Skip to content
Post Views: 4,320
தூறல் – 37
வயிறு முட்ட தூங்கி இரவு 8 மணிக்கு மேல்தான் கண் விழித்திருந்தாள் சவி.
Advertisement
குரு சொன்ன பால் சொம்பு, பனீர் பக்கோடா போன்ற விஷயங்கள் எதுவும் நடக்காமல் பெரியவர்களின் வாயை அடைத்திருந்தாள் அஞ்சலி.
சரி அவைதான் இல்லாவிட்டால் போகிறது புதுமண தம்பதியருக்கான தனிமையை மட்டுமாவது அமைத்துக் கொடுத்து விடலாமே என்று பெரியவர்கள் அனைவரும் திட்டமிடலோடு சுற்றிக் கொண்டிருந்தனர்.
Advertisement
Advertisement
கபிலன்கூட தங்கை மகளின்மேல் பாசத்தை பொழிந்து எங்கெங்கோ அழைத்துச் செல்வதாககூட கூறிப் பார்த்தான். அசைந்தாளா பிள்ளை..? அப்பனை விட்டு இங்கும் அங்கும் ஆடவும் இல்லை அசையவும் இல்லை.
கொட்ட கொட்ட விழித்தபடி குதூகலமாய் அவனோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.
Advertisement
“சவி மயிலு… காமாட்சி பாட்டி வீட்டுக்கு வர்றியா..? நானும் ராமு தாத்தாவும் உனக்கு நிறைய கதை சொல்றோம்… மாமா வெளிநாட்டுல இருந்து நிறைய பொம்மை எல்லாம் வாங்கி அனுப்பி வச்சிருக்காய்ன்… அதையெல்லாம் வச்சு விளையாடலாமா..?”
அவள் தளிர்க்கால்களை வருடியபடி ஆசையாக கேட்டார் காமாட்சி.
“இங்க வாங்க… இங்க வந்து உட்கார்ந்து கதை சொல்லுங்க… நான் அப்பாமேல சாய்ஞ்சுக்கிட்டே கதையை கேக்கிறேன். பொம்மை எல்லாம் இங்க கொண்டு வந்து குடுங்க… இங்க வச்சே விளையாடலாம்…”
தந்தையின் நெஞ்சில் உல்லாசமாய் சாய்ந்தபடி கால்களை ஆட்டிக் கொண்டு அவள் பேச அசடு வழிந்த காமாட்சியை பார்த்து குபீரென சிரித்திருந்தான் குரு.
“இது வெஷக்கழுதையால்ல இருக்கு…” மனைவியின் காதில் முணுமுணுத்தார் ராமலிங்கம்.
லதா, கர்ணன், கபிலன் என்று மாறி மாறி சவியை எப்படியேனும் இந்த ஒரு இரவுக்கு குருவிடம் இருந்து பிரித்து தங்களோடு வைத்துக் கொள்ள எத்தனையோ பரிட்சார்த்த முயற்சிகள் செய்து பார்த்து விட்டனர்.
அவர்கள் போட்ட அனைத்து பால்களையும் நோ பால்களாக மாற்றி அவர்களிடமே திருப்பி அனுப்பிக் கொண்டு இருந்தாள் சவி.
ஒரு கட்டத்தில் வடக்கு ஆவணி மூலவீதியே தெரியும் அளவிற்கு வாயைத் திறந்து கொட்டாவி விடத் தொடங்கி இருந்தார் ராமலிங்கம்.
சோபாவில் அமர்ந்த நிலையிலேயே சாமியாடிக் கொண்டிருந்தார் கர்ணன்.
அடக்கவே முடியாமல் சிரித்தபடியே அவர்களிடம் வந்தாள் அஞ்சலி.
“தயவுசெஞ்சு எல்லாரும் போய் படுத்து தூங்குங்க. சவி இப்போதைக்கு தூங்க மாட்டா… நாங்க பாத்துக்குறோம்… நான்தான் உங்க எல்லார்கிட்டயும் தெளிவா சொல்லிட்டேனே…” என்றவள் தன் அண்ணனிடம் திரும்பி “எல்லாரையும் படுக்கச் சொல்லிட்டு நீயும் போய் படுண்ணே…” என்று கூறி குருவிடம் திரும்பினாள்.
“நாம போலாங்க…”
அவள் சொன்ன அடுத்த நொடி மகளை கையில் தூக்கிக் கொண்டு எழுந்து கொண்டான் குரு.
“அப்பா… எனக்கு அம்புலி மாமா கதை சொல்றீங்களா..?”
அவன் தாடையை பற்றிக் கொண்டு கண்களை விரித்து தலையை ஆட்டிக் கொண்டே கேட்டாள் சவி.
“ஆமாடி… உங்கொப்பன் உனக்கு அம்புலி மாமா கதை சொல்லுவாய்ன்… உங்காத்தா அனார்கலி கதை சொல்லுவா…மூனு பேருமா சேர்ந்து விடிய விடிய குத்த வச்சு கூடாரம் கட்டுங்க… ந்தா… என்னாங்க… கொட்டாவி விடுறேன்னு பேருல ஊளையிட்டுக்கிட்டே கெடக்குறீங்க… எந்திரிங்க மொதல்ல… நாம போய் படுக்கலாம்…”
எரிச்சலாய் கூறியபடியே தூக்க போதையில் கண்கள் சொருக அமர்ந்திருந்த ராமலிங்கத்தின் கையைப் பிடித்து கிள்ளி எழுப்பி இருந்தார் காமாட்சி.
விடாமல் சிரித்தபடியே தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் குரு தம்பதியர்.
இன்னுமே காலையில் உடுத்தியிருந்த திருமண உடையை இருவருமே மாற்றி இருக்கவில்லை. வழக்கமான டி-ஷர்ட் லுங்கிக்கு மாறிக் கொண்டான் குரு. அஞ்சலியும் எளிமையான காட்டன் நைட்டிக்கு மாறி இருந்தாள். அறையில் கட்டில் மெத்தை இருந்தாலும் தரையில் படுக்கையை விரித்து மூவரும் படுத்துக் கொண்டனர்.
சவிக்கு மெத்தையில் படுப்பது பிடிப்பதே இல்லை. தரையில் பாய் விரித்து படுத்துக் கொள்வதைத்தான் விரும்புவாள்…
அப்படியே பழகியும் இருந்தாள். அவளோடு படுக்கும்போது தரையில்தான் படுத்துக் கொள்வான் குரு. இன்றும் மகளை நடுவில் போட்டு இருவரும் இருபுறமும் படுத்துக் கொண்டனர்.
இன்னும்கூட குருவின் இதழ்களில் தெவிட்டாத புன்னகை தேங்கியே நின்றிருந்தது.
“வாய் சுளிக்கிக்கப் போகுது வாத்தியாரே… என்ன ஒரே இளிப்பா இருக்கு…”
அவன்புறமாக ஒருக்களித்து படுத்தபடி கேட்க நடுவில் படுத்திருந்த மகளின் கை கை மேல் கை போட்டபடியே அவனும் அவள்புறமாக ஒருக்களித்து திரும்பிப் படுத்தான்.
“கல்யாணம் முடிச்சா அந்த ராத்திரியே சாந்தி முகூர்த்தம் நடந்தாகணும்னு பெரியவங்களுக்குள்ள ஆழமான சம்பிரதாயம் உள்ளே ஓடிப் போயிடுச்சுல்லடி…”
“இப்போவரைக்கும் அப்படித்தானே…”
“அப்பா… சாந்தி முகூர்த்தம்னா என்ன..?”
டமாலென ஒரு அணுகுண்டை தூக்கி அவன் தலையில் போட்டிருந்தாள் சவி.
கையில் குட்டி பொம்மையை வைத்துக் கொண்டு அதோடு மழலை பாஷையில் பேசியபடி நடுவில் படுத்திருந்த மகள் தங்களது பேச்சை கவனித்திருப்பாள் என்று அவனும் யோசித்து இருக்கவில்லை. திக்கென அதிர்ந்து அஞ்சலியை திரும்பிப் பார்த்தான்.
“காமாட்சி பாட்டி வீட்டு பக்கத்துல சாந்தி அக்கா இருக்காங்கல்ல… அவங்களுக்கு அடுத்த வாரம் கல்யாணம்… அதைத்தான் அப்பா சாந்திக்கு முகூர்த்தம்னு சொன்னார்…”
சட்டென சமாளித்திருந்தாள் அஞ்சலி.
“உங்க கல்யாணம் மாதிரியேவாம்மா..?”
“ம்ம்… ஆமா…”
தலையாட்டிக் கொண்டு தாயின் மீது ஒரு காலையும் தகப்பனின் மீது மறு காலையும் போட்டு உல்லாசமாக விழிகளை உருட்டிக் கொண்டு படுத்திருந்தாள் அவர்களது செல்வ மகள்.
இழுத்து பெருமூச்சு விட்டு கண்களை உருட்டினான் குரு.
என்ன என்று புருவத்தை உயர்த்தி அவனிடம் அஞ்சலி கேட்க ‘எப்பா… புள்ள ரொம்ப ஷார்ப்…’ என்று மெலிதாக வாயை அசைத்து கண்களை நெற்றியோடு உயர்த்தி சமிக்ஞை பாஷை பேசினான் குரு.
மெல்லிய புன்னகையோடு அருகருகே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே மகளின் மீது வைத்திருந்த கையை மென்மையாய் பற்றிக் கொண்டு அவர்களுக்கான அந்த முதலிரவை ஆழ்ந்த காதலோடு அனுபவித்தபடி தங்களையும் மீறி மெல்ல உறங்கிப் போயிருந்தனர் இருவரும்.
பெற்றவர்களை உறங்க வைத்து அதன் பின்புதான் ஒரு வழியாக உறங்கி இருந்தாள் சங்கவி.
மறுநாளும் வேகமாய் உருண்டோடி இருக்க ஞாயிறு மதியமும் கடந்திருந்தது. அன்று இரவு ராதாவோடு அஞ்சலியும் ராமேஸ்வரம் கிளம்ப வேண்டும். மறுநாள் பள்ளிக்கு வேலைக்கு சென்றே ஆக வேண்டும். முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால் கணவன் மனைவி இருவருக்குமே கடமை கழுத்தை பிடித்து நெரித்து இழுக்கிறது.
திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் கணவனை தனியே பிரிந்து செல்ல அவளுக்கும் மனம் இல்லை. அவனுக்குமே முகத்தில் ஒரு சிறு வாட்டம்தான். ஆனாலும் கல்வியை போதிக்கும் முக்கியமான பணியில் இருப்பவர்களுக்கு கடமை கண் போன்றது அல்லவா.
திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பது ராதாவின் நெடுநாளைய ஆசை. லதாவும் காமாட்சியும் அவரையும் அழைத்துக் கொண்டு காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி இருந்தனர். ஊர் சுற்றப் போகிறார்கள் என்பதால் தானும் ஆசையாக அவர்களோடு இணைந்து கொண்டாள் சவி.
இந்த தனிமையாவது கணவன் மனைவிக்கு கிடைத்துக் கொள்ளட்டும் என்று எண்ணிக் கொண்டவர்களாய் குழந்தையை அழைத்துக் கொண்டு மற்றவர்கள் கிளம்பி இருந்தனர்.
பருவத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மறுநாள் நடக்கவிருக்கும் தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்தபடி கூடத்தில் அமர்ந்திருந்தான் குரு.
“தேத்தண்ணி வேணுமா குரு..?”
சமையலறையில் நின்றபடி கேட்டவளை விழிகள் விரித்து ஆச்சரியமாய் திரும்பிப் பார்த்தான் குரு.
“இலங்கையில டீக்கு அப்படித்தானே கதைப்பாங்க… சரியாத்தானே சொன்ன நான்…”
இலங்கைத் தமிழ் போன்ற ஏற்ற இறக்கத்தோடு சொன்னவளை மெச்சுதாய் பார்த்து கண்களோடு புருவத்தை ஏற்றியபடியே அவளை நெருங்கி வந்தான்.
அவன் பார்வையின் மாற்றமும், இதழ்களில் தேங்கியிருந்த குறும்புப் புன்னகையும், நெருங்கி வந்த வேகமும் கண்டு தன்னிச்சையாய் கால்கள் பின்னால் நடக்க சமையலறைக்குள் நுழைந்தவளை அவன் நெருங்கிக் கொண்டே வர அவனை பார்த்தபடியே நகர்ந்தவள் சுவற்றில் முட்டி நின்றிருந்தாள்.
அவளோடு நெருங்கி நின்றவன் அவள் முகத்தையே விழிகளால் அளந்தான்.
“தேத்த..ண்ணி வேணா..மா..?”
அவன் பார்வை தந்த தாக்கத்தில் குரல் முற்றிலுமாக உள்ளே இரங்கி இருந்தது.
வேண்டாம் என்று இடவலமாய் தலையசைத்தவன் அவள் முகத்தோடு முகம் உரச மில்லி மீட்டர் இடைவெளியில் நின்றிருந்தான்.
“வே..ற என்..ன வேணு..ம்..?”
குரல் தடுமாறியது.
பதில் கூறாமல் வலது கை சுட்டுவிரலால் அவள் முகவெட்டை மொத்தமாக அளந்தான். உடலுக்குள் ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள் குபீரெனப் பறந்து பலவாக்கில் கிளர்ச்சியை ஏற்படுத்த அவள் விழிகள் மெல்ல மூடிக்கொண்டன.
மூடியிருந்த இரு விழிகளிலும் மென்மையான இதழ் ஒற்றல் நடந்து முடிந்திருக்க படக்கென விழித்துப் பார்த்தாள்.
இரு கைகளிலும் அவள் முகத்தை ஏந்திக் கொண்டவன் தன் உயரத்திற்கு நிமிர்த்தினான்.
கிறங்கிய பார்வையுடன் அவள் முகம் நோக்கி குனிய தலையை பின்னே நகரத்தினாள். தலையை சற்றே சாய்த்து மீண்டும் அவளை நோக்கி குனிய மறுபடியும் தலையை பின்னே நகர்த்தி இருந்தாள்.
“பிடிக்கலையா..?” மெல்லிய ஏமாற்றத்தோடு கேட்டான்.
தழைத்திருந்த கண்களை நிமிர்த்தியவள் “இடிக்குது…” என்றபடி தனது சுட்டுவிரலை அவன் மூக்குக் கண்ணாடியின் நடுப்பகுதியில் தட்டிக் காட்டினாள்.
பட்டென விரிந்த புன்னகையோடு கண்ணாடியை கழட்டி அங்கிருந்து அடுப்பு மேடையின் மீது வைத்தான் குரு.
மீண்டும் அவள் முகம் தாமரைபோல் விரிந்திருந்த அவன் இரு கரங்களுக்குள்…
அவளது இரு கன்னங்களிலும் சத்தம் இல்லாத மெல்லிய முத்தங்கள். உரிமையான கணவனாக ரசித்து பதித்த நேசமுத்தங்கள்.
இதுவரை அவள் கன்னம் தாண்டாத அவனது முத்த வரையறை அடுத்த நகர்விற்கு ஆசை கொண்டது. இதயம் முழுக்க காதலை சுமந்திருந்த போதும் இருவரும் எத்தனையோ நெருக்கமான சந்தர்ப்பங்களில் உரிமைகளை வெளிப்படுத்திய போதும் அவனது கண்கள் அவள் இதழ்களில்கூட ஆசையோடு பதிந்து கொண்டதில்லை. தனது கண்ணியத்தை அந்த அளவு காத்து வந்தவன்.
இன்று வரையறை கடந்து வரைமுறை தாண்டி உரிமைப்பட்டவனாக தனது பெருவிரல் கொண்டு அவள் இதழ்களை வருடி கிறக்கமாய் அங்கு கண்கள் பதித்திருந்தான். அவன் விரல் பட்ட இதழ்கள் தன்னிச்சையாய் திறந்து கொள்ள அவள் விழிகளோ தன்னிச்சையாய் மூடிக்கொண்டன.
இடம் மாறிய மூச்சுக்காற்று இருவரிடமும் வெம்மையை பாய்ச்சியது.
“என்னை பாருடி…”
கரகரத்த அவன் குரல் ஏதோ சேதி சொன்னது.
“என்னை பாரு அஞ்சு…”
கெஞ்சலும் கொஞ்சலும் கலந்த அவனது வசீகர ஆண்மை மிளிரும் குரல்.
இமைக் குடைகளை விரித்து கருவண்டு கண்களால் அவன் அழகு முகம் பார்த்தாள்.
“என் மனைவிக்கு நான் கொடுக்கப் போற முதல் இதழ் முத்தம். நீ கண்ணை மூடிக்கக் கூடாது… என்னை பாத்துக்கிட்டே இருக்கணும்…”
கிறங்கிய குரலில் கூறியவனின் விரல்கள் தாபமாய் அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தன.
மெல்லிய படபடப்பும் இதயம் அதிரும் எதிர்பார்ப்புமாய் தன்னவனையே அவள் விழிகள் விழுங்கிக் கொண்டிருந்தன.
அவள் கண்களோடு கண்கள் கலந்தபடி குனிந்து அவள் இதழில் மென்மையாய் இதழ் பதித்தவனின் பிடரிமுடி அவள் கட்டுப்பாட்டிற்குள் சிக்கியிருந்தது.
இதழ் விலக்கிக் கொள்ள விரும்பாதவன் கொஞ்சம் அழுத்தம் கூட்டி இன்னும் ஒரு முத்திரை பதித்தான். அவள் உடல் அதிர்ந்து சிலிர்த்து நிற்பதை அவள் இடை பற்றியிருந்த அவன் விரல் ஸ்பரிசம் உணர்ந்து கொண்டது.
அடுத்த முத்தம் இன்னும் அழுத்தமாய்…
அதன்பின் விலகிக் கொள்ளவோ விலக்கிக் கொள்ளவோ விரும்பவில்லை இருவரும். பார்த்துக் கொண்டே இருக்க ஆணை பிறப்பித்தவன் கிறங்கிய நிலையில் முதல் ஆளாய் கண் மூடிக்கொள்ள இதழ்கள் நடத்திக் கொண்டிருக்கும் செல்லச் சண்டையில் தானும் கிறங்கி கண்மூடி இருந்தாள் குருவின் செல்லக் கிறுக்கி.
வெளியே வானம் இருண்டு சட சட சடவென மழை பெய்யத் தொடங்கி இருந்தது.
சாரலாய் ஆரம்பித்து தூறலாய் துவங்கியிருந்தது…
தூறலாய் விழுந்த துளி மழையாக வலுப்பெற்று இருந்தது.
வீட்டிற்குள் கூட மழை போன்ற மாற்றம்தான்.
நுண்ணிய மழைத்துளி நெருங்கி விழுந்தால் அது சாரல்…
பருத்த மழைத்துளி அகல விழுந்தால் அது தூறல்…
கொட்டும் மழைத்துளி ஹோவென ஆர்ப்பாட்டமாய் விழுந்தால் அது மழை…
சாரலாய் அவர்களது முதல் இதழ் முத்தம்…
தூறலாய் அந்த அடுத்த இதழ் சத்தம்…
மழையாய் மாறிப்போன அடுத்த இதழ் யுத்தம்…
இதழ்கள் கோர்த்த இனிமையான மழையில் கணவனும் மனைவியும் நனைந்து திளைத்துக் கொண்டிருந்தனர் நெடுநேரமாக…
இதழ் பிரித்த நொடியில் இதயங்கள் இரண்டும் மொத்தமாய் இடம் மாறி இருந்தன.
மயக்கம் தீராமல் மன்மதப் போரை தொடரச் சொல்லி மாயவன் கணை தொடுக்க, அதிமதுர சுவை தந்த அதரங்களை ஆசையாக வருடி விலகி நின்றான் ஆண்மகன்.
சிவந்து பளபளத்த இதழ்கள் விருந்துக்கு வா என்று அவனை மீண்டும் வேண்டி அழைக்க அவளை இறுக்கி அணைத்து கழுத்தில் புதைந்து கண்மூடிக் கொண்டான்.
தேவசுவையின் தாக்கம் தேகம் முழுக்க பரவி தித்தித்தது.
“அஞ்சு…”
அவள் கழுத்து வளைவில் கண்மூடியபடியே குழைவாய் அழைத்தான்.
“ம்ம்…”
கிறக்கம் குறையாதவளுக்கு வார்த்தை மறந்திருந்தது.
“இன்டைக்கு ஒருநாள் நைட் ஸ்டே பண்றியா..?”
விழித்துக் கொண்ட ஆண்மை அவளிடம் வேண்டுதல் வைத்தது.
“ஆனா நாளைக்கு காலைல நான் ஸ்கூல்ல இருந்தாகணுமே…”
அவன் பிடரிமுடியை மெல்ல வருடிக் கொடுத்தபடியே தானும் கண்மூடியே பதில் அளித்தாள் அஞ்சலி.
அவளிடம் இருந்து விலகி அவள் முகம் பற்றிக் கொண்டவன் “ம்ம்… எனக்கும் புரியுது… நீ இன்னைக்கு நைட் கிளம்பணும்… அதுதான் சரி…” அவள் நெற்றியோடு நெற்றி முட்டி புன்னகையோடு கூறினான்.
‘நான் உனக்கு வேண்டுமா..?’ விழிகளால் கேட்டிருந்தாள்.
அவள் விழி பாஷைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அவன் விழி வழியே நுழைந்திருந்தன. இல்லை என தலையாட்டிக் கொண்டவன்,
“இனி காலம்பூரா என்கூடவேதானடி வரப்போற… நமக்கான நேரம் வரும்… ரொம்ப தேங்க்ஸ்டி… எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது…”
மீண்டும் அவள் இதழ் வருடியபடி கூறியவன் அங்கு அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்து மோகத்தை முடித்து வைத்து நெற்றியில் இதழ் பதித்து காதலோடு விலகி கூடத்திற்கு சென்றிருந்தான்.
(தொடரும்)
error: Content is protected !!