“அது, சரிதான். பெட்ரோல் என்ன சும்மாவா கிடைக்குது? அதுக்காவது காசு தரணும்ல நானு!”
“அட, விடு மாப்ள!”
“உங்களுக்கு யாரு காசு கொடுத்தா? இது, என்னோட அக்காக்கு. அதுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்க!” என்றவன் சட்டை பையில் பணத்தைத் திணிக்க, அதற்கு மேல் மறுக்க முடியாத மோகன், “போயிட்டு வர்றேன்!” எனக் கிளம்பிச் சென்றான்.
அனைவரும் இல்லத்திற்குள் நுழைய.. நாராயணி, “ஏன் தமிழு? வந்தது வந்தீங்க, கொஞ்சம் முன்னாடியே தான் கிளம்பி வர்றது? இப்படியா பொழுது போன பின்னாடி வருவாங்க?”
“எனக்கு, இங்க வர்றதே தெரியாது ஆச்சி. திடீர்னு தான் அத்தான் சொன்னாங்க.”
“அதென்ன பழக்கம்? முன்னக்கூடியே சொல்லி வைக்கிறது இல்லையா.?” என்றபடி சேரலைப் பார்க்க, “பசிக்குமேனு முன்னாடியே சமைச்சு வைக்கலாம் தான். ஆனா நேரத்துக்குச் சாப்பிட முடியாம போச்சுனா, சாப்பாடும் வீணா போகும். நாமளும் பசியோட தான் இருக்கணும். தமிழ்மா, வா!” என்று பதிலளித்துவிட்டு, அவளது அறைக்கு அழைத்துச் சென்றான் அவன்.
“அவங்க நினைக்கிறதுக்காக எல்லாம், நானு வாழ முடியாது. அத்தையும் தாத்தாவும், சொன்னா புரிஞ்சிப்பாங்க. உனக்கு எதுவும் சிரமமா இருந்தா, சொல்லு.”
“அதெல்லாம் இல்ல. நாளைக்குப் பதிலா இன்னைக்கே வந்ததுல எனக்குச் சந்தோஷம் தான். ஒருநாள் இங்க என்னோட ரூமுல, பழைய செந்தமிழா இருக்கலாம். ஹப்பா..” என்றவள் பின்பக்கமாய்ச் சாய்ந்து படுக்கையில் விழ, “அதெப்படி முடியும்.? அங்கனாலும் இங்கனாலும் எனக்குப் பொண்டாட்டியா இல்ல இருக்கணும்!” என அவன் மனையாளின் மீது சரிய, “அச்சோ.. தள்ளுங்க!”
“மாட்டேன்!”
“அத்தான், வெளிய எல்லாரும் இருக்காங்க. ப்ளீஸ்..” என்றிட.. சிரித்தபடி எழுந்தவன், தனது சட்டையைக் கழட்டி மனைவியின் தோளில் போட்டான்.
“எங்க வைக்கிறதுனு தெரியல..” என அறையைச் சுற்றிப் பார்வையிட்டவன், “ஒரு ஆணியைக் கூடக் காணோம்.?” என்று அவளின் புறம் திரும்பினான்.
சவிதாவிடம் இருந்து, “தமிழ், காபியா டீயா.?” என வினா வர, “எனக்கு எதுவும் வேண்டாம். காலையில நாலு மணிக்கு எழுந்திரிச்சது. கறி வெட்டுனதுல, கை எல்லாம் புண்ணா வலிக்கிது. கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன். அத்தைக்கிட்டச் சொல்லிடு!” என்றவன் படுத்த இரண்டாவது நிமிடமே உறங்கிவிட, வெளியே சென்றாள் தமிழ்.
பெரியவர்கள் அவளைக் கேள்வியாய் நோக்க, “காபி மா, எனக்கு மட்டும்.”
சவிதா கேள்வியாய், “சேரலுக்கு!”
“அவரு குறட்டை விட்டு, பத்து நிமிசம் ஆச்சு!”
வேணுகோபாலன், “ஏன் தமிழு.?”
“பொதுவாவே மதிய நேரம் தூங்குவாரு தாத்தா. கடை முடிஞ்சதும் நேரா இங்க வந்திட்டாருல, அதான்.” என்றவள் தனது தோளில் இருந்த அவனது சட்டையில் வெளியே எட்டிப் பார்த்த பணத்தைச் சரியாய் வைத்து மடிக்க.. பெயர்த்தியைக் கவனித்த நாராயணி, “தூங்கத்தான் வந்தானா, மாமியார் வீட்டுக்கு.?”
“விடுங்க அத்தை. தமிழ் உட்காரு, நம்ம எல்லாருக்கும் காபிப் போட்டுக் கொண்டு வர்றேன். சேரலுக்கு அப்புறமா கொடுத்துக்கலாம்!” என்றுவிட்டுச் சமையல் அறைக்குச் சென்றார் சவிதா.
கோபாலன் தமிழின் முகத்தை நோக்க, “என்ன தாத்தா, அப்படிப் பார்க்கிறீங்க.?”
“இல்ல.. உன்னோட ஆச்சிக்குப் பதில் எதுவும் சொல்லாம இருக்கியே.?”
அவள் சின்னச் சிரிப்புடன், “மாமியார் வீட்டுல, தூங்காம வேற என்னென்ன செய்யலாம்னு சொல்லுங்க ஆச்சி. அவருக்கு இப்பத்தான கல்யாணம் ஆகியிருக்கு? அதுனால எப்படி நடந்துக்கிறதுனு தெரியல. நீங்க சொன்னீங்கனா, நானு இதை இதை.. இப்படி இப்படிச் செய்யணும்னு சொல்லிக் கொடுத்திடுவேன்!”
“என்ன கிண்டலா இருக்கா, எனைய பார்த்தா? அவன்கூட நாலு நாளு இருந்ததுக்கு, மட்டு மரியாதை இல்லாம பேசக் கத்துக் கொடுத்திட்டானா? என்ன பழக்கம் பழகிட்டு வந்திருக்க?”
“ஆச்சி, உங்களைக் கிண்டல் செய்வேனா நானு?” என மூத்தவரின் தாடையைப் பற்றிக் கொஞ்சிய தமிழ், “நிஜமா தான் சொல்லுறேன். அங்க அத்தை மாமா இருந்திருந்தா, மறுவீட்டுக்குப் போறப்ப இப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுத்திருப்பாங்க. ஆள் யாரும் இல்லையே? எனக்குமே தெரியல! அத்தானை எதுக்கு இதுல இழுக்குறீங்க.?”
“ஆமா.. இவளுக்குப் பேசத் தெரியாது. அவன் சொல்லிக் கொடுத்திருக்கான். எதுவும் தெரியாத, உன்னோட பேத்திக் கேட்கிறா இல்ல? சொல்லு, நாராயணி!” என்ற கோபாலன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு எழுந்து செல்ல, தமிழ் அப்பாவி போல் அவரைப் பார்த்தாள்.
அவள் பதில் எதுவும் உரைக்கவில்லை. வரும்பொழுது இருந்த மகிழ்ச்சி, எங்கோ காணாமல் சென்று விட்டது.
சவிதா கொடுத்ததை அருந்திவிட்டு, அறைக்குள் சென்றாள். சேரல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
திருமணம் ஆனதில் இருந்து அந்த நிமிடம் வரை வேறு எவ்வித சிந்தனையும் மனைவிக்குள் வரவிடாது, கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆடவன். ஆனால்.. ஆச்சியிடம் பேசிய கடந்த சில நிமிடங்களில், கணவனைக் கடந்து மற்றவற்றைப் பற்றிய எண்ணம் எழுந்தது தமிழிற்கு. முக்கியமாய் அவனிடம் அவளிற்குப் பிடித்தம் இல்லாதவைகள், நினைவுகளிற்குள் புகுந்து மனதை இம்சித்தன.
நிமிடங்கள் நகர்ந்தது, இல்லத்தில் அமைதி மட்டுமே சூழ்ந்திருந்தது. கோபாலன், மருமகள் எழுதிக் கொடுத்த மளிகைப் பொருட்களை வாங்கி வருவதற்காகச் சென்றிருக்க, நாராயணி கூடத்தில் கால்களை நீட்டியபடி அமர்ந்து இருந்தார்.
தமிழின் அறைக்குச் சென்ற சவிதா.. வாயிலில் நின்றபடியே, “சேரல் எழுந்திரிக்க நேரமாகுமா.?”
அவரின் வினாவில் வெளியே வந்தவள், “எதுக்குமா.?”
“டிபன் செய்யலாம்னு தான். அவன் முழிக்கிற நேரத்துக்குச் செஞ்சா, சூடா சாப்பிடுவான்ல.?”
“ஆச்சி தாத்தா எல்லாரும் சாப்பிடுவாங்க இல்ல? நீயி செய்மா. அத்தான் எப்படி இருந்தாலும் சாப்பிட்டுக்குவாரு!”
மகளைக் கனிவுடன் நோக்கியவர், “அவன், அவர் ஆகிடுச்சா? ‘உன்னோட மருமகன்’கிறது, இப்ப அத்தானா மாறிடுச்சு போலயே.? முன்னாடி எல்லாம், நானு சொன்னாலும் கேட்க மாட்ட? அவன்மேல இருந்த கோபம் எல்லாம், போயிடுச்சா.?”
மெலிதாய்ப் புன்னகைத்தவள், “இப்படிக் கேட்டுக் கல்யாணம் செய்யிவான்னு தெரியாது. முன்னாடியே தெரிஞ்சிருந்தா, அப்ப இருந்தே அத்தான்னு கூப்பிட்டு இருப்பேன். இதையே காரணமா சொல்லி, இங்கேயே இருக்க வச்சிருப்பேன்.”
“ஏன்டா, உனக்கு அந்த ஊரு பிடிக்கலயா.?”
மறுத்துத் தலையசைத்தவள், “அத்தானோட வாசம் பிடிக்கல. நியாயமா அதை நாத்தம்னு தான் சொல்லணும், ஆனா..”
மகளின் கரத்தை ஆறுதலாய் பற்றிக் கொண்ட சவிதா, “என்னாச்சுடா?”
“என்னை மாதிரி பைத்தியக்காரிய எங்கேயாவது பார்த்திருக்கியா ம்மா.? சின்ன வயசுல இருந்தே அவன்கூட வளர்ந்து, இதுதான்னு தெரியாமலேயே மனசுக்குள்ள ஆசைப்பட்டு, திடீர்னு போயிட்டானேனு கோபப்பட்டு, பேசாம இருந்து, திட்டித் தீர்த்து, திரும்ப வந்து கட்டிக்கிறியானு கேட்டதும்.. மறுக்க முடியாம தலையை ஆட்டி, தாலியைக் கட்டிக்கிட்டு, அவன் அப்படித்தான்னு புரிஞ்சிருந்தும் கூட.. மனசார அதை ஏத்துக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.”
“இப்ப தான, நாலு நாள் ஆகியிருக்கு. கொஞ்சம் பொறுமையா இருந்து பாரு, உன்னால அவன்கூடச் செட்டாக முடியுமானு..”
“ம்ம்.. ஒருவேள முடியலேனா.?”
“நானு, சேரல்கிட்ட பேசுறேன் தமிழ். வேற ஏதாவது தொழிலுக்கு ஏற்பாடு பண்ணலாம்.”
“அத்தான் ஒத்துக்குவாரா ம்மா.?”
“தெரியல. ஆனா அவனுக்குப் பிடிவாதம் அதிகம். அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டான். உனக்கே தெரியும்ல, பார்க்கலாம்!”
“ம்ம்..” என அவள் அரைமனதாய்த் தலையசைக்க, “வா, பால் கொழுக்கட்டை செய்யலாம். ஆச்சியோட சேர்ந்து நீயும் கொஞ்சம் மாவு உருட்டிப் போடு!” என்று அழைத்துச் சென்றார் சவிதா.
முகத்தை மறைத்தபடி வைத்திருந்த கரத்தை விலக்கினான் இளஞ்சேரல். மனைவிக்குத் தனது தொழில் பிடிக்கவில்லை என்பதை அறிவான் தான். எனினும் ‘நாத்தம்!’ என்று உரைத்ததை, ஏனோ அவனால் ஏற்க இயலவில்லை.
அவளின் விருப்பத்திற்காக, நீராடாமல் அருகில் கூடச் செல்ல மாட்டான் சேரல். ஆனால் காலை உணவிற்காக இல்லத்திற்கு வந்து செல்லும் பொழுது, அதற்கு எல்லாம் அவனிற்கு நேரம் இருப்பது இல்லை. அத்தோடு மீண்டும் அவன் கறிக்கடைக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் வந்து செல்லும் பொழுதும், குளிப்பது என்பது இயலாத காரியம்.
‘தனக்காக அவள் பொறுத்துக் கொள்கிறாள்!’ என அவன் எண்ணியிருக்க, ‘இல்லை, சகித்துக் கொள்கிறாள்!’ என்று தற்போது தான் அறிந்து கொண்டான்.
முன்னது.. விருப்பத்துடன் தானாய் முன்வந்து செய்வது. பின்னது.. வேறு வழியின்றிக் கட்டாயப்படுத்தித் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. இரண்டாவது எப்பொழுதுமே, ஆபத்தானது தான். அது உணர்வுகளைக் கொன்று, உறவினை உடைத்து விடும்.
‘இவ்வளவு கஷ்டப்பட்டு, நீயி என்னோட எதுக்கு வாழணும் தமிழ்மா? கல்யாணத்துக்குச் சம்மதம் இல்லனு அத்தைக்கிட்ட ஒரே ஒரு வார்த்தைச் சொல்லி இருந்தா, நானு இந்தப் பக்கமே வந்திருக்க மாட்டேனே.? ஆனா, இப்ப காலம் கடந்திடுச்சு. இனி, என்ன செய்யிறது.?’ என அவளோடு சேர்த்து, தன்னிடமுமே மானசீகமாய்க் கேட்டுக் கொண்டான் சேரல்.
தற்போது புரிந்தது, ‘அவளிடம் உணரும் விலகலிற்கானப் பொருள் யாது?’ என்று. துயில் தூரம் செல்ல, படுக்கையில் இருந்து எழுந்தான். சட்டையை அணிந்து கொண்டு வெளியே வர, “என்ன முழிச்சிட்டியா, இந்தா சாப்பிடு!” என்று பால் கொழுக்கட்டையை நீட்டினார் சவிதா.
“இவ்வளவு வேண்டாம் அத்தை. சும்மா கொஞ்சூண்டு மட்டும் கொடுங்க.”
“ஏன்டா, உனக்குதான் ரொம்பப் பிடிக்குமே?”
“இப்ப, சாப்பிடுற மூடு இல்ல. இதுக்கூட உங்களுக்காகதான்!” என இரு வாய் மட்டும் உண்டுவிட்டு, “கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன் அத்தை. தமிழ் எங்க, சொல்லீடுங்க!” என்று சமையலறையில் இருந்து வந்தவளைப் பார்த்தும் பார்க்காதது போல், சவிதாவிடம் உரைத்து விட்டு வெளியேறினான்.