ஆதிக்குடிலை நோக்கிய பேருந்து பயணத்தில் இருந்தான் இளஞ்சேரல். வெளிப்புறம் சிதறிய சாரல் மழையின் விளைவாய், குளிர் காற்றுத் தேகத்தை இதமாய்த் தழுவிச் செல்ல, தமிழின் நினைவுகளும் மனதை வருட துவங்கியது.
செந்தமிழ், சவிதா ஜெயராம் தம்பதியரின் ஒரேமகள். இருபத்திரண்டு வயது யுவதி.
பதினேழு வருடங்களிற்கு முன்..
தாய்த் தந்தை இருவரையும் ஒரே நேரத்தில் காலனிடம் கொடுத்து விட்டு தன்னந்தனியாய் நின்றவனது கையைப் பற்றி, “வா, போகலாம்!” என்றார் ஜெயராம்.
அவன் யாரென்றே புரியாது கேள்வியாய்ப் பார்க்க, “இவரு, உன்னோட மாமா. உங்கம்மா கங்காவோட பெரியப்பா மகன்!” என அறிமுகம் செய்வித்தார் பரமசிவம்.
“ஆனா பெரியப்பா..” என்று பத்து வயது சிறுவனாய் ஒன்றும் புரியாது அழ, “சேரா, மாமா கூடப் போடா. அவரு உன்னைப் படிக்க வச்சு, நல்லா பார்த்துப்பாரு!” எனக் கீதாராணியும் தன் பங்கிற்கு எடுத்துரைக்க, “நானு போக மாட்டேன்கா. போக மாட்டேன்!” என்று அவளைக் கட்டிக் கொண்டு அழுதான்.
வேணுகோபாலன், “சின்னப் பையன், பெத்தவங்க இல்லாம தனியா என்ன செய்யிவான் பாவம்?”
“தனியாவா.? ‘நீங்க யாரும் எனக்கு வேண்டாம். அவன் மட்டும் போதும்’னு தான ஓடிப்போனா, உங்க தம்பி மக. அப்புறம் என்ன.?”
ஜெயராம், “அம்மா, நடந்து முடிஞ்சது அது. இன்னைக்கு நிலைமையைப் பாருங்க!”
“நம்ம வீட்டு நிலைமை தெரியும்ல உனக்கு? வர்ற வருமானத்துல இன்னொரு பிள்ளையையும் வளர்க்க முடியாதுனு தான, தமிழ் ஒருத்தியே போதும்னு முடிவு செஞ்ச நீயி? இப்ப, அவனையும் வச்சு எப்படிச் சமாளிப்ப?”
“எல்லாம், நாம பெத்தவனால வந்தது! அன்னைக்கே வேண்டாம்னு சொன்னேன். பெத்தவப் பேச்சைக் கேட்காம.. அந்தக் கங்காக்கு காதலிச்சவனோட கல்யாணத்தைச் செஞ்சு வச்சு, உங்க தம்பி குடும்பத்தோட பகையாகி, பழிச்சொல் கேட்டு, இன்னைக்கு இந்தப் பாரத்தையும் சுமக்கணும்னு தலையெழுத்தா நமக்கு.?”
“அதுக்கு, அந்தச் சின்னப் பையன் என்ன செய்யிவான்.?”
“பெத்தவச் செஞ்ச பாவத்துக்கு அனுபவிக்கிறான். இவனோட சேர்ந்து, நாமளும் ஏன் அனுபவிக்கணும்.?”
“மனசாட்சி இல்லாம பேசாத நாராயணி!”
“அந்த மனசாட்சி, கால் காசுக்கு ஆகாது. எனக்கு என்னோட பிள்ளையும், அவன் குடும்பமும் நல்லா இருக்கணும். அவ்வளவு தான்! என்னை நீங்க கல்நெஞ்சக்காரி, கொடுமைக்காரினு நினைச்சாலும் பரவாயில்ல. கங்காவோட மகன், இங்க இருக்குறதுல சம்மதம் இல்ல. இனி உங்களோட இஷ்டம்!” என்றுவிட்டுச் செல்ல, ஒரு பெருமூச்சை விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார் வேணுகோபாலன்.
அனைத்தையும் கேட்டபடி.. கூடத்தில் ஒரு ஓரத்தில் வெற்றுத் தரையில் கண்களில் நீரோடு படுத்திருந்தான் இளஞ்சேரல். சவிதா, ஜெயராமன், பெரியவர் என எவர் பேசியும் அவன் சமாதானம் அடையவில்லை.
“நானு ஊருக்குப் போறேன். கீதா அக்காக்கிட்ட விட்டுடுங்க, அது என்னைப் பார்த்துக்கும்!” என்பது மட்டுமே, அவன் தொடர்ந்து உரைத்தது.
‘நாம் பேசாமல் இருந்தால், அவனும் அந்தப் பேச்சை நிறுத்தி விடுவான்!’ என்றெண்ணி அவர்களும் அமைதி ஆகினர்.
சிறுவனிற்குத் துணையாய் அன்றிரவு ஜெயராம் கூடத்திலேயே படுக்க, “அப்பா அப்பா, நானு நானு..” என ஓடிவந்து தந்தையின் அருகில் படுத்தாள் தமிழ்.
சேரலைப் பார்த்துவிட்டு, “இவன், ஏன் இங்க இருக்கான்?”
“அதெல்லாம் இல்ல தமிழ்மா. சேரா, ரொம்ப நல்ல பையன். அப்பா ஊருக்கு போயிட்டா, நீயி அழுவ இல்ல? அதேமாதிரி தான் அவனும், அம்மா அப்பா கூட இல்லைனு அழுகிறான்! இனிமே இப்படிப் பேசக் கூடாது, சரியா?”
“சரிப்பா!” என்றவள், “சரி! அழாத. நீயி நல்ல பையன் தான். அம்மா அப்பா சாமிக்கிட்ட இருந்து வந்திடுவாங்க!” என்று சமாதானம் உரைத்து, அவனிற்குத் தலையணையையும், போர்வையையும் கொடுத்தாள்.
சேரல், எதையும் கண்டு கொள்வதாய்த் தெரியவில்லை. அறியாத வயதாய் இருந்தால், உடனே மனம் மாறி இருப்பானோ என்னவோ? நன்கு விபரம் தெரிந்த பருவம். பத்து வயதைக் காட்டிலும், அதிகமான புரிதலுடன் இருந்தான். கங்கா மற்றும் சபாபதியின் வளர்ப்பு அப்படி. பொறுப்பான பணியில் இருந்த இருவரும்.. தங்களது மகனை, அதற்கு ஏற்றார் போல் வளர்த்து இருந்தனர்.
அவனின் மனதில்.. ‘ஆதிக்குடில் தான், தனது ஊர். அங்கு இருப்பவர்கள் தான், தனக்கு உறவினர்’ என்று பதிந்து விட்டதாலோ என்னவோ.. ஜெயராமின் குடும்பத்துடன் இயல்பாய் பழக இயலவில்லை.
தாமரை இலை நீராய், அங்குத் தனது வாழ்வைத் துவக்கினான். நாட்கள் செல்ல செல்ல.. அத்தை மாமாவின் அன்பிலும், தமிழின் குழந்தைத் தனத்திலும் அவர்களோடு ஒன்றி விட்டான்.
ஆனால் நாராயணி மனதளவில் அன்றைப் போலவே, இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார். மூவருடனும் இணைந்துவிட்ட சேரலால், ஏனோ பெரியவர்களுடன் ஒட்ட இயலவில்லை. அதனால், அப்படியே இருந்துவிட்டான்.
முதன்முதலாய்.. தானாய் வந்து பேசிய, ஐந்து வயது தமிழின் அழகிய முகம், இன்னுமே அவன் நினைவுகளில் பசுமையாய் இருந்தது.
அப்பொழுதெல்லாம் அவள் குழந்தையாய் தான் தெரிந்தாள். பூப்பெய்தும் வரை, குழந்தை போல் நினைத்தே விளையாடிக் கொண்டிருந்தான்.
எதார்த்தத்தை உணரும் காலம் என்ற ஒன்று வருமே! அது போலான தருணம், அவனது வாழ்விலும் வந்தது. அன்று அவளை மட்டும் அல்லாது, தன்னையுமே உணர்ந்து கொண்டான் இளஞ்சேரல்.
அலங்கரித்த பதுமையாய் பன்னிரண்டு வயது தமிழ், இல்லத்தின் ஒரு ஓரத்தில் படுத்திருக்க, பெரியவர்கள் எல்லாம் இணைந்து வரவு செலவு கணக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
சவிதா, “என்னாச்சுங்க?”
ஜெயராம், “இந்த மாசம் பிள்ளைக்குத் துணி எல்லாம் வாங்கினதுல செலவு கொஞ்சம் அதிகமாயிடுச்சு.”
கோபாலான், “என்னோட பென்சன் ரூபா இருக்கே ராமு? நான் தர்றேன்!”
நாராயணி, “சும்மா இருங்க, நீங்க! தமிழோட கல்யாணத்துக்குச் செய்யணும்னு, நானே அதை எண்ணி எண்ணி சேர்த்து வச்சிக்கிட்டு இருக்கேன்!”
“அதுக்கு இன்னும் காலம் இருக்கேமா?”
“என்ன, பெரிசா காலம்? அவளுக்கு இப்ப வயசு பன்னெண்டு. என்ன, இன்னும் ஒரு எட்டு, பத்து வருஷம் இருக்குமா? அதுவரைக்கும், நாம இருப்போமா இல்லையானு கூடத் தெரியல. அவ பேருலனு பேங்க்ல ஏதாவது போட்டு வச்சிட்டா, அந்தச் சமயத்துல அவசியத்துக்கு உதவியா இருக்கும்ல? இப்ப இருக்கச் செலவை எப்படியாவது சமாளிச்சுக்கலாம், அந்தப் பணத்தை எடுக்க நினைக்காதீங்க!”
ஜெயராம், “ஆமா அப்பா, நானும் அதையே தான் நினைச்சேன். நாளைக்கு அவசர தேவைனா, நாம யார்கிட்ட போய் நிக்க முடியும்? அதனால அந்தப் பணம், அப்படியே இருக்கட்டும். இந்தச் செலவை எல்லாம், நான் பார்த்துக்கிறேன்.”
சவிதா மாமனாரிடம், “நீங்க சங்கடப்படாதீங்க மாமா. இந்த ஒரு மாசம் தான, நான் சமாளிச்சிடுறேன்!” என்றிட, அவரவர் எழுந்து படுக்கைக்குச் சென்றனர்.
முதியவர்களைத் தவிர, மற்ற நால்வருக்குமே கூடத்தில் தான் தூக்கம்.
ஜெயராமின் அருகே படுத்திருந்த இளஞ்சேரல், “ஏன் மாமா, திடீர்னு தமிழுக்குப் புதுத்துணி எடுத்து விசேஷம் எல்லாம் வச்சீங்க? அதுனால தான, செலவு கூடுச்சு?”
அவர் சிரித்து, “என்ன பெரிய விசேஷம்? நாம ஆறு பேரு மட்டும்தான, யாரையும் கூப்பிடலயே?”
“அவளுக்குச் செந்தமிழ்னு பேர் வச்சது யாருனு தெரியுமா.?”
அவன் கேள்வியாய் நோக்க, “உன்னோட அம்மாதான். உனக்குத்தான் தெரியுமே, அவ தமிழ் டீச்சர். நீயி தமிழுக்கு இன்னைக்கு மாலைப் போட்டு, புது டிரஸ் எல்லாம் கொடுத்தியே.. அது உன்னோட அப்பா செய்ய வேண்டியது!” எனப் பெருமூச்சு விட, “அப்படினா.. அதை நானு, என்னோட காசுல தான செய்யணும் மாமா.?”
அடுத்தடுத்த மாதங்களில் இல்லத்தின் பொருளாதார நிலைமை, மேலும் மோசம் அடைந்தது. தங்கை மகனின் கல்லூரி படிப்பிற்காக, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயராம். அதை அறிந்த கோபாலன் தனது பணத்தைக் கொடுக்க முன்வர, வீட்டில் சிறிய சலசலப்புத் துவங்கியது.
நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த இளையவனிற்குத் ‘தன்னால் தானே இதெல்லாம்?’ எனத் தோன்றிட, “நானு ஊருக்குப் போறேன்!” என்றான் மாமனிடம்.
அவர் அதிர்ந்து, “என்னடா சொல்லுற.?”
“ஆமா மாமா. அப்ப, எனக்கு விவரம் தெரியாத வயசு. அடுத்து என்ன செய்யிறதுனு புரியாம இருந்தேன். அதுனால, நீங்க இங்க கூட்டிட்டு வந்தீங்க. ஆனா, இப்ப அப்படி இல்லயே?”
“சரி! இப்ப மட்டும் என்ன, பெருசா வளர்ந்துட்டியாக்கும்? அவ்வளவு விவரம் ஆகிட்டயோ, ஊருக்கு போயி என்னடா செய்யிவ?”
“அப்பாவோட நிலம் இருக்கு, வீடு இருக்கு. விவசாயம் செய்யிறேன் மாமா!”
“ஏழு வருஷம் ஆச்சு, ஊர்ல உருப்படியா மழை பேய்ஞ்சு. ஒண்ணு, வெள்ளம் வந்து எல்லாத்தையும் மொத்தமா அடிச்சிட்டு போயிடுது. இல்லனா விதைச்சது தண்ணி இல்லாம காய்ஞ்சு கருகிடுது. கிணத்துத் தண்ணிய வச்சு, ஏதோ போட்ட முதல்லயாவது எடுக்கணுமேனு அங்க இருக்கவங்க போராடிக்கிட்டு இருக்காங்க. இதுல இவன் போயி, விவசாயம் செய்யப் போறானாம். இந்த மாதிரி வெட்டியா பேசாம, முதல்ல படிக்கிற வேலைய பாரு!” எனக் கண்டிப்பாய் உரைத்து விட்டார் ஜெயராம்.
இளஞ்சேரல் பேசிப் பேசிப் பாத்தான்.
“படி, அதுதான் உன்னோட எதிர்காலம்!” என்று மீண்டும் மீண்டும் அதையே அவர் வலியுறுத்திட, ஒருநாள் காகிதத்தில் ஆதிகுடிலுக்குச் செல்வதாய் எழுதி வைத்துவிட்டுக் கிளம்பி விட்டான்.