Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக💞30

சுபியை கூட்டிட்டு வருவே தானே? பாப்பாத்தி நினைவு படுத்தினார்.

டைம் இருந்தா பார்க்கலாம்! சூழ்நிலை எப்படின்னு சொல்ல முடியாது.

ஸ்டேஷனில் அவனுக்கு சிந்தை பதியவே இல்லை.மாலை மூன்று மணிக்கு பர்மிஷன் பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டான்.

ஏதேதோ உணர்வுகள்…. சிலிர்ப்பு, சிரிப்பு எல்லாமுமாய்…. அவனே அவனுக்கு புதிதாய் தெரிந்தான்.



Advertisement

எதற்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டான், நண்பர்கள் கூட அவனை கல்லுளி மங்கன் என்று கேலி செய்வதுண்டு, அவ்வளவு அழுத்தக்காரன். இந்த நிமிடம் அவனுக்கே அவனை அந்நியப்படுத்தியது.

சர்பிரைஸா அவ முன்னாடி போய் நிற்கணும்! சீக்கிரம் ஊர் வந்துவிடாதா? இதயம் எகிறி அவனுக்கு முன் பாய்ந்து பறந்து சென்றது.

ஊருக்குள் நுழையும் போதே அரசமரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பூவராகன் மருமகனை கண்டு கொண்டார்.

Advertisement

வாங்க மாப்பிள்ளை… எதிரில் வந்து நின்றார்.

Advertisement

வாங்க மாமா போகலாம் என்றான்.

நீங்க போங்க கோயில் திருவிழா பற்றி பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு.பத்து நிமிஷத்தில் வந்துடுவேன் என்றார்.

“—————————“

Advertisement

அடக்க முடியாத ஆர்வத்துடன் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு ஓடினான்.

நானா கேட்டேன் கல்யாணம்? எங்கிருந்து பிடிச்சீங்க அந்த ஆளை…. தாயிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

அப்படியே வெளியே நின்றுவிட்டான்.

குட்டி என்ன பேச்சு ஆளு கீளுன்னு பல்லை உடைச்சுடுவேன்! நவமணி அதட்டினார்.

போலீஸ் மாப்பிள்ளைன்னதும் பல்லை இளிச்சுக்கிட்டு கட்டிக் கொடுத்தீங்க! அந்த ஆளு எவ்வளவு கஞ்சன் தெரியுமா? எவளும் அந்த ஆளு கூட குப்பை கொட்ட முடியாது.

குடும்பம், கௌரவம்னு நாலையும் நினைச்சு நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்.

எல்லாத்துக்கும் கணக்கு எல்லாத்துக்கும் ஒரு வியாக்கியானம். பொம்பள தோத்தா போ!

இந்த வயசுலேயும் நீ கிழிக்கிற கோட்டை அப்பா தாண்டுறது இல்லை. ஆனா எனக்கு தேடி பிடிச்சு கொண்டு வந்தீங்களே ஒருத்தரை என்னை கால் தூசுக்கு மதிக்கிறது இல்லை.

அவங்க அண்ணனை கட்டின அண்ணிங்க எப்படி வாழறாங்க தெரியுமா? எல்லாம் என் தலைவிதி.

எனக்குன்னு ஆசாபாசம் இருக்க கூடாதா? சம்பாதிக்காத பொண்டாட்டின்னா என்ன சொன்னாலும் கேட்டுக்கணுமா?

ஏய் வாயை மூடு சொல்லிட்டேன்…. திமிரு கூடிப்போச்சு உனக்கு. வாயடங்கி குடும்பம் பண்ணி நல்படியா பொழைக்க பாரு!

தெரியும் நீ இப்படி தான் பேசுவேன்னு.

என்னை எல்லாருகிட்டேயும் பொல்லாப்பு ஆக்கி விடறாரு அந்த மனுஷன்.

அவங்க அண்ணிங்க வந்ததினால நான் போட்டி போட்டுக்கிட்டு வந்துட்டேன்னு பேர் வந்துடுச்சு.

நானா கொண்டு வந்து விட சொன்னேன்.

எனக்கு வேலை செய்ய நோகுதுன்னு அந்தாளுகிட்ட சொன்னேனா?

என்னை வச்சு சண்டை வந்து அவங்க அண்ணன்காரனுங்க வந்து நிற்கிறாங்க!

என்னடி சொல்ற?

சங்கீதா அக்கா போன் பண்ணாங்க. குல தெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வைக்க போறாங்கலாம்.

மனுஷனா அந்தாளு! பணம் பணம்னு…. எந்நேரமும் அதே சிந்தனை.செத்தா தலையிலா தூக்கிட்டு போகப்போறாரு.

குட்டி நீ பேசறது சரியில்லை சொல்லிட்டேன் சுகன்யா அதட்டினாள்.

அட நீங்க வேற ஏன் அண்ணி. எங்கண்ணன் உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குறாரு…. நீங்க ஈஸியா அட்வைஸ் பண்ணுவீங்க.

நூறு ஊசிகளை ஒன்றாய் இதயத்தில் இறக்கிய வலி சுரீர் என்றது அவனுக்கு.

நடைதடுமாறியது…. கால்கள் துவண்டு விட்டது.

நெஞ்சை அடைத்து என்னவோ செய்தது…. தட்டுத் தடுமாறி பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டான்.

காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது அவளின் பேச்சு.

வலி வலி வலி இதயத்தை அழுத்தி சுவாசத்தை கடினமாக்கியது வலி.

மெயின் ரோட்டிற்கு வந்தவன் டேங்கர் சீட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரே மூச்சாய் குடித்தான்.

சற்று தூரத்தில் இருந்த ஏரிக்கரைக்கு அருகில் பைக்கை நிறுத்தினான்.

எதற்கும் கலங்காதவன் இதயமும் கண்களும் கலங்கியது.

ஏரிக்குள் இறங்கி படிக்கட்டில் அமர்ந்து காலை தண்ணீருக்குள் விட்டு அமர்ந்தான்.

“———————“

மணி இந்தா சிக்கன்! மாப்பிள்ளை எங்கே? மின்விசிறியை போட்டு நாற்காலியில் அமர்ந்தார் பூவராகன்.

மாப்பிள்ளையா? அவர் புரியாமல் பார்க்க….

நம்ம சின்ன மாப்பிள்ளை வந்தாரே….. அதுக்கு தான் சிக்கன் வாங்கிட்டு வந்தேன்.

என்ன சொல்றீங்க? நவமணிக்கு சர்வாங்கமும் ஒடுங்கியது.

இப்போ ஒரு கால் மணி நேரம் முன்னாடி வந்தாரு நான் பார்த்து பேசி அனுப்பினேனே….

சிலையென நின்றுவிட்டார் நவமணி.

என்னாச்சு மணி? எதுவோ சரியில்லை என்று சரியாய் யூகித்து விட்டார் பூவராகன்.

மாமா அது… இங்க… சுகன்யா தடுமாறினாள்.

சுபிக்கு உடல் வெடவெடக்க தொடங்கிவிட்டது.

என்னாச்சுன்னு கேட்கிறேனில்ல? கோபத்தில் எழுந்து நின்றார்.

சுகன்யா பூசி மொழுகி கொஞ்சமாய் சொல்ல ஓங்கி அறைந்திருந்தார் சுப்ரஜாவை.

அவள் அதிர்ச்சியில் நிலை தடுமாறி நாற்காலியில் சரிந்தாள்.

உங்கம்மா அடிக்கடி சொல்லுவா உன்னை செல்லம் கொடுத்து கெடுத்துட்டேன்னு…. அது எவ்வளவு சரின்னு நிரூப்பிச்சுட்ட.

வைரத்தோட மதிப்பு தெரியாம கண்ணாடியா உருட்டி விளையாண்டுகிட்டு இருக்க.

அவசரமாய் போனை எடுத்து மன்னருக்கு அழைத்தார். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த புள்ள எவ்வளவு வேதனைபட்டு போயிருப்பாரு! நினைக்க நினைக்க வருத்தம் கூடியது அவருக்கு.

என்ன மாதிரி மனுஷன் அவரு! எப்படி அவர் முகத்தில் முழிப்பேன்? தொய்ந்து அமர்ந்து விட்டார்.

“————————–“

தூரத்தில் கூவிய குயிலின் கானம், கூட்டுக்கு திரும்பும் பறவைகளின் ஆர்ப்பரிப்பு., இதமாய் வீசும் ஏரிகாற்று எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை.

“எங்கிருந்து பிடிச்சீங்க அந்த ஆளை ” இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது அவனுக்கு.

என்ன அவளை கொடுமை படுத்தி விட்டோம்?  நான் ராட்சஷனா? எவ்வளவு பெரிய வார்த்தைகளை எவ்வளவு சுலபமாய் சொல்லிவிட்டாள்.

நான்கு மாதமாய் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தான் என்ன?

தலைவலி விண்னென்று கழண்டது.

மூன்றாவது மனிதர்களை குற்றம் சாட்டுவதற்கே ரொம்ப யோசிக்க வேண்டும்.

தாலிக்கட்டி குடும்பம் பண்ணியவனை அத்தனை சுலபமாய் பேசிவிட முடிகிறதே….. அதுவும் பெற்ற தாயிடம்!

பணம் பணம் என்று அலைகிறேனா? நானா? அடுத்தவர் பணத்தில் ஒரு டீ குடிக்க கூட மனம் ஒப்பாதவனை எப்படி சொல்லிவிட்டாள்.

இருட்டத் தொடங்கிவிட்டது. மேய்ச்சலுக்கு போன கால்நடைகள் வரத் தொடங்கிவிட்டது.

அசுவாரஸ்யமாய் எழுந்து நடந்தான்.

சீக்கிரம் வீட்டுக்கு போக மனம் வரவில்லை. எங்கெங்கோ சாலை போகும் பாதை எல்லாம் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான்.

பெட்ரோல் ரிசர்வ் காட்டவே வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.

சாப்பிட தோன்றவில்லை, பசி என்ற உணர்வு இருந்தால் தானே… கட்டியவள் போதும் போதும் என்ற அளவிற்கு செவிக்கு உணவளித்து அனுப்பி வைத்தாளே…. மனமும் வயிறும் நிறைந்து விட்டது.

பொட்டு தூக்கம் இல்லை…. உருண்டு புரண்டு கொண்டிருந்தான் அவள் நாவினால் சுட்ட ரணம் திகுதிகுவென்று எரிந்தது.

“—————————-“

கிளம்பு ஊருக்கு போகலாம் என்றார் பூவராகன்.

நான் வரல… அவரா தான் கொண்டு வந்து விட்டார் அவரே வந்து கூட்டிட்டு போகட்டும்.

பல்லை உடைப்பேன் ராஸ்கல். எங்கிருந்து இவ்வளவு ஆணவம் வந்தது உனக்கு? வந்த மனுஷனை தான் உச்சி குளிர்ந்து போற அளவிற்கு பாராட்டி பேசியிருக்க.

அவர் மனசுல எதுவும் இல்லைனா உள்ளே வர வேண்டியது தானே…. அவள் வாயடங்கவில்லை.

நீ பேசின பேச்சுக்கு எந்த ஆம்பிள சூடு சொரணையை வித்துட்டு வருவான்… அடிக்க பாய்ந்தார்.

மாமா விடுங்க! குறுக்கே புகுந்த சுகன்யா தான் சமாதானம் செய்தாள்.

நவமணிக்கு அழுகை நின்றப்பாடில்லை. நீயும் ஆச்சு உன் பொண்ணும் ஆச்சுன்னு விடுட்டு போயிட்டா…. ஒரு தாயாய் அவர் உள்ளம் பதறியது.

மணி அவளை கிளம்ப சொல்லு! மனைவியிடம் கடுகடுத்தார்.

நான் போய் தொலையனும் அவ்வளவு தானே… போறேன் இனி உங்க வீட்டுக்கு வரமாட்டேன். உங்களுக்கு பெத்த பொண்ணு மனசை விட உங்க கௌரவம் தானே பெருசு?

நான் செத்து போனா கூட இழவுக்கு  வராதீங்க! வெறுபிடித்தவள் மாதிரி அழுது அரற்றினாள்.

மாமா நீங்க போங்க…. அப்புறம் பேசிக்கலாம் மாமனாரை அப்புறப்படுத்தினாள் சுகன்யா.

பேசிவிட்டோமே என்று கூட அவள் யோசிக்கவில்லை பேசி மாட்டிக்கொண்டோமே என்ற கவலை தான் அவளுக்கு.

“——————————-“

என்ன மன்னரு சுபியை அழைச்சுட்டு வருவேன்னு பார்த்தேன் என்றார் பாப்பாத்தி.

இல்லம்மா நேத்து எனக்கு டைம் இல்லை. நீங்க வேணா போன் பண்ணி கூப்பிடுங்க!  நான் மதுரைக்கு கிளம்பணும். ஆளுங்கட்சி மாநாடு பிரம்மாண்டமா நடத்துறாங்க எனக்கு எட்டு நாள் அங்கே பந்தோபஸ்து டியூட்டி போட்டிருக்காங்க.

முகம் வாடி இருந்த மகனை கண்டு கொண்டார் பாப்பாத்தி.

என்ன மன்னரு ஏதாவது பிரச்னையா சாமி? கவலையுடன் கேட்டார்.

அதெல்லாம் இல்லைம்மா நைட் ரெண்டு மணிக்கு தான் வந்தேன் சரியான தூக்கம் இல்லை.

சரிப்பா நீ பார்த்து போயிட்டு வா! நான் சுபிக்கு பேசறேன் என்றார்.

டிராவல் பேக்கில் பேக்கிங் பண்ணிக்கொண்டு அண்ணன்களிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

அவன் வரும்போது இவர்கள் கிளம்பியிருப்பார்கள் அல்லவா? அதனால் குழந்தைகளுக்கு பை சொல்லி அவர்களுக்கு  முத்தமிட்டு விடைபெற்றான்.

“—————“

ஹலோ சொல்லுங்க மாமா!

ஸாரி மாப்பிள்ளை….. உடைந்துவிட்டார் பூவராகன்.

அய்யோ மாமா என்ன இது ஸாரின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு.

என் பொண்ணு பேசினது ரொம்ப தப்பு. எங்க வளர்ப்பு தப்பு.

அதெல்லாம் ஒண்ணுமில்ல நீங்க பீல் பண்ணாதீங்க. நான் மதுரை போகணும். எனக்கு பந்தோபஸ்து டியூட்டி இருக்கு அப்புறம் பேசலாம்.

மாப்பிள்ளை எதையும் மனசுல…. என்ன பேசுவது எப்படி பேசுவது என்று அந்த பெரிய மனுஷனுக்கு விளங்கவில்லை.

மாமா தயவு செய்து நீங்க வருத்தப்படாதீங்க! ஒன்னும் பிரச்சனை இல்லை.

நான் சுபியை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.

மாமா அவளை கம்பெல் பண்ணாதீங்க! நான் வர எட்டு நாள் ஆகும். அவள் விருப்பப்பட்டா மட்டும் கொண்டு போய் விடுங்க

“——————————–“

சுபி தோட்டத்துக்கு வா உன்கூட கொஞ்சம் பேசணும்! மகளை அழைத்தார்.

என்னங்க… நவமணி பதறினார் அடித்து விட போகிறார் என்ற பயம் அவருக்கு.

உன் பொண்ணு ரொம்ப பயந்தவ தான்.

அவர் வாட்டத்துடன் முன்னே செல்ல பின்னாலே சென்றாள் சுப்ரஜா.

மாமரத்து நிழலில் இருக்கும் கயித்து கட்டிலில் அமர்ந்தவர் மகளை அமரும்படி சைகை காட்டினார்.

பட படப்புடன் அப்பாவை பாத்துக் கொண்டிருந்தாள் செல்ல மகள்.

சுபி நீ சௌந்தர் மாமாவை பத்தி என்ன நினைக்கிற?

அப்பா ஏன் சம்மந்தம் இல்லாம கேட்கிறார்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மாமா நல்லவர், நல்லா படித்தவர் கவர்மெண்ட் காலேஜில் புரொபசர்.

அதுமட்டும் தான் உனக்கு தெரியும்! ஏன்னா இது தான் வெளிப்பார்வை. அவரு கிட்டதட்ட ஒரு கோடி கடனில் இருக்காரு தெரியுமா?

அப்பா அதிர்ந்து விழித்தாள். கூட வேலை பார்க்கிற பிரண்ட்ஸ் யாரோ அவரை பிரெயின் வாஷ் பண்ணி பணம் ஆறுமாசத்தில் டபுள் ஆகிடும்னு சொல்லி ஏதோ ஷேரில் இன்வெஸ்ட் பண்ணி அது திவாலாகி போச்சு.

இவர் இன்வெஸ்ட் பண்ணினதோட இல்லாம இவருக்கு பழக்கபபட்டவங்களை  இழுத்து விட்டிருக்காரு. அவங்க உன்னை நம்பி தான் பணம் போடறோம் பணத்துக்கு நீ தான் பொறுப்புன்னு சொல்லி தான் கொடுத்திருக்காங்க.

இப்போ ஷேர் மார்க்கெட் ஊத்திகிச்சு பணம் கொடுத்தவங்க சுத்தி இவர் கழுத்தை நெறிக்கிறாங்க. விஷயம் வெளியில் தெரிந்தால் அவருக்கு வேலை போகிடவும் சான்ஸ் இருக்கு.

என்னப்பா சொல்றீங்க? பதறினாள்.

என்ன பண்றதுனு தெரியாம கையை பிசைஞ்சுட்டு நிற்கிறாங்க! வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தும் பிரச்னை தீரலை.

நாலு நாளைக்கு முன்னாடி தேவிகா வந்து ஒரே அழுகை. எம்புருஷன் சரியா சாப்பிடறது இல்லை தூங்குறது இல்லை. ஏதாவது செய்துக்குவாரோன்னு பயமா இருக்கு.

வீட்டில் யாருக்கும் தெரியாது நம்ம நிலத்தோட பத்திரத்தை LDB பேங்கில் அடமானம் வைத்து நாற்பது லட்சம் கொடுத்திருக்கேன்.

அப்பா…. திகைத்து அமர்ந்துவிட்டாள்.

இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை பிடிக்க நினைத்தால் இப்படித்தான் ஆகும்.மெத்த படித்து ப்ரொபசரா இருக்கிற மனுஷன் எப்படி ஈஸியா ஏமாந்துட்டார் பார்த்தியா?

உன் புருஷனை நினைத்து பாரு! ஒவ்வொரு முடிவிலும் எவ்வளவு யோசனை, தெளிவு…. நான் பிரம்மிச்சிருக்கேன் அந்த புள்ளைய பார்த்து.

பேராசை,வெட்டி பந்தா எல்லாம் வாழ்க்கையை அழிச்சுடும்.

இருப்பதை கொண்டு சந்தோஷமா,நிம்மதியா வாழ பழகிக்கணும்!

உங்க அண்ணா கிருஷ்ணா எவ்வளவு வெட்டி செலவு பண்றான் தெரியுமா? ரெண்டு பேரும் IT கம்பெனியில் வேலைபார்க்கிறாங்க ஆனா மாசக்கடைசியில் அஞ்சோ பத்தோ கேட்டு போன் பண்ணுறான்.

உன் புருஷனை பார்த்தியா பெத்தவங்கட்ட இருந்து ஒரு பைசா வாங்காம அவங்களுக்கு தேவையானதை செய்து பக்கத்தில் இருந்து கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறாரு.

உண்மையிலே உன் மாமனார் மாமியார் கொடுத்து வைத்தவங்க! புண்ணியம் செய்து தங்கமான பிள்ளையை பெத்திருக்காங்க.

இந்த சின்ன வயசுல எவ்வளவு உழைப்பு உழைக்குது அந்த புள்ள…. பெருமையா இருக்குடா குட்டி,ஒரு நல்லவன் கையில் தான் நம்ம பொண்ணை கொடுத்திருக்கோம்னு.

நம்ம வேதா சித்தி பொண்ணு பிரபாவதி இருக்காளே அந்த பொண்ணை அவ புருஷன் பிசினஸ் பண்ண போறேன் பத்து லட்சம் உங்க வீட்டுல வாங்கிட்டு வான்னு துரத்தி விட்டுட்டான்.

நம்ம மாப்பிள்ளை அப்படியா சொல்லு?

கார் வாங்க போறேன்னு எனக்கு சொன்னார். பணம் கொஞ்சம் கொடுக்கிறேன்னு சொன்னேன் வேண்டாம் மாமா நீங்க கேட்டதே போதும்னு சொல்லிட்டார்.

நீ அங்கே ஓய்வே இல்லாம வேலை செய்றதை சகிச்சுக்க முடியாம தான் நாலு நாள் ரெஸ்ட் எடுக்கட்டும்னு என்கிட்ட சொல்லிட்டு தான் உன்னை விட்டுட்டு போனார்.

என்னை போலவே உன்னை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கிற ஆண் மகனா தேடித்தான் உனக்கு மாப்பிள்ளை பார்த்தேன்.

நான் தேடிக் கண்டுபிடித்த தங்கத்தை நீ தகரமா நினைக்கிறயே…

இப்படி பொண்டாட்டியை தாங்குற மாப்பிள்ளை யாருக்கு அமையும்?

விழி நீர் பெருக்கெடுக்க சிலையாய் அமர்ந்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!