வீட்டுக்குச் செல்லும் போது வினோதினியைப் பற்றிய யோசனையுடன் சென்றான் இன்பா. அவன் மனநிலை புரிந்த கதிரும் அவனை எதுவும் தொந்தரவு செய்ய வில்லை. கதிரும் இன்பாவும் வீட்டுக்குச் செல்லும் போது பார்வதியும் சண்முகநாதனும் வெளியே வீட்டு முற்றத்தில் தான் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைக் கூட கண்டு கொள்ளாமல் இன்பா வீட்டுக்குள் செல்ல பெரியவர்கள் குழம்பிப் போனார்கள். எப்போதும் வந்ததும் அவர்களுடன் அமர்ந்து ஏதாவது வம்பிழுத்து விட்டே உள்ளே செல்வான். அவன் அப்படிச் சென்றதும் அவர்கள் பார்வை கதிரின் பக்கம் திரும்பியது.
அவர்கள் எதுவும் கேட்டு விடுவார்களோ என்று எண்ணிய கதிரும் அவசரமாக உள்ளே செல்லப் போக “டேய் இரு டா”, என்றாள் பார்வதி.
“என்ன அம்மாச்சி?”
“என்ன ஆச்சி இவனுக்கு? கண்டுக்காம போறான்? நீயும் அப்படியே போற?”
“அது வந்து அம்மாச்சி… எனக்கு தெரியலையே. இருங்க கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி எஸ்கேப் ஆகப் பார்த்தான்.
“என்னது உனக்கு தெரியலையா? நீயும் அவனும் கூட்டுக் களவானிங்கன்னு எங்களுக்கு தெரியும் டா பேராண்டி. உனக்கு தெரியாம அவன் ஏதாவது செய்வானா என்ன?”, என்று கேட்டார் சண்முகநாதன்.
அவர்கள் கேள்விக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் திணறினான் கதிர். அவனுக்கு இன்பா மனதில் இருப்பது தெரியும் தான். அவன் இப்போது வினோதினியைப் பற்றிய யோசனையில் இருக்கிறான் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அதை அவன் சொல்லாமல் கதிர் வீட்டில் சொல்ல முடியாதே? அது நியாயமும் இல்லை. அதனால் திருதிருவென்று விழித்தான்.
“என்ன முழிக்கிற? சொல்லு”, என்று பார்வதி கேட்டதும் “விவசாய லோன் தள்ளுபடி உண்டானு பேங்க்க்கு கேக்க போனான் அம்மாச்சி. அங்க அப்படி எந்த ஆர்டரும் வரலை. அரசியல்வாதிங்க சொன்னதை எல்லாம் செய்வாங்காளான்னு நம்பாதீங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம். அதான் ஒரு மாதிரி இருக்கான்”, என்றான்.
“அப்படியா? சரி நீ போய் முகம் கழுவிட்டு வா”, என்று அனுப்பி வைத்தார் பார்வதி.
“அப்பாடா”, என்ற நிம்மதியுடன் அவன் உள்ளே செல்ல பார்வதி ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்.
“என்ன யோசிக்கிற பார்வதி?”, என்று கேட்டார் சண்முகநாதன்.
“நினைச்சது நடக்கலைன்னா முகத்துல கவலை இருக்கும். இல்லை கோபம் இருக்கும். ஆனா இன்பா முகத்தில கனவு தாங்க இருந்துச்சு. கதிரும் மென்னு முழுங்கி தான் பேசுறான். எனக்கு ஏதோ சரியா படலை”
“எனக்கு அப்படித் தோணலை. ஆனா நீயும் காரணம் இல்லாம சொல்லமாட்ட. சரி விடு. என்னைக்கு இருந்தாலும் விஷயம் வெளிய தான் வரணும்?”, என்று சொன்ன சண்முகநாதன் பின் பக்கம் மாட்டுத் தொழுவத்தை பெருக்கிக் கொண்டிருந்த பாமாவைப் பார்த்தார்.
“பாமா, பயலுக வந்துட்டாங்க பாரு. காப்பி போடு”
“இதோ வரேன் மாமா”, என்று சொல்லி விட்டு கை கழுவச் சென்றாள் பாமா.
அறைக்குள் சென்ற இன்பா கட்டிலில் மல்லாந்து படுத்திருக்க அவன் தலையில் நங்கென்று கொட்டினான் கதிர்.
“ஏண்டா கொட்டின?”
“நீ கனவு கண்டுட்டு இருக்க? அங்க அம்மாச்சியும் தாத்தாவும் என்னைக் குடைஞ்சு எடுத்துட்டாங்க”
“ஐயையோ, அவங்களை மறந்துட்டேனே?”
“நீ தான் உன்னையே மறந்துட்டியே மச்சான்”
“சரி விடு, ஏதாவது கேட்டாங்களா?”
“ஆமா, ஏதோ சமாளிச்சேன். ரெண்டு பேரும் பொல்லாதவங்க. கவனமா இரு”
“சரி மாப்பிள்ளை”
“அடுத்து என்ன பண்ணப் போற?”
“என்னன்னா?”
“அந்த பொண்ணுக் கிட்ட பேசிக் கல்யாணம் பண்ணனும்ல?”
“அதுக்குள்ள கல்யாணமா? முதல்ல அவ கிட்ட பேசணும் டா”
“எப்படி பேசப் போற? பேங்க்ல பேச முடியாது. வீட்ல பேச முடியாது. இடைல வச்சு தான் பேசணும்”
“அது எப்படி டா ஒரு பொண்ணை வழி மறைக்கிறது?”
“பின்ன எப்படி அவ கிட்ட பேச முடியும்? சரி முதல்ல என்ன பேசப் போற?”
“முதல்ல அவ என்னைக் காப்பாத்தினதுக்கு நன்றி சொல்லணும்”
“சரி அதெல்லாம் அப்புறம் சொல்லலாம். முதல்ல காப்பி குடிக்க போவோம். முகம் கழுவிட்டு வா. நான் வெளிய போறேன்”, என்று சொல்லி விட்டு அவன் வெளியே செல்ல இன்பா முகம் கழுவச் சென்றான்.
வெளியே வந்த கதிர் எதிரே வந்த இளவரசியைப் பார்க்காமல் மோதி விட்டான். அவள் அப்படியே பின்னே சாயப் பார்க்க “ஏய் அரசி பாத்து”, என்ற படியே அவளைத் தாங்கிப் பிடித்தான்.
விழப் போகும் பயத்தில் அவளும் அவனுடைய சட்டைக் காளரைப் பற்றிய படி அவன் கைக்குள் நின்று விட்டாள். அவள் உடல் நடுங்கியது. தன்னுடைய கைக்குள் உடல் நடுங்க அவள் நிற்பது கதிருக்கு இது வரை புரியாத உணர்வைத் தோற்று வித்தது.
அவளை விலக்காமல் விலக்க தோன்றாமல் அப்படியே நின்றான். அவனிடம் இருந்து விலக வேண்டும் என்று அவளுக்கும் தோன்ற வில்லை. ஒருவர் அணைப்பில் மற்றவர் மெய் மறந்து நிற்க “கதிர், இன்பா ரெண்டு பேரும் காபி குடிக்க வாங்க டா. இளவரசி நீயும் வாடி”, என்று பாமா அழைக்கும் சத்தம் கேட்டதும் தான் அவளை விட்டுவிட்டு விலகி நின்றான்.
தவறு செய்து விட்டோமோ என்று அவன் குற்ற உணர்வில் நிற்க “சாரி”, என்று குரல் கொடுத்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள் இளவரசி. இப்போது கனவில் மிதப்பது போல நின்றான் கதிர். அவன் தோளில் தட்டி அவனை அழைத்துக் கொண்டு வந்தான் இன்பா.
காபி குடிக்கும் போது இருவருமே தங்களின் மன உணர்வுகளை அடக்கிக் கொண்டு மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் முகம் கொஞ்சம் மாறினாலும் கூட பார்வதியும் சண்முகநாதனும் கண்டு கொள்வார்கள் என்பதால் கவனமாக இருந்தார்கள். அவர்கள் சாதாரணமாக இருக்கவும் பெரியவர்களும் எதுவும் கண்டு கொள்ள வில்லை.
அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வினோதினிக்கு தலை வலி உயிர் போனது. புதிதாக பார்த்த வேலையால் அவளது மூளை பயங்கரமாக சூடாகி இருந்தது. எப்போதடா படுக்கையில் விழுவோம் என்று அவள் உடல் ஏங்கியது. அதற்கு முன் ஒரு டீ குடித்தால் தேவலை என்று எண்ணிக் கொண்டு அவளுடைய அறைக்கு வந்தவள் சேலையை கழட்டி விட்டு வேறு உடை மாற்றினாள்.
தன் முகம் லேசாக சுணங்கினால் கூட கண்டு கொண்டு அடுத்த நொடி இஞ்சி தட்டிப் போட்ட டீயைக் கொடுக்கும் தேவியை அவள் மனம் அதிகம் தேடியது.
உடை மாற்றி விட்டு அன்னையை போனில் அழைத்தாள். போனை எடுத்தது அணு தான்.
“அக்கா”
“அணு குட்டி, என்ன பண்ணுற?”
“டியூஷன் கிளம்பிட்டு இருக்கேன் கா. நீ எப்படி இருக்க? நீ இல்லாம இங்க சரி போர் தெரியுமா?”
“என்ன டி பண்ணுறது? எனக்கு மட்டும் உங்களை விட்டுட்டு இங்க வந்து இருக்கணும்னு ஆசையா? எல்லாம் விதி”
“இங்க டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துருக்கா”
“வேலைக்கு சேந்த உடனே அதைப் பத்தி பேச முடியாது பாப்பா”
“சரிக்கா, நான் அம்மா கிட்ட கொடுக்குறேன். நான் கிளம்பனும்”
“சரி நல்லா படி”, என்று அவள் சொல்லி முடித்ததும் போன் தேவி கைக்கு மாறியது.
“எப்படி டா இருக்க?”, என்று கேட்டாள் தேவி.
“ஒரு நாள்ல எதுவும் மாறலை மா. அப்படியே தான் இருக்கேன்”
“வேலை எப்படி போச்சு வினோதினி? கூட வேலை பாக்குறவங்க எல்லாம் எப்படி?”
“வேலை நல்லா தான் போச்சு மா. எல்லாரும் நல்லா பழகுறாங்க. தெரியாததை எல்லாம் பொறுமையா சொல்லித் தராங்க”
“ரொம்ப சந்தோஷம். சரி டீ குடிச்சியா?”
“இது என்ன நம்ம வீடா? நினைச்ச உடனே குடிக்க? பயங்கரமா தலை வலிக்குது. டீ குடிச்சா தான் சரியாகும்”
“விஜி கிட்ட சொல்லு. அவ போட்டுத் தருவா”
“சரி மா, நான் பாக்குறேன். நைட் பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்தவள் கீழே சென்றாள்.
“வினுமா”, என்ற படி ரிஷி வந்து அவளது காலைக் கட்டிக் கொள்ள அவனைத் தூக்கிக் கொஞ்சிய படியே விஜியைத் தேடிச் சென்றாள்.
அடுப்படியில் விஜி பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருக்க அவள் பின்னால் நின்று அவளைக் கட்டி அணைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான் ரவி.
அந்த காட்சியைப் பார்த்த வினோதினிக்கு என்னவோ போல இருந்தது. அவசரமாக அந்த இடத்தில் இருந்து ரிஷியை தூக்கிய படி அகன்று விட்டாள்.
மீண்டும் அவள் விஜியை தேடி எல்லாம் செல்ல வில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டுக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒரு கல்லைப் போட்டிருந்தார்கள்.
அதில் அமர்ந்தவள் ரிஷியிடம் பேசிக் கொண்டிருந்தாள். இதமான வேப்ப மரத்தடிக் காற்றும் மழலையின் பேச்சும் அவள் தலை வலியை ஓட்டியது. கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்து தான் விஜி அவளைத் தேடி வந்தாள்.