சமையல் அறையில் பணியை முடித்திருந்தான் சேரல். அனைத்தையும் பாத்திரங்களிற்கு மாற்றி, எடுத்து வைத்து விட்டு, “தமிழ்மா.. எழுந்திரி..” எனக் குரல் கொடுக்க, அவளிடம் எந்த அசைவும் இல்லை.
“ராத்திரி எல்லாம் கதைப் பேசிட்டு, பகல் எல்லாம் தூங்குறதைப் பாரு! தமிழ்.. தமிழ்மா..” நான்கைந்து முறைக்கு மேலும் அழைத்து விட்டான்.
“இவளை..” என அருகே சென்று காதிற்குள் ஊதிவிட, லேசாய்த் திரும்பிப் பார்த்தாள்.
“எழுந்திரி மா, மணி பத்தாச்சு. சாப்பிட வேணாமா.?”
“தூக்கமா வருது அத்தான்.”
“சாப்பிட்டு தூங்கு, உள்ள இருக்கிற பிள்ளைக்குப் பசிக்கும்ல.?” என எழுவதற்கு உதவியவன், அவள் தயாராகி வருவதற்காகக் காத்திருந்தான்.
தமிழிடம் ஒரு டம்ளரை நீட்ட, “அத்தான், இதெல்லாம் கொடுமை!”
“ஒழுங்கா குடி! தலையில, கை வைக்க முடியல. உச்சியில அவ்வளவு சூடு. உடம்பு ஹீட் ஏறிடுச்சு. அப்புறம் நீர்க்கடுப்பு வந்திடும். அது ரொம்பக் கஷ்டமா இருக்கும்!” என்றிட, ஏற்கனவே மூன்றாம் மாதத்தில் அதுபோல் நடந்து வலியால் அவதிப்பட்டது எல்லாம் நினைவிற்கு வர, ஒரே மூச்சில் எலும்பு சூப்பைக் குடித்தாள்.
அடுத்ததாய் சீரகம் மிளகு மட்டும் சேர்த்து வதக்கிய சுவரொட்டியைக் கொடுக்க, கண்மூடிக் கொண்டு ஒவ்வொரு துண்டாய் விழுங்கினாள்.
“என்ன, சாப்பிட்டியா.?”
“உவ்வாக்!”
சட்டென்று சிரித்தவன், “கொஞ்ச நேரம் கழிச்சுத் தோசை இட்லி ஏதாவது ஊத்தி சாப்பிடு. நானு, ஜக்கையன் மாமாவை ஒரு எட்டு பார்த்திட்டு வந்திடுறேன்.”
“நீங்க சாப்பிடல அத்தான்.?”
“அக்கா கடைக்குக் கொண்டு வந்திச்சு, எட்டரைக்கே சாப்பிட்டேன். வேலை எதுவும் செய்யாத. பேசாம ரெஸ்ட் எடு, சரியா? எதுவும் வேணுமா உனக்கு.?”
ஏழாம் மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இன்னமும் வாந்தி மட்டும் நின்ற பாடில்லை. மாதங்கள் கடக்க, மசக்கையும் தொடர்ந்தது.
எதை உட்கொண்டாலும்.. உள்ளிருந்த குழந்தை, சிறிது நேரத்திலேயே அதை வெளியே தள்ளியது. கீதா தினமும் வந்து, வேண்டிய உதவிகளைச் செய்து பார்த்துக் கொண்டாள். சவிதாவும், பெரியவர்களும் கூட, மாதம் இரு முறையாவது வந்து ஐந்து அல்லது பத்து நாட்கள் தங்கி கவனித்துக் கொண்டனர்.
‘ஆச்சி ஏதாவது பேசினால், கணவனின் மனது காயமடையும். இல்லையேல் இவன் திரும்பப் பேசினால், வீணான வாக்குவாதம் உண்டாகும்!’ எனத் தனது உறவுகள் அதிக நாட்கள் ஆதிக்குடிலில் தங்காதவாறு பார்த்துக் கொண்டாள் தமிழ்.
சவிதாவும் கோபாலனும் அதை உணர்ந்து இருந்ததால், அதற்கு ஏற்றது போல் தங்களது பயணத்தையும் தங்கும் நாட்களையும் தீர்மானித்துக் கொண்டனர்.
சிலரின் உணர்வுகளும் சரி, பேச்சுகளும் சரி.. எப்பொழுதுமே மாற்றம் கொள்வது இல்லை. காலமும் கூட அவர்களிடம் தோற்றுப் போகும். நாராயணி அவ்வாறான ஒரு நபர் தான். அதனால் மற்றவர்களும் கண்டும் காணாதது போலவும், உணர்ந்தும் அறியாதது போலவும் இருந்து கொண்டனர்.
இரண்டு தினங்களிற்கு முன் நான்கைந்து முறைக்கும் மேல் தொடர்ச்சியாய் வாந்தி எடுத்து, எழ முடியாமல் படுத்திருந்தவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவரோ குளுக்கோஸை ஏற்றி, ஒருநாள் முழுக்கப் படுக்க வைத்து விட்டார் மருத்துவமனையில்.
‘இனி.. அவளை, அவளது போக்கிலேயே விட்டால் வேலைக்கு ஆகாது!’ என்று, தமிழைக் கவனிக்கும் பொறுப்பை முழுமையாய்த் தானே ஏற்றுக் கொண்டான் இளஞ்சேரல். அதற்காகத்தான் கடையில் இருந்து இடையில் வந்து மனைவியின் ஆரோக்கியத்திற்குத் தேவையானதை செய்து, உண்ண வைத்து விட்டுச் செல்கிறான்.
* * *
சேரலைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடி வந்தாள் காயத்திரி.
“என்ன, முகம் எல்லாம் பளபளனு இருக்குது. உங்கய்யா, எதுவும் பேசுனாரா.?”
“இல்ல.. ஆனா அம்மாவும் அப்பாவும் பேசிக்கிட்டாங்க.”
“அப்ப.. நல்ல பதிலை எதிர்பார்க்கலாம்!” என அவன் புன்னகைக்க.. காயத்திரி எதிர்பார்ப்புடன், “அவன் வரலயா மாமா.?”
“சம்மந்தம் பேச அவன் வரணுமா? இல்ல, அவனோட வீட்டுல இருந்து வரணுமா.?”
அவர் சிரித்து, “ஒரு முடிவோட தான் வந்திருக்கப் போல.? காயத்திரி, இங்க வா. நீயி என்ன சொல்லுற.?” என மகளிடம் வினவ, “நீங்க சொன்னா, சரிதான்பா!” என்று நழுவி விட்டாள் அவள்.
சிறிது நேரத்திலேயே கீதாவும் மோகனும், ரங்கனின் அன்னையோடு பரமசிவத்தையும் அழைத்து வர, அனைவரும் ஒன்று கூடி பேசி நிச்சயித்து, இரண்டு மாதங்களில் திருமணத் திகதியைக் குறித்தனர்.
கண்களில் கனவுகளை நிறைத்துக் காலத்தைக் கடத்திட, திருமண நாளும் வந்து சேர்ந்தது. கீதாவும் சேரலும் தான் நிற்க நேரமின்றி, பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தனர் மண்டபத்தில்.
“வெள்ளிக் கிழமையா விசேஷத்தை வையிங்க. மத்த நாளுனா, வந்து தலையை மட்டுந்தான் காட்டிட்டுப் போக முடியும்!” எனக் கேட்டிருந்தான் சேரல். அதற்காகவே நாளை பார்த்து முகூர்த்தத்தைக் குறித்து விட்டார் ஜக்கையன்.
காயத்திரி மற்றும் சாரங்கனின் பேச்சையும் சிரிப்பையும் கண்டு ஒருபுறம் மனம் மகிழ்ந்தாலும், மறுபுறம் ‘இருவருக்கும் இடையே முன்னரே அறிமுகம் இருக்குமோ?’ என்ற எண்ணம் அரித்துக் கொண்டே இருந்தது.
இருந்தாலும் கூட.. மகளின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் பெரியதாய்த் தோன்றிட வில்லை அவருக்கு. ஒற்றைப் பெண்.. அவளை ஒரு நல்லவனாய் மட்டும் அல்லாது வல்லவனாகவும் இருப்பவன் கையில் பாதுகாப்பாய் ஒப்படைத்து, அவனிற்காக எதைச் செய்யவும் சித்தமாய் இருந்தார் தந்தையானவர்.
அதனால் தான், முதலில் சேரலை மருமகனாக்க விரும்பினார். ஆனால் அவனின் பிடித்தம் செந்தமிழாய் இருக்க, மனதை மாற்றிக் கொண்டார். தற்போது சாரங்கன்.. சேரல் அளவிற்கு இல்லை என்றாலும் கூட, குணத்திலும் உழைப்பதிலும் நேர்மை ஆனவனாகவே தெரிந்தான். அதனாலேயே இரண்டாம் சிந்தனை இன்றி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்.
எதார்த்தம் யாதெனில்.. சில நேரங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான தருணங்களில் ஒருவரைப் பற்றிய தீவிர விசாரணையை விட, அவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை வெற்றி கண்டு விடும்.
இந்த அடிப்படையில் தான், காலங்காலமாய்த் திருமணங்கள் நடந்தேறுகின்றன. இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வரை.. பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்தாலும், மனித உணர்வுகளின் அடிப்படை என்பது நம்பிக்கை தானே.? ஜக்கையனும் அதன் வழியிலேயே, காயத்திரியைச் சாரங்கனிற்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்.
* * *
ஒன்பதாம் மாதம் துவங்கி இருந்தது தமிழிற்கு. அதனால் அடுத்த வெள்ளியில் மனைவிக்குச் சீமந்தத்தை நடத்த முடிவு எடுத்திருந்தான் சேரல். இல்லத்திற்கு முன் பந்தல் அமைத்து, வேண்டிய ஏற்பாடு செய்து விட்டான்.
நாளை விசேஷம் என்ற நிலையில் ‘ஒரு எட்டு, ஆடு கோழியைப் பார்த்திட்டு வந்திடுறேன்!’ எனச் சொல்லிச் சென்ற கணவனை வெகு நேரமாய்க் காணாது, வாயிலை எட்டிப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தமிழ். அவளின் இரண்டு கைப்பேசி அழைப்பிற்கும் எதிர்புறம் பதில் தரப்படவில்லை.
ஒன்பது மணிக்கு இல்லம் வந்து சேர்ந்தவனைக் கேள்வியாய்ப் பார்த்தவள், “என்ன அத்தான், இவ்வளவு நேரம்? ஃபோன் கூட எடுக்கல.?”
“அதுக்கு என்ன செய்ய முடியும்? தொழில்னா லாபம் நட்டம் இருக்கத்தான செய்யும்.? விசேஷம் வச்சிருக்க நேரத்துல, இப்படி ஆகிடுச்சேனு தான் மனசுக்குச் சங்கடமா போச்சு. ஜக்கையன் மாமா, கருப்பசாமி கோயிலுக்குப் ஒருதடவைப் போயிட்டு வானு சொன்னாரு. அதான்..” என்றபடி, கொண்டு வந்த திருநீறை அவளிற்குப் பூசி விட்டான்.
உரிமையானவள் சிந்திய புன்னகை, உடையவனின் மனதை லேசாக்க, இயல்பிற்குத் திரும்பினான்.
வளைப்பூட்டும் விழா நன்முறையில் நடந்தேற, மனைவியைப் பிறந்தகத்திற்கு அனுப்பி வைத்தான் சேரல். வாரம், மூன்று முறை அவளைச் சென்று பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். அத்தோடு வெள்ளிக்கிழமை முழுவதும் அங்குத் தங்குவது வாடிக்கையாய் மாறியது.
ஞாயிற்றுக்கிழமை கடையை முடித்துவிட்டு வந்தவனின் கைப்பேசி ஒலிக்க.. மனையாளின் பெயரைக் கண்டு முகம் மலர்ந்தவன், “என்ன தமிழ்மா. உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு.?”
“ம்ம்.. இன்னைக்கு நீங்க வர்றீங்களா அத்தான்.?”
“ஏன்மா, அதான் நாளைக்கு வர்றேன்னு சொல்லி இருந்தேன்ல? வலி எதுவும் இருக்கா.? டாக்டர் கொடுத்த தேதிக்கு இன்னும் பத்துநாள் இருக்கே?”
அவள் அப்படித்தான். பதினோரு மாத இல்லற வாழ்வில் இதெல்லாம் பழகிப் போய்விட்டது. அத்தோடு பிடித்தமானதும் கூட.
‘பேசாதீங்க!’ என்று சினந்து கொள்வதும், பின்னர் ஒரு மணி நேரம் கூடத் தாக்குப் பிடிக்காமல், ‘அத்தான்!’ என்று ஓடி வருவதும் அவளாகத்தான் இருப்பாள்.
உண்மையில் மனைவியாய் மாறியவளிற்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத் தனம் தொலையாமல் இன்னும் அப்படியே இருக்கக் காரணம், சேரலின் அன்பும் அனுசரணையும் தான்.
அதைக் கணவனிற்கு மனைவியிடம் இருக்கும் ‘காதல்’ என்று உரைத்துவிட இயலாது. இருவருக்குமான பந்தம் அந்த ஒற்றைச் சொல்லில் அடங்கிடாது என்பதே எதார்த்தம். இன்னும் காலம் இருக்க, அந்த உறவிற்குப் பல பரிமாணங்கள் உண்டு.