“நாளைக்கு முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்!” என்ற சேரல் காகித கோப்பைகளில் தேநீரை ஊற்றி, பணி செய்பவர்களிற்குக் கொடுக்க, “எதுக்குடா தேவை இல்லாம ஆளுங்களைப் போட்ட? நீயி ஒரு வார்த்தைச் சொல்லி இருந்தா, அப்பாவும் மாமாவுமே வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருப்பாங்க.”
“ஒவ்வொரு தொழில் செய்யிறதுக்கும் ஆளுங்க இருக்காங்க அக்கா. மத்தவனோட தொழிலை நாம செஞ்சா, அவன் எப்படிச் சம்பாதிப்பான் பாவம்.? செய்யிறதா இருந்தா, எதுக்கு அப்பாவும் மாமாவும்? நானே செஞ்சிடுவேனே!”
கேலியாய்ச் சிரித்த கீதா, “இப்ப மட்டும் என்ன, உன்னோட பொண்டாட்டிக்காகவா.?”
அவனும் சிரித்து, “வாங்கி வைக்கணும்ல அக்கா.?”
“ம்ம்.. நீயி செய்யிடா தம்பி! அப்படியே சேலைத் துணிமணி, சோப்பு, சீப்பு, பவுடர் டப்பா, கண்மையி, வளையல், ஹேர்பின், பொட்டு, மஞ்சள்.. இன்னும் லிஸ்ட் இருக்கு. எழுதி தர்றேன், அதையும் வாங்கிடுடா.” என்றிட, “என்ன ராணி, கிண்டலா?”
“டேய், உண்மையா தான். அதெல்லாம் நாம வாங்கித் தரணும், உள்ளாடை முதல் கொண்டு!”
அவன் விழிக்க, “பெண் அழைப்புக்கு ஒரு செட்டு, முகூர்த்தத்துக்கு ஒரு செட்டு!”
“நிஜமாவா அக்கா.?”
“எனக்குச் செஞ்சாங்கடா. பொண்ணைக் கூட்டிட்டு வர்றப்ப, நாம கொடுக்கிறதைத் தான் உடுத்த வச்சு அழைச்சிட்டு வரணும். இன்னும் என்னென்ன முறை இருக்குனு, என்னோட நாத்தனாருக்கிட்டக் கேட்டுச் சொல்றேன்!”
“அவங்கக்கிட்ட பேசுவியா நீயி.?”
“அதெல்லாம் பேசுவேன். நாத்தனாரு, நல்ல குணம் சேரா. சண்டைச் சச்சரவு வரும் தான், அதுக்காக எனைய எதுவும் குத்தம் சொல்லாது. அக்காவும் தம்பியுமாவே பேசிப்பாங்க. என்னோட மாமியா குணத்துக்கும், இவங்க ரெண்டு பேரு குணத்துக்கும் சம்பந்தமே இருக்காது. தப்பிப் பிறந்திட்டாங்க போல!” எனச் சிரிக்க, “என்னமோ, நல்லா இருந்தா சரிதான்!” என்று இளையவனும் சிரித்தான்.
* * *
வழக்கம் போலவே விடிந்தது, அன்றைய பொழுது. உலகிற்கு அனைத்து நாட்களுமே ஒன்றுதான். ஆனால் அது தரப்போகும் அடுத்தடுத்த நொடி வியப்புகளே.. அத்தினத்தின் நினைவுகளை, வரலாற்றில் மகிழ்ச்சியாகவோ வலியாகவோ ரணமாகவோ ரசனையாகவோ பதித்து வைக்கிறது.
இளஞ்சேரலிற்கு அன்றைய தினம், அதுபோல் ஒரு விருப்பத்தை நிறைவேற்றித் தர இருந்தது. திருமணம், தினைவளம் மிகுந்த ஆதிக்குடிலின் மைந்தனுக்கு. மணப்பெண்ணான செந்தமிழை முன்னரே மணவறையில் அமர்த்தி விட்டனர். மணமகனைத்தான் காணவில்லை.
மோகன் தனது இரு சக்கர வாகனத்தைத் தயாராய் இயக்கிய படி, “மாப்ள வா! இன்னும் அஞ்சு நிமிசத்துல மண்டபத்துக்குப் போகல, உங்கக்கா நம்ம ரெண்டு பேருக்கும் அர்ச்சனை பண்ணிடுவா!” என அழைக்க, அவசர அவசரமாய்ப் பணியை முடித்தவன் குமாரிடம், “ஒழுங்கா எடைப் போட்டு வித்திட்டு, காசைக் கொண்டு வந்து ஒப்படைக்கிற. ஏதாவது கோக்கு மாக்கு செய்யலாம்னு நினைச்ச, இதுதான் நீயி கடையில நிக்கிற கடைசி நாளா இருக்கும். அடுத்தத் தடவை அக்கா சொன்னாலும், நானு கேட்க மாட்டேன்!” என்று விட்டுக் கிளம்பினான்.
வழியில் பயணத்தின் பொழுது, “கல்யாணத்து அன்னைக்குக் கூடக் கடையைப் போடணுமா.?”
“அவனை நம்பி எல்லாம் கடையை விட முடியாது. மொடா முழுங்கிப் பையன், முழுப் பூசணிக்காயைச் சோத்துல மறைச்சிடுவான். அவன்கிட்ட வேலையில வேகம் கூடுதலு, அதுக்காகத்தான் வச்சிருக்கேன். அத்தோட கொடுத்த பத்தாயிரத்தைத் திருப்பி வாங்கணும்ல.? நானு முதல்லயே சொன்னேன் மாமா, வெள்ளிக்கிழமையா நாளை பாருங்கனு. முகூர்த்தம் இல்ல, அது இல்லனு சரியா ஞாயித்துக் கிழமையில கல்யாணத்தை வச்சிருக்காங்க!”
மோகன் பதிலுரைக்காமல் வாகனத்தின் வேகத்தைக் கூட்ட, அடுத்த இரண்டாவது நிமிடம் இல்லத்தை அடைந்திருந்தனர். ஏழரை முதல் ஒன்பது மணி வரையிலான அமிர்த யோகத்தில் முகூர்த்தம்.
கடைக்குச் செல்லும் பொழுது அதிகாலை இரண்டு மணிக்கே குளித்து விட்டான் சேரல். இருந்தும் ஐந்து மணி நேரம் பணி செய்ததில்.. உடையில் சில குருதித் துளிகளும், வெட்டும் போது தெறித்த சவ்வு போன்றவையும் ஒட்டி இருந்தன. மாமிச வாசமும் துணை சேர.. இரண்டு வாளி நீரை தலையில் இருந்து ஊற்றிக் கொண்டு அவசர கதியில் ஓடி வந்தான்.
பாதிப் பட்டன்களை மட்டும் போட்டவாறு அரங்கிற்குள் நுழைந்த தம்பியைக் கண்டதும் வேக எட்டுகளில் வந்த கீதா.. பார்வையாலேயே எரித்து, “அறிவில்ல உனக்கு? படிச்சுப் படிச்சுச் சொன்னேன்ல, கடை போடாதனு! எனக்குத் தெரியாம எழுந்திரிச்சு ஓடியிருக்க. கல்யாணம் முடியட்டும், அப்புறம் பேசிக்கிறேன்!” என்றவாறே சட்டைப் பட்டன்களை அணிவித்து, மோகன் தந்த சீப்பால் தலைவாரி விட்டாள்.
“முடி எல்லாம் ஈரமா இருக்குடா.”
“அஞ்சு நிமிசத்துல காய்ஞ்சிடும்கா, எதுக்கு நீயி இவ்வளவு பதறுற.?”
“தமிழு தனியா உட்கார்ந்து இருக்கா பாரு!”
மெலிதாய்ச் சிரித்தவன் எட்டிப் பார்க்க, சடங்குகளைச் செய்து கொண்டிருந்தாள் செந்தமிழ்.
மோகன், நெற்றியில் சந்தனம் வைத்து மாலையை அணிவிக்க.. வருங்கால மனையாளின் அருகில் சென்று அமர்ந்தான் இளஞ்சேரல்.
முழுதாய் பத்து வருடங்களிற்குப் பிறகான நெருக்கம். அருகருகே அமர்ந்து இருந்தனர். இத்தனை ஆண்டுக் கால இடைவெளி காணாமல் போனதாய்த் தோன்ற, “வரமாட்டனு இல்ல நினைச்சேன். வந்திட்ட.?”
“இந்தத் தடவை, மாமா ஒண்ணும் எனைய கூட்டிட்டு வரல. நானா தான், உனைய தேடி வந்தேன். அத்தோட, அப்பவும் உன்கிட்டச் சொல்லீட்டுத்தான் ஆதிக்குடிலுக்கு வந்ததா ஞாபகம்.!” என்றவனை அவள் நிமிர்ந்து நோக்க, கண்சிமிட்டிச் சிரித்தவனின் கரத்தில் கொடுக்கப்பட்ட மங்கலநாணை பெற்று, பாவையின் கழுத்தினில் கட்டினான்.
அதன் பின்னர், இருவருக்கும் பேசிக் கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. தொடர்ந்த சடங்குகள்.. நேரத்தைத் தன்வசமாக்கிட, புதியதாய் உருவான பந்தத்தோடு உறவுகளுடன் இணைந்து கொண்டனர்.
வரிசையாய் வந்து வாழ்த்துத் தெரிவித்தவர்களைக் கைக்கூப்பி வணங்கியே அயர்ந்து போனாள் செந்தமிழ். சேரலின் முகத்தில் வாட்டம் இருந்தாலும் கூட, அதரங்கள் குறையாத புன்னகையைச் சிந்தியபடி இருந்தன.
வருகை தந்தவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தைத் தாண்டக் கூடும். வேணுகோபாலன் நூறு அழைப்பிதல்கள் மட்டுமே கொடுத்திருக்க, மற்ற அனைவருமே சேரலின் அழைப்பில் வந்தவர்கள்.
மணமேடையில் அவனின் அருகே நின்றிருந்த சவிதா, “இத்தனை பேரு எப்படிப் பழக்கம்? யாரு, இவங்க எல்லாம்.?” என விசாரிக்க, “ஆடுக்காகக் கிராமத்துப் பக்கம் போறேன்ல அத்தை? குட்டியை வாங்குறது, கைமாத்துறதுனு பழக்கம். யாருக்கும் பத்திரிக்கைக் கொடுக்கல, வாய் வார்த்தையா தான் சொன்னேன். எல்லாருமே வந்திட்டாங்க!” எனும் பொழுதே மனைவி மற்றும் மகளுடன் வந்தார் ஜக்கையன்.
மாலையைக் கழட்டிக் கையில் பிடித்த படியே, “மாமா, வாங்க வாங்க. வாங்க அத்தை, கருவாச்சி வா..” என வரவேற்க, “வரமாட்டமா நாங்க.? அந்தப் பிள்ளைய விட்டுட்டு, நீயி ஓடி வர்ற.? முதல்ல வீட்டுக்காரிக்கூடச் சேர்ந்து நில்லு!” என்றவர் கையில் இருந்த மாலையைப் பெற்று அணிவிக்க, தலைக்குனிந்து வாங்கினான் சேரல்.
“புள்ள குட்டியோட, நோய் நொடி இல்லாம, நூறு வருசத்துக்கு ஒத்துமையா சந்தோஷமா இருக்கணும்யா.” என வாழ்த்தியவர், மனைவியிடம் இருந்து திருநீறு வாங்கி இருவரது நெற்றியிலும் வைத்து, “கருப்பசாமிய கும்பிட்டு, வாங்கிட்டு வந்தேன். துணையா இருப்பாரு உங்களுக்கு! பிள்ள, பேரு என்ன..?” என்று விசாரித்தார்.
“சரிங்க மாமா!” என்றவன் ஜக்கையனின் மனைவியிடமும் நலம் விசாரித்துவிட்டு, இருவரது கால்களிலும் விழுந்தான். கணவனானவன் ஒரு செயலைச் செய்யும் பொழுது, மனைவியான தமிழும் அதைச் செய்ய வேண்டிய சூழலிற்குத் தள்ளப்பட்டாள்.
“ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா!” என்றிட, “அதான் முதல்லயே செஞ்சிட்டேனே, எழுந்திரியா முதல்ல!” என எழுப்பியவர் இருவரின் கரத்திலும், அவர்கள் மறுக்க மறுக்க ஆளுக்கு ஒன்றாய் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் திணித்துவிட்டு நகர்ந்தார்.
தள்ளி இருந்த பரமசிவம், “வாய்யா, சாப்பிடு. வாங்க தாயிகளா..” என உணவு உண்ண அழைத்துச் செல்ல, நடந்ததைக் கவனித்த வேணு கோபாலன் சேரலிடம், “யாரு இது.?”
சவிதா, “என்னப்பா சொல்லுற.? உனக்குத்தான் ரத்னம் அண்ணனோட நிலம் எல்லாம் இருந்திச்சே.?”
“தேவைக்கு நிலத்தை விக்கவும் முடியல. காசையும் புரட்ட வழி இல்ல. பெரியப்பா தான், ஜக்கையன் மாமாவ அறிமுகம் செஞ்சு வச்சாரு. கடைய போட்டதும், முதன்முதல்ல இவருக்கிட்ட தான் ஆடு வாங்கினேன். வித்துக் கொடுனு சொல்லி, காசே வாங்காம நாலு ஆடு கொடுத்தாரு. அதை வச்சுதான் வளர்ந்தேன்.
கடைக்குக் கத்தி, கட்டை வாங்குறதுக்கு ஆளுகளைக் கைக்காட்டி, இடத்தையும் பிடிச்சுக் கொடுத்தாரு. இப்ப வரைக்கும், எனக்கு எதுனாலும் முன்னாடி வந்து நிப்பாரு. அந்த அத்தைக்கு முடியாததால, நானுதான் அவருக்கிட்ட எதுவும் சொல்லல. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, மண்டபத்துக்கு முதல் ஆளா வந்திருப்பாரு!” என்றவனிற்கு, அதன் பின்னர் நிற்க நேரமில்லை.
வியாபாரிகள் சங்கத்தில் இருந்து தலைவர், உறுப்பினர்கள் என ஆட்கள் வந்த வண்ணம் இருக்க, அவர்களுக்குப் பந்தி பரிமாறுவதற்கே சென்று விட்டான் சேரல். செந்தமிழிற்கு, கணவனது நடவடிக்கையில் மயக்கம் வராதது, ஒன்று தான் குறை!