந்தா தானே தெரியும்!” என்றார் முனகலாய்.
“ஹான்… தொட விட்டுருந்தா தானே தெரியும்!? நீங்களா வருவீங்க… நீங்களா போவீங்க… இதுல நான் என்னத்த கண்டுப்புடிக்க?” சடைத்துக்கொண்டு கோபம் போல தேவி சொல்ல, “சரி வா… இப்போ வேணா கண்டுப்புடிக்கலாம்” விஷமமாய் கேட்ட மனிதரை வாயை பிளந்து அதிசயமாய் பார்த்த தேவி,
“அது சரி தான்! சும்மாவா சொன்னாங்க, அரைகிழவனுக்கு ஆசை நூறுன்னு! பேரப்புள்ளைக்கே தொட்டில் கட்டுற காலம் வந்தாச்சு… இப்போ வந்து விவஸ்த்தை இல்லாம கூப்பிட்டுட்டு நிக்குறீங்க” என்றிட,
“இப்போ நான் உன்னை என்னத்துக்கு கூப்பிட்டேங்குற?” ஒன்னும் அறியாதவர் போல முகத்தை கல்லென வைத்துக்கொண்டு வினவினார் சத்தியநாதன்.
“யப்பா சாமி, நீங்க கூப்பிடவே இல்லை! நான் தான் கூப்பிடாம வந்து தொலைச்சுட்டேன்! ஆளை விடும்!” வார்த்தைகள் சலிப்பு போல வந்தாலும் முகமும் குரலும், வார்த்தைகள் வெளிவந்த தொனியும் வேறு கதை சொல்ல,
“சரி இப்போ கூப்பிடுறேன், வா!” என மேலும் அவரை சீண்ட சொன்னது சத்தியநாதனை.
வெட்கம் பிடுங்கித்தின்ன, “எனக்கு வேலை இருக்கு… நான் போறேன்” என்றவர் விறுவிறுவென அடுக்களைக்குள் நுழைய, “தொட்டில் கட்டணும்ன்னு ஏதோ சொன்ன?” விடாமல் இழுத்தார் சத்தியன்.
“ஐயோ… பொண்ணுங்க மேல தான் இருக்காங்க… சும்மா இருங்க” என்று மின்னலென மறைந்த மனைவியை நினைத்து முகமெல்லாம் விகசித்தது சத்தியனுக்கு. இப்படியெல்லாம் ஒரு நாளும் பேசியதில்லை. அவர் புது பொண்டாட்டியாய் இருந்தபோது கூட சரச பேச்சுக்கள் இருந்தது இல்லை. இப்போ தலை நரைத்த வயதில் தான் பேச, அதற்கு அவர் படும் வெட்கம் ஏதோ உள்ளுக்குள் உல்லாசமாய், பத்து வயது குறைந்துவிட்டதை போல அவருக்கு தோன்ற வைக்க, அங்கோ அடுக்களைக்குள் நின்ற தேவிக்கு உடலின் நகக்கண் வரை வெட்கத்தில் கூசிப்போனது.
ஜேகோப் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தான். அதை மாடியில் இருந்து சங்கவியும் ரோஷிணியும் நோட்டமிட்டுக்கொண்டிருக்க, “என்னடி ப்ளான் பண்ற?” என்றாள் சங்கவி.
“என் மேல கால் வச்சான்’ல… அவன் காலுக்கு ஏதாவது வேட்டு வைக்கலாமான்னு யோசிக்குறேன்!”
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நீண்ட நேரம் நடந்துக்கொண்டிருந்தாள் ரோஷிணி. அவன் போகும் வழியில் விளக்கெண்ணை ஊற்றலாமா? குளிக்க போகும்போது சுடுதண்ணியை மேலே கொட்டும்படி வைத்துவிடலாமா? மாடிப்படியில் இறங்குகையில் பின்னால் இருந்து தள்ளி விடலாமா? இப்படி பலபல ‘லாமா?’க்களை அவள் யோசிக்க, அத்தனையும் அர்த்த பழையதாய் அவளுக்கே தோன்றிவிட, சரி சங்கவியுடன் சேர்ந்து சதி ஆலோசனையை தொடருவோம் என பால்கனியில் இருந்த அவளிடம் சென்றாள் ரோஷிணி.
“ஹே சங்கவி!!!” அவள் அழைத்துக்கொண்டே போக, சங்கவி திரும்பியும் பார்க்கவில்லை. கிட்ட சென்றவள், “ஏய்… உன்னத்தான்!” என தோளில் தட்டியதும் விலுக்கென்று நிமிர்ந்தவள், “என்னடி?” என்றாள் சிறு எரிச்சலுடன்.
“அதுவா?” என்றிழுத்த சங்கவி, “அங்க பாரேன்… யாருக்கோ வீடியோ கால்ல பேசிட்டு இருக்கான்” என்றாள் கீழே துளசி மாடத்தின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்த ஜேகோபை காட்டி.
“இது இன்னுமா பேசிக்கிட்டு இருக்கு?” என்று பார்த்த ரோஷிணி, “பொம்பளை புள்ளைட்ட பேசுறான் போல… அதான் மணிக்கணக்கா போயிட்டு இருக்கு” என்று சொல்ல,
“அத விடு லூசு! அவனை பாரேன்… எப்படி இருக்கான்னு? அவன் கலருல பாதி கூட இல்ல நானெல்லாம்” தன் கைகளை பார்த்து சோகமாய் சங்கவி சொல்ல,
“அவன் ஊரு நிறத்துக்கு அவன் இருக்கான்… நம்மூரு வெயில்ல நாலு நாள் பஸ் ஏறி இறங்க சொல்லு… அப்ப தெரியும்” ரோஷிணி சலிக்க,
“நம்ம அப்பாக்களை விடவா நல்லா இருக்கான்? என் அண்ணனுக்கு கூட இவனை விட பெரிய ஆர்ம்ஸ் இருக்கும்… சும்மா காணாதத கண்ட மாறி பாக்காதடி” கடிந்தாள் ரோஷிணி.
“சரி அத விடு… அவன் முகத்தை பாரேன், எவ்ளோ லட்சணமா இருக்கான்… சிரிக்கும்போது குழந்தை மாறி கியூட்டா இருக்கு…” சங்கவி ரசனையுடன் சொல்ல,
“கியூட்டா இருக்கா? எப்போ இருந்து டி உன் ரசனை இப்படி மகா மட்டமா போச்சு? அவனும் அவன் மூஞ்சியும்… உவேக்” என்று ரோஷிணி சொல்ல, சங்கவிக்கு பொறுமை போனது.
“ஏய் என்ன ஓவரா பண்ற?”
ரோஷிணி, “நான் ஓவரா பண்ணல… நீ தான் ஓவரா ஜொள்ளுற!”
“இருக்கட்டுமே… என் அத்தை மகன்… நான் ஜொள்ளு வடிய பாக்குறேன்… உனக்கெங்க நோகுது?”
“ஓஓ.. கதை அப்படி போகுதா? எப்போ இருந்துடி இந்த அத்தை மகன் பாசம் பொங்க ஆரம்பிச்சுது?” ரோஷிணி சண்டைக்காரி போல வர,
“அதெல்லாம் பார்த்ததுல இருந்தே உள்ள இருக்கு” வேண்டுமென்றே சொன்ன சங்கவி, அறையை விட்டு பின்னோக்கி நடந்துக்கொண்டே, “உனக்கு ஒத்துக்க முடியலடி… ஈகோ…! நீ சொன்னாலும் சொல்லலன்னாலும், ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலன்னாலும் என் ஜாக்கு மாமா சூப்பர் ஃபிகரு தான்… வொர்த்து பீஸு தான்” சொல்லிமுடித்தவள் வேகமாய் அங்கிருந்து ஓட,