ஜேகோப் பட்டு வேஷ்டி சட்டையில் சம்மங்கி மாலையோடு மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்ல சிரமப்பட்டுக்கொண்டிருந்தான். அந்த மேளமும் நாதஸ்வரமும் வேறு காதை கிழிக்க,
“அடப்பாவி… வாசிக்குறதே கல்யாணத்துக்கு தான்! ஒழுங்கா மந்திரத்தை சொல்லு” என்று அதட்ட, “அவர் என்னவோ கசமுசங்குறாரு, ஒண்ணுமே கேட்கவும் மாட்டேங்குது!” பள்ளி சென்ற குழந்தை போல வந்து புகார் கடிதம் வாசிக்க, “சும்மா இர்ராஆஆ” என அவனை அருகே இருந்து மேய்த்துக்கொண்டிருந்தார் அவர்.
பரமேஸ்வரன் அந்த மண்டத்தில் வந்து குவிந்த ஆட்களை கவனிக்கவே பெரும்பாடுபட்டார். வந்தவரை கவனித்து சாப்பிட அனுப்பி… பின் அடிக்கடி மேடையில் சாங்கியங்களுக்கு தலைக்காட்டி என அவர் அல்லாட, ரிச்சர்ட்டையும் அவர் விடவில்லை.
‘இதான் சம்மந்தி… என் தங்கச்சி புருஷன்… வெளிநாட்டுல டாக்டரு’ என்று பீத்தல் தாளவில்லை.
அதில் சிலர், மாப்பிள்ளை என்ன உத்தியோகம்? என்று வினவ, திருதிருவென விழித்தார் அவர்.
அன்று பரமுவிடம் என்னை பற்றி என்ன தெரியும்? என்று கத்தியவன், ரிச்சர்டிடமும், தேவகியிடமும் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டான், என்னைப்பற்றிய எந்த தகவலையும் குடுக்கக்கூடாது என்று!!!
கேட்பவரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கட்டும் என அவன் நினைக்க, அதே தான் நடந்தது.
பத்திரிக்கையில் பெயருக்கு பின்னே படிப்பை போடலாம் என கேட்டதற்கு கூட ‘தேவையில்லை’ என்றுவிட்டானே!!!
கேட்பவரிடம் எல்லாம் அசிங்கப்பட வைக்குறானே என தூரத்தில் இருந்தே அவ்வப்போது ஜேகோபை முறைத்துக்கொண்டிருந்தார் பரமேஸ்வரன்.
முதல் நாள் இரவு சிறு வரவேற்ப்பு போல பெண் மாப்பிள்ளையை நிற்க வைத்து செய்யலாம் என அவர் சொன்னதற்கும் முடியவே முடியாது என அறைக்குள் இருந்துக்கொண்டு கதவை திறக்க மாட்டேன் என அடம் பிடித்தான்.
அவர் மிரட்டியதற்கு கூட, “தாலி கட்டலன்னா தானே போலீசு… ரிசெப்ஷன்’க்கு நிக்கலைன்னா கூடவா போலீசு?” என உள்ளிருந்து அவன் நக்கலடிக்க, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரிச்சர்ட் சொன்னால் கேட்ப்பான் என தேவகி சொன்னபோது, ‘எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை’ என அவரும் நழுவிக்கொண்டார்.
வேறுவழியின்றி, ‘தாலி கட்டினால் சரி!’ என விட்டு, இப்போது சமத்தாக மணமேடையில் இருக்கிறான்.
சங்கவி வந்து சம்பிரதாயம் முடித்து மறுவேலை வாங்கிக்கொண்டு ரோஷினியோடு அறைக்குள் நுழைந்தாள். உடன் வருவதாய் சொன்ன யாரையும் அவள் விடவில்லை. ஒரு சில நிமிடங்களில் அறைக்குள் இருந்து ரோஷிணி வெளிவர, “சங்கவி ரெடியா?” என்றார் ருக்மணி.
மகளுக்கு புடவையே கட்டத்தெரியாது என்பது அவருக்கு தெரியுமே! காலேஜுக்கு எப்போதாவது கட்ட வேண்டும் என்றாலே, அவளுக்கு ரோஷிணி தான் கட்டிவிடுவாள். அப்படி இருக்க, இப்போது யாரையும் உள்ளே விடாமல் தான் மட்டும் கட்டிக்கொள்வதென்றால்!?
எதையும் யோசிக்காமல் வேறு வேலைகளை பார்த்தார்.
ஐந்து நிமிடங்கள் போனது.
“பொண்ணை வர சொல்லுங்கோ!” என்ற ஆஸ்த்தான டயலாகை சொல்லியிருந்தார் ஐயர்.
தேவியும் ருக்மணியும் சென்று பெண்ணின் அறைக்கதவை தட்ட…. தட்ட…. தட்ட…. தட்டிக்கொண்டு தான் இருந்தனர். திறக்கும் வழியை காணோம்!
பதட்டமான இருவரும் ஆனவரை முயற்சிக்க, திறக்க முடியவில்லை. உள்ளிருந்து சப்தமும் வரவில்லை.
பயந்துப்போய், “ஏங்க, இங்க வாங்களேன்!” என்று அழைத்தார் ருக்மணி. ஜேகோப் அருகே இருந்தவர் சென்று பார்க்க, விஷயம் சொல்லப்பட்டதும் தீயென முறைத்தார் அவர்.
பின், அவர் படபடவென கதவை தட்ட அது உள்ளிருந்து இரண்டு தாழ்ப்பாள்கள் போடப்பட்டு நன்றாக பூட்டியிருந்தது. வேறு வழியில்லை. உடைக்க தான் வேண்டும் என்று முடிவெடுத்து அதை செய்ய மண்டப ஆட்களின் சம்மதத்தின் பேரில் வேளையில் இறங்க, சிறிது நேரத்திலேயே கதவு திறக்கப்பட்டது.
ஜேகோபை மணமேடையில் இருந்து எழுந்துக்கொள்ள கூடாது என்று கூறி தேவகி பிடித்துவைத்திருந்தார். அவருக்குமே ‘என்னவோ ஏதோ?’ என்ற பதட்டம். ஆனால், ரிச்சர்ட், ‘இதான் உன் பிளான்’னா?’ என்பதை போல கண்ணடித்தார். ஆனால், ஜேகோப், தன் பால் வடியும் முகத்தில் எந்தவொரு ரியாக்ஷனையும் காட்டவில்லை.
கதவை திறந்துக்கொண்டு உள்ளேப்போக, அங்கே ஜன்னல் கம்பிகள் அகற்றப்பட்டு, அதன் வழியாக சங்கவி வெளியே சென்றுவிட்டது தெரிந்தது.
மகள் இல்லை என்றதுமே தளர்ந்து சரிந்துவிட்டார் பரமேஸ்வரன்.
யாராலும் சங்கவி இதை செய்திருப்பாள் என நம்பவே முடியவில்லை.
“ஆமா… அவர் என் அத்தை பையன்!” சங்கவி சொல்ல, ஜேகோப்’புக்கு ஒன்றுமே புரியவில்லை.
“அதெப்படி ரோஷிணி ப்ரதர் உனக்கு மாமா?” அவன் வினவ, “அவர் ரோஷிணிக்கே ‘அண்ணன்’ கிடையாது… அவளுக்கும் ‘மாமா’ தான்! இந்த நாய் தான் அண்ணன்னு சொல்லிட்டு திரியுது!” கடுப்பாக சொன்னாள் சங்கவி.
அப்போதும் தெளியாத ஜேகோப், “இல்ல… புரியல!” என்று சொல்ல,
கீழே இருந்த ரோஷிணி, “என் அப்பாவோட தங்கச்சி பையன் தான் திரவியன். அவன் பொறந்து கொஞ்ச நாள்ல அவன் அம்மா தவறிட்டாங்க… அவன் அப்பாவும் அடுத்து போயிட்டாரு… தனியா இருந்தவனை அப்பா தான் கூட்டிட்டு வந்து வளர்த்தாரு… சின்னதுல இருந்து ஒரே வீட்டுல வளர்ந்ததால நான் ‘அண்ணன்’ன்னு சொல்லி பழகிட்டேன்…! அவனும் என் அம்மா அப்பாவை அத்தை மாமா’ன்னு சொல்ல மாட்டான்!” என்றாள்.
“ஓஓஓ!” என்ற ஜேகோப்புக்கு திரவியன் தன்மீது கொட்டும் கோபக்கனலின் காரணம் லேசாக விளங்கியது.
“அப்போ நீ உன் வீட்டுல பேசலாம்’ல? பையா’வை பிடிச்சுருக்கு’ன்னு சொல்லிட்டா என்னை விட்டுடுவாங்களே!” ஜேகோப் எளிதாக சொல்ல, “இல்ல.. முடியாது” என்றாள் சங்கவி.
“வொய்!?”
“நான் நாலு வருஷமா அவர்கிட்ட என் லவ்வ சொல்லிட்டே இருக்கேன்… ஆனா, அவர் ஒத்துக்கவே மாட்டேங்குறாரு!” என்று அழுக,
மறுபடியும், “வொய்..ஈஈ?” என்றான்.
“அது… ரோஷிணி அவனை அண்ணனா பாக்குறாளாம்… இப்ப நான் அவரை கல்யாணம் பண்ணா ஊருல தப்பா பேசுவாங்களாம்! அதுமில்லாம, சத்தியன் சித்தப்பா’க்கு பிடிக்காததை அவர் செய்யமாட்டாராம்!”
“உங்க அப்பா’க்கு சங்கவியை திரவியனுக்கு கொடுத்தா என்ன ப்ரோப்லம்?” ஜேகோப் ரோஷிணியை கேட்க, ‘தெரியல’ என உதடு பிதுக்கினாள் ரோஷிணி.
சங்கவியோ, “அவருக்கு பிரச்சனையான்னு தெரியாது… ஆனா, மாமா கேட்டு, ‘என்னடா நீ, இப்டி செஞ்சுட்ட? உன்னை நான் இதுக்கு தான் வளர்த்தேனா? அப்போ என் பொண்ணையும் நீ முறைப்பொண்ணா தான் பார்த்தியா?ன்னு அவர் கேட்டுட்டா இவரால தாங்க முடியாதாம்!” என்று சொல்ல, அங்கே கணத்த அமைதி.
அநாதரவாய் நின்றவனை இத்தனை தூரம் வளர்த்துவிட்டவர் மேல் இருக்கும் அளவுக்கடந்த மரியாதை, நன்றியுணர்வு அவனை தடுக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது அவர்களால்.
ரோஷிணி, “அப்போ என்ன பண்றது?” என்றிட, சிறிது நேரம் யோசித்தான் ஜேகோப்.
“பின்னே, இதெல்லாம் நடக்குற மாதிரி நடக்கட்டும்… உன் ஆளுக்கு சொல்லி புரியவைக்க முடியாது… ஏதாது ஷாக் வச்சா தான் உண்டு!” என்று சொல்ல, சங்கவி, “என்ன பண்ணனும்?” என்றாள் ஆர்வமாய்.
“ஒன்னும் பண்ணாத! நான் சொல்லும்போது மொத்தமா பண்ணு!”
“இது நடக்கும் தானே?” அவன் தோள்வளைவியில் சாய்ந்துக்கொண்டு அவள் கேட்க, “கண்டிப்பா நடக்கும்… நான் இருக்கேன்ல?” என்று ஆறுதல் சொல்லி, அதன்படி திட்டத்தை வரைந்தான் ஜேகோப்.
அர்த்த பழைய திட்டம் தான். ஆனாலும்… காக்கைக்கும் தன் திட்டம், பொன்திட்டம்!
லெட்டரை கையில் வைத்துக்கொண்டு உறைந்துப்போய் நின்றார் சத்தியன்.
‘திரவியனா? அவனா?’ அவர் அப்படியே நிற்க, “வாசிங்க’ப்பா” என்று ஊக்கினாள் ரோஷிணி.
ஸ்மரணை வந்தவர்,
“அன்புள்ள அப்பாவுக்கு, திரவியன் எழுதுவது…
என்னை மன்னிச்சுடுங்க’ப்பா! எனக்கு வேற வழி தெரியல! நானும் எவ்வளவோ வேண்டாம்ன்னு சொல்லிபார்த்தேன்… ஆனா, அவ கேட்கலை!
நாலு வருஷமா சங்கவி சொல்லிட்டு இருக்கா, என்னை காதலிக்குறேன்னு! நான் சரின்னு சொல்லவே இல்லை!
ஆனா, நேத்து நைட், கையில கத்தியோட வந்து என்னை காதலிக்குறேன்னு சொல்லுங்க, இல்லனா கையை வெட்டிப்பேன்னு அவ மிரட்டுனப்போ, என்னால அதுக்கு மேல நடிக்க முடியல’ப்பா!
எனக்கு அவமேல உண்மையாவே காதல் இல்லன்னா, அவ மிரட்டுனதுக்கு ரெண்டு அறை விட்டு உங்க முன்ன அழைச்சுட்டு வந்துருப்பேன்! ஆனா, மனசு முழுக்க அவ தான் இருக்கா!
என்னைக்காது ஒரு நாள் தைரியமா உங்ககிட்ட பேசி சம்மதம் வாங்கி அவளை கட்டிக்கனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்! அப்படியொரு நாள் வரவே வராதுங்குற மாதிரி அவ கல்யாண சேதி தான் என் காதுக்கு வந்துச்சு!
மனசு முழுக்க அவளை வச்சுக்கிட்டு அவ கல்யாணத்துக்கு நானே வேலை செஞ்சுட்டு இருந்தேன்! கொடுமை’ப்பா அது!
உரிமை இருந்து கூட கேட்க தயக்கம்! இப்போ எல்லாம் கையை மீறிடுச்சு! பரமு மாமா கண்டிப்பா எனக்கு சங்கவியை கட்டி வைக்க மாட்டாரு! காலம் முழுக்க ஒருத்தரை ஒருத்தர் மனசுல சுமந்துக்கிட்டு இன்னொருத்தரோட போலியா ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு, என்ன ஆனாலும் சரின்னு மனசை தேத்திக்கிட்டு, வர கஷ்டத்தை ஒண்ணா அனுபவிப்போம்ன்னு தான் கிளம்பிட்டோம்!
கண்டிப்பா உங்களுக்கு என் மேல கோபம் இருக்கும்! அது நியாயம் தான்! ஆனா, எங்களுக்கு வேற வழி தெரியல… புரிஞ்சுக்கோங்க!
ஒன்னே ஒன்னு மட்டும் தெளிவா சொல்லிக்குறேன்! ரோஷிணி எனக்கு தங்கச்சி தான்! நான் அவளை தங்கச்சியா மட்டும் தான் பாத்தேன்! நம்புங்கப்பா!
இதை நீ படிக்கும்போது உங்களை விட்டும், உங்க மனசை விட்டும் நாங்க தூரமா போயிருப்போம்! என்னைக்காது ஒருநாள் உங்களுக்கு என்னை மன்னிச்சு ஏத்துக்கனும்ன்னு தோணினா, என் நம்பருக்கு கூப்பிடுங்க!
நன்றிகளுடன்…
திரவியன்-சங்கவி!
படித்து முடித்தார் சத்தியநாதன். அங்கே ரோஷினியை தவிர அனைவருமே சிலைப்போல உறைந்து நின்றிருந்தனர்.
அதற்குமேல் அவர்களை அப்படியே இருக்க விடாமல், ஆட்கள் வந்து விசாரிக்க ஆரம்பிக்க, பரமுவை அழைத்துக்கொண்டு வெளியே வந்த சத்தியநாதன், “மன்னிச்சுடுங்க! பொண்ணுக்கு விருப்பம் இல்லை! கல்யாணம் நின்னுடுச்சு!” என்று கைகூப்ப, தேவகிக்கு உண்மையில் கோபம், ஆத்திரம் எல்லாம் வர வேண்டும். ஆனால், அவருக்கு அப்போது தான் ஏதோ சுழலில் இருந்து தப்பியதை போல ஒரு விடுதலை.
குனிந்து, “டேய், பொண்ணே ஓடிட்டா… நீ எஸ்கேப்” என்று ஜேகோபிடம் சொல்ல, அவன் அப்படியே இருந்தான்.
வந்தர்களிடம் மிகப்பெரிய சலசலப்பு! ஆளுக்கு ஒருமாதிரி வாயில் வந்ததை பேச, வீரைய்யன் ஜேகோபை தான் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த பக்கம் ரோஷினியை பார்க்க இருவரது நிதானமும் அவரை கவனிக்க வைத்தது.
கல்யாணத்திற்க்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு வந்து ஆசையுடன் அமர்ந்த கமலம், ‘பேத்தி சென்றுவிட்டாள்’ என்பதைக்கேட்டு திகிலடைய, வீரைய்யன் தன் சந்தேகத்தை அவரிடம் பகிர்ந்து சற்று ஆசுவாசமாக்கினார்.
கமலத்துக்கு இருவரையும் பார்க்க ஏதோ திருட்டுத்தனம் செய்வதை போல இருந்தது. அதை மெய்ப்பிக்கும்படி, தேவகி, ரிச்சர்டிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்த பரமுவை பார்த்து,
“இது என்ன சீரியலா? அக்கா போனா தங்கச்சியை கட்டுற மாதிரி செய்ய?” சொல்லாமலே சீனை புரிந்து பர்பார்ஃம் செய்தார் தேவகி.
“ஹான்? இவ்ளோ நாளும் சீரியல் ஸ்க்ரிப்ட் தானே போச்சு! இப்ப மட்டும் என்ன? கிளைமேக்ஸும் அப்படியே இருக்கட்டும்!” என்றான் அவன்.
“அதுக்காக? இப்போ இன்னொரு பொண்ணுக்கு எங்கடா போறது?” என்றவர் தேவியை பார்த்துவிட்டு, பிறகு ரோஷினியை பார்க்க, தேவிக்கு புரிந்தது. அவர் நேராக சத்தியனிடம் சென்று காதை கடித்தார்.
சில நொடிகள் அப்படியே நின்ற சத்தியன், பின்னே, “ரோஷிணி… இங்க வா!” என்க, ‘எப்போ? எப்போ?’ என்று இருந்தவள் உடனே ஓடி வந்தாள்.
“சொந்த பந்தம் எல்லாம் கூடி நிக்குது… சங்கவி இப்படி நம்மளை அசிங்கப்படுத்திட்டு போனது உனக்கு வருத்தமா தான் இருக்கும்ன்னு தெரியும்!” என்றிட, “ஆமா’ப்பா!” என்று மூக்கை உறிஞ்சினாள் அவள்.
“இப்போ நம்ம குடும்ப கவுரவம் உன் கைல இருக்கு”
“என்னப்பா சொல்றீங்க?”
“ஆமா… நீ பப்பூ’வை கட்டிக்கணும்!”
“அப்பா..!” நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தவள், “ப்பா? நான் எப்படி’ப்பா?” என்றாள் தவிப்பாய்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பரமு, ரோஷிணியிடம் வந்து, “அம்மாடி, நம்ம கவுரவத்தை காப்பாத்தும்மா! மாட்டேன்னு சொல்லிடாத! உன்னை கெஞ்சி கேட்குறேன்” என கையை பிடிக்க, அப்படியே யோசிப்பதை போல சில நொடிகள் சுற்றும் முற்றும் பார்த்தவள்,
“சரி பெரியப்பா! உங்களுக்காக ஒத்துக்குறேன்!” என்றதும், எல்லோர் உடலிலும் உற்சாகம் ஒட்டிக்கொண்டது. நின்றுப்போன மேளதாளங்கள் மீண்டும் ஆரம்பிக்க, கழுத்தில் மாலையோடு ஜேகோப் அருகில் வந்து அவன் தோளுரச அமர்ந்தாள் ரோஷிணி.
அவள் தோளில் யாரும் அறியாமல் இடித்தவன், “உப்ப்… பைனலி…!” என்றான் களிப்புடன்.
அவளும் வெட்கத்தையும் சிரிப்பையும் ஒருசேர மறைத்து, “சென்னை கிளம்பிருப்பாங்களா?” என்று கேட்க,
“கார்’ல தானே போறாங்க… போயிருப்பாங்க!” என்றவன் இப்போது உற்சாகமாய் மந்திரங்களை உச்சரிக்க முயன்றான்.
கடைசி ஐந்து நிமிடங்களே மீதமிருக்க, ஐயர் கொடுத்த பொன்சரடை ரோஷிணியின் கழுத்தில் அணிவித்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி, நெற்றியில் அழுத்தமாய் முத்தம் வைக்க, பார்த்துக்கொண்டிருந்த வாயெல்லாம் ‘பே’ என பிளந்தது.