“இப்போ என்னடி பண்றது?” சங்கவி இதோடு ஆயிரத்தி ஓராவது தடவையாக ரோஷிணியிடம் கேட்க, “ஐயோ கொஞ்சம் தொணதொணக்காம இருந்து தொலடி” என்று கடுப்படித்தாள் அவள்.
“ரொம்ப பெரிய தப்பு செஞ்சுட்டோம்ல?” சங்கவி கலக்கமாய் கேட்க, ‘கொட்டிய பாலை நினைத்து வருந்தி என்ன பயன்’? ஏதோ வீட்டில் பொய் சொல்லிவிட்டு கிளம்பும்போது பெரிய இமாலய சாதனையை நிகழ்த்திவிட்டதை போல தான் கர்வமாய் இருந்தது. இப்போது அந்த மயக்கம் இரு நாட்களில் தெளிந்திருக்க, நிதர்சனம் முகத்தில் அறைந்ததில் கதிகலங்கி போயிருந்தனர்.
“என்ன இருந்தாலும் நம்ம பண்ணது பெரிய தப்பு! எவ்ளோ பெரிய பொய் சொல்லி ஏமாத்திட்டு வந்துருக்கோம்? பெரியவங்க நம்ம நல்லதுக்கு தானே நம்மளை அடக்கி வைக்குறாங்க… அதை கூட புரிஞ்சுக்காம!” சங்கவி தன் போக்கில் புலம்ப, அவளை அப்படியே இழுத்து வைத்து அறையலாம் போல வந்தது ரோஷிணிக்கு.
“இந்த வெங்காய அறிவெல்லாம் என்கிட்ட எங்கயாது கூட்டிட்டு போன்னு மாசக்கணக்கா கண்ணீர் விட்டு கதறும்போது இருந்துருக்கணும்! இப்போ வந்து வியாக்கியானம் பேசுறா! கம்முன்னு படுத்து தூங்கு!” சங்கவி ஏதோ சொல்ல வர, “இப்போ நீ ஏதாவது பேசுன, இப்படியே நான் கிளம்பி போய்டுவேன்! நீ தனியா தான் இருக்கணும்” என்றதும் கப்பென வாயை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள் சங்கவி.
அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் இரண்டு நாள் வாடகையே ஐயாயிரத்தை தொட்டது. கையிருப்பு வேறு இல்லை. எப்படியும் நாளை இங்கிருந்து கிளம்ப வேண்டும்! ஊருக்கு செல்ல தேவையான பணம் இருப்பதால் அதை பற்றிய கவலை இல்லை. ஆனால், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய பணம்? அதை எப்படி புரட்டுவது என்பது தான் ரோஷிணியின் பெரும் கவலை.
அதே சிந்தனையோடு படுத்திருந்தவள் சிறிது நேரத்தில் தூங்கிப்போனாள்.
மறுநாளை காலை பொழுது புலர்ந்தபோது, “நம்ம பொருள் எல்லாம் எடுத்து வச்சுடு சங்கி, காலைல சாப்பாடு ஃப்ரீ தானே இங்க… அதை சாப்பிட்டுட்டு கிளம்பிடுவோம்… இதுக்கு மேல தங்கனும்ன்னா நம்ம பட்ஜெட் தாங்காது” என்று ரோஷிணி சொல்லிவிட, அது அவளுக்கே தெரியும் என்பதால், மௌனமாய் அவள் சொன்னதை செய்தாள் சங்கவி.
இருவரும் காலை உணவுக்காக அறையை விட்டு வெளியே வந்தபோது சரியாக தன் அறையில் இருந்து வெளியேறினான் ஜேகோப்.
இருவரையும் கண்டதும் அவன் சிநேகமாய் சிரித்து, “குட் மார்னிங்” சொல்ல, சங்கவி கையை பற்றிய ரோஷிணி விறுவிறுவென அவளை இழுத்துக்கொண்டு லிப்டுக்கு ஓடினாள்.
ஜேகோப் ‘பே’ என நின்றான். அவனை பார்த்தால் அத்தனை பயமாகவா இருக்கிறது என்று வேற தோன்ற, தன் மொபைல் கேமெராவில் ஒருமுறை தன்னை சரிபார்த்துக்கொண்டான்.
“லுக்ஸ் குட்!” தன்னைத்தானே பாராட்டியவன் அறையை பூட்டிவிட்டு போகவும் லிப்ட் வரவும் சரியாய் இருந்தது. பெண்கள் இருவரும் உள்ளுக்குள் சென்றுவிட, இவனும் வேகமாய் உள்ளே சென்றான். அவன் போனதுமே லிப்டின் மறுகோடிக்கு வேகமாய் நகர்ந்தனர் இருவரும். அவர்களின் நடவடிக்கை எல்லாம் ‘காஞ்சூரிங்’ படத்தில் வரும் கடைக்குட்டி பையனை போல விநோதமாகவே இருக்க, ஆராய்ச்சியாய் அவர்களை பார்க்கலானான் ஜேகோப்.
“மெதுவா பேசுடி… கேட்டுட போகுது!” சங்கவி கடிய, “ஆமா, கேட்டா மட்டும் அப்படியே புரிஞ்சு கிழிச்சுட்டு தான் மறுவேலை பாரேன்” என்றவள் லிப்ட் நின்றதும் வெளியேற, ஜேகோப்புக்கு சிரிப்பாய் வந்தது.
‘எனக்கு தமிழ் தெரியும்’ என்று சொன்னால் அவள் முழி எப்படி போகும் என்று அறிய ஆவல் தோன்ற அவர்கள் பின்னே சென்றான்.
ரிசெப்ஷன் சென்று அவர்கள் அறையை காலி செய்வதாக கூறி பில்லிற்காக காத்திருந்தனர். இவனும் அங்கே சென்றவன்,
“டூ ஐ ஹேவ் எனி டூரிஸ்ட் கைட் ஃபெசிலிட்டி ஹியர்?” (எனக்கு இங்க ஊர் சுற்றி காட்ட யாரேனும் கிடைப்பார்களா?) என்றான் வரவேற்பாளரிடம்.
அந்த பெண்ணோ, “இப்போதைக்கு யாரும் ஃப்ரீ இல்ல, நீங்க வெளில தான் அரேன்ஜ் பண்ணிக்கணும்” என்று சொல்லிவிட,
“ஐ’யம் நியூ டு இந்தியா! ப்ளீஸ் அரேன்ஜ் எனிஒன், ஜஸ்ட் ஃபார் கப்பில் ஆஃப் டேஸ்… மணி இஸ் நாட் கன்ஸ்ட்ரேயின்ட்”
(நான் இந்தியாவுக்கு புதுசு… ரெண்டு நாளுக்கு யாராவது ஏற்பாடு செஞ்சுக்குடுங்க… பணம் எவ்ளோ ஆனாலும் பிரச்சனை இல்லை) என்று சொல்ல, அவனை காத்திருக்க சொல்லிவிட்டு யாருக்கோ அழைப்புகள் விடுக்க தொடங்கினாள் அவள்.
அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தவன், கையில் ஒரு ஆங்கில மேகசினை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில், “யாருமே அவைலபிள் இல்லையே! இப்ப என்ன பண்றது? வேற லோக்கல் ஆளுங்களை அரேன்ஜ் பண்ணி குடுத்து ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா நமக்கு தான் தலைவலி. என்ன பண்றது?” என ரிஷப்ஷனிஸ்ட் வேறொருவரிடம் சொல்வதும்,
“அதெல்லாம் செஞ்சா மேனேஜ்மென்ட்ல நம்மளை தான் போட்டு வறுப்பானுங்க … நீ யாரும் கிடைக்கல… சாரி சார்ன்னு தன்மையா சொல்லிடு! அவங்க என்னவோ பண்ணிக்கட்டும்” என்றாள் இன்னொருத்தி.
இதெல்லாம் பெண்கள் காதுகளில் விழுந்ததை போலவே ஜேகோப்’பின் காதுகளிலும் விழுந்தது. பார்க்க வெள்ளைக்காரன் போல இருந்ததால் தமிழ் தெரிய வாய்ப்பில்லை என்றெண்ணி அவர்கள் பேசிக்கொள்ள, அவர்கள் பேச்சு புரிந்ததுமே மேகசினை மூடிவிட்டு எழுந்துக்கொண்டான் அவன்.
“சார்.. சாரி! நோ ஒன் இஸ் அவைலபிள்” என்றாள் ரிசெப்ஷனிஸ்ட்.
“இட்ஸ் ஓகே… ஐ கேன் மேனேஜ்” என்றவன் அங்கிருந்த உணவகத்துக்குள் நுழைந்தான். நடந்த சம்பாஷணைகளை உள்வாங்கிக்கொண்டு நின்றிருந்த ரோஷிணியின் தோளை சுரண்டிய சங்கவி, “காசு கட்டிட்டேன்! ப்ரேக்பாஸ்ட் முடிச்சுட்டு போய்க்க சொல்றாங்க… சாப்பிடலாம் வா, பசிக்குது” என்றாள்.
இருவரும் உணவகத்துக்குள் நுழைய, அங்கே கையில் தட்டுடன், ஃபப்பே முறையில் இருந்த உணவுகளை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தான் ஜேகோப்.
அதெல்லாம் அவன் பார்த்தேயிராதது என்று சொல்ல முடியாது. அடிக்கடி அவன் அன்னை செய்வது தான்! ஆனாலும் சில பண்டங்கள் அவனுக்கு வித்தியாசமாய் இருக்க, அதில் எழுதியிருந்த பெயரை படித்து கூகுளில் ரெசிப்பி பார்த்துக்கொண்டிருந்தான்.
அங்கே பணிபுரிபவர் அவன் உதவிக்கு வந்தபோது கூட தானே பார்துக்கொள்வதாய் சொல்லி மறுத்திருந்தான். ஏனோ அவனுக்கு இதெல்லாம் புதுமையாய் சுவாரஸ்யமாய் இருந்தது.
“ஏய் அந்த வெள்ளைக்காரனும் இங்க தான் இருக்கான்” என்ற சங்கவி, ‘ஐயோ திட்டுவாளே’ என்று நாக்கை கடித்துக்கொண்டு ரோஷினியை பார்க்க, அவளோ அந்த வெள்ளைக்காரனை தான் விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னடி அவனையே பாக்குற?”
“எல்லாம் காரணமா தான்” என்றவளும் ஒரு தட்டுடன் அவன் அருகே உணவெடுக்க சென்றாள்.
ஒவ்வொரு பதார்த்தமாய் பார்த்தவன், இட்லியில் ஒன்று, மிளகு பொங்கலில் ஒரு கரண்டி, கொஞ்சம் தேங்காய் சட்னி, சின்ன கிண்ணத்தில் சாம்பார் என எடுத்துவிட்டு, சற்று தள்ளி இருந்த கார சட்னி அருகே போக, தன்னை மீறி, “நோ நோ நோ” என்றிருந்தாள் ரோஷிணி.
அவள் சத்தத்தில் இவன் திடுக்கிட்டு திரும்ப, திருதிருவென முழித்தவள், “அது வேணாம்… காந்தலா இருக்கும்” என்றாள்.
“வாட்?” புரியாமல் அவன் கேட்க, “அதென்ன… காரத்துக்கு இங்க்லீஷ்ல? ஹான்… ஸ்பைஸ்.. ஸ்பைசா இருக்கும். நோ ஃபார் யூ” என்றாள்.
அவள் சொல்ல வந்தது புரிந்துப்போக, “ஹோவ்! தேங்க்ஸ்!” என்றவன், ஒரு நெய் ரோஸ்ட் சொல்லிவிட்டு காலியாய் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டான். இவளும் உணவை எடுத்துக்கொண்டு அவனுக்கு அருகே இருந்த டேபிளில் சென்று அமர, அவள் நடவடிக்கைகளை புரிந்துக்கொள்ள முடியாது அவளுடனே சுற்றினாள் சங்கவி.
ஜேகோப் தன் முன்னிருந்த உணவை ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து தந்தைக்கு அனுப்பிவிட்டு அதை ரசித்து உண்ண ஆரம்பித்தான்.
அவர்களை தவிர அங்கே இன்னும் சொற்பமான ஆட்கள் மட்டுமே இருக்க, சிறிது நேரம் உணவை அளந்துக்கொண்டிருந்த ரோஷிணி ஒரு முடிவுடன் எழுந்து அவனிடம் சென்றாள்.
சங்கவியும் எதற்கென்றே தெரியாமல் அவளுடன் போக, “மே ஐ…” என அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியை தொட்டு காட்டினாள் ரோஷிணி.
அரைமணி நேரம் முன்பு வரை தன்னை பார்க்கும்போதெல்லாம் வறுத்தெடுத்த பெண், இப்போது தன்னிடம் வந்து தானாக பேச, அந்த வியப்புடன் “இயா… ப்ளீஸ்” என்றான் ஜேகோப்.
அவனெதிரே ரோஷிணி அமர, இவருக்கும் இடைப்பட்ட அந்த வட்ட மேசை இருக்கையில் சங்கவி அமர்ந்தாள்.
“நான் ரோஷிணி, ஷி இஸ் சங்கவி” தானாக அறிமுகம் ஆனாள்.
அவன் கண்கள் ‘சங்கவி’யிடம் சில நொடிகள் நிலைத்து மீண்டது.
“ஐ’யம் ஜேகோபியன்”
“என்ன?”
“ஜாக்… ஜேகோபியன்” அவன் மீண்டும் சொல்ல, “ஏன்டி கோமியம் ன்னு எல்லாமா பேர் வைப்பாங்க” என்றாள் சங்கவி. ரோஷிணி எழுந்த சிரிப்பை மறைத்து, “ஜாக் இஸ் ஓகே” என்றாள்.
அவன் சின்ன சிரிப்போடு உணவை தொடர்ந்தான்.
“ம்ம்… வேர் யூ ஆர்?”
“ஹான்?”
“ஃப்ரம்?” என்றவள், கையை விமானம் போல ஓட்டிக்காட்ட, “ஓ! ஐ’யம் ஃப்ரம் ஆஸ்ட்ரேலியா” என்றான் அவன்.
‘ஓ’ என்றவள் உதடு பிதுக்கினாள். அவள் எல்லாம் ஆஸ்திரேலியாவை மேப்பில் கூட கண்டதில்லையே.
அவளை சுரண்டிய சங்கவி, “இப்போ எதுக்குடி இந்த ரசகுல்லா கிட்ட உட்காந்து பேசிட்டு இருக்கோம்?” என்றாள் சின்ன குரலில்.
“எல்லாம் காரணமா தான்” என்றவளோ, “ஒய் யூ கம் ஹியர்? என்ன வொர்க்?” என்றாள் அவனிடம்.
“ஐ வில் ஹெல்ப் யூ பார் சுத்தி பாக்க… அதென்னடி சொல்லுவாங்க? ஹான்… சைட் சீயிங்… யூ கம் வித் மீ” என்றாள்.
ஆச்சர்யமாய் பார்த்த ஜேகோப், “ஆர் யூ டூரிஸ்ட் கைட்?” என்றான்.
‘இல்லை’ என சொல்லப்போன சங்கவியின் காலை மிதித்த ரோஷிணி, “எஸ் எஸ்” என சொல்ல, அதை பற்றி சங்கவியும் “எஸ் எஸ்” என்றாள்.
இருவரையும் ஒருசேர சில நொடிகள் பார்த்தவன் பார்வையில் என்ன இருந்தது என்பதை இரு பெண்களாலும் கண்டுக்கொள்ள முடியவில்லை.
“ஓகே, தென் ஐ’யம் ரெடி! லுக்கிங் பார்வேர்ட் டு விட்னெஸ் தி பியூட்டி ஆஃப் கொடைகனால்”
(ஓகே… அப்போ நான் ரெடி… கொடைக்கானல் அழகை பார்க்க ஆவலா இருக்கேன்)
சங்கவி, “என்னடி சொல்றான்?”
ரோஷிணி, “யாருக்கு புரியுது… நம்ம வாத்தியார் பேசுற இங்க்லீஷே பாதி விளங்காது… இதுல இவன் வாய்ல பீடா போட்டா மாறி கொலகொலன்னு பேசுறான்… என்னத்த புரியுது!?” என்றவள், “எது சொன்னாலும் சிரிச்சுக்கிட்டே மண்டையாட்டு” என்றுவிட,
“நமக்கு எதுக்கு இந்த பொழப்பு?” என்றாள் சங்கவி.
“ம்ம்ம்? வீட்டுல பொய் சொல்லிட்டு சுத்தி பார்க்க வந்து பார்ச காலி பண்ணோம்’ல? அதை திரும்ப ரொப்ப தான்!”
“ஹேவ் யூ டன் யுவர் ப்ரேக்பாஸ்ட்? ஷால் வீ கோ?” என்றான் ஜேகோப்.
(சாப்பிட்டு முடிச்சுட்டீங்களா? போலாமா?)
திருதிருவென முழித்த இருவரும் ஒரு சேர சிரித்துக்கொண்டே மண்டையாட்ட, “ஷால்…வீ….கோ…?” என பொறுமையாய் வாசலை காட்டினான் அவன்.
“ஓ… போலாமான்னு கேக்குறான்” என்ற சங்கவி, “டூ மினிட்ஸ்” என்று தட்டில் இருந்ததை வேகமாய் விழுங்க, ரோஷினியும் அவசரமாய் உண்டுவிட்டு அவனுடன் சென்றாள்.
நடந்து போகையில், “நான் கூட எதுக்குடா இந்த வெள்ளை எலிக்கிட்ட வாண்டடா போய் இவ பேசுறாளேன்னு யோசிச்சேன்! இப்போதானே உன் ப்ளான்னே புரியுது! பலே கில்லாடி நீ!” என்று சங்கவி பாராட்ட,
“ரோஷினியா கொக்கா!? இன்னும் ரெண்டு நாளுக்கு ஜாலியா ஊர சுத்திட்டு நமக்கு வேணுங்குற காசையும் தேத்திக்கிட்டு நல்ல பிள்ளையா வீடு போய் சேருவோம்!” என்றாள். இப்போது தான் இருவருக்குமே நிம்மதியாய் மூச்சு விட வந்தது.
ஆனால், அருகே இருப்பவனுக்கு தமிழ் தெரியும் என்பதை தான் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அவர்கள் பேச்சை கேட்டவன், “யப்பா! என்னா கேடிங்க இதுங்க” என்று தான் நினைத்தான்.
ரிசெப்ஷன் வந்ததும், “நாங்க இன்னைக்கு வெகேட் பண்ணல… இன்னும் ரெண்டு நாளுக்கு இங்க தான்! அதே ரூம்ல கன்டின்யு பண்ணிக்குறோம்! அதுக்கான பில்லை இதோ இவர் அக்கவுன்ட்’ல சேர்த்துடுங்க” என்று சொல்ல, அந்த பெண்ணோ திகைத்துப்போய் ஜேகோபை பார்த்தாள்.
மொபைலில் கவனமாய் இருந்தவன், திடீரென எல்லாரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து, “வாட்?” என்றான். அந்த பெண் ரோஷிணி சொன்னதை அவனிடம் சொல்ல, ‘அடிப்பாவி’ என்ற ஆச்சர்யத்துடன் அவன் இவர்களை நோக்க,
ரோஷிணி கொஞ்சமும் கலங்காமல், “டூரிஸ்ட் கைட் ப்பா! மை செலவு இஸ் யுவர் செலவு! யூ பே அண்ட் கம்! ஆல்ரெடி லேட்டுன்னோ?” என்றவள் சங்கவியை இழுத்துக்கொண்டு வெளியேறினாள்.
அந்த பெண், “சார்?” என தயங்க, இவன், “ஜஸ்ட் டூ இட்” என்றவன், அவர்கள் பின்னே போக, இந்தியா அவனை கொஞ்சகொஞ்சமாய் கவர ஆரம்பித்திருந்தது.