ஜேகோப் தன் ஹோட்டல் அறையில் முடங்கிக்கொண்டான். இரவு மணி பத்தை தாண்டி விட்டது. அவனால் கொஞ்சமும் இரு பெண்களின் நடவடிக்கையை ஜீரனித்துக்கொள்ள முடியவில்லை. அதிலும் ரோஷிணியின் ஏமாற்று வேலையை நினைத்தாலே கோபம் அவன் இயல்பை மீறி வெளி வந்தது.
எப்படி அவளால் இத்தனை சுலபமாய் ஒருவனை ஏமாற்ற முடிந்தது. இத்தனைக்கும் அவன் இந்த நாட்டுக்கே புதியவன் எனும்போது அவனை ஏமாற்றிய அவள் நடவடிக்கை அவனை வெகுவாய் தாக்க, எங்கே தன் கோபத்தை கொட்டிவிடுவோமோ என்றெண்ணி அத்தோடு தனக்கு சுற்றிப்பார்க்கும் எண்ணம் இல்லை என சொல்லிவிட்டு அறைக்கே திரும்பிவிட்டான்.
எட்டாயிரத்தை தேற்றிவிட்டதாலோ என்னவோ பெண்களும் அவனை விட்டுவிட்டனர்.
ஆரம்பத்தில் தன் மாமன் மகள் என்று தெரிந்ததும் அவர்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையலாம் என்று தான் நினைத்தான். அதிலும் அவர்கள் இவனை யாரென தெரியாமல் அவர்களுக்குள் பேசிக்கொள்வதை கேட்க சுவாரஸ்யமாய் இருக்க இவனும் சற்று விளையாடி பார்க்க நினைத்தான். எப்படியும் கிளம்பும்போது அவர்களிடம் உண்மையை சொல்லி உதவி கேட்க தானே வேண்டும்? அதுவரை அவர்கள் விளையாட்டுகளை ரசிப்போம் என்ற மனநிலையில் இருந்தவனை அதீத எரிச்சலுக்கு உள்ளாக்கியது ரோஷிணியின் ஏமாற்று வேலை.
அதே நினைப்பில் படுத்திருந்தவனின் அலைபேசி சத்தம் போட்டது. அழைப்பது ‘தேவகி’ என்றதும் இன்னுமே கோபம் கூடியது.
முதல் நாள் இரவு அவரிடம் பேசியதும் நினைவு வந்தது.
“மாம்மி… உங்க அண்ணன் பொண்ணு பேரு என்ன?”
“சங்கவி!”
“ச..ங்…க…வி” மெதுவாய் அவன் சொல்லிப்பார்க்க, “எதுக்கு டா கேக்குற?” என்றார் தேவகி. அவர் குரலில் இருந்த ஆர்வம் அவனுக்கு நன்றாக புரிய, “உங்க பிரண்ட் பொண்ணு தானே இந்த போட்டோ’ல சங்கவி பக்கத்துல இருக்குறது?” என்றான் அவர் அனுப்பியதை பார்த்துக்கொண்டே.
“மாம்! எனக்கு நல்லா தெரியும்… அது இவங்க தான்! எனக்கு எதிர் ரூம்ல தான் இருக்காங்க”
“என்னடா சொல்ற?” என திகைத்தவர், “ஒருவேளை குடும்பமா வந்துருக்காங்களோ?” என தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது அவருக்கே தெரியும்!
“ரெண்டே பேர் தான் இருக்காங்க மாம்! வேற யாரும் இருக்குற மாதிரி தெரியல!”
ஜேகோப் சொன்ன செய்தியில் தேவகிக்கு கவலை பிடித்துக்கொண்டது. ஒருக்கால் இந்த காதல் கீதல் என கிளம்பி வந்திருப்பார்களோ? என தோன்ற, தான் செய்த போது தெய்வீகமாய், சரியாய் தெரிந்த ஒன்று, மற்றொருவர் செய்தபோது பெரும் குற்றமாய் தெரிந்தது.
“நான் ரோஷிணி அம்மாட்ட பேசுறேன்!” என அழைப்பை துண்டிக்கப்போனவரை, “மாம்…மாம்… எதுவும் சொல்லாதீங்க அவங்களுக்கு… இவங்க என்ன ப்ளான்’ல இங்க இருக்காங்கன்னு கூட தெரியாம நம்ம எதாவது சொல்லி அது இஸ்ஸூ ஆகிட கூடாது” என்றவனிடம் அரைமனதுடன் தலையாட்டிவிட்டு தன் உறவுத்தோழி தேவிக்கு அழைத்தார் தேவகி.
அவரிடம் பொதுவாக பேசிவிட்டு ரோஷினியை பற்றி விசாரிக்க, இரு பெண்களும் கல்லூரிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளதாக அவர் சொல்ல, துவண்டு போனார் தேவகி. அவரிடம் ஒன்றும் சொல்லாமல் வைத்தவர், ஜேகோப்’புக்கு அழைத்து எல்லாம் சொல்ல,
“ஓ!” என விஷயத்தை உள்வாங்கினான்.
“நான் உண்மையை சொல்லிடவா தேவிக்கிட்ட?”
“நோ மாம்! அவசரப்படாதீங்க! நான் நாளைக்கு பேசுறேன் அவங்கக்கிட்ட!”
“தங்கமான பொண்ணுங்கடா, இப்படி செய்வாங்கன்னு நினைக்கல!”
அவர் குரல் கலங்கவே, “மாம்! நான் தான் இருக்கேன்ல? ஒன்னும் ராங்கா போகாது! ஐ வில் டேக் கேர் ஆஃப் தெம்!” என்றான்.
அவன் அருகே இருக்கும் சிறு தைரியத்தில் அமைதியானார் தேவகி.
மறுநாள் அவன் அவர்களிடம் பேச நேரம் பார்த்து காத்திருக்க, அவனை தேடி வந்த இருவரும், ‘டூரிஸ்ட் கைட்’ என்று சொல்லி பேச, அதிலும் அவனுக்கு தமிழ் தெரியாது என்றெண்ணி ஏதேதோ பேச, இவனுக்கு சுவாரஸ்யம் கூடிப்போனது. உடனே தேவகிக்கு அழைத்தவன் இவர்கள் பேசியதை சொல்ல, அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
“தங்கப்பிள்ளைங்க ஏன்டா இப்படி பண்னணும்?” என்று அவனிடமே கேட்க, “வீட்டுக்கு தெரியாம பிக்னிக் வந்துட்டாங்க! இப்போ மணி ப்ரோப்ளம்! அதுக்கு இப்படி பண்றாங்க” என்றான் அவனுக்கு புரிந்ததைக்கொண்டு.
“ப்ச்! கூண்டுக்குள்ள அடிச்சு வச்ச மாறி வச்சுருந்தா இப்படி தான் கூண்டை உடைச்சுட்டு ஓட தோணும்! இதெல்லாம் எப்போதான் என் வீட்டு ஆளுங்க புரிஞ்சுப்பாங்களோ?” அவர் புலம்ப, “எனக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சு என் முன்னாடியே என்னென்னவோ பேசுறாங்க மாம்! செம ஃபன்!” என்றான்.
“டேய், நீ யாரு என்னன்னு சொல்லிடு தங்கங்கக்கிட்ட”
“சொல்றேன் சொல்றேன்! இன்னைக்கு ஒரு நாள் என்னை என்ன செய்றாங்கன்னு பார்த்து என்ஜாய் பண்ணிட்டு சொல்றேன்!” என்றவன் தேவகி மறுத்து பேசும்முன் அழைப்பை நிறுத்திவிட்டு அவர்களுடன் ஊர் சுற்ற கிளம்பியிருந்தான்.
காலையில் அவன் இருந்த மனநிலைக்கு அப்படியே எதிர்ப்பதமாய் இருந்தது இப்போதைய அவனது மனநிலை.
இதில் தேவகி வேறு மீண்டும் அழைக்க, அவரது ‘தங்கம்’ என்ற விளிப்பு காதில் ஒலித்தது.
“பப்பூ… இந்தியா எப்படி இருக்கு? என் தங்கக்குட்டிங்க எப்டி இருக்கு? நீதான் என் பையன்னு சொல்லிட்டியா? எப்போ வீட்டுக்கு போகப்போற?” எடுத்ததுமே அடுக்கடுக்காய் அவர் தொடுக்க, பக்கத்தில், “கூல் டேவ், லெட் ஹிம் டாக்” என ரிச்சர்ட் சொல்வது இவனுக்கு கேட்டது.
“டோன்ட் டம்ப் மை எக்சைட்மென்ட் ரிச்சர்ட்…எனக்கு இங்க இருக்கவே முடியல! எப்போ எல்லாம் சரியாகி ஊருக்கு போய் எல்லாரையும் பார்ப்போம்ன்னு ஆவலா இருக்கு” ரிச்சர்டுக்கு பதில் சொன்னவர்,
“பப்பூ? எல்லாம் ஓகே தானே? தங்கக்குட்டிங்க எங்க இருக்காங்க?” என்றதும்,
“ஸ்டாப் கால் தெம் தங்கம் மாம்மி” என கடுப்படித்தான் இவன்.
“நான் அவங்களை தங்கம்ன்னு கொஞ்சுறது என் பப்பூக்குட்டிக்கு பொறாமையா இருக்கு போலயே!”
“ரிச்சர்ட், உங்க பையன் ஒரே நாள்ல எங்க ஊரு பையனா மாறிட்டான்… எப்படி பேசுறான் பாருங்களேன்” அவர் இன்னமும் சிரிக்க, “மாம், ஐ’யம் சீரியஸ் மாம்!” என்றவனின் குரல் பேதத்தை உணர்ந்து என்ன நடந்தது என கேட்டார் அவர். அவனும் அவன் ‘தங்கங்களிடம்’ ஏமாந்துப்போன… இல்லை இல்லை… ஏமாற்றப்பட்ட கதையை சொல்ல, அதை கேட்டவர் முன்னர் கைவிட்ட சிரிப்பை இன்னும் பலமாய் கையில் எடுக்க, இங்கே ஜேகோப்’பிற்க்கு பிபி ஏறியது.
“ஸ்டாப் இட் மாம்!”
“போடா லூசு! எவனாது ஒரு க்ளாஸ் ஜூஸுக்கு எட்டாயிரம் குடுப்பானா?”
“நான் குடுத்தேனே!”
“அதுக்கு தான் சிரிக்குறேன்! எந்த அளவுக்கு சாமர்த்தியமா உன்னை ஏமாத்தி காசு வாங்கிட்டு போயிருக்காங்க பாரு!”
“மாம், தட்ஸ் நாட் எ குட் ஒன் டு அப்ரீஷியேட்…” (அது ஒன்னும் பாராட்ட தகுந்த விஷயம் இல்ல)
“அப்கோர்ஸ்! அவங்க செஞ்சது தப்பு தான்! ஆனா உன்மேலயும் தப்பு இருக்கு! எதுக்கு நீ அவங்க கேட்டதும் காசு குடுத்த? உனக்கு தமிழ் நல்லா தெரியும் தானே? நீ அவங்கக்கிட்ட உனக்கு தமிழ் தெரிஞ்சமாதிரி காட்டிருந்தா கூட போதும்! இந்த லாஸ் உனக்கு ஆகிருக்காது!”
“இங்க எனக்கு மணி லாஸ் ஆனது கோபம் இல்லை! ஹவ் குட் ஷி டிசீவ் எ பர்சன் சோ ஈசிலி, எவென் வித்தவுட் எனி கில்ட்? (அது எப்படி அவளால ஒருத்தனை இவ்ளோ ஈசியா எந்தவித குற்றவுணர்வும் இல்லாம ஏமாத்த முடிஞ்சுது?) அதான் எனக்கு கஷ்டமா இருக்கு”
“ஐ பீல் யூ பப்பூ! அந்த பொண்ணுங்க காலேஜ் ஹாஸ்ட்டல்ல நாலு நாள் தங்கி படிக்கப்போறோம்ன்னு சொல்லிருக்காங்க வீட்டுல… அவங்க காலேஜ்ல இருக்குறதா தான் என் பிரன்ட் சொன்னா! பார்த்தா கொடைக்கானல்’ல சுத்திட்டு இருக்காங்க! அதுவே ஏன்னு புரியல! இதுல உன்கிட்ட பணம் வேற வாங்கிருக்காங்க! நீ கூட இருக்குற தைரியத்துல தான் அவங்க வீட்டுக்கு கூட நான் ஒன்னும் சொல்லல!” என்ற தேவகி,
“சரி பப்பூ! நீ நாளைக்கு காலைல புள்ளைங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லி என்கிட்ட ஒருமுறை பேச வை! நான் என்னனு விசாரிக்குறேன்! அவங்க பத்திரமா வீட்டுக்கு போகணும்! அவ்ளோதான்! இதுமட்டும் என் வீட்டு ஆளுங்களுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகும்! விபரீதம் புரியாம பண்ணுதுங்க!” என்றிட, ‘சரி’ என்றுவிட்டு சிறிது நேரத்தில் உறங்கிப்போனான் ஜேகோப்.
காலை நேரம் சென்று கண்விழித்தபோது பனி விலகி சூரியன் வானத்தில் உலா வந்திருந்தான்.
சற்றே வேகமாய் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளிவந்தவன், எதிரே சாற்றியிருந்த அறையை கண்டதும், “இப்போவே பேசிடலாம்” என்ற முடிவுடன் அறை அலைப்பொலியை அழுத்தினான்.
இரண்டு மூன்று முறை அழுத்தியும் எந்த பதிலும் வராது போக, கதவு குமிழில் கை வைத்ததும் டக்கென திறந்துக்கொண்டது அது.
“ஓவ்!” என பின்னடைந்தவன், “சங்கவி…. ரோஸ்” என்றான் சத்தமாய். அப்போதும் பதில் இல்லை.
உள்ளே கொஞ்சமாய் எட்டிப்பார்த்தான். அறையில் நடமாட்டம் இருப்பதை போல தெரியவில்லை. காலை உணவை முடித்துக்கொள்ள சென்றிருப்பார்களோ? என்றெண்ணியவன் ‘புட் கோர்ட்’ நோக்கி சென்றான்.
உள்ளுக்குள், “டோர் கூட லாக் பண்ணாம போவாங்களா?” என்ற எண்ணம் எழுந்தது.