“அப்புறம் நாளைக்குக் கடை..” என்ற தமக்கையை இடைமறித்தவன், “போடாம எல்லாம் இருக்க முடியாது. நாலு மணிக்கு பதிலா, ஆறு மணிக்குக் கிளம்பிப் போறேன். போதுமா.?”
“சரி, அதுக்குனு கடையிலயே இருக்காத. ஒன்பது ஒன்பதரை மணி போல.. காலையில சாப்பாடுக்குத் தமிழைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்திடு. நல்ல நேரம் பார்த்து முதல்ல பாலைக் காய்ச்சிட்டு, அப்புறம் இங்க சமைக்க ஆரம்பிச்சிடலாம். அதுவரைக்கும், ரெண்டு பேரும் நம்ம வீட்டுலயே சாப்பிடுங்க. அவ பொருள் எல்லாம் வைக்கிறதுக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்திட்டு, கூடமாட உதவி செய்.
இப்ப நைட்டுக்கு டிபன் செஞ்சு, அப்பாக்கிட்ட கொடுத்து அனுப்புறேன். பசிச்சாலும் அளவா சாப்பிட்டுக்கோங்க, வயிறு நிறைய வேண்டாம். அப்புறம் ஒன்பது மணிக்கு எல்லாம் நல்ல நேரம் முடிஞ்சிடுது. அடுத்து, பன்னெண்டு மணிக்கு மேல தான். அதுனால உங்க தோதுக்கு ஏத்த மாதிரி தூங்கிக்கோங்க. கைக்காலை கழுவிட்டு, அவளைத் தெரு முக்குல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வா!”
அவன் தலையசைக்க.. கீதா, “என்னடா மண்டைய மண்டைய ஆட்டுற?”
“சரிக்கா, சொன்ன மாதிரியே நடந்துக்கிறேன்.”
“நீயி, சொல்லுற விதமே சரியில்லயே?”
அவன் அப்பாவியாய், “சிச்சீ இல்லக்கா. நிஜமாவே தான்!”
“ஏதாவது, நானு சொன்னதை மீறி எக்குத் தப்பா செஞ்சேனு வையி!”
“முன்னாடி தான் சைட் அடிச்ச, சரி! கல்யாணத்துக்கு அப்புறமும் ஏன்? பேசலாம்ல.?”
“ஏன், அண்ணிய போட்டு அந்தப்பாடு படுத்துற.?”
“அது கொஞ்ச நேரம் சும்மா இருந்தாலும், மத்தவங்க தேவை இல்லாம பேசுறதை எல்லாம் திரும்பத் திரும்ப யோசிச்சு மனசை அழுத்திக்கும். அதுனால தான், இப்படி ஏதாவது அப்பப்ப வம்பு செய்யிறது. இப்ப, வீட்டுக்குப் போற வரைக்கும் எனைய பேசிக்கிட்டே போகும்!”
அவள் சற்றே வியப்புடன் பார்க்க, “அதுசரி, தமிழ்மா எங்க கிளம்பீட்டாங்களாம்.?”
“நானு எங்க கிளம்பினேன், எல்லாம் அண்ணி செஞ்ச வேலை தான்!” எனத் தலையை நிறைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்து வைத்து விட்டு, சிறிதளவை மட்டும் சூடிக் கொண்டாள்.
“சரி, அப்படியே இரு. நானு ரெடி ஆகிட்டு வந்திடுறேன், கோவிலுக்குப் போகலாம்.”
“ஓ.. அதெல்லாம் செய்யிவியா நீயி.?”
“ஏன், உனக்கு இந்தச் சந்தேகம்?”
“காலையில பேசுனதைப் பார்த்து, கோவிலுக்கு எல்லாம் போக மாட்டேனு இல்ல நினைச்சேன்!”
“நானா போறது இல்ல. அக்கா அப்பப்ப கூட்டிட்டுப் போகும். இப்பதான், நீயி இருக்கியே? அதுவும் இல்லாம.. ராணி காலையில கேட்கும், போனீங்களா இல்லையானு. இல்லனு சொன்னா, ஒன்றரை மணி நேரத்துக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் எனக்கு!” என்றவன் உடை மாற்றி வர, இருவரும் நடந்தே சென்றனர்.
“உங்கப்பாவும் பரமசிவம் மாமாவும் கூடப் பிறந்தவங்களா.?” என அவள் சேரலின் உறவுகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக வினவ.. அவன் சிரித்து, “என்ன திடீர்னு.?”
“எல்லாரும் உன்கூட இவ்வளவு அட்டாச்டா இருக்காங்களே, அதான்.”
“இல்ல தமிழ்மா. ஆனா அண்ணந்தம்பி மாதிரி தான். மூணு தலைமுறையாவே, அப்படிப் பழகிட்டு வராங்க. அப்பாவோட இருபது வயசுல, தாத்தாவும் ஆச்சியும் இறந்துட்டாங்க. அப்ப இருந்து அப்பாவைப் பார்த்துக்கிட்டது, பரமசிவம் பெரியப்பா தான். நிலத்துல வெள்ளாமை வைக்கிறது, சந்தைக்குக் கொண்டு போறதுனு எல்லாத்துக்கும் உதவி செய்யிவாராம். அப்பா கொஞ்சம் திடமாகவும் தான், கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு. அந்தப் பெரியம்மாவும், ரொம்பப் பாசமா இருப்பாங்கனு அப்பா சொல்லி இருக்காரு.
நல்ல சம்பாத்தியம். இப்ப, நாம இருக்கிற வீட்டை அப்பாதான் கட்டினாரு. நெல்லை கொள்முதல் செய்ய வந்த கவர்மெண்ட் அதிகாரிங்கக்கிட்ட, கூடுதலான விலைக்கு வாங்கிக்கோங்கனு முதல் தடவையா இவர்தான் கேட்க ஆரம்பிச்சாரு. அப்படியே விவசாயிங்க எல்லாரும் அப்பாவோட சேர்ந்து போராட்டம் செய்யவும், ஒவ்வொரு ஊருக்கும் விசயம் பரவி, எல்லா இடத்திலயும் போராட்டம் செய்ய ஆரம்பிச்சாங்க.
ரெண்டு வருசம் கழிச்சு கொள்முதல் விலையைக் கூட்டுனாங்க. அதுக்கு அப்புறம் இருந்து, அப்பாவுக்கு நல்ல பேரு. மரியாதையும் கூடிடுச்சு. ஊராட்சி மன்றத் தலைவர் ஆனாரு.!”
“அம்மா.. ரொம்ப அமைதி. அதே அளவுக்குப் பிடிவாதமும் அதிகம்.”
“அமைதியா நல்ல பிள்ளையா இருந்த எங்க அத்தைய, உங்கப்பா என்ன செஞ்சு கவுத்தாருனு தெரியலயே.?”
அவன் சிரித்து, “என்ன, அம்மா அப்பாவைப் பத்தித் தெரிஞ்சிக்கணுமா?”
“பின்ன.. யாரும் கேட்டா, மாமனார் மாமியாரைப் பத்திப் பதில் சொல்லணும்ல.?”
“கோவில் வந்திடுச்சு தமிழ்மா. இப்ப சாமியைக் கும்பிடலாம். இன்னொரு நாள், எல்லாத்தையும் சொல்லுறேன்.!” என அவன் பேச்சை முடிக்க.. இருவரும் யானைமுகனின் முன்பு கண்மூடிக் கைக்கூப்பி நின்றனர்.
‘அவளுக்கு எனைய பிடிக்கும்னு, நல்லா தெரியும். ஆனாலும், என்மேல லேசா கோபம். இந்த ஊரு, தொழில், சொந்தம்னு எதோடவும் யாரோடவும் அவளால ஒட்ட முடியல. நிச்சயம் மாறிடுவானு நம்பிக்கை இருக்கு. என்னையும், என்னோட உணர்வுகளையும் கண்டிப்பா புரிஞ்சிப்பா. சந்தோஷமா இல்லைனாலும் பரவாயில்ல, சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கையைக் கொடு!’ எனச் சேரல் மனதார வேண்டிக் கொள்ள,
‘அவனை என்னமோ பிடிச்சுப் போச்சு. அம்மா கேட்டப்ப, வேணாம்னு சொல்ல வாய் வரல. இப்ப கல்யாணமும் முடிஞ்சிடுச்சு. ஆனா, இந்த வாழ்க்கையில என்னால எந்த அளவுக்குப் பொருந்திப் போக முடியும்னு தெரியல. எல்லாம் சரியாகிடும்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் நல்லா இருக்கிறதுக்கு, நீதான் வாழ்த்தணும்!’ என்று கேட்டுக் கொண்டாள் அவள்.
சற்று முன்னர் உரையாடிய பொழுது உண்டான இதத்தை அப்படியே தொடர விரும்பி.. இல்லத்திற்குத் திரும்பும் வழியில், இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
வெளித் திண்ணையில் அவர்களுக்காகக் காத்திருந்த பரமசிவம் உணவை தந்து, “சாப்பிட்டு, நேரத்தோட படுங்க!” என்றுவிட்டுச் சென்றார்.
இட்லியும் இடியாப்பமும் கொடுத்து அனுப்பி இருந்தாள் கீதா. இரண்டிலுமே ஆளுக்கு ஒன்றாய் அரை வயிறிற்கு மட்டுமே உண்டனர். ஒருவிதமான இறுக்கமும் தவிப்பும் சூழ்ந்து கொள்ள, மௌனத்தின் பிடியில் சிக்கிக் கொண்டனர் இருவரும்.
என்ன செய்வது என்று புரியாமல், சேரல்.. குமார் மாலையில் கொடுத்துச் சென்ற பணத்தை எண்ணி கணக்குப் பார்க்கத் துவங்கி விட, தமிழோ தொலைக்காட்சியை இயக்கிவிட்டுக் கூடத்தில் அமர்ந்தாள்.
அனைத்து அலைவரிசையையும் ஒருமுறை வலம் வந்தவள், பாடல்களை இயக்கிவிட்டு அமைதியாய் இருக்க.. ஒளிப்படத்துடன் கூடிய இசையைக் கசிய விட்டது தொலைக்காட்சி.
“என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி?
எனக்குச் சொல்லடி!
விசயம் என்னடி.?” என அவள் இணைந்து பாட, “ஏன் தமிழ்மா, உனக்கே தெரியலயா? நான் வேணும்னா சொல்லவா.?” என்று இடைநுழைந்து வினவினான் சேரல்.
திரும்பிப் பார்த்தவள், “என்ன சொல்லப் போற.?”
மெலிதாய்ச் சிரித்தவன், “பேரு இளஞ்சேரல், விசயம்..”
“விசயம்.?”
“ஒண்ணுமில்ல!” எனச் சிரித்தவனை முறைத்தவள், “வேலையைப் பார்க்காம, எனைய என்ன பார்த்திட்டு இருக்க.?”
“வேலையோட சேர்த்து தான், உன்னையும் பார்த்திட்டு இருக்கேன்.” என்றபடி எழுந்து வந்தவன் அவளிடம் ரூபாயை நீட்டினான்.
“எவ்வளவு இருக்குனு எண்ணு.”
“நீயி எண்ணலயா.?”
“எண்ணிட்டேன். இன்னொரு தடவை செக் பண்ணலாம்னு தான்!”
“இருபத்து ஏழாயிரம் இருக்கு!”
அதை வாங்கியவன் பத்திரப்படுத்த, “இது இன்னைக்கான வருமானமா.?”
“ம்ம்..”
“இவ்வளவு வியாபாரம் ஆகுமா, ஒரு நாளைக்கு.?”
“ஞாயித்துக்கிழமை மட்டும் தான் இப்படி. ஆனா, இது கம்மி. இன்னைக்கு நானு கடையில இல்லேல, அதான். தீபாவளி, மாட்டுப்பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ்னு விசேஷத்துக்கு எல்லாம் கணக்கு வேற.”
“மூணு ஆடு அறுத்தோம். இதுல முதலீடு மட்டும் பத்தொன்பதாயிரம். ஆடுகளைப் பராமரிச்சது, வேலைப் பார்க்கிறவனுக்குச் சம்பளம், எனக்குக் கூலி, மேற்படி.. டீ காபி செலவு எல்லாம் போக, லாபம் ஐயாயிரம்!”
“உனக்கும் கூலியா.?”
“நானும் உழைக்கிறேன்ல.?”
“அது சரி!” எனச் சிரிக்க, “நேரமாச்சு, தூங்குவோமா.?”
அவள் தயக்கத்துடன் ஏறிட, “என்ன, என்னைப் பார்த்தா பயமா இருக்கா.?”
மறுத்துத் தலையசைத்தவள், “பயம் இல்ல, ஆனா..”
மெலிதாய்ச் சிரித்தவன் அருகே வந்து அவளின் கைப்பற்றிப் பட்டும் படாமல் அணைத்துக் கொள்ள, “நீயி, நடந்துக்கிற முறை சரியா.?”
“உன்கிட்ட, முறைத் தவறி நடந்துக்கிறேனு சொல்லுறியா.?” என அவன் சட்டென்று விலக.. அதற்குத் தடைவிதித்துக் கணவனின் கரத்தைப் பிடித்த தமிழ், “ஆச்சிக்கிட்ட, நீயி நடந்துக்கிறது சரியா.? ஒரு விசயத்தைப் பத்தி அவங்க அவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும் போது, சிரிச்சிட்டு நீயி பாட்டுக்குப் போற? இதுதான் மரியாதையா.?”
“இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட், நேரம் பார்த்து பேசுறியா நீயி.?”
“இல்ல, எனக்கு உன்னோட எண்ணங்கள் எப்படியானதுனு தெரியணும். அதுக்காகத்தான் கேட்கிறேன். உனக்கும் எனக்குமான உறவை வச்சு, ஆசையைக் காட்டி இந்தமாதிரி நேரத்துல காரியம் சாதிக்க நினைக்கிறது எல்லாம் கேவலமான எண்ணம். நான், ஒருநாளும் அதைச் செய்ய மாட்டேன். நீயி நெருங்கி வரும்போது தான், என்னால உன்கிட்ட மறுயோசனை இல்லாம கேட்க முடியிது.
பத்து வருசம் பேசாததை எல்லாம், ஒரே நாள்ல பேசிட முடியாது. அதேபோலப் புரிஞ்சிக்கவும் முடியாது. எனக்கும் இப்ப அஞ்சு வயசு இல்ல, நீயும் பத்து வயசு பையன் இல்ல. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துப்போமா.?” என்றிட, ஒரு பெருமூச்சை வெளிவிட்டுத் தலையசைத்தான்.