எப்போதுமே தேவியை வினோதினிக்கு மிகவும் பிடிக்கும் தான். ஆனால் அவளை விஜியின் வீட்டில் இருக்கச் சொல்வது மட்டும் பிடிக்கவே இல்லை. இப்போதும் விஜியைப் பற்றி பெருமையாக பேசத் தான் அன்னை அழைக்கிறாள் என்று எண்ணி எரிச்சலுடன் தான் போனை எடுத்தாள் வினோதினி.
“சொல்லு மா”
“என்ன டி, குரல்ல எரிச்சல் தெரியுது? அந்த அளவுக்கு இந்த அம்மா உனக்கு வேண்டாதவளா போய்ட்டேனா?”, என்று கேட்டாள் தேவி.
அந்த நிலைமையிலும் தன்னுடைய குரலை வைத்தே தன்னுடைய மனநிலையைக் கணிக்கும் அன்னையை எண்ணி பெருமையாக இருந்தது அவளுக்கு.
“அப்படி எல்லாம் இல்லை மா. சும்மா தலை வலி அதான்”
“தலைவலியா நம்பிட்டேன் டி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யார் கிட்டயோ போன்ல பேசிட்டு இருந்தியாம்? கண்டவங்க கிட்ட பேசும் போது மட்டும் தலைவலி வரலையா?”, என்று தேவி கேட்டதும் “அம்மா”, என்று அதிர்ந்து போய் அழைத்தாள் வினோதினி.
“என்ன அம்மா? வேலைக்கு போய்ட்டேன்னு திமிர் ஏறிருச்சா?”
“அப்படி எல்லாம் இல்லை மா”
“அப்படியா? சரி யார் கிட்ட போன்ல பேசினேன்னு சொல்லு. யார் கூட வண்டில வந்தேன்னு சொல்லு”
“அம்மா இப்படி கேட்டா எப்படி சொல்ல? கொஞ்சம் பொறுமையா நான் சொல்ல வரதைக் கேளு”
“நீ எவன் கூடவோ வண்டில ஊர் சுத்துவ? நான் பொறுமையா கேக்கணுமா? நீ இப்படி இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை டி. ரிஷி குட்டியை உன் கூட படுக்க வச்சிக்க மாட்டேன்னு சொல்லிட்டீயாம்? சின்னஞ்சிறுசுக சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சிருந்தா இப்படி பண்ணிருப்பியா? அது சரி, அவன் கூட இருந்தா நீ எவன் கிட்டயோ நைட் முழுக்க பேச முடியாதுன்னு தான் ரிஷியை வர விடலையாம்ல?”
“அம்மா அவ என்னைப் பத்தி தப்பு தப்பா உன் கிட்ட சொல்லிருக்கா மா”
“எங்க நான் சொன்னதுல எதுவுமே உண்மை இல்லைன்னு சொல்லு பாப்போம். நான் இப்பவே அவளைக் கேக்குறேன்”, என்று தேவி சொல்ல இவள் எப்படி மறுப்பாளாம்? அது எல்லாம் உண்மை தானே.
“அவன் தான் உனக்கு சாப்பாடு வாங்கித் தந்தானா?”
“அம்மா என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? இன்னைக்கு காலைல..”
“எனக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லு வினு. அவன் கிட்ட வேற வீடு பாக்கச் சொன்னியா இல்லையா?”
தான் பேசியதை எல்லாம் ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு தேவையானதை மட்டும் போட்டுக் கொடுத்திருக்கும் விஜியை நினைத்து வெறுப்பாக வந்தது வினோதினிக்கு. கூடவே அவளால் விஜியை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. தன்னை அவ்வளவு கேவலமாக நடத்தும் விஜி ஏன் அவளை அதே வீட்டில் இருக்க வைக்க போராடுகிறாள் என்று குழப்பமாக இருந்தது.
“என்ன அமைதியா இருக்க? சொல்லு. சொன்னியா இல்லையா”, என்று கேட்டாள் தேவி.
“சொன்னேன் தான். ஆனா எதுக்குன்னு….”, என்று வினோதினி சொல்ல வர “எதுக்கா வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா எனக்கு ஒண்ணே ஒண்ணு தான். என் பொண்ணு ஒழுக்கமா இருக்கணும். அதுல ஏதாவது தப்பு நடந்துச்சுன்னா என் முகத்துல முழிக்காத. என் பொண்ணு செத்துட்டான்னு நினைச்சிக்கிறேன்”, என்றாள் தேவி.
“என்ன மா ஒழுக்கம் அது இதுன்னு பேசுற? அப்ப அவ சொன்னதைக் கேட்டு என்னை சந்தேகப் பட்டுட்டல்ல? அவ உனக்கு அவ்வளவு அவமானத்தை தேடித் தந்தும் உனக்கு அவ பேச்சு தான் வேதம் அப்படித் தானே? கடைசி வரை என்னை நீ பேசவே விடலையே மா”, என்று தளர்ந்து போய் வினோதினி கேட்க தேவிக்கு சுருக்கென்று இருந்தது.
“வினு”, என்று கலங்கிய குரலில் அழைத்தாள்.
“இரு மா நான் பேசிக்கிறேன். இப்ப என்ன, நான் இந்த வீட்டை விட்டு போகக் கூடாது அப்படித் தானே? போகலை மா. போகலை. பட்டினியா கிடந்து செத்துப் போறேன். அப்ப நீ என்னை ஒழுக்கமானவன்னு சொல்லுவ தானே?”
“வினு”
“நான் யார் கிட்டயோ பேசுறதுக்காக அந்த குழந்தையை வர வேண்டாம்னு சொன்னேன்னு அவ சொன்னதை அப்படியே நம்பிட்டல்ல நீ? அப்ப இத்தனை வருஷம் நீ என்னைப் புரிஞ்சிக்கிட்டது இது தானா மா? என் சந்தோஷம் தான் முக்கியம்னு நான் நினைச்சிருந்தா இத்தனை வருஷம் எனக்கு நீ மாப்பிள்ளை பாப்பேன்னு காத்துட்டு இருந்துருக்க மாட்டேன்”
“வினு”, என்று கலங்கிப் போய் அழைத்தாள் தேவி. அவசரப் பட்டுவிட்டோமோ என்று அவள் நெஞ்சம் கலங்கியது.
“அவ உன் கிட்ட சொன்னது எல்லாம் உண்மை தான் மா. நான் இன்பான்னு ஒருத்தரோட வண்டில போனேன். திருப்பி அவர் வண்டில தான் வந்தேன். அவர் தான் எனக்கு சாப்பாடு தந்தார். உனக்கு தெரியாதது இன்னொன்னும் சொல்றேன் கேட்டுக்கோ. இன்னைக்கு காலைல அவர் வீட்ல தான் சாப்பிட்டேன். மதியம் அவர் வீட்ல இருந்து தான் சாப்பாடு வந்தது. நைட்டும் அப்படி தான். நான் நல்லாவே சாப்பிட்டேன். ஏன்னா இனி நான் எப்ப சாப்பிடுவேன்னு எனக்கே தெரியாது”
“வினு”
“வேற என்ன கேட்ட? யார் கிட்ட பேசினேன்னு? ஆமா நான் இன்பா கிட்ட தான் பேசினேன். வேற வீடு பாக்கச் சொன்னேன். ரிஷியை என் கூட படுக்க வைக்க மாட்டேன்னு சொன்னேன். உன் பொண்ணு சொன்னது எல்லாம் உண்மை தான். ஆனா என் மேல நம்பிக்கை இருந்தா நீ என்ன மா கேட்டுருக்கணும்? விஜி இப்படிச் சொல்றா டி. அங்க என்ன நடக்குதுன்னு என் கிட்ட கேட்டுருக்கலாம்ல? ஆனா நீ அப்படியே அவ சொன்னதை நம்பி என் ஒழுக்கத்தையே சந்தேகப் பட்டுட்டல்ல? நீ உன் பொண்ணையே நம்பிக்கோ. நான் எதுவும் சொல்லலை. இந்த வீட்டை விட்டு எங்கயும் போகலை. ஆனா நீ என் கிட்ட இனி பேசாத”
“வினு”
“காரணமே இல்லாம நம்மளை தப்பு சொல்றவங்க கிட்ட போய் நான் நல்லவ நல்லவன்னு சொல்லிட்டு இருக்க கூடாது. இது நீ எனக்கு சொல்லிக் கொடுத்தது தான் மா. உன் கிட்ட பேச எனக்கு பிடிக்கலை. பிறந்ததுல இருந்து எனக்கு அப்பா இருந்தும் இல்லாதது மாதிரி தான். இப்ப அம்மாவும் அப்படி தான்”
“ஒரு அம்மாவா நான் உன்னை விசாரிக்க கூடாதா வினு?”
“நீ விசாரிச்சியா மா? நீ நான் தப்பு பண்ணிட்டேன்னு முடிவு பண்ணிட்டு தானே பேசின? நிஜமாவே எனக்கு தலை வலிக்குது. நான் நல்லா தூங்கி மூணு நாள் ஆச்சு. பிளீஸ், இனி எனக்கு கால் பண்ணாதே. நான் ஒழுக்கமா இருக்கேனா இல்லையான்னு உன் பொண்ணு கிட்டயே கால் பண்ணி கேட்டுக்கோ. எனக்கு சாப்பாடே கொடுக்காம அக்காவுக்கு பிரியாணி கொடுத்தேன், மீன் சமைச்சு போட்டேன். அக்கா விதவிதமா தின்னுட்டு எவன் கூடவோ கடலை போடுறான்னு உன் பொண்ணு சொல்லுவா. அதையும் நம்பிக்கோ. இப்ப போனை வச்சிரு பிளீஸ்”
“ஏய் இரு டி, அணு பேசணும்னு சொல்றா”
“வேண்டாம், நீயே என்னை இப்படி பேசிட்ட. இதுல அவளும் ஏதாவது சொன்னா அதை தாங்க என் உடம்புலயும் மனசுலயும் தெம்பு இல்லை”, என்று சொன்ன வினோதினி போனை வைத்து விட்டு கட்டிலில் படுத்தாள்.
வீட்டில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு வர போனை சைலெண்டில் போட்டவள் கண்களை மூடிப் படுத்துக் கொண்டாள்.
அவள் இது வரை வாழ்ந்த வாழ்க்கையை எண்ணி, கடந்து வந்த பாதையை எண்ணி, இது வரை இழந்த சந்தோஷத்தை எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
ஆனால் வயிறு நிறைந்ததாலோ, முந்தைய நாட்களில் சரியான ஓய்வு இல்லாததாலோ சிறிது நேரத்திலே நன்கு உறங்கி விட்டாள்.