வீட்டின் திண்ணையில் தனது ஒன்பது மாதம்,மேறிட்ட வயிற்றோடு தான் பெத்த ஐந்து தேவதைகளோடு அமர்ந்து நிலாசோறு உருண்டையை பிடித்து ஒவ்வொருவர்களுக்கு கையில் வைத்து கதையை கூறிக்கொண்டே இரவு சித்திரை பௌர்ணமி நிலவை வெறுத்து பார்த்து கொண்டிருந்தாள் தேவகி, கூடவே அவளின் மாமியாரின் குத்துமதிப்பான பேச்சும் அவளின் செவியில் விழுந்தது.
இந்த பிள்ளையும் பெண்ணாக பிறந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கும் போது அவளின் முகம் வியர்வால் குளித்தது. அதை சேலையின் முந்தானையால் துடைத்து விட்டு பிள்ளைகளை வீட்டின் உள்ளே அனுப்பிவிட்டு சற்று நேரம் கால்களை நீட்டி சுவரில் தலையை சாய்ந்து அமர்ந்து கொண்டிருக்கும் போது சுர்ரென வலி வர ஆரம்பித்தது.
இப்பொது பிரசவம் வரக்கூடாது, அப்போதும் வலி வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு லேசாய் இடுப்பு வலி எடுக்க ஆரம்பித்தது , ஏனோ அவளின் பயத்திற்கு அளவில்லாமல் போனது.
உள்ளே அவளின் மாமியார் விஜயா அவளையே பார்த்து வசைபாடிக்கொண்டே இருந்தார்.
“ஏற்கனவே ஐஞ்சு பொட்ட புள்ளைய பெத்து போட்டா, இப்போவும் பொட்ட புள்ள தான் பொறக்கும், வயித்துக்குள்ள ஆம்பள புள்ள இருந்தா வயித்து சின்னதால தெரியும், இது என்ன பெரிசா இருக்கு அப்போ நிஜமாவே பொட்ட புள்ள தான், என்று கூறிக்கொண்டே எழுந்து தேவகியின் அருகில் அமர்ந்து,
“இந்தா டி தேவகி, இதுவரைக்கும் வரிசையா ஐஞ்சி பொட்ட புள்ள இருக்கு, அதை படிக்க வச்சி ஒருத்தன் கையில புடிச்சி கொடுத்து கரைசேக்கரத்துக்குள்ள நமக்கு ஒரு விடிவு காலம் வராமலா போயிடும், ஆனா ஆம்புள புள்ள ஒன்னு நம்ம குடும்பத்துக்கு முக்கியம்,
உன் புருஷக்காரன் தினமும் குடிச்சிட்டு வந்து ஐஞ்சி பொட்ட புள்ளைய அடிக்கிறது பார்த்தா என்னால தாங்கிக்க முடில,
ஓடியாடி விளையாடுற வயசுல பெத்த அப்பனை பார்த்து பயப்படற புள்ளைய இப்போ தான் இந்த வூட்டுல பாக்குறேன், நாணும் எவ்வளவு தான் குருக்கால போயி தடுக்குறேன் பேர்வழில அவன்கிட்ட உதை வாங்குறது, பாவி பெத்த ஆத்தான்னு கூட பார்க்காம முடியை புடிச்சி அடிக்கிறான் குடிகாரப்பய “என்று தனது நீண்ட நாள் வேதனையை மருமகளிடம் கூறும் போது தேவகி அவரின் தோளில் சாய்ந்து கொண்டு கதறி அழுதாள், ஆனால் வலி இன்னும் அதிகமாக அதை பொருக்க முடியாமல் சத்தமாக கூவ ஆரம்பித்தாள்…
அவளின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒரு காரில் அவளை ஏற்றி ஐந்து பிள்ளைகளை பக்கத்து வீட்டில் பார்த்துக்க சொல்லி ஒப்படைத்து விட்டு விஜயாவையும் அழைத்து கொண்டு மருத்துவமனையை நோக்கி சென்றனர்.
காரில் போகும் போது வழியில் தெரிந்த சாராயக்கடையில் அவளின் கணவன் குடித்துவிட்டு மல்லாந்து படுத்திருந்தார், இதை விஜயம்மாள் பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டு,”இவன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருத்த போவதில்லை “என மனதின் ஓரத்தில் அவருக்கு கவலை இருக்க தான் செய்தது.
அரசு சுகாதார நிலையம் திருச்செங்கோடு.
இரவு பத்து மணிக்கு மணிக்கு வந்தடைத்தது கார்.
காரில் வந்தவர்கள் தேவகியை கைத்தாங்கலாக பிடித்து கொண்டு உள்ளே பிரசவ பார்க்கும் மகப்பேறு பிரிவில் சேர்ந்தார்கள்.
அவளும் அலறிக்கொண்டே இருக்க அவளின் வலியை சிறிது சிறிதாக குறைந்தது போலிருந்தது அவளுக்கு,
ஆம், அவளுக்கு பிறந்தது பெண் குழந்தையே……
குழந்தை பிறந்ததும் தாதியர் குழந்தையை சுத்தம்படுத்தி மெல்லிய பருத்தி துணியில் சுற்றி அதை கொண்டு வந்து விஜயம்மாளிடம் கொடுக்க, அவரோ குழந்தையை பார்த்து அதிர்ந்தார்.
மறுபடியும் பொண்ணா கடவுளே என்ன இது என் குடும்பத்துக்கு சோதனைக்கு மேல சோதனை கொடுக்கிறாய் என கடவுளை வேண்டிக்கொள்ள தான் முடிந்தது அவரால்.
பிரசவவார்டில் பிள்ளை பிறந்ததும் மயக்க நிலைக்கு சென்ற தேவகி இப்பொது தான் கண்விழித்தாள்.
அவரின் பக்கத்தில் அவளின் மாமியார் விஜயம்மாள் கையில் குழந்தையோடு சோகத்தின் உச்சியில் தரையில் அமர்ந்து குழந்தையை வெறுத்து பார்த்துக்கொண்டிருக்க, தேவகியின் அத்தை என்ற அழைப்பில் சுயநினைவுக்கு வந்தார் விஜயா.
அத்தை மறுபடியும் பொண்ணா, வேணாம் அத்தை, இந்த தொப்புள் கொடி உறவு இன்னைல இருந்து போகட்டும்.
ஏற்கனவே ஐஞ்சி மகாலஷ்மிங்க நம்ம வீட்டுல தினமும் உதவாங்கிட்டு தான் தூங்குதுங்க, இந்த குழந்தைக்கும் அந்த கொடுமை நேர வேணாம்,”என்று கூறும் போது அவளின் கண்ணில் இருந்த நீர் வெளியே வந்தது.
மருமகளின் வார்த்தையை கேட்ட விஜயா திகைந்து, “அடியேய் சிறுக்கி என்ன வார்த்தை சொல்லிப்புட்ட, இந்த குழந்தை என் பேத்தி, நான் இருக்கேன், நீ எதுக்கும் பயப்படாத, அவன் என்ன பண்ணுவான் ன்னு பாக்கலாம், இனிய சும்மா இருக்க கூடாது, நீ முதல்ல வாயை திறந்து எதிர்த்து பேச கத்துக்கோ, இப்படி வாயில்லாத பூச்சி கணக்கா இருந்தா பொழைக்கவே முடியாது, வாயுள்ள பெண் பிழைக்கும்….என்று கூறினாலும் மாமியாரின் வார்த்தைக்கு அவளால் ஆறுதலடைய முடியவில்லை, அவள் அறிந்தது கணவன் குடிகாரன் மட்டுமல்ல ஒரு மிருகம் கூட…..
உடனே ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை அவளால்.
அப்போது அவளின் உடல்நிலைமையை பரிசோதிக்க வந்த ஒரு இளம்வயது பெண் டாக்டர் சுகாசினி, வெளியே நின்று அவர்களின் உரையாடலை கேட்டுவிட்டார் போலும்,..
அந்த சுகாசினி டாக்டர் தான் தேவகிக்கு முந்தைய ஐந்து பிரசவத்தை பார்த்தவர் என்பதால் அவளின் குடும்பத்தை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.
உள்ளே வந்தவர் பெரியவரான விஜயம்மாளிடம் “நீங்கள் பேசினது நான் வெளியே நின்னு கேட்டேன், அதுக்காக ஒட்டி கேட்டேன் ன்னு தப்பா எடுத்துக்காதீங்க, நான் ஒன்னு சொல்லட்டுமா “என்று தயங்கியவாரு இருந்த டாக்டரிடம்,
“சொல்லுங்க டாக்டரம்மா என் மருமகளுக்கு உடம்பு ஏதாவது சரில்லையா “சற்று பதறியப்படியே கேட்டார் விஜயம்மாள்.
“அப்படிலாம் ஒன்னும் இல்லை, இந்த குழந்தையை நான் தத்து எடுத்துக்கலாமா, என்று கேட்டதும் குழந்தையை பெத்த தாயின் விழியோரத்தில் கண்ணீர் சிந்தியது.
ஏற்கனவே இருக்கும் ஐந்து பெண் பிள்ளைகள் தினமும் படும் துன்பத்தை பார்த்த தாயின் வயிற்று எரிய,ஏழ்மையால் தான் இன்று என் குழந்தையை இப்படி அடுத்தவர்களிடம் கொடுக்க நேர்ந்தது “என்ன யோசித்து கொண்டு கீழே தரையில் அமர்ந்து இருந்த அவளின் மாமியாரை பார்த்தாள்,
அவரோ குழந்தையை கொடுக்க மனமில்லாது, ” இல்லை நான் தரமாட்டேன், இவ என் பேத்தி அது எப்படி டாக்டர் நீங்க படிச்சவங்க தானே, பொறந்து தாய்ப்பால் கூட குடிக்காத குழந்தையை தத்து கேட்கறீங்க “என்ற மாமியாரை மேலும் பேச விடாமல் தடுத்தவள், “அத்தை, அவங்க எது சொன்னாலும் நமக்கு நல்லது தான்”, என்றவள் டாக்டரிடம் திரும்பி ” எனக்கு முழு சம்மதம், ஆனா ஒரு நிபந்தனை, இந்த குழந்தை நல்லா படிக்க வச்சி கலெக்டர் ஆகணும் அது தான் என் ஆசை, அது மட்டும் செய்யுங்கள் “என்று கைஎடுத்து கும்பிட்டாள் தேவகி..
தொப்புள் கொடி கூட எடுக்காதது,பிறந்து சில நேரங்களே ஆனா குழந்தையை வேறொருவரிடம் ஒப்படடைத்து விட்டு ஒரு நாள் முழுக்க ஹாஸ்பிடலில் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் இல்லத்திற்கு கிளம்பினாள் தேவகி…
வீட்டுக்கு வந்தவளிடம் அவள் பெற்ற ஐந்து பிள்ளைகள் தம்பி பாப்பா எங்கே என்று கேள்விகளால் அவளை துளைத்தெடுக்க, மனதை கல்லாக்கி கொண்டு பிள்ளைகளை அதட்டி வாயை மூட வைத்தாள்.
அவளின் கணவரும் அவளை கண்டுகொள்வதே கிடையாது, அவருக்கு சாராயக்கடை தான் வீடாக மாறியது..
இருபத்தி ஐந்து வருடங்கள் பிறகு,
அந்த ஊரே பரப்பரப்பாக அங்கும் இங்கும் ஓடி இறுதியில் கலெக்டர் ஆபீஸில் வரிசையாக நின்று கொண்டது, கையில் வெள்ளைத்தாள் கொண்ட மனுவோடு.
இதோ வந்திறங்கினாள் சுரேகா.ஐஏஎஸ்…
ஒவ்வொருவராக உள்ளே சென்று தங்களது குறைகளை கொடுத்துவிட்டு வரும்போது இறுதியில் வெறும் கையோடு வரிசையில் நின்றுருந்த தேவகியை உள்ளே விட மறந்துவிட்டார்கள் வாயில் காவலர்கள்..
அவளும் கையை எடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டு பார்த்தாள், ஹும் உள்ளே விடவில்லை.
வெளியில் நடப்பதை சிசிடிவி கேமராவில் பார்த்த கலெக்டர் சுரேகா விழிகள் விரித்தது.
ஆம், அவளை பெற்றேடுத்த தாய் தான் அந்த தேவகி.
அவளை தத்தெடுத்த டாக்டர் அவளிடம் அனைத்து உண்மைகளும் எடுத்து கூறிவிட்டு இறைவனிடம் சென்றுவிட்டார்..
நேராக வாசலுக்கு ஓடிவந்தாள், தான் ஒரு கலெக்டர் என்பதை மறந்து..
கலெக்டரை பார்த்ததும் வாயில் காவலர்கள் அமைதியாக நிற்க, அவர்களை முறைத்து கண்களால் எரியும் பார்வை பார்த்தாள் சுரேகா.
நேராக தேவகியிடம் சென்று அவளின் கரங்களை பற்றி கொண்டு, பணி இருக்கிறது என்பதையும் மறந்து காரில் ஏறி சென்றாள் அவளின் பெற்ற தாயின் வீட்டை நோக்கி.
இதுக்கு மேல என்ன நடக்கும் ன்னு உங்களுக்கு புரிந்து இருக்கும், சொல்றதை விட தெரிந்து இருக்கும் மக்களே…