“நொடிக்கொருமுறை ஆத்து வாசலை பாத்துண்டே இருந்தா என்ன ஆக போகுது ஆரபி?”
“தோப்பனார் இப்ப வந்துடுவேன்னு சொன்னாரே ம்மா, ஏன் இன்னும் காணல?” ஆரபிக்கு நிலையாக ஒரு இடத்தில் அமரவோ, நிற்கவோ இயலவில்லை.
ஒரு வாரமாக தந்தையைப் பார்க்க நேரம் கேட்டது போக, இன்றுதான் நேரமே கிடைத்தது.
“க்கா, அப்பா வருவாங்க. உனக்கு எதாவது வேணுமா சொல்லு. வந்ததுல இருந்து தண்ணி கூட உன் நாக்குல படல.” சகோதரி முன்பு தண்ணீர் குவளையை ஸ்ரீனிவாசன் நீட்ட, வாசலைப் பார்த்துக்கொண்டே வாங்கி குடித்தாள்.
காவல் நிலையத்தில் இருந்து வந்து மூன்று நாட்கள் ஆகியது. வீட்டில் இதுவரை எவரிடமும் அங்கு நடந்ததை மூன்று ஆண்களில் ஒருவரும் பகிர்ந்துகொண்டதில்லை.
பார்த்திபனின் முக்கிய கட்டளையே ஆரபிக்கு அது தெரியக் கூடாதென்பது தான். ஆக, தம்பியும் கூறவில்லை, கணவனும் உண்மையைப் பகிரவில்லை.
பல்வேறு உணர்ச்சிகளில் சிக்கி தவித்தான் ஸ்ரீனி. அலுவலகத்திலிருந்து அவனை வேலையிலிருந்து நீக்கப்பட்டதன் எந்த ஒரு சுவடும் இல்லை.
எனில், தனக்கு இன்னும் அந்த வேலை உள்ளதென பார்த்திபனுக்கு அழைத்து தகவல் கூற, நிச்சயம் அவன் அங்கு செல்லக் கூடாதென முடிவாய் மறுத்துவிட்டான் பார்த்திபன்.
வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் மகனிடம், தந்தையும் தாயும் மாறி மாறி கேள்வி கேட்க, அவர்கள் முகத்திற்கு நேராக பொய்யுரைப்பது அத்தனை மன வேதனையைக் கொடுத்தது.
ராஜ் கோபால் பலமுறை மகனைத் தன்னோடு தங்களது உணவகத்தைக் கவனித்துக்கொள்ள அழைத்துள்ளார். ஆனால் அவனுக்கு சுயமாக நிற்கவேண்டும் என்ற ஆசை.
குறைந்தது இரண்டு வருடமாவது வெளியுலகில் கஷ்ட, நஷ்டங்களைத் தெரிந்து, பிறகு தந்தையோடு இணைவதாக வாக்களித்திருந்தான்.
இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றியுள்ள மனிதர்கள், சூழ்நிலைகளைப் பற்றி அறிய ஆரம்பிக்க, அதற்குள் இருந்த வேலையும் இல்லை.
மிகவும் வருத்தத்தோடு மாமனிடம் புலம்பி தவித்தான், “தோப்பனார பாக்கவே கஷ்டமா இருக்குய்யா. உங்க ரெண்டு பேரையும் கூப்பிடாம இருந்தா, இந்நேரம் அந்த ஆள் கைல, கால்ல விழுந்தாவது வேலை வாங்கிருப்பேன். எனக்கு பித்து புடிச்ச மாதிரி இருக்கு.”
“இங்க பாரு ஸ்ரீனி, ஒரு விசயம் உன்னை விட்டு போச்சுன்னா ஷிட் ஹாப்பன்ஸ்னு போய்கிட்டே இருக்கணும். அதைவிட்டு அது எனக்கு வேணும்னு ஓவர் கேர் பண்ணி, அதுக்கு இம்பார்ட்டன்ஸ் அதிகம் குடுத்தா லைஃப்பை அந்த இடத்துலயே மறந்துடணும். எது நடந்தாலும் லைஃப் ஹாஸ் டு மூவ் ஆன்.”
ஸ்ரீனி, “ஒடனே வேற வேலைக்கு போகணும். என்ன பண்ணுவியோ தெரியாது. உன் ஆஃபீஸ்ல மேனேஜர் போஸ்ட் காலி பண்ணி வைக்கிற. நான் வந்து உன் சீட்ல ஒக்காருவேன்.”
பார்த்திபன் சிரிப்போடு, “டேய்!” என அலறினான்.
“சொன்னதை செய்யா…” அதோடு அவனோடு பேசவில்லை ஸ்ரீனிவாசன்.
மாமனோடு விளையாட்டிற்கு பேசினாலும் அவன் தொழிலில் தான் சென்று நின்று, அவனது சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை.
இன்று காலை பத்து மணி போல் வந்த சகோதரியும் வேலை என்னாயிற்று என கேட்டும், சகோதரன் ஏதோ பொய் கூறி சமாளித்து விட்டான். சில நேரங்களில் தந்தையோடு வேலையில் இணைந்திடலாமா என்ற எண்ணம் கூட வருவதுண்டு.
“வேணாம் ஸ்ரீனி, ஆத்துல இருந்தாதான் சந்தேகம் எல்லாம் தெளிவா கேக்க முடியும்னு இங்க வந்தேன். ஆமா அன்னைக்கு என்னடா மொபைல் ரிங் ஆகிட்டே இருந்துது நீ எடுக்கவே இல்ல, உன் அத்திம்பேர் என்ன எவ்ளோ தவிக்க விட்டார் தெரியுமா?”
“நல்லா கேளுடி, நானும் அவனுக்கு நூறு முறை போன் பண்ணி ஓஞ்சே போனேன். கேட்டா இப்ப வர காரணமே ஒழுங்கா சொல்லுவேனான்னு நிக்கிறான்.”
“இல்லம்மா, என் ஆத்துக்கார் கூடதான் இருந்தான், ஆனா போன் எடுக்கலைனு கேட்டேன். அவன் எதுனா நம்மகிட்ட சொல்லாமாலா செஞ்சிடுவான்.”
வெளியே ராஜ் கோபால் வரும் சத்தம் கேட்க பார்த்திபனின் மகள் வேகமாக, “தாத்தா…” என்ற ஆசை வார்த்தையோடு வெளியில் ஓட, தன்னை நோக்கி வந்த குட்டி பொக்கிஷத்தை கைகளில் ஏந்திக்கொண்டார் ராஜ் கோபால்.
வீட்டின் முதல் வாரிசான பூர்விக்கு அங்கு பாசத்திற்கும் கொஞ்சலுக்கும் பஞ்சமே இருக்காது.
“தாத்தா டுர் டுர் போதாம் வா…” தாத்தாவோடு வெளியில் சென்றால் என்னென்ன கிடைக்குமென தெரிந்த இளையவள், அவர் கழுத்தை கட்டிக்கொண்டு வீட்டினுள் நுழைய விட மாட்டேனென நிற்க, வேறு வழியில்லாமல் பேத்தியை அழைத்து மீண்டும் வெளியே சென்றார்.
“பூர்வி வாங்க சொல்லணும்டா.” மகளை அதட்டிய ஆரபி அன்னையிடம் திரும்பி, “இவ வர வர சேட்டை அதிகம் பண்றாம்மா. பிடிவாதம் ஜாஸ்தி ஆயிண்டே போகுது. இப்ப நான் தோப்பனார்கிட்ட பேச வந்தா இதோ இழுத்துண்டு போய்ட்டா.”
“தாத்தா, பாட்டி ஆத்துக்கு வந்தா இப்டிதான் இருக்கும். வந்துடுவா பத்து நிமிசத்துல, நீ வா சாப்பிடலாம்.”
“இல்லம்மா, தோப்பனார் வரட்டும்.” மகளிடம் அதிகம் வாதாடாமல் அனைவருக்கும் உணவை எடுத்து உணவு மேஜையில் வைக்க, பேத்தி கையில் ஒரு பெரிய பையோடு அன்னையிடம் ஓடி வந்தாள்.
“ம்மா திப்ஸ் வேது…” அன்னை கையில் பையை ஒப்படைத்து, அதிலிருந்த உருளைக்கிழங்கு சிப்ஸை எடுத்து உண்ண அனுமதி கேட்டு கண்ணை சிமிட்டி சிம்மிடி நின்றாள்.
அவள் அன்னை அசையவில்லை, “நோடா கண்டிப்பா… பூர்வி மம் மம் சாப்பிட்டதும் அம்மா பாப்பாக்கு ஃபைவ் சிப்ஸ் தருவேனாம். ஓகேவாடா?” முகம் சூம்பினாலும், அதிகம் பிடிவாதம் பிடிக்காமல் சரியென்றது குழந்தை.
ஆரபி உண்ண துவங்கும் நேரம் தந்தையைப் பார்வையால் தொடர்ந்துகொண்டே இருக்க, “சாப்பாடு நேரம் பேச வேணாம் ம்மா, நிம்மதியா சாப்பிடு.”
தந்தை சொல் தட்டாமல் மதிய உணவு கழிய குழந்தை தூக்கத்திற்கு சிணுங்கவும், அவளை உறங்க வைத்து தந்தையிடம் நேராக வந்து நின்றாள். மகளின் அவசரம் புரிந்தவர் அவளுக்காக கையில் பஞ்சாங்கம், பார்த்திபன் ஜாதகத்தோடு தயாராக இருந்தார்.
ஆரபி தந்தைக்கு எதிரில் அமர, அன்னையும் சகோதரனும் சற்று தூரம் தள்ளி நின்றனர்.
“அப்பா எனக்கு தெளிவா சொல்லணும் ப்பா, எதையும் மறைக்காதேள் ப்ளீஸ்…”
மகளது கலக்கம் உணர்ந்தவர் மருமகனின் ஜாதக புத்தகத்தை திறந்தபடியே, “அவர் பிறந்த நேரத்தை வச்சு குத்துமதிப்பா சொன்னது ம்மா. கட்டம் பாத்து சொல்றேன்.” ஐந்து நிமிடங்கள் முழுதாக மகளுக்காக மீண்டும் மீண்டும் பார்த்தார்.
“சனி பெயர்ச்சி ஆரமிச்சு ரெண்டு மாசமாகுது. பெயர்ச்சியோட ஆரம்ப கட்டத்துல ரொம்ப உக்கிரமா இருப்பார் சனி பகவான். அதனால தான் உன் ஆம்படையானை எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்னு சொன்னேன்.”
க்ரிஷ்ணாம்பாள், “ஏன்னா ஆகிடுச்சு, இனி மேலும் என்ன நடக்குமோ அதை சொல்லுங்கோ.”
ராஜ் கோபால், “அவர் வாழ்க்கைல இதுவரை அனுபவிக்காத கஷ்டம் எல்லாம் அனுபவிக்கிற காலம் இது. உண்மையை சொல்லணும்னா சோதனை காலம். அவர் அமைதியா இருந்தாலும் அவரை சுத்தி ஏதாவது ஒன்னு அவரை பிரச்சனையோடே வந்து ஒட்டிக்கும்.
ஒரு துரும்பை நகத்தி வச்சாலும் அதுல ரொம்ப தெளிவு வேணும். கேது ரெண்டாவது இடத்துலயும் ராகு எட்டாவது இடத்துலயும் இருக்க, கடன் பிரச்சனை வரும். தூக்கம் பாதிக்கும், உடல்நிலைல பிரச்சனை வரும். இதுல சனி பெயர்ச்சி வந்தது… என்ன சொல்ல தெரியல ம்மா. உயிருக்கு ஆபத்து வரக்கூட வாய்ப்பிருக்கு…” தந்தையானவருக்கு சொல்ல முடியவில்லை.
அத்தனை பிரச்சனைகள் இருந்தது பார்த்திபனின் ஜாதகத்தில், எங்கு தொட்டாலும் ஒவ்வொரு முட்டு போட்டு கிரகங்கள் நின்றது. மகளது நிலையை தலை உயர்த்தி பார்க்கக் கூட மனமது முரண்டது.
க்ரிஷ்ணாம்பாள் கலக்கத்தோடு மகளையும் கணவனையும் பார்த்தார். மறுபக்கம் தந்தை பேசியதை அன்று நடந்த நிகழ்வோடு ஒப்பிட்டு பார்த்த ஸ்ரீனிவாசன் இதயம் வேகமாக துடித்தது.
ஆரபிக்கு சகலமும் அடங்கி போனது. தன்னுடைய ஆதியும் அந்தமுமானவனுக்கு சிறு மனக்கஷ்டம் வந்தாலும் அவனை விட அதிகம் அவளை அது பாதிக்கும். இங்கு தந்தை கூறியதனைக் கேட்டு மூச்சடைக்கும் உணர்வு.
என்ன மாதிரியான சங்கடங்களை அனுபவிக்க விதி காத்திருக்கிறதோ, அதை எல்லாம் தான் வாங்கிக்கொள்ளும் வேகம் இருந்தாலும் சாத்தியமில்லையே…!
உள்ளம் மறக்கடித்து பிறைகளை காண்பித்தவன் கண்களில், வேதனையின் சாயலைக் காண சக்தியற்று மொத்தமாய் சோர்ந்து போனாள். கஷ்டங்களைத் தாங்கிவிடலாம், ஆனால் அவன் உயிருக்கு ஆபத்து நிகழும் நிலையை எண்ணி பார்த்தாலே உயிர் துடிக்கிறதே!?
கண்களைத் தாண்டி வெளியேறி ஓடிய கண்ணீரைத் துரிதமாக துடைத்தவள், “பரிகாரம் பண்ணலாமோன்னோ ப்பா… செத்த பாத்து சொல்றேளா எல்லாத்தையும் பண்ணிடுறேன்.”
புரட்டாசி மாசம் நாளைக்கு பொறக்க போகுதோன்னோ, விரதம் இரு. முடிஞ்சா உன் ஆம்படையானையும் விரதம் இருக்க வை. அந்த பெருமானோட பாதத்தைப் புடிக்கிறதை தவர வேற கதியில்ல நமக்கு.”
தந்தை கூறிய வார்த்தைகள் வீட்டிற்கு வந்தும் ஆரபியின் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்க, குழந்தையைப் பெரியவர்களிடம் விட்டு அறைக்குள் முடங்கிவிட்டாள்.
அந்தி சாய்ந்த நேரம் வீட்டிற்கு வந்த பார்த்திபன், மனைவியைத் தேடி அறைக்குள் மகளோடு நுழைய, தரையில் அமர்த்திருந்தவளை சுற்றி ஏகப்பட்ட புத்தகங்கள். அனைத்தும் இறைவனின் புகைப்படங்களை தாங்கியிருந்தது.
“என்ன மாமி பக்தி முத்திடுச்சா?” மகளோடு ஆரபி அருகே வந்து அமர்ந்தபடி மனைவியை உரசி அமர்ந்தான் பார்த்திபன்.
“ராம்…!” என்றது குழந்தை, அங்கிருந்த கடவுளின் புகைப்படத்தை பார்த்து வேகமாக.
“சரியா போச்சு, என் பொண்ணையும் கெடுத்து வச்சிருக்க நீ?”
பார்த்திபன் என்ன பேசியும் அவள் காதில் வாங்கவே இல்லை. மகள் இறங்கி அங்கிருந்த புத்தகங்களை ஆர்வமாய் பார்க்கத் துவங்க, மனைவியின் மடியில் படுத்துக்கொண்டான்.
அன்னை வீட்டிற்கு சென்று வந்ததால் புடவையில் இருந்தவள் நிலை அவனுக்கு வசமாகியது. மனைவியின் இடையோடு முகம் புதைத்து அசையாது படுத்திருந்தவன் சிகையை, எப்பொழுதும் வருடும் மனைவியின் விரல்கள் இன்று வருடவில்லை.
இடையிலிருந்து விலகி மடியில் படுத்தவன் அவள் முகத்தைப் பார்க்க, கையில் இருந்த புத்தகத்தை பார்ப்பதிலே குறியாக இருந்தாள். அவள் முகமே சரியில்லாமல் இருந்தது, பெரிய வாட்டம் தெரிய அப்பொழுதுதான் உணர்ந்தான் வந்ததிலிருந்து அவன் முகம் கூட மனைவி பார்க்கவில்லை என்பதை.
“என்னடி, முகமே சரியில்ல?”
“இல்ல ஒன்னுமில்ல, செத்த தள்ளிக்கோங்கோ வேலை இருக்கு நேக்கு.”
ஏதோ மனதை உறுத்த, அவளின் நடவடிக்கை வேறாக உள்ளதென உணர்ந்தவன், அவள் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி ஓரம் வைத்து, அவள் முகத்தைத் தன்னைப் பார்க்க திருப்பினான்.
“முகம் பாத்து பேசு ஆராம்மா…”
நீண்ட மூச்சை எடுத்தவள், “வேலை இருக்கு, போதுமா? பாப்பாவை கூட்டிட்டு கீழ போய் சாப்பிடுங்க. எனக்கு சாப்பாடு வேணாம்.”
கணவன் தூரம் தள்ளி வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மீண்டும் ஆராய, அவள் மடியிலிருந்து எழுந்தவன் மனைவியைத் தன்னை பார்க்கும்படி அமர வைத்தான்.
“பார்த்தி ப்ளீஸ்…” இயலாமையில் குரல் தேய்ந்து ஒலித்தது ஆரபிக்கு. அவளுக்கு தன்னை திடப்படுத்திக்கொள்ள சில மணி நேர தனிமையும் உறக்கமும் தேவை.
தந்தை வீட்டிலிருந்து வந்ததிலிருந்து மெத்தையில் படுத்து புரண்டு பார்த்தும், உறக்கத்திற்கு மாறாக இமைகளுக்குள் கணவனின் பிம்பமே வந்து நிற்க, எழுந்து இறைவனைத் தேட துவங்கிவிட்டாள்.
தந்தையும் அன்னையும் ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருக்க, கையிலிருந்த புத்தகத்தோடு அன்னை மடியில் அடைக்கலமானவள், காளி தேவியின் புகைப்படத்தைக் காட்டி, “ம்மா இது யாது?” என கேட்டாள்.
ஆரபிக்கு பார்வை மகள் காட்டிய புகைப்படத்தில் இருந்ததே தவிர, வேறு எதுவும் செவிகளில் விழவில்லை. அன்னை பதில் கூறவில்லை என்றதும், அவள் முகத்தைத் திருப்பி பார்த்து கன்னம் தொட்டு தன்னை பார்க்க வைத்து, மீண்டும் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்க, “சாமிடா.” என்றாள்.
இம்முறை ஆரபியின் கண்களில் மெலிதாக உருவாகியிருந்த நீர் படலத்தைப் பார்த்த பார்த்திபன், மனைவியின் கைகளைத் தன்னுள் கோர்த்து, “என்ன ஆச்சு ஆராமா? யாரும் எதுவும் சொன்னாங்களா உன்னை?”
இறகை போல மிருதுவான குரலில் அவளை வருடியது பார்த்திபன் வார்த்தை. ஆனால் பதில்தான் வரவில்லை.
“தாத்தா வீட்டுல தாத்தா, அம்மாவை எதுவும் சொன்னாங்களாடா?”
“இல்ல ப்பா… சாக்கி, திப்ஸ், முதுக்கு, ஜெத்தி (ஜெல்லி) வாங்கி குதுத்தாங்க.”
மகளை ஒரு கையால் தன்னுடைய மடிக்கு மாற்றிய பார்த்திபன் சிரித்தான். அவளின் மழலை மொழியில், “டேய் அப்பா என்ன கேட்டா நீங்க என்ன சொல்றிங்க? சரி, அம்மாகிட்ட பாட்டி திட்டுனாங்களா கேளுங்க.”
“ம்மா பாத்தி தித்துனாங்களா?” தலையை தலையை ஆட்டி அவள் கேட்டதில், பார்த்திபனுக்கு சிரிப்பு வந்தாலும் மனைவியின் அதிகம் வாடிய முகம் அந்த சிரிப்பை அதிகம் பெருக விடவில்லை.
“இல்லடா.”
பார்த்திபன், “அப்போ தாத்தா?”
பூர்வி, “தாத்தா?”
தேங்கி நின்ற கண்ணீர் ஆரபிக்கு தடையில்லாமல் வழிய, உடனே மகள் அன்னையிடம் சென்று அவள் கழுத்தோடு கட்டிக்கொண்டாள் அழுகையோடு.
“ம்மா சாரி…”
தன்னால் அன்னை அழுகிறாளோ என்ற பயத்தில் குழந்தைக்கும் அழுகை வர, மகளைத் தன்னுடைய கைகளில் அள்ளிய பார்த்திபன், “அந்த ஸ்நாக்ஸ் எல்லாம் துருவ் அண்ணாகிட்ட ஷேர் பண்ணியாடா?”