“ஏய் இந்தாப்பா, ஈரல் இருக்கு.?” என்ற குரலில், கைப்பேசியில் வைத்திருந்த கவனத்தை, அவரிடம் திருப்பினான் குமார்.
“இல்லையே அண்ணே, வித்துப் போச்சே?”
“என்னப்பா.?” என அவர் நகர முற்பட, “அண்ணே எந்த ஊரு.?” என்ற படியே பக்கவாட்டில் இருந்து வந்தான் நெடியவன் ஒருவன்.
“மதுரைப்பா. இப்ப இருக்கிறது எடப்பட்டி!”
“அட! நம்ம ஊரு பக்கம் தான். ஆளு புதுசா இருக்கீங்களேனு பார்த்தேன்!”
“என்னோட மகனுக்கு இங்க முனிசிபாலிட்டில வேலை கிடைச்சிருக்கு. நேத்துதான் வந்தோம்!”
“சந்தோஷம் அண்ணே. ஈரல் வேணும்னா முன்னாடியே சொல்லி வைக்கணும். ரெத்தம், குடல், ஈரல், சுவரொட்டி, நல்லி எலும்பு எல்லாம் உடனுக்குடனே வித்துப் போகும்!”
“எனக்கு இங்க விபரம் தெரியாதே! ஆமா.. நீ யாரு.?”
“இது நம்மக் கடை தான். டேய், வேல பார்க்கிற இடத்துல என்ன ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்க? ஒருநாள் இல்ல ஒருநாள்.. கத்திய வச்சு அதைக் கொத்தி விடப்போறேன்! அப்பத்தான் திருந்துவ! தூக்கி வைடா ஓரமா..”
“அடப்போ அண்ணே. கடையில வியாபாரத்தையும் காணோம்? எவ்வளவு நேரந்தான் சும்மாவே உட்காருறது? நானு போயி, காபி குடிச்சிட்டு வர்றேன்!” என்றபடி குமார் எழுந்து செல்ல, வந்திருந்த மனிதர், “சரி தம்பி, நாளைக்கு ஈரலும் சுவரொட்டியும் எடுத்து வைக்கிறீங்களா? நான் வந்து வாங்கிக்கிறேன்!”
“நாளைக்கு வெள்ளிக்கிழமை. ஆடு அறுக்க மாட்டோம் அண்ணே. அதுவும் இல்லாம, எல்லாரும் கிராமத்து ஆளுங்க. நல்லநாளு, ஏதாவது விசேஷம்னாதான் கறியே வாங்குவாங்க. நானு அறுத்து வச்சிட்டு, நட்டமாக முடியாது பாருங்க. மிஞ்சிப் போனா, பழசையும் விக்க முடியாது!
நீங்க ஞாயித்துக்கிழமை வாங்க. எப்படியும் ரெண்டு மூணு ஆட்டுக்கு வியாபாரம் இருக்கும். எதுனா ஒண்ணுல இருந்து எடுத்து வைக்கிறேன். சனிக்கிழமை ராத்திரி ஃபோன் போட்டு, எனக்கு ஒருதடம் நினைவு மட்டும் செஞ்சிடுங்க. இந்தாங்க என்னோட ஃபோன் நம்பர்!” என்று சந்திப்பு அட்டை ஒன்றை நீட்டினான்.
அவன் சிரித்து, “நமக்கு வெறும் கறிக்கடை மட்டும் இல்ல. என்னென்ன தொழில் செய்யிறேனு மத்தவங்களுக்குத் தெரியணும்ல.?”
புன்னகைத்தவர் பார்வையை அட்டையில் செலுத்தினார். இளஞ்சேரல் எனப் பெரியதாய் இருந்த பெயருடன், கைப்பேசி எண் மட்டும் இருந்தது. பின்பக்கமாய், கறி கோழிக்கடை, நாட்டுக்கோழி பண்ணை, முட்டை விற்பனை, ஆட்டுத்தரகர் என்று வரிசையாய் இருக்க.. நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
அவனது இயல்பான பேச்சில் சில நொடிகளிற்கு முன்பு இருந்த மரியாதை கரைந்து போக, “முதல்ல, நீ முட்டைய காட்டுப்பா. நாட்டுக் கோழியோடது தானானு பார்த்துக்கிறேன். நீ பாட்டுக்கு டீத்தூள் தண்ணியில முக்கி வச்சு ஏமாத்திட்டீனா?”
அவன் சிரித்தபடி, கடைக்குள் இருந்து எடுத்து வந்துதர, வாங்கிப் பார்த்தார்.
முட்டையின் வடிவத்தையும் நிறத்தையும் ஆராய, “நானு ஏமாத்து வேலை எல்லாம் செய்யிறது இல்ல. நம்பி வாங்கிட்டுப் போங்க அண்ணே!” என்றவனை நிமிர்ந்து நோக்கினார்.
கறிக்கடை தொழில் செய்பவனிற்கான கடுமைத்தனம் முகத்தில் அப்படியே இருக்க, அதனை மறைக்கும் விதமாய்ச் சிநேகப் புன்னகையை இதழ்கள் சிந்தின.
அனிச்சையாய் அவரது இதழ்களும் மலர்ந்திட, “சரி தம்பி!” என்றவர், ஐந்து முட்டைகளையும் சிறிது கறியையும் வாங்கிச் சென்றார்.
‘காபி குடித்து வருகிறேன்!’ எனச் சொல்லிச் சென்றவன், ஒருமணி நேரம் ஆனபின்பும் காணவில்லை. கைப்பேசியில் அழைக்க, பதிலும் இல்லை. பதினோரு மணிக்குத் தான், வந்து சேர்ந்தான் குமார்.
உட்காரு கடையில. ஒருமணி வரைக்கும் பாரு. விற்காம மீதி இருந்தாலும், தூக்கிப் பிரிட்ஜ்ல வச்சிட்டுக் கட்டையைச் சுரண்டிட்டுக் கிளம்பு!” என்றவன் கல்லாவில் இருக்கும் பணத்தைச் சரிபார்த்து விட்டு நகர, “அண்ணே!”
“என்னடா.?”
“அம்மாக்குத் தடுமம், சூப்புக்குக் கொஞ்சம் எலும்பை வெட்டிக்கவா.?”
“சரி சரி! சேர்த்துக் கொஞ்சம் கறியையும் கொண்டு போ!”
குமார் தலையசைத்துச் சிரிக்க, கிளம்பினான் இளஞ்சேரல்.
வயிறு, பசியில் கூப்பாடு போட்டது. மணி பதினொன்று ஆயிற்று. முன்பு எல்லாம் உணவு என்ற ஒன்றையே, அவனின் உடல் மறந்திருந்தது. நினைத்த நேரத்தில், தோன்றும் பொழுது கண்களில் படுவதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வான்.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் கீதாராணியின் கவனிப்பால், பசியுணர்வு உயிர் பெற்றிருந்தது.
நான்கு நாட்கள் ஆயிற்று, அவளைப் பார்த்து. கணவனுடன் திருப்பதி சென்றிருந்தாள்.
‘இருவரும் இன்று வந்து விடுவர்!’ என உரைத்திருந்தார், அவளின் தந்தை. வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான் இளஞ்சேரல்.
வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார் பரமசிவம். கீதாவின் தந்தை. அவனிற்குத் தொழில் கற்றுத் தந்த குரு. கற்றுத் தந்தார் என்று சொல்வதற்கில்லை, “இப்ப சொல்லித் தர்றீங்களா, இல்லயா.?” என மிரட்டி, அவரிடம் பயின்றான் பதினெட்டு வயதில். இதோ, ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டது.
சுற்று வட்டாரத்தில் கறிக்கடை என்றாலே, அது இளஞ்சேரல் தான். எவரும் அவன் அளவிற்குப் பக்குவம் பார்த்து ஆடுகளைத் தேர்வு செய்து வாங்கவும் முடியாது. வகை வகையாய் வெட்டவும் இயலாது.
பெரும்பாலும் அவன் கடையில் செம்மறி ஆடுகள் தான். கறி விரைவில் வெந்து விடும், அத்தோடு அதன் சதையும் அதிகம். வெள்ளாடுகள் வளர்ப்பைப் பொறுத்து மாறுபடும். சதையைக் காட்டிலும், எலும்பின் எடை அதிகம் அவற்றில்.
குட்டியாய் இருந்தால் மட்டுமே, உண்பதற்குத் தகுந்தாற் போல் இருக்கும். வளர்ந்து விட்டவைகளை வேக வைக்கவே, குக்கரில் பதினைந்து விசில்கள் விட வேண்டும். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பர்.
‘வெள்ளாட்டங்கறி இருக்கா?’ எனக் கேட்டு வாங்கிச் செல்வோரும் உண்டு. வாய்ப்புண் குடல் புண்களிற்கு எல்லாம், அதை வேக வைத்த நீர் அருமருந்து. அதிகப்படியான உடல் சூட்டைக் குறைத்து, குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஆனால் செரிமானம் ஆவதற்குச் சற்று நேரம் பிடிக்கும்.
கறிச்சுக்கா நினைவில் வந்தாலே, இவனின் கடையில் தான் வந்து நிற்பர் மக்கள். வெட்டுப் பாக்கு போல் ஒரே அளவில் சீராய், செதுக்கித் தருவான். லேசாய் எண்ணெயில் வதக்கி, மூடிவைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்தாலே போதுமானது. அவன் வெட்டிக் கொடுக்கும் பக்குவம் ஒரு காரணம் என்றால், தேர்ந்தெடுக்கும் ஆட்டின் வகையும் அதன் வயதும் மற்றொரு காரணம்.
பெரும்பாலும் காட்டு வழியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வளர்க்கப்படும் ஆடுகளைத் தான் வாங்குவான். அதையும், வியாபாரத்திற்கு முந்தைய நாள்தான் தூக்கி வருவான். அதுவரை, அது இயற்கை அன்னையின் மடியிலேயே இருக்கும்.
பரமசிவம், “என்னடா கறி வித்துப் போச்சா?”
“எங்க? அஞ்சு ஆறு கிலோவுக்குக் கிடக்கும்! அக்கா வந்திடுச்சா.?”
“விடியவுமே வந்திட்டாங்க. நாலு தடவைக் கேட்டுட்டா, இன்னும் வரலயேனு!”
“மாமா எங்க?”
“மாப்ள, அவங்க ஊருக்குக் கிளம்பிட்டாரு!”
“சாப்பிட்டாச்சா?”
“ஆச்சு, ஆச்சு! கீதா.. சின்னவன் வந்திட்டான் பாரு!” எனக் குரல் கொடுத்தவர், திண்ணையில் கால்களை நீட்டிப் படுத்துக் கொள்ள, உள்ளே சென்றான் இளஞ்சேரல்.
“ராணி.. ஏய் ராணி..”
“உன்னைக் கொல்லப் போறேன் பாரு! மாமா மட்டும் தான், அப்படிக் கூப்பிடலாம். நீயி எதுக்குச் சொல்லுற?” என உடலில் அரைகுறையாய் சுற்றிய புடவையுடன் வந்தாள் கீதாராணி.
புன்னகைத்தவன், “போய்ச் சேலையைக் கட்டிட்டு வந்து, என்னைக் கொல்லு!”
அவள் முறைத்துவிட்டு அறைக்குள் செல்ல, “வீட்டுக்குப் பின்னாடி போய்க் குளிச்சிட்டு, அங்க இருந்து அவசர அவசரமா ஈரத்தோட ஓடி வர்றதுக்கு, ரூமுக்குள்ள ஒரு பாத்ரூம் கட்டுனா தான் என்ன?”
“பழைய வீடுடா. வேலை எல்லாம் பார்த்தா, தாங்காது. இருக்கிற வரைக்கும் இருப்போம், பின்னாடி பார்த்துக்கலாம்!”
“அதுசரி! நைட்டிய போட்டுட்டு வரலாம்ல.?”
“சைய்! அதெல்லாம் ஒரு துணியா? மேல இருந்து கீழ வரைக்கும் ஒரேமாதிரி. எனக்கென்னமோ அதைப் பிடிக்கல. அதுனால வாங்குறதே இல்ல. இப்ப என்ன.. இங்க உன்னைத் தவிர யாரு வீட்டுக்குள்ள வரப் போறா? அப்பாதான், வெளியே உட்கார்ந்து இருக்காரே?”
“உன்னை மாதிரியே, எல்லாரும் நினைப்பாங்களா.?”
“ஏய்.. என்ன சொன்ன?” என்றவாறே உடையைச் சரியாய் உடுத்தி வெளியே வந்தவள், “என்னடா விவரம்?”
“ஒண்ணுமில்ல!”
“சேரா என்னைப் பாரு! என்னனு கேட்டேன்?” என்று அவனது முகம்பற்றி வினவ, “உன்னோட மாமியா, இன்னுமா நம்மளை ஒண்ணும் பேசாம இருக்கு?”
“அப்ப, ஏதோ சொல்லி இருக்கு?”
அவன் அமைதிக் காக்க, “அப்பாவோட மூஞ்சியும் சரியில்ல, என்ன நடந்துச்சு.?”
…
“சொல்லு சேரா! இப்ப மட்டும், நீயி சொல்லல..” என்றவள், அடுத்த நொடியே கணவனிற்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
எதிர்புறம் மோகன், “என்ன ராணிமா.?”
“மாமா.. உங்கம்மா, எந்தம்பிய ஏதோ பேசி இருக்கு. ஆனா சொல்ல மாட்டிறான். அப்பாவும் கூட ஆளே சரியில்ல..”
காலையில் வழக்கத்தை விடச் சோர்வான மாமனாரைக் கண்டவனிற்கு மனதில் யோசனை படர, “என்ன சொல்லுற?” எனும் பொழுதே, “அக்கா.. என்ன செய்யிற நீயி!” எனக் கைப்பேசியைப் பறித்தான் இளையவன்.
“மாப்ள.. டேய்.. என்னடா விவகாரம்?”
“ஒண்ணுமில்ல மாமா..”
“நானு வீட்டுக்கு வர்றேன், பேசிக்கலாம்!” என அழைப்பைத் துண்டிக்க, இவனோ மூத்தவளை முறைத்தான்.
“என்னைய எதுக்குடா முறைக்கிற?”
“ஊருக்குப் போனவரை, திரும்ப வர வச்சிருக்க நீயி!”
“பின்ன, நானு கேட்கிறதுக்குப் பதில் சொல்ல மாட்டிக்கிற.? அவரு வருவாரு, பேசிக்க!”
“அக்கா..”
“உட்காரு, சாப்பிடலாம்!”
“எனக்கு வேண்டாம்!”
“மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுது, எவ்வளவு பசியோட இருக்கனு. உட்காருடானா..”