Skip to content
Post Views: 4,224
நான் தேடும் காதல் நீ…..5
நாளை சனிக்கிழமை எப்போதும் சனிக்கிழமை வந்தால் உற்சாகமாக இருக்கும் தீர்த்தா அன்று சோர்வுடன் தான் இருந்தாள்.நாளை அவளின் ஆசை தங்கை சிவன்யா விடுதியிலிருந்து வருவாள்.சிவன்யா தீர்த்தாவை விட மூன்று வயது சிறியவள் சென்னையில் பிரபல கல்லூரியில் இளங்கலை வணிகவியல் இறுதி ஆண்டு படிக்கிறாள்.கல்லூரி நகரின் உள் இருப்பதால் அவளை கல்லூரி பக்கத்தில் உள்ள விடுதியில் சேர்த்திருந்தாள் தீர்த்தா.
வார இறுதியில் தன் தமக்கையை பார்க்க தவறாமல் வந்துவிடுவாள் சிவன்யா.சனி,ஞாயிறு அக்கா,தங்கை இருவருக்கும் பொழுது அழகாகவே போகும்.ஆனால் இன்று ஏனோ மனதில் பாரம் ஏறிய உணர்வுடன் தான் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் தீர்த்தா.
“ஓய் பூரிஇஇஇ…..”என்ற சத்தத்தில் திரும்ப கதிர் தான் நின்றிருந்தான்.
Advertisement
“என்னாச்சு எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்….டீ எங்க….”என்று அவன் கேட்க,
“அமரன் வந்துட்டானா…இரு வரேன்….”என்று அவனிற்கான தேநீரை கலக்கி கொடுக்க,
“என்னாச்சு உனக்கு ஏன் ஒருமாதிரி இருக்க….”என்று கதிர் கேட்க,
Advertisement
“ஒண்ணுமில்ல கதிரு…நீ பாரு….”என்றுவிட்டு டீயை கொடுத்தவள் தன் வேலைகளை பார்க்க சென்றுவிட எப்போதும் பூரி என்று கூறினாலே சண்டைக்கு வருபவள் இன்று எதும் கூறாமல் சென்றது ஏதோ போல் இருந்தது கதிருக்கு.சிறு வயதில் தீர்த்தா பள்ளிக்கு பூரி கிழங்கு தான் அதிகம் கொண்டுவருவாள் அது அவளுக்கு பிடித்ததும் கூட அதனாலே அவளின் கன்னம் குண்டாக இருக்கிறது என்று தான் அவளை பூரி என்று அழைத்துவிட்டு அடிவாங்குவான் கதிர்.தீர்த்தாவின் பற்றிய யோசனையிலேயே அவன் மண்டியின் உள்ளே வர,அவனின் கையை பிடித்து இழுத்த அமரன்,
Advertisement
“அடேய் நல்லவனே என்ன கனவுலகத்துல இருக்கியா…”என்று கத்த,கதிர் அவன் இழுத்த வேகத்தில் அமரனின் மீதே சாய்ந்துவிட்டான் அதில் அவன் கைகளில் வைத்திருந்த டீயும் அமரனின் மீது கொட்டிவிட,
“அச்சோ அமரா….”என்றவன் பதறி விலக பார்க்க அவனை பிடிக்க முடியாமல் அமரனும் தடுமாற இருவரும் சேர்ந்து விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் அமரன் கத்திவிட்டான்.
“டேய்….”என்றவனின் காட்டு கத்தல் வெளியில் உள்ளவர்களுக்கும் கேட்டு உள்ளே வந்தனர்.திடீர் என்று அவர்கள் ஓடுவதைப் பார்த்து தனது கடையில் இருந்த தீர்த்தாவும் ஓடி வந்தாள்.அமரன் கதிரை தாங்கி பிடித்துக் கொண்டிருக்க கீழே அரிவாள் ஒன்று கிடந்தது.
Advertisement
“அய்யோ கதிரு….”என்று தீர்த்தா வேகமாக வரும் முன் மற்றவர்கள் இருவரையும் பிடித்து அருகில் உள்ள நாற்காலியில் அமர வைக்க,கதிருக்கு பதட்டத்தில் கை,கால் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.அதை கண்ட தீர்த்தா கதிரை நெருங்கி,
“டேய் இந்தா தண்ணி குடி…”என்று அவனிற்கு புகட்ட,அமரனும் கதிரிடம் வந்தவன்,
“என்னடா என்னாச்சு….”என்று நண்பனின் தோள்களை தொட்டு கேட்க,
“கொஞ்ச நேரம் இரு அமரா…அவன் இன்னும் தெளியலை….”என்றுவிட்டு அவனின் முகத்தை நீர் கொண்டு கழுவ செய்தவள் பக்கத்தில் மண்டியில் வேலை பார்ப்பவரின் காதில் ஏதோ கூற அவரும் வேகமாக வெளியில் சென்றார்.
“என்ன என்னாச்சு….”என்ற அமரன் கதிரை ஆராய்ந்தான்,கை,கால் எல்லாம் நடுங்கி கொண்டிருக்க கண்கள் அலைப்பாய்ந்தபடி இருந்தது.சற்று நேரத்தில் வெளியில் சென்றவர் கையில் உணவு தட்டுடன் வர அதை வாங்கிய தீர்த்தா,
“ஒழுங்கா வாயை திறந்திடு…..”என்று அவனின் வாயின் அருகே உணவை கொண்டு போக,அமரன் தீர்த்தாவின் கைகளில் உள்ள தட்டை வாங்கி,
“நான் கொடுக்குறேன்…நீ போய் அவனுக்கு ஒரு டீ எடுத்துட்டு வா…”என்று கூற,
“என்னானு கேளு வரேன்….”என்றுவிட்டு தான் சென்றாள் தீர்த்தா.அவள் திரும்பி வரும் போது அமரன் புது சட்டை அணிந்திருக்க கதிர் அவனின் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.தான் கொண்டு வந்திருந்த டீயை மேஜையின் மீது வைத்தவள் அமரனிடம்,
“என்னவாம்…”
“முதல்ல அவன் சாப்பிடட்டும்….”என்றுவிட்டு அமைதியாக இருக்க,அவனை முறைத்துவிட்டு கதிரின் புறம் திரும்பி,
“என்ன கதிரு விரதம் எல்லாம் எப்போதிலேந்து எடுக்க ஆரம்பிச்சிருக்க….”என்று நக்கலாக கேட்க,
“தீர்த்தா….”என்ற அமரனின் அழுத்தமான குரலில் தன்னை முயன்று அமைதி படுத்திக் கொண்டு நின்றாள்.கதிர் முழுமையாக சாப்பாட்டை உண்டு முடித்து டீயையும் அருந்திவிட்டு நிமிர,
“ஒழுங்கா சொல்லுடா….இல்லை இன்னைக்கு உன் மண்டை தப்பிக்காது….”என்று தீர்த்தா கத்த,
“ஒண்ணுமில்ல அம்மா நியாபகம் வந்திடுச்சி….அதான் சரியா சாப்பிடலை….”என்றவனின் குரலே வெளிவரவில்லை தொண்டை அடைத்தது போல் சொல்லிக் கொண்டிருக்க,
“யார் என்ன சொன்னா உன்னை…..”என்று அமரன்,தீர்த்தா இருவரும் ஒரு சேர கேட்டனர்.
“என்னை யார் தான் சொல்லலை….இந்த காலை வச்சிக்கிட்டு நான் எல்லாருக்கும் பாரமா தான் இருக்கேன் போல….”என்ற கதிரின் தொண்டையடைத்து கண்ணீர் கரகரவென கசிய,தன் நாற்காலியில் இருந்து எழுந்துவிட்டான் அமரன்.அதைக் கண்ட கதிர் வேகமாக தானும் எழுந்து,
“டேய் அமரா வேணாம்டா….இது எப்போதும் நடக்குறது தான் டா….சரவணனுக்கு எதுவும் தெரியாது…..ஆர்த்தி குட்டிக்கும் தெரியாது….”என்று மன்றாடலாக கேட்க,
“நீ என்னை தடுக்க முயற்சி செய்யலாம்….ஆனா எனக்கு முன்னாடியே ஒருத்தி போயிட்டா….”என்று கூற அப்போது தான் கதிருக்கு தீர்த்தாவின் நியாபகம் வந்து திரும்பி பார்க்க அவள் அங்கில்லை சென்றிருந்தாள்.
“கடவுளே இவளை மறந்துட்டனே….டேய் வா சீக்கிரம் போவோம் இல்லை என் சித்தி மண்டை உடைஞ்சாலும் உடைஞ்சிடும்…..”என்று கதிர் அமரனுக்கு முன் சென்று வண்டியில் ஏற,
“அவ்வளவு பயம்….”என்று கிண்டல் செய்தவாரே ஏறினாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டு தான் இருந்தது.கதிர்வேலனின் தந்தை அவனின் சிறு வயதிலேயே இறந்துவிட கதிருக்கும்,சரவணனிற்கு உறுதுணையாக இருந்து அனைத்தும் செய்தது அவனின் அன்னை சீதா தான்.கதிரின் குடும்பம் கூட்டு குடும்பமாக தான் வசித்து வந்தனர்.கதிர் தந்தைக்கு ஒரு தம்பி காசியப்பன் அவரின் குடும்பமும் ஒரே வீட்டில் இருந்தனர்.கதிர் தந்தை இருந்தவரை எந்த பிரச்சனை இல்லாமல் இருக்க அவர் இறந்த பிறகு காசியப்பன் தன் அண்ணன் குடும்பத்தை வெளியேத்த முனைய சீதா தான் எதிர்த்து நின்று அவர்களிடம் இருந்து சொத்தை பிரித்து வாங்கி விட்டார்.
அவர்கள் இருந்த வீட்டில் கீழ் உள்ள வீடு சீதாவிற்கும் மேல் இருக்கும் வீடு காசியப்பனின் குடும்பதற்கு கிடைத்துவிட்டது.தன் அண்ணன் இறந்த பிறகு சொத்து மொத்ததையும் சுருட்டிவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த காசியின் ஆசையில் மண் விழுந்தது போல் ஆனது.சீதா இருக்கும் வரை காசியப்பனால் எதுவும் செய்யமுடியவில்லை ஆனால் அவரும் இரண்டு வருடத்தில் இறந்துவிட்டார்.
கதிர் இயல்பிலேயே அமைதி என்பதால் அவனை கேலி கிண்டல் செய்து அவன் மனதை நோகடிப்பதில் காசியப்பனுக்கும் அவரின் மனைவிக்கும் சற்று நிம்மதி.ஆனால் அவர்களின் ஒற்றை மகளான ஆர்த்திக்கு தன் அண்ணன் கதிர் மேல் அத்தனை பிரியம்.அவள் தன் தாய்,தந்தையிடம் வாதம் புரிந்தாலும் காதில் வாங்காமல் அவர்கள் அதை தொடர்ந்து கொண்டு தான் இருந்தனர்.அவர்களை பொறுத்தவரை கதிரை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு சொத்தை அபகரிக்க வேண்டும் என்பது தான்.
கதிரும்,அமரனும் வீட்டை அடையும் போதே தீர்த்தாவின் சத்தம் வாசல் வரைக் கேட்டது.கதிர் பதட்டத்துடன் அமரனின் கை பிடித்துக் கொண்டு மாடி ஏறி வர,வீட்டின் வரவேற்பறையில்,
“க்கா என்னக்கா ஆச்சு….ஏன் இவ்வளவு கோபமா பேசுற….என்ன ஆச்சு….”என்று ஆர்த்தி மன்றாட,
“அவனுக்கு கேட்க ஆள் இல்லைனு நினைச்சிக்கிட்டு இருக்கீங்கலா…..நான் இருக்கேன்….”என்று தீர்த்தா கோபமாக கேட்க,
“ஏய் என்ன மிரட்டுறியா….உன்னைய அடிச்சு போட்டாலே கேட்க ஆளில்லை….நீ அந்த நொண்டி பயலுக்கு சப்போர்ட்டா…..”என்று காசியப்பன் எகிறிக் கொண்டு வந்தார்.
“அப்பா என்னதிது….”என்று ஆர்த்தி கோபமாக கத்த,
“யோவ் நொண்டி அது இதுனு சொன்னா அவ்வளவு தான் பார்த்துக்க…..அப்புறம் என்ன சொன்ன எனக்கு ஆள் இல்லையா உன்ன மாதிரி அடுத்தவன் காசுக்கு ஆசைப்படுறவனுக்கு தான்யா கூட ஆள் வேணும் என்னை மாதிரி உழைக்கிறவங்களுக்கு யாரும் தேவையில்லை….இது தான் கடைசி இனி கதிரை ஏதாவது சொன்னீங்க….”
“என்னடீ என்ன செய்வ…..”என்று கதம்பகம் கத்த,
“போலீஸ்க்கு போக வேண்டியது வரும் பார்த்துகுங்க…”
“நீ யாருடீ அவனுக்கு…..அங்க சொன்னா இங்க வலிக்குதோ….”என்று கதம்பகம் மேலும் என்ன கூறியிருப்பாரோ அடுத்த நொடி வரவேற்பறையில் இருந்த பூ ஜாடி உடைந்து நொறுங்கியிருந்தது.
“கதிர் உன் சித்தி வாயை மூட சொல்லு இல்ல….”என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்த அமரன் கண்களில் அத்தனை கனல்,அதுவரை தீர்த்தாவிடம் எதிர்த்து வாதாடிக் கொண்டிருந்த கதம்பகம் அமரனைக் கண்டவுடன் வாயை மூடிக் கொண்டார் என்றால் காசியப்பன் பயந்து எழுந்து நின்றுவிட்டார்.
“உங்களுக்கு மனசாட்சி இல்லை….ஒரு பொண்ணை….ச்சீ…”என்ற கதிரின் கண்கள் தீர்த்தாவிடம் திரும்ப,
“மன்னிச்சிடுனு மட்டும் சொன்ன கொன்னுடுவேன் உன்னை……இவங்கெல்லாம் ஒரு ஆளு இவங்க சொல்லுறதுக்கெல்லாம் நான் வருத்தப்படுவேனா…நெவர்….”என்றவள் கதம்கத்தின் புறம் திரும்பி,
“நான் யாருனா கேட்ட….நான் அவன் பிரண்ட்….அவனுக்கு ஒண்ணுனா நான் இருப்பேன்….உன்னை மாதிரி அசிங்க பிடிச்சவங்களுக்கு இதெல்லாம் புரியாது….”என்று பேசிக் கொண்டிருந்த தீர்த்தாவை தடுத்த அமரன்,
“தீர்த்தா அமைதியா இரு…”என்றுவிட்டு காசியிடம் திரும்பியவன்,
“இங்க பாருங்க சொத்து பிரிச்சாச்சு…உங்க சொத்தை எதுவும் கை வைக்கமா தான உங்களுக்கு கொடுத்திருக்காங்க அப்புறம் எதுக்கு அவனை வீட்டை விட்டு வெளியேத்த டிரை பண்ணிக்கிட்டு இருக்கீங்க….ஆங்….அவனோட குறையை குத்தி குத்தி காட்டி அவனால சரவணன் வாழ்க்கையும் போகதுனு சொல்லி அவனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கீங்க நீங்க எல்லாம் என்ன மனுஷங்க….”
“இதுங்க எல்லாம் மனஷங்களா இருந்தா தான…..”என்ற தீர்த்தாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
“தீர்த்தா நான் பேசிக்கிறேன் நீ கிளம்பு….”
“முடியாது….”என்றவளை முறைத்த அமரன்,காசியிடம் திரும்பி,
“இது தான் கடைசி இதுக்கு அப்புறம் இப்படி நடந்துச்சுனா நாங்க போலீஸுக்கு போக வேண்டியது வரும்….உங்களுக்கு நாலு ஆளு இருந்தா எங்களுக்கு நாப்பது ஆளுங்க இருக்காங்க….”என்றவனின் மிரட்டலில் காசியும்,கதம்பகமும் பயந்து தான் போயிருந்தனர்.
%%%%%%%%%%%%%%%%
“இந்தா காபி…..”என்று கோப்பையை தீர்த்தாவின் முன் நீட்டியபடி நின்று கொண்டிருந்தான் கதிர்.
“க்கா வாங்குக்கா…அண்ணன் பாவம்….”என்று ஆர்த்தி கூற,
“கொல்ல போறேன் உன்னை….”என்ற தீர்த்தா,
“இங்க பேசற வாய் அங்க மட்டும் பேசமாட்டேங்குதோ…”என்று கதிர் புறம் திரும்ப,கதிரோ பாவமாக அமரனை பார்த்தான்.அவனோ எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் அமர்ந்திருக்க கதிரின் நிலை தான் பரிதாபமாக இருந்தது.கதிரின் வீட்டில் தான் அனைவரும் கூடியிருந்தனர் சரவணனும் கல்லூரியில் இருந்து வந்திருந்தான்.ஆர்த்தி தான் வீட்டில் சண்டை உடனே வரும்படி அழைத்திருந்தாள். வந்தவனிடம் ஆர்த்தி அனைத்தையும் கூறிவிட அத்தனை கோபம் தன் சித்தப்பா,சித்தியின் மீது அவன் சண்டைக்கு தயாராக அமரன் தான் அடக்கி வைத்திருந்தான்.
“உன்னை தான் கேக்குறேன் கதிரு…..உன்னைய ஒருத்தவங்க பலிச்சு பேசினா இப்படி தான் சின்ன பிள்ளை தனமா செய்வியா….இதே மார்கெட்ல இருந்த தொட்டு அமரன் பார்த்தான் இல்லைனா….”என்ற தீர்த்தாவின் கேள்வியில் கதிரின் தலை தன் போல் கவிழ்ந்தது.
“உன் கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….ஊனம் உன் உடல்ல இல்ல உன் மனசுல தான் இருக்கு….”என்றவள் கதிரின் அருகே வந்து,
“என்னை பாரு கதிரு…என்னை பாரு…”என்று கூற,தீர்த்தாவின் பார்த்தவனின் கண்கள் குளம் கட்டி தான் இருந்தது.
“எப்போதும் நம்மளை பாதுகாக்க ஒருத்தவங்க வருவாங்கனு எதிர் பார்த்துக்கிட்டு இருக்க கூடாது சில சமயம் நாமளும் நம்மளுக்காக போராட கத்துக்கனும்….”என்று காலி கோப்பை அவனிடம் திணித்துவிட்டு அவள் சென்றுவிட,
“இவளுக்கு என்னாச்சு டா அமரா….ஏன் என்னவோ பேசிட்டு போறா…”என்று கதிர் கேட்க,அமரனுக்கும் அதே எண்ணம் தான் இருந்தும் காட்டிக் கொள்ளாமல் கதிரிடம் கூறிவிட்டு வெளிவர தீர்த்தா அங்கு இல்லை.தன்னிடம் வழக்காடாமல் எப்போதும் செல்லமாட்டாள் ஆனால் இன்று எதுவும் பேசாமல் அவள் சென்றிருக்க அமரனுக்கு யோசனையானது.
அமரனும் தன் வண்டியை எடுத்துக் கொண்டு மண்டியை நோக்கி விட வழியெங்கும் தீர்த்தாவின் நினைவு தான் அப்போது தான் ஒன்றை நினைவு கூர்ந்தான்.காலையிலிருந்து அவளின் பார்வை தன் மீது அழுத்தமாக படியவில்லை.ஒருவேளை அப்படி இருக்குமோ என்று நினைத்தவாரே அவளின் கடையை கடக்கும் போது அவளை பார்க்க அவளோ தன் வேலைகளில் கவனமாக இருந்தாள்.எப்போதும் தான் கடக்கும் நேரம் அடிக்கண்களால் தன்னை நோட்டம் விடுபவள் இன்று நிமிரவில்லை.
“ஓஓ மேடம் என்னை பார்க்கமாட்டேன் சொன்னதை கடைப்பிடிக்கிறாங்களாம்….”என்று தனக்குள் கூறி சிரித்துக் கொண்டவனின் மனதில் ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது.தன்னிடம் வராமல் போகாது என்ற இருமாப்புடன் இருக்க ஆனால் அவனின் இருமாப்பை உடைத்தெரிந்து அவனை விட்டு விலக தொடங்கியிருந்தாள் தீர்த்தா.விலகல்கள் விருப்பங்களை உருவாக்குமா….
error: Content is protected !!